Saturday, July 12, 2025

சடைதரித்தல் தீக்கை

🙏🏻தந்தை_மகனுக்கு_ஆற்றும்ன நன்றி சடைதரித்தல்_தீக்கை
சைவசமய மரபுகளில் குருநாதனே சீடருக்கு தந்தையாவார், இம்மரபினை தவறாது பின்பற்றுபவர்கள் எமையாளும் தருமையாதீனத்து அடியவர்கள் ஆவார்கள்

தருமையாதீன குருபீடத்தில் எழுந்தருளியுள்ள குருமணிகளை அணுகி துறவறம் ஏற்க விரும்பும் அடியவர்களுக்கு சிவாகமத்துள் விதித்தபடி படிமுறையிலான தீக்கைகள் செய்து அவர்களை துறவறத்தில் வழிநடத்தி குருமகாசன்னிதானங்கள்  சிவஞானத் தெளிவை உண்டாக்குவார்கள்

இப்படி சீடருக்கு ஆச்சார்யர் வழங்கும் படிமுறையிலான தீக்கைகளில் ஒன்று சடைதரித்தல் தீக்கையாக தருமையாதீனத்தில் வழிவழியாக பின்பற்றப் படுகிறது

அண்டி வந்த அடியவருக்கு சிவகுருநாதர் காஷாயம், கௌபீனம், வேணுதண்டம், விபூதி பொக்கணம் முதலியவை வழங்கி சீடரின் சிரசை சிகையாகவோ, முண்டிதமாகவோ, சடையாகவோ செய்து, சிவஞான சாத்திரங்களை கைதந்து சிவஞானியாக்க வேண்டும் என்று சிவாகமத்தில் குறிக்கப் படுவதாக தருமையாதீனத்தின் வருணாசிரம சந்திரிகா குறிப்பிடுகிறது

மேலும் *"கவசமந்திரத்தால் சீடரின் சிரசை மறைத்து கொள்ள அவகுண்டம் என்ற வஸ்திரத்தையும் குருநாதர் தருவார்"* என்று சிவாகமம் கூறுகிறது

மேற்சொன்ன விசயங்களில் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள் வேணுதண்டம் தவிர மற்றையவற்றை குருநாதரிடம் பெற்றுவாழும் இயல்புடையவர்களாக இருப்பது காலங்காலமான மரபாகும்

தருமையாதீனத்தில் துறவறம் மேற்கொள்ள விரும்பும் அடியவருக்கு, முதலில் பக்குவத்திற்கு ஏற்ப ஆச்சார்யர் "யாத்திரை காஷாயம்" என்பதனை வழங்குவார்கள், இதன்பொழுது அடியவர் தமது சிகைகளைந்து காவிரியில் நீராடி ஆச்சார்யருக்கு முன்வரும்பொழுது உரிய ஆகமமுறையில் குருமகாசன்னிதானங்கள் அவருக்கு காவிஉடையை வழங்குவார்கள், தற்பொழுது அவர் தமது தாயாகவும் தந்தையாகவும் உடன்பிறந்தாராகவும் எல்லாமாகவும் இனி குருநாதரே இருப்பார் என்ற உறுதியை ஆச்சார்யருக்கு வழங்கவேண்டும் என்று ஆகமம் சாற்றுகிறது

யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர், அது முதல் பிக்ஷை ஏற்று உண்டு தேசாந்திரம் சென்று பக்குவம் அடைந்து குருநாதரை மீண்டும் அடைவது ஆகம மரபாகும், 

தருமையாதீனத்தில் யாத்திரை காஷாயம் பெற்ற அடியவர்கள் ஆதீனத்திலேயே தங்கியிருந்து, சன்னிதானத்தின் திருவுளப்படி யாத்திரைகள் செய்து குருமகா மகா சன்னிதானத்தின் பரிகலசேடத்தை உணவாக பெற்று உண்டு தருமையாதீன குருமூர்த்தங்களில் சரியாதி தொண்டுகள் செய்து பக்குவம் பெற்று வருவர்,

