Saturday, May 7, 2022

கயா கயா கயா என்று சொல்வது ஆதி சங்கரர்

இன்று ஸ்ரீ.சங்கர பகவத்பாதாள் ஜெயந்தி. அவர் எழுதிய இந்த அதி அத்புதமான ஸ்லோகத்தை சிந்திப்போம்.

''கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர்  தனது தாயின் கடைசி காலத்தில் தான்  வாக்கு கொடுத்தபடி  அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு  அவளது அந்திம கிரியைகளை செய்து  இயற்றிய  மனம் நெகிழும்  மாத்ரு பஞ்சகம்    5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில்  செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே  பிண்ட பிரதானம் செய்வது ஒரு  வழக்கம். 

''கயா  கயா கயா. என்று  சொல்வது  நமது பித்ருக்களுக்கு  ஸ்ரத்தையோடு  அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம்  செய்யும்  கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும்  வாழ்வில்  ஒரு தடவையாவது செல்ல வேண்டிய  இடம் கயா.  குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி.  தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர்  வாக்ய கரணாத்
ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் 
கயாயாம் பிண்ட தாணாத்
த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே,  அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே  அவர்கள் சொல்படி நட.  அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம்  தான் உன்  படிப்பு மூலம் கிடைக்கும்  சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு  அந்தந்த திதியில்  அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்  தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற  நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை  காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம்  64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.
ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு,  நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத'  என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே ல் திரு ஆலம் காடு  (திருவாலங்காடு -  வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம்  இடுவார்கள்.  இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். ஆந்த  16 பிண்டங்களை  அம்மாவுக்காக  ஒவ்வொரு வாக்யமாக  சொல்லி  இடுகிறோம்.  அந்த பதினாறு தான் “மாத்ருp ஷோடஸி”.

1.  கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |
    தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா  நான்  உன்னை  படுத்தியது.  ஒரு பத்து மாத காலம்  எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக  நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட  நீ  பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக  என்னை உள்ளே அடக்கிய  உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக  தடவி கொடுத்தாயே.   இதோ நான் செய்த பாவங்களுக்காக  உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2.    மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |
        தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன்  சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே  படுத்துகிறானா? பிரசவ காலம்  கஷ்டமானது தான்.  மாசா மாசம் நான் வளர வளர  உனக்கு  துன்பத்தை தானே  அதிகமாக  கொடுத்துக் கொண்டே வந்தேன்.  இந்தா அதற்கு பரிகாரமாக  நான்  இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3.     பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா,  நான்  அளித்த வேதனையில் நீ  பல்லைக் கடித்துக்கொண்டு  பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத  துன்பம்  நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே.  அதற்காக ப்ராயச்தித்தமாக  இந்த 3வது  ஸ்பெஷல்  பிண்டம் உனக்கு. என் தாயே.

4.     ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா,  இந்த 4 வது பிண்டம்  உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட  வேதனைக்காக  -- ஒரு பரிசு --  என்றே  ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை  எனது பிராயச்சித்தம் என்று நான்  இடுகிறேன்.

5.     சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி  மூச்சு  விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான்  பொறுத்துக்கோ'' .என்று  உன்  உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே  மனமுவந்து நான்  விளைத்த துன்பத்தை, வேதனையை  நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான்  இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த  ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6.   ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|
        தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம்.  அப்புறமா  சாப்பிடறேன்''  என்று  உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான்  நோயற்று வளர, வாழ  எத்தனை  தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான்  இந்த ஆறாவது பிண்டம். அம்மா  இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7.     அக்நிநா சோஷயேத்தேஹம்  தரிராத்ரோ போஷணேந |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  குவா குவா  என்று பேசி  பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது  நீ  பசியை அடக்கி  வெறும் வயிற்றோடு  எத்தனை நாள் சரியான  ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும்  பால் நேரம் தவறாமல்  கிடைத்ததே.  அந்த  துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த  7வது பிண்டம்..\

8.     ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும்  சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை  ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே  சிரித்துக்கொண்டே  வேறு துணி எனக்கும்  மாற்றினாய். இதற்கு நான்  உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த  8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9.  ''தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம் ப்ரயச்ச தி |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான்  சுகவாசி.  எனக்கு  எப்போது தாகம், பசி,  தூக்கம்,  எதுவுமே தெரியாது.நீ  தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக  நீ  இதெல்லாம் செய்தாயே.  இந்த  பெரிய மனது பண்ணி என்னை  வளர்த்த  உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த  9வது பிண்டம்.
.
10.    திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல  தட்டு  என்  மொட்டை மண்டையில்.  ''கடிக்காதேடா..'' .  நான்  பால் மட்டுமா  உறிஞ்சினேன்.  என்  சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு.  இந்தா  அதற்காக  ப்ளீஸ்  இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11.  மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே  பனி,  குழந்தைக்கு ஆகாது.  இந்த  விசிறியை  எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து.  ஜன்னலை மூடு. எனக்கு  காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.''  காலத்திற்கேற்றவாறு என்னை  கருத்தில் கொண்டு  காத்த  என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த  சிறு பிண்டம், 11வதாக  எடுத்துக்கொள்.'

