Friday, January 27, 2023

பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்
-----------------------------

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.

மனதின் பிரச்னைகளை அகற்றவும்இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம முஹூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார்..அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று வினவ..

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்..பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முஹூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார்.. பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5வரை பிரம்ம முஹூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

இந்த நேரத்தில் நாமும் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை அலம்பி பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும்.

பிரம்ம முஹூர்த்ததில் இறைவன் சிவபெருமானை நினைபவருக்கு நாள் முழுவதும் தன்னை தானாகவே அவர் நினைவுக்கு வருவார் என்பதுதான் உண்மை.

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம்.

● சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு (விடியற் காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம்) முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

● பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது.

● சிவபெருமானின் பெருங்கருணையினால் தான் படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் ( பிரம்மன்) தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

● பிரம்ம முகூர்த்ததில் திருமணம் செய்வது மேலும் பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் செய்வது போன்ற சுப காரியங்கள் நடைபெற்றால் அங்கு சுபத்தன்மை ஏற்படும். அவ்விடம் எவ்வித அமங்களமும் ஏற்படாது. மங்களம் குடிகொள்ளும். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

● காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே ( மரணத்திற்கு ஒத்திகை போன்றது) சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

● எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலை சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா.

● எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

● இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் ( சிவவழிப்பாட்டைச் செய்வது) செய்ய வேண்டும். பிறகு நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும்.

● நாம் தொடங்கும் செயல்கள் எல்லாம் வெற்றியாகத்தான் இருக்கும். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

● உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

● மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

● அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

● இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள். நமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

● அவர்களது அபிமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் ( அதிசயத்தையும், அற்புதத்தையும்) படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

எனவே அதிகாலை எழுந்திருக்கும்போது சில நன்மைகள் உண்டு.

 இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புன்ணியத்தை தரும்.

தீபம் ஏற்றுவதற்கு உகந்த நேரமாக அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயத்திற்கு முன்) கருதப்படுகிரது. காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும். பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனநிலையானது ஒரு நிலைப்படுகின்றது. அதற்கு ஏற்ற காலமாக இது விளங்குகின்றது. அதிகாலையில் சூரிய வெப்பம் கிடையாது.

சந்திரனுடைய வெப்பதிட்ப குளுமையும் கிடையாது.இவை இரண்டுக்கும் மத்தியில் நிலவுவது பிரம்ம முகூர்த்தம் இந்நேரத்தில் எழுந்து ஜெபிப்பது. தியானம் செய்வது, யோகம் செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும்.

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழி பாட்டைச் செய்து மது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங் களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான்.

மருத்துவம் நிறைந்த்த பிரம்ம முகூர்த்ம்
--------------------------------------------------------------

உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப் படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!

ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளதுதான் பினியல் சுரப்பி! கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!
அதுதான் மெலடோனின் (melatonin)!!
இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.
மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை. இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!
இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!

எனவே இரவு முற்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இன்று மருத்துவ உலகம் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.
ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது!

அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது. அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும்போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

Wednesday, January 25, 2023

கருட புராணம் கூறும் தீட்டு

|| கருட புராணம் கூறும் தீட்டு ||

தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.

தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.

பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.

ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.

ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.

88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.

ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.

நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.

ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.

அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.

ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.

வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.

விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.

ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும். ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.

துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.

தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.

கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.

கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.

பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.

ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.

தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.

பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.

மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.

சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.

சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.

சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.

தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.

ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.

தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.

தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.

ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.

சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.

சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு. தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?” பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.

ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.

பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.

பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.

ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.

மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்

மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.

பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.

பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.

அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.

பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.

பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.

மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.

6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.

அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.

1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.

மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு. ”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?” சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்

முகம், கழுத்து

இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.

கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும். 

கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.

இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.

மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.

இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.

தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்” கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.

பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.

பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு

ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு

பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு. ”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்” ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.

இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.

பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்

உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)

உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை

இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)

பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா

தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா

தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)

மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்

தந்தையின் தந்தை – பிதாமஹன்

தந்தையின் தாய் – பிதாமஹி

தாயின் தந்தை – மாதாமஹன்

தாயின் தாய் – மாதாமஹி

உடன் பிறந்த ஸஹோதரி

ஸஹோதரியின் பெண்கள்

மருமாள் (ஸஹோதரனின் பெண்)

கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்

ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)

ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்

ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்

ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்

ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண் ”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்” மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை

தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்

மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.

7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)

தாயின் தாய் (மாதாமஹி)

தாயின் ஸஹோதரன் (மாதுலன்)

மாமன் மனைவி (மாதுலானி)

மாமனார்

மாமியார்

தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)

தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)

ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்

உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)

ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)

கல்யாணமான பெண்

கல்யாணமான ஸஹோதரி

ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)

ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)

ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)

7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.

2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.

7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள். பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்

மாமனின் பிள்ளை அல்லது பெண்

தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்

தன்னுடைய ஸஹோதரியின் பெண்

தன் ஸஹோதரனின் மணமான பெண்

சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்

தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)

பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)

உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)

உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்)  கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி

ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.

ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை

ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா

கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.

ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்

ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.

கருட புராணம்

ஜெய் ஸ்ரீராம்.
ஸர்வம் கிருஷ்ணார்பணம்.
Fb

Saturday, January 21, 2023

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இடம்

விதவை பெண்களுக்கு சனாதனம் அளித்து இருந்த மிக மிக உயரிய இடம் பற்றிய எனது இனிய நண்பர் - அனீஸ் கிருஷ்ணன் நாயர் - (இவர் மலையாள நாயர் குடியை சேர்ந்தவர் ஆக பிறந்து இருப்பினும் - இவரது ஆழ்ந்த சாஸ்திர புலமையை கண்டு - வட மொழி அறியாத நான் சொன்னால் அபத்தம் - என்னிடம் சிரித்து கொண்டே சொன்னவர் - வியாசராஜா மட பீடாதிபதியும் - திருப்தி வேத பாடசாலை தலைவராகவும் பல பெரிய வேத பீடங்களை அலங்கரித்த - ஸ்ரீ  ஸ்ரீ 1008 ஸ்ரீ வித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிஜிகள் - நாங்கள் இருவரும் அவரின் ஸ்ரீரங்க விஜயத்தில் பேசும் பொது - வியந்து இவ்வளவு சாஸ்திர விற்பன்னரை கண்டது மகிழ்ச்சி என்று என்னிடம் சொன்னார் !!! 

====================================
விதவைகள் பற்றி காஞ்சி சங்கராச்சாரியா - பெரியவர் சொன்ன பற்றிய செய்தி - அதற்கு மறுப்பு என்கிற விசயத்தை பற்றிய பதிவு இது - சங்கர மட விஸ்வாசிகள் கூட இவ்வளவு தெளிவாக எழுத முடியாது - படித்து பாருங்கள் 

==================

மத்யமர் குழுவில் கு.பி (மகளிர் பிரிவு) மஹாபெரியவரை திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர் . 

பெரியவர் சிலையை ஆகமக் கோவில்களில் வைக்கக் கூடாது என்று நான் சொல்லும் போதெல்லாம் வந்து தகராறு செய்யும் " பெரியவர் விசுவாசிகள்" கும்பலைச்சார்ந்த எவனாவது விளக்கம் எழுதுவான் என்று பார்த்தேன் .ப்ச் . அவர்கள் என்ன நம்மைப் போல வெட்டியாக வா இருக்கிறார்கள் ? பெண்டாட்டியையும் பெண்பிள்ளையும் வேலைக்கு அனுப்பி திரட்டிய பணத்தில் தண்ணியடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது ஏதாவது நிறுவனத்தில் வாடிக்கையாளர் கணக்கில் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள் .