இந்நிலையில், காஷாயம் தரப்பட்டபோது களைந்த சிகை வளரத் தொடங்கும் போது அதனை மறைத்து கொள்வதற்காக மேற்சொன்னபடி குருமகாசன்னிதானத்தின் திருவுளப் படியான ஒரு நன்னாளில் குருமகாசன்னிதானம் சீடருக்கு *"கவசமந்திரத்தின் மூலம் அவகுண்டமான வஸ்திரத்தை வழங்குகிறார்கள்"*

இதனை தருமையாதீன வழக்கத்தில் *"ஜடபரிவட்டம்"* என்பார்கள், ஆச்சார்யரிடத்து ஜடபரிவட்டம் பெற்ற அடியவர் எப்பொழுதும் அதனை தமது சிரசில் அணிந்து கொள்ளுவது வழக்கமும் மரபுமாகும், 

பின்னாளில் என்றைக்கு அச்சீடருக்கு ஆச்சார்யத்துவம் கிடைக்குமோ அதுவரையிலும் அவர் ஜடபரிவட்டம் இல்லாது குருநாதருக்கு எதிரில் வருவதோ, சுவாமி சன்னதியில் பிரவேசிப்பதோ மரபில்லை!! அவகுண்டம் என்றாலே மூடுதல் என்று பொருள், "அனுட்டான கிரியைகளில் அவகுண்ட முத்திரையை எண்ணி கொள்ளுக", இதன்படி சீடர் தமது சிரசை மறைத்து கொண்டு தொண்டு செய்து வருங்காலத்தில் அவரது சிகையும் வளர்ந்து வரும்,

சிவகமத்தில் கூறிய துறவிகள் சிகைமுடிப்போ, முண்டிதமோ செய்யலாம், சடையும் தரிக்கலாம் என்ற மரபின்படி *"தருமையாதீனத்தின் சிறப்பு அடையாளமாகவே சடைதரித்தல் இருக்கிறது!!*

ஏனைய சைவாதீனங்களான துறைசை, வேளாக்குறிச்சி முதலியவற்றில் முண்டிதமாக செய்து கொள்வதனை பின்பற்றுகிறார்கள், *"தருமையாதீனமே சடை தரித்தலை வழக்கமாக கொண்டிருக்கிறது!!"*

இதன்படி, சீடருக்கு வளர்ந்துவிட்ட சிகையினை  சடையாக கட்டிக் கொள்வதற்கான வழிமுறையை குருநாதரே செய்வது சடைதரித்தல் தீக்கை எனப்படுகிறது

தேவாரத்தில் இறைவரது சடாபாரத்தை பற்றி, *"கந்தம் மல்கு கமழ்புன் சடையாரே!!"*, என்றும் *"நீட வல்ல வார்சடையான் மேய நெடுங்களம்"* என்பது முதலிய திருவாக்குகளால் நமையுடைய பெருமக்கள் கூறுகின்றனர்

இங்கு புன்சடை என்பது சிறிது சிறிதாக அள்ளிமுடிக்கப் பட்ட சடை என்றும், வார்சடை என்பது நீண்டு இருக்கும் சடை என்றும் பொருள் விளங்குகிறது,

*"மருந்து வேண்டில் இவை, மந்திரங்கள் இவை, புரிந்து கேட்கப் படும் புண்ணியங்கள் இவை, திருந்து தேவன்குடி தேவர் தேவு எய்திய அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!!"* என்று இறைவனது திருவேடத்தினை பற்றி பிள்ளையார் கூறுவதனை அப்படியே கைக்கொள்ளும் தருமையாதீன அடியவர்களுக்கு,

*ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானங்கள் தமது திருக்கரங்களாலேயே தமது சீடரது சிரசினை தீண்டி சீடரின் சிகையை புன்சடையாகவும் வார்சடையாகவும் செய்கிறார்கள், இதுவே சடை தரித்தல் தீக்கை எனப்படுகிறது"*