12.    புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி
      தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள்,  எத்தனை மன வியாகூலம்.  குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி  உபாதையாக இருக்கிறதே என்று  வருந்தி,   நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி  மடியில் போட்டு  ஆட்டி, தட்டி,  என்னை வளர்த்தாயே,    கண்விழித்து உன் உடல்  . அதற்காகத்தான் இந்த  12வது பிண்டம் தருகிறேன்.

13.    யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான்  இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு  கை நிறைய காசோடு .   ஆனால்  இதெல்லாம் அனுபவிக்காமல்  நீ  யமலோகம்  நடந்து சென்று  கொண்டிருக்கிறாயே.  என் கார்  அங்கு வராதே.  வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே  உனக்கு  துன்பம் தராமல் இருக்க நான்  தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான்  அம்மா.

14.    யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய  டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால்  நானே  எது.? ஏது?  ஆதார காரணமே, என் தாயே,  இந்த 14வது பிண்டம் தான்  அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால்  தர முடிந்தது.

15.    ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |
         தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே.  நான்  வளரத்தானே  நீ  உன்னை வருத்திக்கொண்டாய்.  நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான்  ''தன்னலமற்ற''   தியாகம் என்று படிக்கிறேன்.  நீ  அதை  பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள்.  எனக்காக நீ கிடந்த  பட்டினி, பத்தியம்  எல்லாவற்றிற்கும் உனக்கு  நான் தரும் பிரதிஉபகாரம் இந்த  15வது பிண்டம்  ஒன்றே.

16.    காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |
            தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||
நான்  சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான்  உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு  தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே.  தெய்வமே.  என்னை மன்னித்து ஆசிர்வதி.

Tuesday, May 3, 2022

பொதியமலை உச்சியில் அகத்தியர் சிலை

Thank Facebook

பொதியமலை உச்சியில் 
அகத்தியர் சிலை  நிறுவுதல்.




 
நான் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி.

60 ஆண்டுகளுக்கு முன்- அதாவது 01.05.1971 நள்ளிரவு 1 மணிக்கு 'என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்ட' அகத்தியர் வாழ்ந்த பொதியமலை உச்சியில் அவரது சிலையை என் தலைமையில் சென்ற குழுவினர் நிறுவினோம். இதற்குப் பின்னே ஒரு வரலாறு உண்டு.

1970இல் கிறித்தவ ஆர்வலர்கள் பொதியமலை உச்சியில் ஒரு சிலுவையை நட்டு அதன் அருகில் Saint Augustus peak எனக் கல்லிலே பொறித்துத் தமிழ்ப் பண்பாட்டுத் தடத்தை சிதைக்க முற்பட்டனர். இச்செய்தி மலைவாழ் மக்கள் வழியே எங்களுக்குத் தெரிந்தது. பொறியாளர் சுந்தரம்பிள்ளை போன்ற உள்ளூர்ப் பெருமக்கள் பலருடைய ஒத்துழைப்புடன் காவல்துறை நீதித்துறை வழியே உரிய நடவடிக்கை எடுத்துச் சிலுவை அகற்றப்பட்டது. அதற்குப் பின்னர் இனியும் இது போன்று ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழக்கூடாது என்ற நினைப்பில் அகத்தியர் சிலையை நிறுவலாம் என்றேன். அதை ஏற்று உரிய ஏற்பாடு செய்து சிலைமுடிக்க மூன்று திங்கள் ஆயின. இடையில் மழைக்காலம் குறுக்கிட்டது.  

மலை ஏறுதல் அவ்வளவு எளிய செயலன்று. வேனில் வரட்டும் என்று பொறுத்திருந்தோம். அதுவரை பொறியாளர் சுந்தரம்பிள்ளையின் வீட்டு வளாகத்தில் சிலையை வைத்தோம், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வழிபாடு செய்தனர். 

கல்லூரி முடிந்து வேனிலும் தொடங்கியது. முதலில் நாங்கள் 20 பேர் மட்டுமே மலையுச்சிக்குச் சென்று சிலை நிறுவுவது என்று திட்டம். அக்காலத்தில் நானே எதிர்பார்க்காத அளவு பெரும் செல்வாக்கும் புகழும் எனக்கு உண்டு. நான்  தலைமை வகிக்கின்றேன் என்று கேள்விப்பட்ட ஆண்-பெண் அறுபதின்மர் என்னிடம் வந்து தாங்களும் வருவதாக வேண்டினர். சிவபெருமான் தம் திருமணக் கோலத்தை அகத்தியருக்குப் பொதிய மலையில் காட்டியருளினார் என்னும் தொன்மத்தை உறுதியாக நம்பும்  ஆழ்ந்த சமயப் பற்றுள்ளவர்கள். பொதிகையைக் கைலாயமலை ஆகவே கருதக்கூடிய சைவர்கள். அவர்களுக்கு அகத்தியர் வாழ்ந்த புனித மலை உச்சிக்கு சென்று வழிபட வேண்டும் என்ற தணியாத ஆவல்; ஆதலால்  அவர்கள் வருவதற்கு உடன்பட்டேன்.
 