தேவ்ராஜ் அமெரிக்காவிலோ மயிலாப்பூரிலோ லோஷன் தடவி முகத்தை பராமரித்துவிட்டு, நாளை அமாவாசை என்பதால் இன்று இரவே முகத்தை மொழுங்க சிரைத்து விட்டு  நிம்மதியாக கண்ணயர்ந்திருப்பார் .

ஆகவே  வேறு வழியே இல்லாததால் நானே பதில் எழுதினேன் .

//
மஹா பெரியவர் என்று அழைக்கப்படும் காஞ்சி மடாதீசர் சந்திரசேகர சரஸ்வதி குறித்து ஒரு பதிவை ஒரு உறுப்பினர் எழுதியிருந்தார் .மஹா பெரியவர் சகேசி விதவைகளை பார்க்க மாட்டார் என்பதை அடிப்படையாகக் கொண்ட பதிவு (இதைக்கூட தெளிவாக புரிந்து கொள்ளாமல் அவர் விதவைகளையே பார்க்க மாட்டார். ஏன் என்றால் விதவைகள் அமங்கலிகள் ; விதவைகளுக்கு மன சஞ்சலம் வரும் .அவர் அம்பாள் உபாசகர் என்பதால் .....என்று ஏகப்பட்ட விளக்கங்கள்) .

குருவின் தேவை குறித்து பலரும் எழுதியிருந்த பதிவுகளுக்கு எதிராக  இப்பதிவு வந்தது என்று எண்ணுகிறேன் . இது தொடர்பாக சில விளக்கங்களை சொல்லலாம் என்று எண்ணுகிறேன் .

அ) வைதவ்ய தீக்ஷை என்பது துறவறத்திற்கு சமமமானது .துறவிகளின் வாழ்வும் வைதவ்ய தீக்ஷை எடுத்துக் கொண்டவர்களது வாழ்வும் ஏறத்தாழ ஒன்று தான் .தினசரி மூன்று / இரண்டு அல்லது குறைந்த பட்சம் ஒருமுறையாவது முழுமையான குளியல் . ஜபம் ; சூரியாஸ்தமனத்திற்கு பிறகு உணவு உண்பதில்லை என்ற நியமம்

ஆ) 30/40 வருடங்களுக்கு முன்பு வரை துறவியும் விதவையும் ஒரு வகையான காவி + சிவப்பு கலந்த உடையைத்தான் அணிந்து வந்தார்கள் .வெள்ளை ஆடை வாங்கி அதில் 10/20 நாட்களுக்கு ஒரு முறை காஷாயம் முக்கி அணிந்து கொள்வார்கள் .இப்போது பல  துறவிகள் ஆயத்த காவி வேஷ்டிகளை பயன்படுத்துகிறார்கள் 

இ) பிராமணனுக்கு பிரதானம் சிகையும் பூணூலும் . ராமானுஜ வைணவம் தவிர்த்து ஏனைய மரபுகளில் துறவறத்தின் போது சிகையும் பூணூலும் நீக்கப்டும் .அதே போல வைதவ்ய தீக்ஷை எடுத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்கள் தாலியையும் கேசத்தையும்  நீக்கி கொள்வார்கள் .துறவிக்கும் விதவைக்கும் தலை மொட்டை தான் .தினசரி மூன்று முறை குளிப்பதற்கு இது தான் வசதி .இருவருக்கும் கடும் உணவு நிபந்தனைகளும் ஆச்சார நிபந்தனைகளும் உண்டு .

ஈ) துறவியின் நோக்கமும் விதவையின் நோக்கமும் முக்தி மட்டுமே .அவர்களுக்கு லௌகீக நோக்கங்கள் இல்லை .

உ) ஒரு காலத்தில் துறவிகளுக்கும் விதவைகளுக்கும் சமமான அளவு மரியாதை கொடுக்கப்பட்டது .நல்ல மடி ஆச்சாரம் உள்ள விதவைகளுக்குத்தான் பல நேரங்களில் மடாதிபதிகள் முதல் தீர்த்தத்தை வழங்கினார்கள் .

மாத்வ விதவை ஒருவர் ஒழுங்காக ஏகாதசி விரதம் இருப்பதால் தான் மழை பொய்க்காமல் பெய்கிறது என்பாராம் மஹா பெரியவர் . தனது தவத்தை விட அந்த விதவையின் ஆச்சாரத்திற்கு, ச்ரத்தைக்கு , வைராக்கியத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்தார் பெரியவர் .

ஊ) கணவனை இழந்த மனைவிக்கு லௌகீக கடமைகள் ஏதும் இல்லை . அதனால் அவள் ஆன்மீக சாதனை செய்ய வேண்டும் என மதம் சொன்னது .இதே விதிதான் மனைவியை இழந்த கணவனுக்கும் .அவனை விதுரன் / அபத்னீகன் என்று சாத்திரம் சொல்கிறது 

.அவனும் துறவறம் ஏற்க வேண்டும் என்று நூல்கள் சொல்கின்றன . மனைவியை இழந்தவன் அநாச்ரமி ; அவனுக்கு தானம் கொடுக்கக்கூடாது ; அவனிடம் ஆசிர்வாதம் வாங்கககூடாது ; அவனுக்கு யாகங்களில் பங்கில்லை ; அவன் ஒற்றை பிராமணன்; சில அர்ச்சக மரபுகளில் திருமணமாகாதவனும் மனைவியை இழந்தவனும் தெய்வத்திருமேனியை தீண்டக் கூடாது என்ற விதி இருக்கிறது .

அவன் முக்கியின் பாதையில் செல்ல வேண்டும் என்று புனித நூல்கள் சொல்கின்றன . துறவற வழக்கம் இல்லாத யாகங்களை இறக்கும் வரைக்கும் செய்ய வேண்டிய பூர்வ மீமாம்சக பிரிவை சார்ந்தவனுக்கு தான் நியாயத்திற்கு மறுமணம் .பிறர் எல்லாம் பெண்டாட்டி போன பிறகாவது வைராக்யத்தை கைக்கொள்ள வேண்டும் என்பதே விதி . ஆனால் விதவிலக்கை ஆண்கள் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தினர் .

எ ) நிவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் விதவைகள் மற்றும் சாமியார்கள் மீது  ப்ரவர்த்தி மார்க்கத்தில் இருக்கும் கருஹஸ்தர்களுக்கு என்றுமே விலக்கம் இருந்தது .சாமியார்களுடன் சுற்றும் சம்சாரியும் உருப்பட மாட்டான் ; சம்சாரியுடன் சுற்றும் சாமியாரும் உருப்பட மாட்டான் என்பார்கள் . சில வீடுகளில் சாமியார்கள் வந்து போனால் கழுவி துடைக்கும் வழக்கம் இருந்தது. ஆக சாமியார்களையும் விதவைகளையும் சம்சாரிகள் அமங்கல வஸ்துக்களாகத்தான் கண்டனர் . இதில் எப்போது சாமியார் மங்கல ரூபமாகவும் விதவை மட்டும் அமங்கலமாகவும் மாறினாள் என்பது தெரியாது .
ஏ) பிரச்சனை எங்கு வந்தது? பாட்டி செத்த பிறகு தாத்தா மைனராக சுற்றினால் யாருக்கும் பிரச்சனை இல்லை ; ஆனால் அத்தான் இறந்த பிறகு அக்கா வண்ண ஆடை அணிந்தால் மறுமணம் குறித்து யோசித்தால் தம்பிக்கு மான பிரச்சனை . ஜாதிக்கு ஒழுக்க பிரச்சனை .ஆணோ பெண்ணோ அனைவருக்கும் வைராக்யம் இருக்க வேண்டும் என்பதில்லை .ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்கும் ; ஒரு சிலருக்கு வைராக்யம் இருக்காது . இருப்பவர்களை போற்ற வேண்டும் ; இல்லாதவர்களை விட்டு ஒதுங்கி விட வேண்டும் . சாத்திரத்தில் பாகுபாடு இல்லை . சமூகத்தில் தான் உண்டு . அந்த சமூக பாகுபாட்டால் தான் பிரச்சனை .