இதன்போது சீடரின் சிகையை சிறுசிறு பகுதியாக எடுத்து அதில் சாம்பிராணி தைலம் முதலிய முக்கிய பொருட்கள் கலந்த கலவையை தடவி சிறுநூல்கொண்டு குருமகாசன்னிதானம் கட்டிவிடுகிறார்கள், இதன் பிறகு சீடரது முழுசிகையும் *"கந்தம் மல்கு கமழ் புன் சடையாகவும் வார்சடையாகவும் தோன்றும்"* இதனை அவர்கள் தமது ஜடபரிவட்டத்தால் மூடி சுற்றி கட்டிகொள்வார்கள்

இப்படி சடையை சுற்றி கட்டி கொள்வதற்கான அனுமதியையும் குருநாதரே உரிய நன்னாளில் வழங்குகிறார்கள், இதன் மூலம் தருமையாதீன திருக்கூட்ட அடியவர்கள், *"அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்ட வார்சடையன்"* போல காட்சி தருவார்கள்

மேற் சொன்ன தேவாரம் *"வட்ட வார் சடையை உடைய இறைவனை அட்டமாசித்திகள் சென்று அடையும் என்று கூறுகிறது!!"* இது போலவே தருமையாதீன அடியவர்களும் தமது புன்சடையை வார்சடையை வட்டமாக கட்டிகொள்கிறார்கள், தருமையாதினத்திற்கே உரிய யோக அமைப்பான பதினாறொடுக்கத்தின் மூலம் அட்டமாசித்திகள் கைவரப்பெறும் யோகத்தையும் பயில்கிறார்கள்

ஆக!!, தேவரத்தில் காட்டப் பெறும் இறைவனது திருக்கோலத்தையே நினைப்பிக்கும் வல்லமை உடையவர்களாக தருமையாதீன குருமகாசன்னிதானங்களும் அவர்களது சீடர்களும் தோன்றுகிறார்கள் என்று இதன் மூலம் தெள்ளிதின் விளங்குகிறது!!

மேற்சொன்ன சடைதரித்தல் தீக்கை இன்று ஆதீனத்தின் திருச்சிராப்பள்ளி மௌனமடகட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் சீர்காழி சட்டநாதஸ்வாமி தேவஸ்தான கட்டளை விசாரணை சுவாமிகளுக்கும் எமையாளுடைய பெருமானார் 27வதுகுருமகா சன்னிதானங்கள் மூலம் செய்விக்கப் பெற்றுள்ளது

இவ்வரிய காட்சிகள் நாம்வாழும் காலத்திலும் நடக்கின்றது அதனை நாம் காணவும் முடிகிறது என்பதெல்லாம் நம்பால் ஸ்ரீலஸ்ரீ 27வது குருமகா சன்னிதானங்கள் கொண்ட கருணையே அன்றி வேறென்ன!?

*"அருட்குருவாகும் நின் திருக்கூட்டம் வாழ்க!!நற்கோநிரைகள் தெருவாழ் தருமை திருஞான சம்பந்த தேசிகனே!!"*

🔥சரணம் சரணம் அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார்  பொற் பாதங்கள் சரணம்🔥

**சிவாய நம🙇 சிவமே தவம் .சிவனே சரணாகதி*

*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*

🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹
🙇ஷிவானி  கௌரி 🙇

திருச்சிற்றம்பலம்🙏🏻❤️

நன்றி: சிவதீபன்

Monday, July 7, 2025

புனுகு என்றால் என்ன?

புனுகு என்றால் என்ன?


(புனுகுப் பூனையிலிருந்து பெறப்படும் அபூர்வ மருத்துவ பொக்கிஷமான புனுகின் மகத்துவங்கள், மருத்துவ ரகசியங்கள், பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலர் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு கொடுத்த பதிலை தொகுத்து சிறப்பு பதிவாக இன்று சித்தர்களின் குரல்.  பதிவில் பதிவிடுகிறேன்.)

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் சித்த பெருமக்கள்..

