Monday, August 8, 2011

சைவ வினாவிடை[Shaivam Q&A] 6. தமிழ் வேத இயல்


6. தமிழ் வேத இயல்

1. சைவசமயிகள் ஓத வேண்டிய தமிழ் வேதங்கள் எவை? 

தேவாரம், திருவாசகம் என்னும் இரண்டுமாம். 

2. தேவாரஞ் செய்தருளினவர் யாவர்? 

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர். 


3. திருவாசகஞ் செய்தருளினவர் யாவர்? 

மாணிக்கவாசக சுவாமிகள். 


4. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்? 

சோழநாட்டில் உள்ள சீர்காழியிலே வைதிகப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார். 

5. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்? 

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே வேளாளர் குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார்

6. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்? 

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே சிவப்பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார். 

7. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரஞ் செய்தருளினார்? 

பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே அமாத்தியப் பிராமண குலத்திலே திருவவதாரஞ் செய்தருளினார். 

8. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்? 

சைவ சமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

9. யாது காரணத்தினால் இவர்கள் சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்? 


பல அற்புதங்களைக் கொண்டு சைவசமயமே மெய்ச்சமயம் என்று தாபித்தபடியினாலே சைவசமய குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்



10. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) மூன்றாம் வயசிலே உமாதேவியார் கறந்து பொற் கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.

(2) சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தளும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.

(3) வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப் பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப்பாடினது.

(4) பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.

(5) பாண்டியனுக்குக் கூனையுஞ் சுரத்தையும் போக்கினது.

(6) சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.

(7) வைகையாற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.

(8) புத்த நந்தியுடைய தலையிலே இடி இடிக்கச் செய்தது.

(9) ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.

(10)ஆண் பனைகளைப் பெண் பனைகள் ஆக்கினது.

(11) விஷத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.

(12) விஷத்தினால் இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண் ஆக்கினது.

(13) தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.

11. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சமணர்கள் ஏழு நாள் சுண்ணாம்பறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.

(2) சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டுஞ் சாவாது பிழைத்தது.

(3) சமணர்கள் விடுத்த யானையினால் வலஞ் செய்து வணங்கப்பட்டது.

(4) சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிச் சமுத்திரத்திலே இடவும் அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.

(5) சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.

(6) வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடினது.

(7) விஷத்தினாலே இறந்த பிராமணப் பிள்ளையை உயிர்ப்பித்தது.

(8) காசிக்கு அப்பால் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவின் மேலே தோன்றி கரை ஏறினது.

12. சுந்தரமூர்த்தி நாயனாரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.

(2) சிவபெருமான் கொடுத்தருளிய பன்னிராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள ஆற்றில் போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.

(3) காவேரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

(4) முதலை விழுங்கிய பிராமணப் பிள்ளையை அம்முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.

(5) வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.

13. மாணிக்கவாசக சுவாமிகளிடத்தில் விளங்கிய அற்புதங்கள் யாவை?

(1) சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக்கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.

(2) புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.

(3) பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

(4) தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

(5) எல்லாருங் காணக் கனகசபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

14. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?

சைவசமயமே மெய்ச்சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.

15. தமிழ் வேதம் ஓதுதற்கு யோக்கியர் யாவர்?

மதுபானமும் மாமிச போசனமும் இல்லாதவராய் ஆசாரம் உடையவராய், சிவதீ?க்ஷ பெற்றவராய் உள்ளவர்.

16. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?

சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து, அருச்சித்து, நமஸ்காரஞ் செய்து, இருந்துகொண்டு, அன்புடனே ஓதுதல் வேண்டும், புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும், வைக்கல் ஆகாது.

17. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?

சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தைத் அநுபவிப்பர்.

திருச்சிற்றம்பலம்

சைவவினாவிடை முதற்புத்தகம் முற்றுப்பெற்றது.

No comments:

Post a Comment