ஐ) ஒரு உதாரணத்தை சொல்கிறேன் .வறட்டு ஆச்சாரத்திற்கு பெயர் போன ஒரு மாத்வ நிறுவனம் உண்டு .அதன் சிஷ்யர்களுக்கு தங்கள் சாமியாரின் வறட்டு ஆச்சாரத்தின் மீது மிகப்பெரிய பிரமிப்பு உண்டு . பாரம்பர்யமோ இன்னபிற பெருமைகளோ  சொல்லத்தக்க மஹான்களோ இல்லாததால் இந்த வறட்டுத்தனத்தையே இவர்கள் பெரும் ஆபரணமாக அணிந்து வந்தனர் . ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆஷாட தசமி அன்று சமூக ஊடகங்களில்  மேற்படி நிறுவனத்தின் சிஷ்யர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். தங்கள் சாமியார் ஆஷாட ஏகாதசி அன்று எந்த சகேசி விதவைக்கும் (தலையை மழிக்காத விதவை) தப்த முத்திரை (சங்கு சக்ர தாரணம் ) வழங்க மாட்டார் என்று பெருமையாக அறிவித்தனர் 

உண்மையில் சகேசி விதவைகள் இவர்களது லூசுத்தனங்கள் தெரிந்து அந்த அமைப்பு இருக்கும் தெருவிற்கு கூட செல்ல மாட்டார்கள் .இருந்தாலும் தங்களது சாமியாரின் கடும் நியமத்தை பறைச்சாற்ற மேற்படி கும்பல் செய்த வேலை இது. சாமியாருக்கு தெரியும் என்று தோன்றவில்லை .செய்தி பற்றிக்கொண்டது .பல விதமான வாத பிரதிவாதங்கள் நடந்தன;

 நான் அவர்கள் பதிவில் ஒரு கருத்தை சொன்னேன் ."சகேசி விதவைகளுக்கு முத்திரை கொடுக்கக்கூடாது என்பதை ஆதரிக்கிறேன் .ஆனால் அதே போல சிகை இல்லாத ஆண்களுக்கும் முத்திரை கொடுக்கக்கூடாது . சிகை இல்லாமல் இருப்பதும் பெரும்பாவம் அல்லவா ?" என்று கேட்டேன் . சிகை வைத்தவனுக்கு மட்டும் தான் முத்திரை என்றால் வசூல் என்னவாவது? ஆகையால் அந்த பதிவு காணாமல் போனது 🙂 அவ்வளவு தான் விஷயம் .

ஒ) சகேசி விதவைகளை மஹாபெரியவர் பார்க்க மறுத்தது இம்மியளவும் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். சகேசி விதவைகள் எதற்கு மடத்திற்கு செல்லவோ சாமியாரை பார்க்கவோ விரும்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை .வைராக்யம் இத்யாதிகள் கைகூடாமல் வேடிக்கை பார்க்கவா செல்கிறார்கள் ? வாசிப்பதில் விருப்பமே இல்லாதவர்களை நூலகத்தில் பொழுது போக்க விட்டால் என்னவாகும்?

ஓ) அவரவர் விஷயத்தில் மஹாபெரியவர் இன்னமும் கொஞ்சம் கருணை காட்டியிருக்க வேண்டும் என்று அனைவரும் எண்ணுகிறார்கள் .மஹாபெரியவரே சொன்னது போல அவனவன் கொஞ்சம் கொஞ்சமாக மீறத்தொடங்கினால் தர்மம் என்று ஏதும் மிஞ்சாது .சிலருக்கு முடியுடன் இருக்கும் விதவையை பார்க்க மறுப்பது மனதை புண்பட செய்யும் சிலருக்கு மடாதிபதி பிராமணராக இருப்பது உறுத்தும் .சிலருக்கு மடத்தில் இடியாப்பம் பாயா கிடைக்காதது மன வருத்தத்தை தரும் .சிலர் மடத்திற்கு ஆகும் செலவில் எத்தனை பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று புண்படுவர் .இப்படியே போனால் மடம் என்பதே இருக்காது.

ஒள) அபத்னிகர்களை மஹாபெரியவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்று தெரியவில்லை .என்னை கேட்டால் சிகை இல்லாதவர்களை , மீசை வைத்தவர்களை , ஸ்ம்ருதி விரோதமான, வர்ண விரோதமான ஜீவன உபாயங்களை கொண்டவர்களை எல்லாம் மடத்திற்குள் அவர்  விடாமல் இருந்திருக்க வேண்டும். அந்த அளவு கடுமையாக அவர் இருந்திருந்தால் இந்த விவாதமே நடந்திருக்காது .ஒரு சிலர் இன்று அவர் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை கோவில் ஆக்கமிப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருக்கவும் மாட்டார்கள் .
//

நன்றி .... Bcak Nayar 

விஜயராகவன் கிருஷ்ணன்
Fb

Wednesday, January 18, 2023

பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்

.பிள்ளையாரை பற்றி தெரிந்த கதையும் தெரியாத உண்மையும்.. 
"சிவமகா"புராணத்தில் உள்ள கதை
நமக்கு எல்லோருக்கும் தெரியும் அதாவது
முற்காலத்தில் யானை முகம் கொண்ட "கஜாசுரன்" என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தானாம்.
அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார்.

அதற்கு
"கஜாசுரன்",
தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெருக்கிறான்.
இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி,
தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கேட்கிறார்.

பிறகு விஷ்ணு
மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வருகின்றனர்.
நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த "கஜாசுரன்",
அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான்.
அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார்.

கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்து,
அவன் மீண்டும் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.
அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,
"கஜாசுரனின்" யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார்.

மேலும்
சிவபெருமான் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.

சிவபெருமான் கயிலாயம்
வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி,
அவரை வரவேற்கும் முன்பு
தயாராக நினைத்தார்.
ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை.
எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார்.
அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார்.

மேலும் தான் தயாராகி
வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான்.
பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார்.

பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி,
பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி,
விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.

அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார்.
அதன்படி சிவகணங்கள் "கஜாசுரனின்" தலையுடன் திரும்பி வந்தனர்.

அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர்.
பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான்,
அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்ற பெயரை வழங்கினார்'ரென்று அந்த புராணம் கூறுகின்றது.

சரி இது கட்டுக்கதை அல்ல இதெல்லாம் உண்மையேன்றே வைத்துக்கொள்வோம்,
அடுத்து கவனியுங்கள்.

பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் சொல்லே காணவில்லை,
இது மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம்
(உடலின் ஆதார சக்கரங்களான ஏழு சக்கரங்களின் மூலாதரத்தை பற்றி பேசும் விநாயகர் அகவல்)
தமிழ் நாட்டில் தொடங்கியது.

வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில்,
அவரை வணங்கி வந்தார்கள்.
வட நாட்டவர்களின் பார்வையில் ஆரம்ப காலத்தில்
மனித முயற்சிகளுக்கு,
கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார்.

மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில்,
பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்பு படுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும்,
இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறிவிட்டார்.

வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும்,
வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம்.

வங்காளதேசத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார்.
உழவுத் தொழிலின் பல செயல்களிலும்,
அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார்.
ஒவ்வொரு ஆண்டும்
ஆவணி மாதம் வரும் விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக,
விநாயகரை வேண்டி பெண்கள் தங்களின் வீடுகளிலே களிமண் பொம்மை வைத்து விரதம் இருக்கிறார்கள்.

பொதுவாக,
செழிப்பைக் குறிக்கும் தெய்வம் மஹாலட்சுமி,பச்சையம்மாள், போன்ற பெண் தெய்வமாக இருக்கும்.
கொஞ்சம் ஆழ சிந்தியுங்கள்,
பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே,
செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது.

ஆனால்,
பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த 
பெண் வடிவிலான விநாயகரை விநாயகி,
கணேசினி,
விக்னேஸ்வரி,
கஜனானி இப்படி பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் விநாயகரை பெண் தெய்வமாக வழிபட்டுள்ளார்கள்.

இதற்கு ஆதாரமாக தமிழ்நாட்டில் பல கோவில்களில் விநாயகரின் பெண் உருவம் சிற்பமாக செதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்படி பெண் உருவில் உள்ள விநாயகி சிலைகள் எங்கெங்கு உள்ளதுதோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால்,
முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை.