புனுகு என்பது அடர்ந்த காடுகளில் வசிக்கும் பூனைகளிடம் இருந்து பெறப்படுவதாகும், இந்தப் பூனைகள் குறிப்பிடும் அளவில், ஆப்பிரிக்க தேசங்களில் காணப்படுகின்றன, நமது நாட்டில் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
சிறிய புள்ளிகள் மற்றும் கோடுகளுடன் வெளிறிய சாம்பல் வண்ணத்தில் காணப்படும் மலபார் புனுகுப் பூனைகள், அடர்த்தியான வாலுடன், பின்பக்கம் உள்ள முடிகள் சிலிர்த்து காணப்படுவதே, புனுகுப் பூனைகளின் தனி அடையாளமாக விளங்குகிறது.

ஏனெனில் இதே போன்ற தோற்றத்தில் உள்ள சாதாரணப் பூனைகளையும் சிலர் புனுகுப் பூனைகள் என்று நினைத்து, அவற்றை பிறருக்குத் தெரியாமல் வளர்த்து வருவர். அரிய விலங்காகையால், வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி, குற்றமாகும். தற்காலங்களில் காடுகளை அழித்து கட்டிடங்களைக் கட்டுவதும், பாதைகள் அமைப்பதும், இவற்றின் வாழ்வாதாரத்தை வெகுவாகப் பாதித்து அங்கிருந்து தப்பி, சமவெளிப் பகுதிகளுக்கு ஓடிவிடுகின்றன புனுகுப் பூனைகள். சமவெளிகளில், உள்ள அடர்ந்த முந்திரித் தோப்புகள் மற்றும் நீர் நிலைகளின் ஓரம் உள்ள குறுங்காடுகளில் தஞ்சமடைந்துள்ளன.

புனுகுப் பூனைகள்:-
----------------------------------

இரவில் விழித்திருந்து இரை தேடும் புனுகுப்பூனைகள், சின்னஞ்சிறு விலங்குகள், முட்டைகள் மற்றும் சில வேர்க் கிழங்குகளை உணவாக உண்பவை. தனிமை விரும்பிகளான இவை எதிரியைக் கண்டால் தாக்கும் இயல்புடையவை. வாசனை எண்ணை மற்றும் இதர பயன்பாடுகளுக்காக, புனுகுப் பூனைகளில் இருந்து கிடைக்கும் புனுகை எடுப்பதற்காக, புனுகுப் பூனைகளை வீடுகளில் வளர்க்க முடியாது, அவை மிகவும் கடினமான சிரமம் தரும் ஒரு செயலாகும்.
இவை, முட்டைகளை வேட்டையாடுவதால், இவற்றைக் கொல்ல பண்ணைகள் வைத்திருப்போர், வேட்டை நாய்களைப் பயன்படுத்துகின்றனர். ஆயினும் தனித்து வாழும் இயல்புடையதாக இருப்பதால், புனுகுப் பூனைகள் இனம், இன்னும் முற்றிலும் அழியாமல் இருந்தாலும், எண்ணிக்கையில் மிகமிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. புனுகு என்பது, இந்தப் பூனைகளின் சுரப்பிகளில் இருந்து பெறப்படும் ஒரு வாசனைமிக்க சுரப்பாகும். இவற்றை சேகரிக்க அடர்ந்த காடுகளில் வாழும் இந்தப் பூனைகளைப் பிடிப்பது, என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாகும்.

புனுகின் பயன்கள்:-
----------------------------------
                             வாசனை மிகுதியால், ஆன்மீகத்தில் இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் இடம்பெறுகிறது. இறைவனின் திருமேனிக்கு புனுகுக் காப்பிடுவது என்பது, மிகவும் விஷேசமான நற்பலன்களைத் தரவல்லது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்த மருத்துவத்தில், உடலில் வியாதிகளைப் போக்குவதில் மற்றும் வாசனைத் திரவியங்கள், வாசனை மணமூட்டிகளில் சேர்க்கப்படுகிறது.

ஏழுமலையானுக்கு உகந்த புனுகு:
------------------------------------------------------------
                               திருப்பதி வெங்கடாஜலபதிக்கு, வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில், செய்யப்படும் அபிஷேகத்தில், புனுகு எண்ணை முக்கியமாகப் பயன்படுத்தப்படும்.
தொடர்ந்த தேவைகளுக்கு வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் புனுகைப் பெறுவதில், கால தாமதங்கள் ஏற்பட்டதால், சில புனுகுப் பூனைகள், திருமலை தேவஸ்தான வன விலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அரிய வன விலங்குகளை, வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், தேசிய வன விலங்குத்துறையின் சிறப்பு அனுமதி பெற்று, புனுகுப் பூனைகளை, திருப்பதியில் வளர்த்து வருவது, குறிப்பிடத்தக்கது.