30 ஏப்ரல் 1971 விடியல் 4 மணிக்குப் புறப்பட்டோம், பொதிய மலை அடிவாரத்திலிருந்து 10 கி.மீ காரையாறு தாமிரபரணி நீர்த்தேக்கம்வரை பேருந்துப் பயணம். படகில் சென்று அக்கரையை அடைந்தோம். அங்கிருந்து  மலைக்காட்டுவழி நடைப்பயணம். ஏழரை மணி அளவில் கன்னிகட்டி பண்ணை  சேர்ந்தோம் . பண்ணை மேலாளர் எனக்கு நண்பர்.அவரிடம் செய்த முன்னேற்பாட்டின்படி காலை சிற்றுண்டி  முடித்து ப் பிற்பகலுக்குப் பொதிசோறு, வழிகாட்டிகள் பலர் துணையோடு 8 மணிக்குக் குழு புறப்பட்டது  அதன் பின்னர் கடினமான செடி கொடி அடர்ந்த கரடுமுரடான ஒற்றையடிப்பாதை. 30 கிலோமீட்டர் சுற்றி வளைத்து செல்ல வேண்டும்.
 
இடையில் கடுவா எனப்படும் புலி, சிறுத்தை,  மிளா எனப்படும் மாடு போன்ற மான், இயல்பாகவே ஊர்ந்து செல்லும் மலைபாம்புகள்.  காலில் ஒட்டிக்கொள்ளும் அட்டைகள் உள்ள இரண்டு காட்டாறுகள் , மேடுபள்ளம் செங்குத்து சரிவு  வழிகள் -இவற்றை எல்லாம்  பெரும் துன்பத்துடன் கடந்து மாலை 5 மணிக்கு உச்சிக்குச் சென்றால் கடைசியில்  ஏற முடியாதபடி மலைக்கவைக்கும் 150 அடி செங்குத்து உயரம் ,  ஒருவாறு சரிவுப் பாறையில் முளையடித்துக் கயிறு கட்டி மகளிரையும் சிலை நிறுவும் கனமான ஸ்தபதியாரையும்  உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் போது சரியாக ஏழு மணி . ஏறத்தாழ 100 பேருக்கும் மேலாக புழங்கக்கூடிய திடல் போன்ற உச்சிப்பகுதி . எல்லோருக்கும் களைப்பு மிகுதி இருப்பினும் சமையற்காரர்கள் உணவு சமைத்தார்கள் உண்ட பின் அனைவரும் உறங்கினோம்.

மறுநாள் காலை 01.05.1971 அன்று சிலையை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீர் வேண்டுமென்றால் கீழே 200 அடிக்கு அப்பால் சென்று தான் கொண்டு வர வேண்டும்.  உச்சியிலேயே ஒருபக்கம் நீர்ச்சுனை இருப்பதைக் கண்டறிந்து அங்கேயே 4-க்கு 6 அடி 3அடி ஆழம் என்ற வகையில் பாறையை வெடிவைத்து தகர்த்துப் பொறியாளர்கள்  நீரூற்று உண்டாக்கினர். நானும் சுந்தரம் பிள்ளையும் ஸ்தபதியார் அருகிருந்து சிலை நிறுவும் பணிக்கு உதவினோம். அவர் ஆகம முறைப்படி சடங்குகளை மேற்கொண்டார் மே முதல் நாள் நள்ளிரவு ஒரு மணிக்கு அகத்தியர் சிலையை நிறுவினோம்.
 
அடுத்த நாள் எங்களில் 15 பேரைத் தவிர ஏனையோர் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு பாபநாசம் பொதிகையடிக்குத் திரும்பினர்.  விலங்கு, இயற்கைச் சீற்றத்தி னால்  சிலைக்கு ஊறு நேராத வாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, பின்னர் அடுத்திருக்கும் ஐந்துதலைப் பொதிகையையும், மலைமுகட்டில் தாமிரபரணி தோன்றும் இடத்தையும் பார்வையிட்டுப் பின்னர் நாங்கள் பொதிகையடி அடைந்தோம்.
 
நாளடைவில் அன்பர்கள் முயற்சியால் கல்லிடைக் குறிச்சியில் இருந்து நேரடியாகப் பொதிய மலை உச்சி அகத்தியர் கோயிலுக்குச் செல்லுமாறு பாதைகள் அமைக்கப்பட்டு, இப்போது ஆண்டுதோறும் இந்த மே முதல் நாளில் திருவிழா நடக்கின்றது என்று அன்பர்கள் தெரிவித்தார்கள். இந்த வரலாற்று- பண்பாட்டுச் சாதனையை எண்ணும்போது இதயம் பெருமிதத்துடன் இறும்பூது எய்துகிறது, நினைவலையில் நீந்தி மகிழ்கிறது.