பண்டைய தமிழ்நாட்டு உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலிலும்,
மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்.

இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், உழவுக்காலுக்கும்,
மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.
பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம்.
இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.

பண்டைய (உழவர்களின்)தமிழரின் பிள்ளையாரின்
ஒரு பாடலை காணுங்கள்.

"பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!

முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,

ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!

வட்டார வழக்கில்,
முச்சாணி புழுதி = சாணம் + புழுதி, ஒடு
முத்தும் - ஒடு முற்றிய: கொடுக்கறமாம் - கொடுக்கிறோம்.

குறிப்பாக
தமிழர்களின் பார்வையில் 
பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை.
விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை.
உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார்.
இது தமிழ்நாட்டார் நம்பிக்கை.
முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்

ஆகவே விவசாய செழிப்புக்கான கடவுளாக பண்டைய தமிழர்கள் பார்த்தர்களே தவிர
ஆரிய வேத கடவுளாக பார்த்ததில்லை
அவர்களுக்கு "சிவமகா" வேத புராணங்களும் சிவன் பார்வதி மைந்தன் என்ற இடைச்சொறுகள் கதைகளையும் அறிந்திருக்க சற்றும் வாய்ப்பில்லை.
நன்றி.

Saturday, January 14, 2023

பேச்சியம்மன் வரலாறு

பேச்சியம்மன் வரலாறு

பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள்.
கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள்.

அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள்.

(முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள். 

அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள்.

அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள். 

ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள்.

அவர்களை கர்பமுற்றப் பெண்கள் வீட்டில் உள்ளவர்கள் தம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களது உதவியைப் பெற்றுக் கொள்வார்கள்.

பயங்கரமான உருவைக் கொண்டு தன் கையில் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டும், தொடையில் தனது கைகளினால் ஒரு பெண்மணி வயிற்றைக் கீறிய நிலையிலும் , கால் பாதத்தின் கீழ் ஒரு மனிதன் மிதிபட்டுக் கிடக்கவும் தோற்றம் தரும் பெரியாச்சி பார்ப்பதற்குத்தான் பயங்கரமானவளே தவிர அவளை வணங்கித் துதிப்போருக்கு அவள் அபாரமான கருணை காட்டுபவள். 

அவளை வேண்டி வணங்குபவர்களுக்கு அளவில்லா உதவி செய்பவள்.

பெரும்பாலான அவளது ஆலயங்களில் அவளுக்கு காவலனாக மதுரை வீரன் போன்றவர் காட்சி தருகிறார்.

அவளது தோற்றம் பற்றியும், பூமிக்கு வந்ததைப் பற்றியும் ஒரு கிராமியக் கதை உள்ளது. 

அந்தக் கதையின்படி ஒரு காலத்தில் பாண்டிய நாட்டை சேர்ந்த வல்லராஜா எனும் பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். 

அவன் ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்களுக்கு மட்டும் அல்ல, ரிஷி முனிவர்களுக்கும் அவனால் பெரும் தொல்லைகள் தோன்றின. 

அவன் ராக்ஷசர்களையும், அசுரர்களையும் தன் கையில் வைத்து இருந்தான். 

அதனால் அவனை யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 

அதே நேரத்தில் அவனுக்குத் துணையாக இருந்த அரக்கர்களும், அசுரர்களும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பெரியாச்சி அம்மனை துதித்து வந்தார்கள்.

அப்படி வாழ்ந்து கொண்டு கொடுங்கோல் ஆட்சியை நடத்தி வந்தவன் ஒருமுறை ஒரு முனிவர் மூலம் ஒரு சாபத்தைப் பெற்றான். 

அவளுக்குப் பிறக்க இருந்தக் குழந்தை பிரசவம் ஆனதும் அந்தக் குழந்தையின் உடல் உடனே பூமியைத் தொட்டு விட்டால் அவன் அழிந்து விடுவான்.

அவனது நாடும் அழிந்து விடும். மேலும் அவனது குழந்தையே அவனுக்கு மரணத்தை ஏற்படுத்தித் தரும்.

 மாறாக அது பூமியைத் தொடாமல் ஒரு நாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது.

அந்த மன்னனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியமே இல்லாமல் இருந்தது. 

ஒரு முறை மனைவி கர்ப்பவதி ஆயினாள். பிறக்கும் குழந்தை பூமியை உடனே தொட்டு விட்டால் தனக்கு மரணத்தை சம்பவிக்கும் என்றாலும், அந்த சாபம் தோல்வி அடைந்து விட்டால் அதற்குப் பிறகு தனக்கு ஆபத்து கிடையாது என்பதை தெரிந்து வைத்து இருந்தவன் என்ன செய்வது என தவித்தான்.

ஆனால் அவன் அழிய வேண்டும் என்ற விதி இருந்ததினால் அசுரர்களையும் அரக்கர்களையும் அடக்கி வைத்து இருந்த பெரியாச்சி அம்மன் அவன் நாட்டில் ஒரு வயதோகிய பெண்மணி உருவில் வலம் வந்து கொண்டு இருந்தாள்.

அந்த காலங்களில் கட்டில்கள் கிடையாது. 
சொகுசான மெத்தைப் போன்றவையும் கிடையாது. பிரசவம் என்றாலே பிரசவத் தீட்டுப் படாமல் இருக்க பிரசவ வேளை வந்ததும் வீடுகளின் மூலைகளில் அவர்களை தனியாக இருக்கச் சொல்வார்கள். 

தரையில் பாயின் மீதுதான் இருந்து பிரசவிப்பார்கள்.
அத்தனைக் கட்டுப்பாடு இருந்த காலம் அது. 

அதனால்தான் பிரசவம் பார்க்க என்றே அனுபவம் மிகுந்த வயதான ஆச்சிகளை கர்பிணிகளுக்குத் துணையாக இருக்க வைப்பார்கள்.

அரசன் தன்னுடைய படையினரை அனைத்து இடத்துக்கும் அனுப்பி மனைவிக்கு பிரசவம் பார்க்க தக்க துணையைத் தேடினான். 

ஆனால் யாரும் அவனுக்கு உதவ முன் வரவில்லை. ராணிக்கு பிரசவ வலி வந்து விட்டது.
பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் எனக் கவலை அடைந்த மன்னன் உடனடியாகக் கிளம்பி தானே ஊருக்குள் சென்று நல்ல ஆச்சியை பிரசவத்திற்காக தேடிக் கொண்டு இருந்த போது மன்னனின் முன்னால் ஒரு வயதான பெண்மணியின் உருவில் இருந்த பெரியாச்சி அம்மன் தென்பட்டாள்.

பெரியாச்சி அம்மன் ஒரு தெய்வப் பிறவி என்பதை அறியாமல் அவளது உதவியை மன்னன் நாடினான்.

பெரியாச்சி அம்மனும் அவனது மனைவிக்கு பிரசவம் பார்த்து அவன் குழந்தையின் உடல் முதலில் பூமியில் படாமல் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு அவனிடம் ஒரு நிபந்தனைப் போட்டாள். 

அந்த நிபந்தனையின்படி அவள் அவனுக்குப் பிறக்கும் குழந்தையின் உடல் பூமியில் படாமல் வைத்துக் கொண்டு இருந்து விட்டால் அவளுக்கு ஏராளமான பொருட்களைத் தருவதாக உறுதி அளித்தான்.

குழந்தைப் பிறந்தது. 
மன்னனின் மனைவியின் அருகிலேயே அமர்ந்து கொண்டு இருந்த பெரியாச்சி அம்மனும் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள். 

காலக்கெடு முடிந்ததும், அரசன் வந்து அந்தக் குழந்தையை தன் மனைவியிடம் தருமாறு கேட்டான். 

ஆனால் பெரியாச்சி அம்மனோ குழந்தையை தன் கையிலேயே வைத்துக் கொண்டு முதலில் தனக்குத் தர வேண்டிய பொருட்களைக் கொண்டு வருமாறு கூறினாள். 