வைத்தீஸ்வரன் கோவில்:-
---------------------------------------------
                        திருமுருகனின் அற்புத ஆசி வழங்கும் ஆலயங்களுள் ஒன்றாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள வைத்தியநாத சுவாமி எனும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் பிரசாதமாக வழங்கப்படும் புனுகு எண்ணை உடல் கட்டிகள், பருக்கள் போன்ற சரும வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு உடல் வியாதிகளைப் போக்கும் அருமருந்தாக, தீராத வியாதிகளையும் தீர்க்கும் தன்மை மிக்கதாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது.

மேலும் இக்கோவிலில், செல்வமுத்துக்குமார சுவாமி எனப்படும் முருகப் பெருமானுக்கு, அர்த்த ஜாம பூஜை எனும், இரவில் திருநடை அடைப்பிற்கு முன் செய்யப்படும் சிறப்பு பூஜையில், புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம் மற்றும் எலுமிச்சை கொண்டு காப்பிட்டு, பன்னீர் மலர்களால், அர்ச்சித்து, பால் சாதம் மற்றும் பால் நைவேத்தியம் செய்து, இரவில் தரிசித்து வணங்க, உடல் நலம் பெற்று மனம் அமைதியடையும், செல்வம் தளைக்கும் என்பது முருனகடியார்களின் பரிபூரண நம்பிக்கை ஆகும்.

மருத்துவத்தில் புனுகின் பயன்கள்:-
--------------------------------------------------------------
                              சுவாசப் பாதிப்புகள் நீங்க, புனுகை உபயோகித்து, மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துவார்கள் நம் சித்த பெருமக்கள்.
                 புனுகு, கஸ்தூரி மஞ்சள், பூவரசன் வேர், வெள்ளெருக்கன் வேர், சிருநாகப் பூ மற்றும் வெடி உப்பு. இவற்றில் கஸ்தூரி மஞ்சள் இரு பங்கு கூடுதலாகச் சேர்த்து, பூவரசன் வேர் மற்றும் வெள்ளெருக்கன் வேர் இவற்றை புனுகைவிட ஒரு பங்கு கூடுதலாக எடுத்துக்கொண்டு, எல்லா பொருட்களையும் சேர்த்து, சற்று நீர் இட்டு, அம்மியில் வைத்து, நன்கு மையாக அரைக்க வேண்டும்.

அரைத்த இந்த புனுகுப் பசையை, ஒரு வெள்ளைத்துணியின் ஒரு பக்கத்தில் முழுவதுமாக நன்கு தடவி வைக்க வேண்டும், பின்னர் அதை வெயிலில் இட்டு, அவற்றிலுள்ள நீர் எல்லாம் ஆவியாகி, நன்கு காய்ந்ததும், மடித்து சுத்தமான இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த புனுகு மருந்துத் துணியை, சிறு அளவில் கத்தரித்து எடுத்துக் கொண்டு, அதை சுருட்டி, தீயில் காட்டி, வரும் புகையை, மூக்கில் நன்கு இழுத்து சுவாசிக்க வேண்டும்.

இந்த முறையில், புனுகு மருந்துத் துணியை தினமும் இரண்டு வேளை, சுருட்டிக் கொண்டு, தீயில் இட்டு, புகையை சுவாசித்து வர, சுவாச பாதிப்புகள் யாவும், நீங்கி விடும். இதன் மூலம், மூச்சு விடுதலில் உள்ள குறைபாடுகள், மூக்கின் நுகர்தலில் உள்ள பாதிப்புகள் எல்லாம் விலகி, உடல் நலமாகும்.