ஆணவம் பிடித்த மன்னனோ, ஒரு வயதான பெண்மணியினால் தன்னை என்ன செய்ய முடியும் என இறுமாப்புக் கொண்டு அவளுக்குக் கூறியபடி ஒன்றும் தர முடியாது எனவும், குழந்தையைக் கொடுக்காவிடில் உன்னைக் கொன்று விடுவேன் என கோபமாகக் கூறிய வண்ணம் உருவிய வாளுடன் பெரியாச்சியின் அருகில் சென்றான்.

அவ்வளவுதான், ஆத்திரம் அடைந்த பெரியாச்சி நான்கு கைகளுடன், கோரமான உருவைக் கொண்டு பயங்கரமான கண்களுடன் தன் சுய உருவைக் காட்டியபடி அங்கு அமர்ந்தாள். 

ஒரு கையில் குழந்தையை உயர்த்திப் பிடித்தாள். 

இன்னொரு கையினால் மன்னனின் மனைவியை தூக்கித் தன் தொடை மீது வைத்துக் கொண்டு அவள் வயிற்றைக் கிழித்து அவள் உடலின் உட் பாகங்களைக் கடித்துத் தின்றாள்.

அதற்கிடையில் தன் அருகில் உருவிய வாளுடன் வந்த மன்னனை தன் காலடியில் தள்ளி அழுத்திக் கொன்றாள். 

அவன் படையினரை அவளது அடிமைகளான அசுரர்கள் துரத்திக் கொன்றார்கள்.

இப்படியாக கொடுங்கோல் மன்னனின் கதையை அவன் வம்சத்தோடு முடித்ததும் ஆக்ரோஷமாக நின்ற அவளைக் கைகூப்பி வணங்கி நின்ற மக்கள் அவள் கோபத்தைத் தணித்துக் கொண்டு தம்மை காப்பற்றி அருளுமாறு வேண்டிக் கொள்ள அவளும் கோபம் தணிந்து தன்னைப் பற்றிய உண்மையைக் கூறினாள். 

தானே காளியின் அவதாரம் எனவும், இனி தன்னைத் துதித்து வணங்கி வந்தால் தான் குடிகொள்ளும் ஊரைக் காப்பேன் எனவும், அவரவர் வீடுகளில் உள்ள கர்பிணிகளுக்கு சுகப் பிரசவம் ஆகவும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் தான் உதவுவேன் என்றும், அவர்களுடைய குழந்தைகளுக்கு தானே பாதுகாவலராக இருப்பேன் எனவும் உறுதி தந்தாள்.

இப்படியாக தன்னை அடையாளாம் காட்டிக் கொண்டவள் பல கிராமங்களில் கிராம தேவதையாகவும், நகரங்களில் நகர மக்கள் வணங்கும் பேச்சி அல்லது பெரியாச்சி அம்மனாகவும் விளங்கி வருகிறாள். 

அவள் ஆடி மாதத்தில் பெருமளவு ஆராதிக்கப்படுகிறாள். 

கர்பிணிகளை அவள் ஆலயத்தில் அழைத்துச் சென்று அவள் ஆசிகளை வேண்டுகிறார்கள். 

குழந்தைப் பிறந்ததும், தொட்டில் போட்டு பெயர் வைக்கும் முன் முதலில் அவள் சன்னதிக்கு எடுத்துச் சென்று குழந்தையை அவள் சன்னதியில் கிடத்தியப் பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து மற்ற சடங்குகளை செய்கிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கு காது குத்தல் மற்றும் மொட்டைப் போடுதல் போன்ற சடங்குகளையும் அவளை வேண்டிக் கொண்டு அவள் ஆலயத்தில் செய்கிறார்கள். 

அவளை சிலர் மாரியம்மனின் அவதாரமாகவும் பார்க்கின்றார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள அவளது சில ஆலயங்களில் அவளுக்கு மிருக பலிகள் தரப்படுகின்றன. ஆனால் நகர்புற ஆலயங்களில் சுத்த சைவப் பிரசாதங்களையே படைக்கின்றார்கள்.

ஸ்ரீ பேச்சியம்மன் மந்திரம். 

ஓம் ஞான ஸ்ரீ பேச்சியம்மன் நமஹ ...

படித்ததில் பிடித்தது.

Friday, January 13, 2023

சங்கல்பம் என்ன சொல்கிறது

சங்கல்பம் என்ன சொல்கிறது?

பூஜா சங்கல்பம் மந்திரம் விளக்கமாக தெரிந்து கொள்வோம்

*மமோபாத்த ஸமஸ்த*
என்னால் அடையப்பெற்ற அனைத்து

*துரித க்ஷயத்வாரா*
பாபங்களின் நிவர்த்தி வாயிலாகவும்

*ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்*
இறைவனின் ப்ரீதிக்காகவும்

*சுபே சோபனே முஹூர்த்தே*
சுபமான இந் நல்வேளையில்

*அத்ய ப்ரஹ்மண*
இன்றைய பிரம்மாவின்

*த்விதீய பரார்த்தே*
பிரம்மாவின் ஆயுளில் இரண்டாம் பாகம் 

*ஸ்வேத வராஹ கல்பே*
ஸ்வேத வராஹ கல்பத்தின்

*வைவஸ்வத மன்வந்தரே*
வைவஸ்வத மன்வந்தரத்தின்

*அஷ்டாவிம் சதிதமே*
இருபத்தெட்டாவது

*கலியுகே பிரதமே பாதே*
கலியுகத்தின் முதல் கால் பாகத்தில்

*ஜம்பூ த்வீபே*
ஜம்பூ த்வீபத்தில்

*பாரத வர்ஷே*
பாரத வர்ஷத்தில்

*பரத கண்டே*
பரத கண்டத்தில்

*மேரோர் தக்ஷிணே பார்ஸ்வே*
மஹா மேருவாகிய ஹிமயத்தின் தென்பக்கம்

*சகாப்தே*
சக என்னும் ஆண்டு கணக்கின்படி

*அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே*
நமது தற்கால வழக்கிலுள்ள

*ப்ரபவாதி ஷஷ்டி ஸமவத்ஸரானாம் மத்யே*
பிரபவ முதல் தொடங்கும் அறுபது ஆண்டுகளினிடையே

*அமுக ஸம்வத்ஸரே*
இன்ன பெயருள்ள ஆண்டின்

*அமுக அயனே*
இன்ன அயனத்தில்

*அமுக ருதௌ*
இன்ன ருதுவில்

*அமுக மாசே*
இன்ன மாதத்தில்

*அமுக பக்ஷே*
இன்ன பக்ஷத்தில் (பிறையில்), 

*ஸுபதிதௌ*
சுபதிதி

*அமுக வாசர யுக்தாயாம்*
இன்ன கிழமையும்

*அமுக நக்ஷத்ர யுக்தாயாம்*
இன்ன நக்ஷத்திரமும்

*சுபயோக சுபகரன*
நல்யோகமும் கரணமும்

*விசேஷேன விசிஷ்டாயாம்*
மிக விசேஷமும்

*அஸ்யாம் ஸுபதிதௌ*
கூடிய நல்ல நாளில்

*ஸ்ரீ நாராயண ப்ரீத்யர்த்தம்*
நாராயண ப்ரீதிக்காகவும் (பரமேஸ்வரன் மற்றமுள்ள அம்பிகை போன்ற தங்களின் உபாசனைக் கடவுளர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்) 

*அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்*
நமது குடும்பத்தினரின்

*க்ஷேம ச்தைர்ய தைர்ய*
க்ஷேமம், ஸ்திரத் தன்மை, தைர்யம்

*வீர்ய விஜய ஆயுளாரோக்ய*
வீரம், வெற்றி வியாதியற்ற ஆயுளும், 

*அஷ்ட ஐஸ்வர்ய*
எட்டு செல்வங்களும்

*அபிவ்ருத்யர்தம்*
பெருகும் பொருட்டும்

*ஸமஸ்த மங்களா வாப்யர்தம்*
அனைத்து மங்களங்களும் கிடைக்கும் பொருட்டு

*ஸமஸ்த துரிதோப சாந்த்யர்தம்*
அனைத்து பாபங்களின் நிவர்த்திக்காகவும்

*தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித*
அறம், பொருள், இன்பம், வீடு, நால்வகை, 

*புருஷார்த்த சித்யர்த்தம்*
பேறுகள் கிட்டவும்

*யாவச்சக்தி த்யான ஆவாஹனாதி*
சக்திக்கேற்ப, தியானம் ஆவாஹனம் கூடிய

*பூஜாம் கரிஷ்யே*
பூஜையை செய்கிறேன்

*பூஜாம் கரிஷ்யாம்*
பூஜையை செய்கிறோம்.

Wednesday, January 11, 2023

தவ்வை என்னும் ஜேஷ்டா தேவி ( மூத்த தேவி )

#தவ்வை என்னும்
#ஜேஷ்டா_தேவி:( மூத்த தேவி)

ஜேஷ்டா தேவி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார். இவருக்கு தவ்வை, மூதேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. இவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார்.

பிரதி தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. திருவள்ளுவர், ஔவையார் போன்றோர் தவ்வையைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். சமசுகிருதத்தில் ஜேஷ்டா தேவி என்று அழைக்கின்றனர்.

தமிழர்களின் மூத்த தெய்வம்... வளத்தின் மூல வடிவம்... மூதேவி!

மூதேவி என்பது நம்மில் அதிகம் புழங்கும் வசைச்சொல். செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தி வருகிறோம். அமங்கலமானவள், எதற்கும் உதவாதவள், சோம்பேறி என்றெல்லாம் அந்த வார்த்தைக்குப் பொருளும் கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். 

இப்படியெல்லாம் அவச்சொல்லுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் மூதேவிதான் நம் முன்னோரின் பிரதான தெய்வம் என்றால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாகவும் வணங்கப்பட்டவள்.  

மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு.  

தமிழரின் வழிபாடு, இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மரங்களை வழிபடும் மரபுக்கு 'கந்தழி' என்று பெயர். தங்களைக் காப்பாற்றுவதற்காக யுத்தக்களத்திற்குச் சென்று உயிரிழக்கும் வீரர்கள், தலைவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு அதைக் கடவுளாக வழிபடுவார்கள். அதற்கு, 'நடுகல்'  வழிபாடு என்று பெயர்.  

இவை அனைத்தையும்  விட மேலானது பெண் தெய்வ வழிபாடு. மாரிதெய்வமாக மழையையும், நீராமகளிராக நதிகளையும், தாய்தெய்வமாக கொற்றவையையும் வழிபடுவது தமிழ் மரபு. 

கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்படுகிறாள். 

யார் இந்த மூதேவி ? அவளின்  வரலாறு என்ன ?

நம் முது தந்தையரை எப்படி 'மூதாதையர்' என்று அழைக்கிறோமோ அப்படித்தான் மூத்ததேவிக்கு 'மூதேவி' என்ற பெயர் வந்தது. அக்காவைக் குறிக்கும் சொல்லான 'அக்கை' என்கிற வார்த்தை எப்படி 'தமக்கை' ஆனதோ, அதேபோல் 'அவ்வை' என்ற வார்த்தை 'தவ்வை' ஆகியிருக்கலாம் என்கிறார்கள்  வரலாற்றாசிரியர்கள். அப்படியெனில் தவ்வை யாருக்கு அக்கா? செல்வத்தின் அடையாளமாகக் கருதப்படும் திருமகளுக்குத்தான்! 

உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள்தான் தவ்வை. அதன் காரணமாகவே பெரும்பாலான தவ்வைச் சிற்பங்கள் வயல்வெளிகளை ஒட்டியே கிடைத்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாரிகுமரியில் கிடைத்த தவ்வைச் சிற்பங்களே அதற்குச் சான்று. 

தவ்வை பற்றி திருக்குறளில் குறிப்பு இருக்கிறது. அதேபோல், 'தொண்டை நாட்டுச் சிற்றரசனான பார்த்திபேந்திர வர்மன், சேட்டையார் கோயிலுக்கு மானியமாக 1148 குழி நிலம் வழங்கிய'தாக உத்திரமேரூர் கல்வெட்டில் சான்றுகள் உள்ளன. 'சேட்டை' மூதேவியின் மற்றொரு பெயர். பேரங்கியூர், தென் சிறுவலூர் ஆகிய இடங்களில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைச் சிற்பங்கள் கிடைத்துள்ளன. தவ்வைக்குத் தனியாகக் கோயில்களும் இருந்திருக்கின்றன. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வைக் கோயில் ஒன்று 2010 - ம் ஆண்டு பழநியில் கண்டுபிடிக்கப்பட்டது.  கி.பி 13-ம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடந்து வந்தது. இதற்கு ஆதாரமாகப் பல தொல்லியல் சான்றுகள் உள்ளன. தவ்வையின் சிலை எவ்வித சிற்ப இலக்கணங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு  காரணாகமம், சுப்பிரபேதாகமம் போன்ற ஆகமங்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப்படுகின்றன. இதுவே அவள் வளமை தெய்வம் என்பதற்கான சான்று.

புராணங்களில் தவ்வை பற்றி :

சைவ - வைணவப் புராணங்களில் திருமால் பாற்கடலைக் கடைந்த போது திருமகளுக்கு முன்பாக தோன்றியவள் மூதேவி என்று சொல்லப்பட்டுள்ளது.  இது பண்டைய தமிழரின்,  உரத்துக்குப் பின்னர் செழிப்பு என்பதன் தத்துவத்தின் தொடர்ச்சியாகக் கூட இருக்கலாம். அதே போல் வருணனின் மனைவியாகவும் சொல்லப்படுகிறது. வருணன்  மழைக் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 தற்போதைய தவ்வை வழிபாடு :

 பல கோயில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப்படுகிறாள். வடமொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா(தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல், வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில், தவ்வைக்குக் குடைவரைக்கோயில் ஒன்று உள்ளது. சப்த மாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. 

வடநாட்டு தாந்திரீக சாக்த மரபுகளிலும் தவ்வை, சக்தியின் பத்து வடிவங்களில் ஒன்றான தூமாதேவியாகப் போற்றி வழிபடப்படுகிறாள்.. கிழிந்த ஆடை, அசிங்கமான தோற்றம், காக்கைக் கொடி இவையே தூமாதேவியின் அடையாளங்களாக உள்ளன. தவ்வைக்கும் இவையே அடையாளங்களாக உள்ளன. 

 தூமாதேவிக்கு காஷ்மீரில் தூம்ராகாளி என்ற பெயரில் தவ்வைக்குக் கோயில் ஒன்று உள்ளது. இந்தியா முழுவதும் தவ்வைக்குச் சிறு சிறு சிலைகள், கோயில்கள் இருந்தாலும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் சிலைகளும், கோயில்களும் உள்ளன. 

பண்டைய தமிழர்கள் தவ்வையின் தோற்றத்தை அறிவுசார்ந்து உருவாக்கியிருந்தனர். ஆனால், நாளடைவில் தோற்றத்தை மட்டும் வைத்து  'தவ்வை'யை அமங்கலத்தின் அடையாளமாகவும், இழிவாகவும் ஆக்கிவிட்டனர். தவ்வையைப் பார்ப்பது அமங்கலம் என்ற காரணத்தினால், உத்திரமேரூரில் உள்ள தவ்வை சிற்பத்தை தரையை நோக்கி சாத்தி வைத்துவிட்டனர்.

தவ்வை வழிபாடு பற்றி வரலாற்று ஆய்வாசிரியர் தொ. பரமசிவத்திடம் கேட்டோம். "வளத்தின் மூல வடிவமே  ஜேஸ்டாதேவிதான் (தவ்வை). திருவள்ளுவர் ஜேஸ்டாதேவியை தவ்வை என்று சொல்கிறார். லட்சுமியின் அக்கா  மூதேவி(தவ்வை). மூதேவிதான் தற்போது ஜேஸ்டாதேவியாக வழிபடப்படுகிறாள். தவ்வை உரத்தின் கடவுள். லட்சுமி விளைந்த தானியங்களின் கடவுள். தவ்வை மங்கலமான தெய்வம். 