முகப்பருக்கள், தழும்புகளை போக்க:-
-----------------------------------------------------------------
                     சிலருக்கு முகப்பருக்கள் வந்தது தெரியாமல், அவற்றை கை விரல்களால் கிள்ளி விடுவர், அதன் மூலம், அவற்றின் நச்சுக்கள் பரவி, தழும்பாகி முகத்தின் பொலிவை பாதிக்கும் படியாக அமையும்.

இதற்கு சிறந்த தீர்வாக, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை வாங்கி வந்து, இரவில் படுக்கப் போகும் முன், முகத்தை நன்கு தண்ணீரில் அலசிவிட்டு, பருக்கள், தழும்புகள் உள்ள இடங்களில் புனுகைத் தடவி, காலையில் எழுந்தவுடன், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வர, அதுவரை மன வாட்டம் தந்து வந்த, முகப் பொலிவை பாதித்த பருக்கள் மற்றும் தழும்புகள் எல்லாம் விரைவில், மறைந்துவிடும். முகமும் புத்தெழில் பெரும்புனுகு, கிடைக்கவில்லை என்றால், புனுகு எண்ணையை உபயோகித்தும் பலன்களைப் பெறலாம்.

முகம் பொலிவாக:-
--------------------------------
                      சிலருக்கு முகத்தில் எண்ணை வடிந்து, முகம் களையிழந்து காணப்படும், அவர்கள் புனுகு, ரோஜா மலர்கள், வசம்பு, கஸ்தூரி மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பூலாங்கிழங்கு மற்றும் சந்தனம் சேர்த்து, நன்கு இடித்து தூளாக்கி, அதை, சிறிது நீர்விட்டு எடுத்துக் கொண்டு, முகத்தில் தினமும் தடவி சற்று நேரம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை அலசிவர, முகத்தின் மாசுக்கள் மறைந்து, பளிங்கு போன்ற முகம், பொலிவாக அமையும்.

புனுகுக் குளியல்:-
-------------------------------
                            வாசனை திரவியங்களால் தண்ணீரை நிரப்பி, அந்த நீரில் நீராடுவது என்பது, உலக அழகிகளுக்கு மட்டும் உரியதல்ல, நமது தேசத்திலும் சிலர் அவ்வண்ணம் குளித்து, தேக பளபளப்பு, நறுமணம் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள்.

வாசனைப் பொருட்கள்:-
------------------------------------------
                              புனுகு, கஸ்தூரி மற்றும் சந்தனம் போன்றவற்றை நீரில் கலந்து, அந்த நீரில் குளித்து வர, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, வியாதிகளின் பாதிப்புகள் அகலும். உடலும் மனமும் புத்துணர்வடையும். மேலும், உடல் நறுமணத்துடன் திகழும். இந்தக் குளியல் குளித்து முடித்த பின்னர், உடலில் நன்கு பசி எடுக்கும்.

புனுகின் பிற பயன்பாடுகள்:-
--------------------------------------------------
                                  புனுகைக் கலந்து தயாரிக்கப்படும் ஊதுவத்திகள் மற்றும் புகைப்பான்கள் சிறந்த நறுமணமூட்டியாகவும், மனதை அமைதியாக்கும் தன்மையும் மிக்கதாகத் திகழ்கிறது. புனுகின் மூலம், தயாரிக்கப்படும் எண்ணை, பல்வேறு வாசனை திரவிய உற்பத்தியிலும், மூலிகை மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது.

பாசிட்டிவ் எண்ணத்தை பலப்படுத்தும்:-
--------------------------------------------------------------------
                             அந்த காலங்களில் நம் முன்னோர்களின் வாசனை திரவியங்களில் புனுகு முக்கியமான இடத்தை பெற்றிருந்தது. இது புனுகு பூனையிடமிருந்து கிடைக்கின்றது.இந்த வகை பூனைகள் சாம்பல் நிறத்தில், அடர்த்தியான வாலும், மேலே புள்ளிகளுடனும் இருக்கும். இவை ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா ஆகிய இடங்களில் இருக்கின்றன.