தமிழ்நாடு முழுவதும் தவ்வைக்குச் சிலைகள் பல உள்ளன. சிலர் எந்த சாமி என்றே தெரியாமல் வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் அழுக்காப் போன கடவுள் என்று ஒதுக்குகிறார்கள். அது தவறு. வளங்களுக்கெல்லாம் மூல வளமே அழுக்குதான். எனவே அனைவரும் ஜேஸ்டாதேவியை வழிபடவேண்டும்" என்கிறார் பரமசிவம்.

தவ்வையின் கொடி காக்கைக் கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்று வீடுகளில் சொல்வது வழக்கம். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளை நாம் காண முடியும். கழுதையின் குரலைக் கேட்பது கூட நற்சகுணமாகத்தான் பலரால் நம்பப்படுகிறது. 

வழிபாடு:

தவ்வை ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக பலகாலங்களாக வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஆய்வாளர்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில் இந்த தவ்வை வழிபாடு இருந்துள்ளதாகக் கூறுகின்றனர். ஏழு கன்னியர்களுள் தவ்வை குழந்தைப் பேறு வழங்கும் தெய்வமாக வழிபடப்பட்டுள்ளார். சாக்ததில் இவள் வழிபாடு முக்கிய இடத்தில் இருந்துள்ளது. ஏழு கன்னியர்களில் ஒருத்தியாக வழிபடப்பட்டு பிறகு தனியாகப் பிரிக்கப்பட்டாள். சாக்த வழிபாட்டில் சக்தி பீடத்தின் வடிவான மேரு மலை பூசையில் ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றினை நவாபரணம் என்று அழைக்கின்றனர். இந்த ஆபரணங்களில் இரண்டாவது ஆபரணமாகத் தவ்வை இருக்கிறார்.

பல்லவர்களின் ஆட்சிக் காலமான 8ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் தெய்வமாக தவ்வை வழிபடப்பட்டுள்ளார். பல்லவர்கள் அமைத்த கோயில்களில் தவ்வைக்குச் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றுள்ளது. நந்திவர்ம பல்லவன் தவ்வையைக் குலதெய்வமாக வழிபாடு செய்துள்ளார். பல்லவர்கள் காலத்திற்குப் பிறகு பிற்காலச் சோழர்களின் காலத்திலும் தவ்வை வழிபாடு இருந்துள்ளது.

தவ்வை வழிபாடு திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வெகுவாகக் காணப்படுகிறது. தவ்வையை பயணத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க வழிபடுகின்றனர். சோம்பலை நீக்கி சுறுசுறுப்பான வாழ்வைத் தர தவ்வையை வழிபட வேண்டும். தவ்வையை வண்ணார்கள் எனப்படும் இனத்தவர்கள் ஏகவேணி என்ற பெயரில் வணங்குகின்றனர்,இவர்களை ஏகாளி (சிவன்காளி) அம்சத்தினர் என்றும் அழைக்கின்றனர்.

#கோயில்கள்:

தவ்வைக்கு வாராணாசியிலும், அஸ்சாமின் கௌஹாத்தியிலுள்ள காமாக்யாவிலும் கோயில் அமைந்துள்ளது. திருப்பதியில் உள்ள நீலாத்ரி மலையில் நீளா தேவிக்கு கோயில் அமைந்துள்ளது.

#தமிழகம் :

தவ்வையை மூலவராகக் கொண்ட கோயில்கள் தமிழ்நாட்டில் இல்லை. தவ்வை தனியாகவோ, மகன் மற்றும் மகளுடன் ஒரே பீடத்தில் அமைத்து வணங்கும் வழக்கம் உள்ளது. எண்ணற்ற கோயில்களில் தவ்வை சிலையானது உள்ளது. சில இடங்களில் தவ்வை கோயிலில் அல்லாமல் விவசாய நிலங்களின் மத்தியில் காணப்படுகிறார்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள கமலமுனி சித்தர் பீடம் நுழைவுவாயிலில் ஜேஷ்டாதேவியின் சிலை அமைந்துள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், வழூவூரிலுள்ள வீரட்டேஸ்வரர் கோயிலில் மேற்கு திருச்சுற்றிலுள்ள மேடையில் மூத்த தேவி உருவம் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தேவியானவள் தனது வலது பக்கத்தில் மகன் மாந்தனுடனும், இடது பக்கத்தில் மகள் மாந்தியுடனும் அமர்ந்த கோலத்தில் ஒரே பீடத்தில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலும் அச்சிற்பத்தை தென்மேற்கு மூலையில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காலம் பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது.

திருக்கொண்டீச்வரம் பசுபதீஸ்வரர் கோவிலில் ஜேஷ்டா தேவி இடம் பெற்றுள்ளாள். இத்தலத்தில் இவள் ஒரு அனுக்கிரக தேவதை.
திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஜேஷ்டாதேவிக்கு சிலை உண்டு.
பல்லவன் இராச சிம்மன் எடுப்பித்த காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலிலும், கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் மங்களாம்பிகை சன்னிதிக்கு வடமேற்கேயும், வெடால் ஆண்டவர் திருக்கோயில் தென் புறத்திலும் சேஷ்டாதேவியின் திருவுருவம் நல்ல கட்டமைப்புடன் கூடிய இடத்தில் உள்ளது.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மலை "உஜ்ஜீவநாதர்' (மார்க்கண்டேயருக்கு மீண்டும் ஜீவன் அளித்ததால் சிவபெருமானுக்கு இப்பெயர்) கோவிலில் ஜேஷ்டாதேவியின் சிலை வித்தியாசமான வடிவமைப்பில் உள்ளது.
ஓரையூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம்
குளித்தலை கடம்பவனநாதர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோயில் - திருச்சுற்றில் தென்மேற்கு மூலையில் ஸ்ரீ மகாலட்சுமி சன்னதிக்கு அருகே தனிக்கல்லாக வைக்கப்பட்டுள்ளது.
மோகனூர் அசலதீபேசுவரர் கோயில் - சுற்றுசுவரில் பதியப்பட்டுள்ளது.
திருமுக்கூடலூர் அகத்தீசுவரர் கோயில் - திருச்சுற்றில் உள்ளது.
சிறீராமசமுத்திரம் வாலீசுவரர் கோயில் - கோயிலுக்கு வெளியே பிள்ளையார், நவக்கிரக சன்னதி அருகே உள்ளது.

பெரணமல்லூர் திருக்கரேசுவரர் கோயில
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வளமைத் தெய்வமான தவ்வை நடுகல்லை, தூய நெஞ்சக் கல்லூரி பேரராசிரியர்கள், செப்டம்பர் 2018-இல் கண்டெடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், பரளச்சி கிராமத்தில் ஆகஸ்டு 2020-இல், கிபி பத்தாம் நூற்றாண்டின் தவ்வை சிற்பத்தை கண்டெடுத்தனர்.
உத்திரமேரூர், அருகே 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் கால மூதேவி எனப்படும் ஜேஷ்டா தேவி கற்சிலையை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர் மே 2021-இல் கண்டெடுத்தனர்.
பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் உள்ள ஜேஷ்டாதேவி கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும்.

தமிழ் இலக்கியங்களில் :

சங்க இலக்கியங்களில் இவர் மாமுகடி ( 'கரிய சேட்டை ஆகிய மூதேவி'), தவ்வை, காக்கைக் கொடியோள் பழையோள் உட்படப் பதினான்கு (14) பெயர்களால் அழைக்கப்படுகிறாள். தெற்கின் பெரும் பகுதியைப் பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டில் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர்காலத்தில் சேட்டை வழிபாடு சிறப்புற்றிருந்தமையைக் கல்வெட்டுகள் கூறும். சமணர்கள் மூதேவியை வழிபட்டுள்ளனர்.

"வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை"

என்ற ஒளவையார் பாடலும்.

"மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

என்ற திருவள்ளுவர் குறளும் மூதேவியின் பழமையைக் கூறுகின்றன. குறளின் பொருள் சோம்பேறியிடம் மூதேவி தங்குவாள்; சோம்பல் இல்லாதவனிடம் சீதேவி தங்குவாள் என்பதாகும்.

அழுக்கு, நாற்றம், துன்பம்,புலம்பல், அடிக்கடி கொட்டாவி விடுதல், தலைவிரித்து போடுதல், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல், அலங்கோலமாக இருத்தல், எதிர்மறையான எண்ணங்கள், தீராத மனக்கஷ்டம் இவை எல்லாம் மூதேவியின் அறிகுறிகளாகும். இவற்றில் ஒன்று இருந்தாலே வரிசையாக எல்லாமே நம்மிடம் குடி புகுந்துவிடும்.

மூதேவி வழிபாடு தற்போது மிகவும் குறைந்துவிட்டது. மூதேவி என்ற நாட்டுப்புற சிறு தெய்வம் தமிழரிடையே வழங்கும் கதைகளிலும், பழமொழிகளிலும் தாழ்த்தப்பட்டு இழிசொல்லாக்கப்பட்டு விட்டதால் இவளுடைய முக்கியத்துவத்தைச் சரிவர உணர முடியாதிருக்கிறது.

தரித்திரத்தின் தெய்வம் எனப் போற்றப்பட்ட தவ்வையை அக்காலத் தமிழர் செல்வத்துக்காகவும் வளத்துக்காகவுமே வழிபட்டுள்ளனர் என்பது வியப்புக்குரிய செய்தி. தமிழகத்தின் பெரும்பாக்கம், தென்சிறுவலூர், பேரங்கியூர் முதலான ஊர்களில் கிடைத்த கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பங்களில், அவள் தன் மகன் குளிகனுடனும், மகள் மாந்தியுடனும் கையில் பணப்பேழையுடனும் காட்சியளிக்கிறாள்.

தவ்வை பற்றிய மிகப்பழைய குறிப்பு திருக்குறளிலேயே வருகிறது.ஏழாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் தொண்டரடிப் பொடியாழ்வார் தன் திருவாய்மொழியில்,

'கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே'

திருமால் இருக்க, தவ்வையிடம் செல்வத்தை எதிர்பார்க்கிறீர்களே! என்று இகழ்ந்து பாடுகிறார்.

தவ்வை செழிப்புக்காக வணங்கப்பட்டுவந்தாலும், அவள் அமங்கலத்தின் தெய்வம் என்ற நம்பிக்கை பல்லாண்டுகளாய்த் தொடர்ந்ததன் விளைவு, அவளது வழிபாட்டை மெதுமெதுவாக குறைக்க வழிவகுத்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தொன்றுதொட்டு நிலைத்துவந்த சமய வழக்கங்களே நிலைத்துவிடுவதும், இடைக்காலத்தில் திடீர் புகழ்பெற்ற, அல்லது புறக்கணிப்புக்குள்ளான, அல்லது வேறுபகுதியிலிருந்து அறிமுகமான தெய்வ வழிபாடுகள், முற்றாக அழிந்தொழிந்து போகாமல், சைவ - வைணவப் பொது நீரோட்டத்தில் கலந்து தம் சுயமிழந்து மறைந்துவிடுவதுமே காலம்காலமான வழக்கமாகும். தவ்வைக்கும் அதுவே நேர்ந்தது.

தவ்வை மட்டுமன்றி, தமிழகத்தில் ஆங்காங்கே சைவக் கோயில்களின் கவனிக்கப்படாத மூலைகளில் சிலைவடிவில் வீற்றிருக்கும் புத்தர்களும், சமண தீர்த்தங்கரர்களும், விநாயகி முதலான தாந்திரீக தெய்வங்களும் இதைத் தான் சொல்லாமல் சொல்லி, அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருக்கின்றனர்.
-----------------------------------------------------------

திருச்சிற்றம்பலம் 🙏

பஞ்சவாசம்

இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய அருமருந்து #பஞ்சவாசம் 
பசி இன்மை 
பதற்றம்
மனம் சார்ந்த பிரச்சினைகள்
குடும்பத்தில் ஏதோ ஒரு குழப்பமான சூழல் ஒற்றுமையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு

*பஞ்ச வாசம்*

பஞ்ச வாசம் என்பது நமக்கு புதிதாக தோன்றும் ஆனால் நம் முன்னோர்கள் இதை தினமும் பயன்படுத்தி நல் வாழ்கையும் மகிழ்ச்சியும் நிறைவும் அடைந்தனர்,

 பஞ்ச பூதம் ஐந்து , ஐந்து என்னும் மூலிகை கலவைகள் கொன்ட மருந்துகள்(உணவே மருந்து) இன்றும் பயன்படுத்தப் படுகின்றன, 

பஞ்ச வாசம் என்பது ஏலம், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிக்காய்,வால் மிளகு,(அல்லது)தக்கோலம் (,சுத்தி செய்து) என்னும் ஐந்து கலவையாகும்.

 🌹லட்சுமி வாசம் செய்யும் மங்கள பொருள் ,வாசம்=சுவாசம்=வாழ்வு (நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்)ஆகும்.

பயன்படுத்தும் முறை ;

தாம்பூலம் தரிக்கும் போது பஞ்ச வாசத்துடன் தரிக்கவும் என்று வள்ளல் பெருமானின் உரைநடைப் பகுதியிலும்,ஏலம்    தக்கோலம் போன்ற வாசனை திரவியங்களுடனும் என்ற வரிகள் பதார்த்த குண சிந்தாமணி   போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

👳‍♂🧕திருமணம் செய்த இல்லற தர்மவாசிகள் தாம்பூலம் தரிக்கும் போது இந்த பஞ்ச வாசனை சேர்த்து(ஒரு சிட்டிகை அளவு)  பயன்படுத்த உடல் பிணிகள் ஏற்படாது.(தாம்பூலத்தின் போது🍃 வெற்றிலை யின் நுனி,காம்பு,நடு நரம்பு ஆகியவை நீக்கி சாப்பிட வேண்டும்.

👨‍👩‍👦‍👦ஒரு தாமிரப்பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி  பஞ்ச வாசம(ஒரு சிட்டிகை அளவு)🌓 இரவில் போட்டு பூஜை அறையில்🥢 வைத்து காலையில்☀ இறை சங்கல்பத்துடன் தீர்த்தமாக 💧 சாப்பிடலாம்,
மேலும் 20லிட்டர் நீர் உள்ள குடத்தில் அரை அரிசி அளவு பஞ்சவாசம் போட்டு நீரை சுத்தி செய்து பருகலாம்.

▪️இதில் கிராம்பு உள்ளதால் பணம் சேமிக்கும் இடத்தில் வைக்க செல்வ வளம் பெருகும்..

 இதை சிறிய அளவில் பர்சில் வைத்துக்கொண்டால்🚎 பிரயாணம் செய்யும்போது. அல்லது ஓட்டலில்🏢 சாப்பிட்டு வயிறு  அசௌகரித்தின்போது ஒரு சிட்டிகை சாப்பிட லாம்.

இனிப்பு🍮 பண்டங்கள் தயாரிப்பிலூம் சிட்டிகை 0.1gm  அளவு சேர்க்கலாம்,குளுக்கந்திலும் கலந்து சாப்பிட மிகவும் நறுமணமாக இருக்கும்.

🏵பஞ்ச வாசம்  உடலில் உள்ள இராஜ உறுப்புகளிலுள்ள சக்தியை தூண்டுகிறது இதனால் மந்தநிலை விலகி புத்துணர்ச்சி ஏற்படுகிறது, அஜீரணத்தை தடுக்கிறது, வாய்துர்நாற்றத்தை போக்குகிறது, வயிற்றுவலியை நீக்குகிறது,சரியான முறையில் தூக்கத்தை ஊக்குவிக்கும்,சுவாசம் சீராகும்,மன அழுத்தம் குறையும் இவ்வாறாக பல நன்மைகள் உண்டாகும்.

பஞ்சவாசம் 3.gm ரூ.40+ கொரியர்

பஞ்சவாசம் 10gm ரூ.110+கொரியர்

Thanks FB