இவைகளை வீட்டில் வளர்க்க கூடாது. வீட்டில் வளர்க்க அரசின் அனுமதி பெற வேண்டும்.இந்த வகை பூனைகள் தனித்து வாழும் தன்மை கொண்டவை.ஆனால் எதிரிகளை தாக்கும் குணம் கொண்டவை.இவற்றின் உடம்பில் இருந்து சுரக்கும் திரவத்திலிருந்தும், கழிவிலிருந்தும் புனுகு தயாரிக்கப்படுகிறது.

புனுகின் மனம் கஸ்தூரியின் வாசம் கொண்டிருக்கும்.தண்ணீரில் கரையாது . இது ஒரு நறுமணமூட்டி. புனுகினை சிறிது எடுத்து நெற்றியில் இட்டால் எதிரில் உள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்கள் மறையும்,திருஷ்டியும் கழியும், பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும், சிலர் இதை வசியம் என்பார்கள், ஆனால் இது உண்மையல்ல.

இதன் பலன்கள் பல, சித்த வைத்தியத்தில் அதிகம் பயன்படுகின்றது.சுவாச பாதிப்பு,  உடலில் கட்டிகள், சிரங்கு, பருக்கள், தழும்புகள் போன்றவற்றை போக்கும். இதை அழகு சாதனங்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

புனுகு பற்றிய தெரியாத தகவல்கள்:-
-----------------------------------------------------------------

#புனுகுப்பூனை எனப்படும் விலங்கிடமிருந்துதான் வாசனை மிக்க ஜவ்வாது தயாரிக்கப்படுகிறது. காட்டில் திரியும் இந்தப் பூனையை கூண்டில் அடைத்து வளர்ப்பார்கள். கூண்டுக்கு நடுவில் இருக்கும் கம்பிகளில், தன்னுடைய ஆசனவாய் பகுதியை அந்தப் பூனை அடிக்கடி தேய்க்கும். அந்த சமயத்தில் அதன் உடலிலிருந்து மெழுகு போன்ற பொருள் கம்பியில் ஒட்டிக்கொள்ளும். இதை "புனுகு" என்பார்கள். இதனுடன் சந்தனப் பவுடரை கலந்து விட்டால், ஆளை அசத்தும் வாசனை வீசும். இதுதான் ஜவ்வாது.

புனுகு எனும் வாசனைப்பொருள் ஆன்மீகத்திலும் சித்த வைத்தியத்திலும் உயர்வான ஒன்றாகக் கருதப்படுகிறது. புனுகின் மூலம், இறையருளையும் உடல்நலனையும் ஒருங்கே அடையமுடியும் என்கின்றனர் முன்னோர்கள்.

வனத்துறைச் சட்டப்படி இத்தகையப் பொருட்களை விற்பனை செய்ய தற்போது தடை அமலில் உள்ளது. இப்போது கடைகளில் கிடைக்கும் ஜவ்வாது பொருட்கள் பெரும்பாலும் செயற்கையானவைதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்... போன்ற நாடுகளில் புனுகுப் பூனைகளை வளர்த்து ஜவ்வாது எடுக்கிறார்கள். ஆனால், இதன் விலை மிகவும் அதிகம். நம் ஊரில் கிடைக்கும் ஜவ்வாது செயற்கையானதுதான். அந்தக் காலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தில் இதைப் பயன் படுத்தியிருக்கிறார்கள்.

புனுகுப்பூனைகள் காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுகிறது. இந்தக் கொட்டைகளைச் சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இது "சீவெட் காபி" (Civet coffee)  என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடனும், வாசனையுடனும் இருக்கும். இதனால் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மலபார் புனுகுப்பூனைகள் எனும் மிக அரிய விலங்கினமாக, சொற்ப எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

இந்தேனிஸியா போன்ற நாடுகளில், புனுகுப் பூனைக் கழிவு காபி கொட்டை ஒரு கிலோ பல ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.

மகிழ்வித்து மகிழுங்கள்..  ஆரோக்கியம் 

  இது அரிதான பொருள் என்பதால் கிடைப்பதும் கஷ்டம். விலையும் சற்று அதிகம் தான்.

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்.

        - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
         சித்தர்களின் குரல் shiva shangar