Sunday, December 30, 2012

இந்துமதம் இறை வழிபாடு விளக்கம்:


இந்துமதம் இறை வழிபாடு விளக்கம் 
கேள்வி பதில் ]

Hindu worship Description [ Question Answer ]

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?
இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். 
அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள, இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். அத்துடன் ஒரு பசுவின் உடல் முழுவதும் இரத்தம் வியாபித்திருந்தாலும், அந்தப்பசுவின் மடியில்(முலையில்) தான் இரத்ததை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள மந்திர, யந்திர, பூசைகளின் சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை சுலபமாக பெற முடிகின்றது. 

பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது?

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

இதன் பொருள்:-

நிலம் ----- (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது) 
நீர் ----- (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது)
தீ ----- (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது)
காற்று ----- (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது)
ஆகாயம் ----- (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது)


கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?

இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது. நாம் காணாத இறைவனை, அதைக் கண்ட யோகிகள், ஞானிகள் அது இப்படித்தான் இருக்கு என்று கூறும் போது அதை நம்பியே ஆகவேண்டி உள்ளது.


"இறைவன் ஒருவனே" என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு?

ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.



அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே?

சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. 



சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:-

அடிப்பாகம் ----- பிரம்ம பாகம் ---- பிரம்ம லிங்கம் ----ஆத்ம சோதி
நடுப்பாகம் ----- விஷ்ணு பாகம் ----- விஷ்ணு லிங்கம் -----அருட்சோதி
மேல்பாகம் ---- சிவன் பாகம் ----- சிவலிங்கம் ----- சிவசோதி 

என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.


உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்?

விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும். 

இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன?

அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது.



"சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண்
கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்". 

                                                                    என்று பட்டினத்தார்" கூறுகின்றார்.



அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதான் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.


சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?

கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது?

புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.


கருவறையில் உள்ள மூர்த்திக்கு “அஷ்ட பந்தனம்’ சாற்றப்படுவது ஏன்? அதில் என்னென்ன கலந்துள்ளன?

விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் “அஷ்டபந்தனம்’ என்ற கலவையைச் சாற்றுவது வழக்கம்.

கொம்பரக்கு ----- 1 பங்கு
குங்குலியம் ----- 3 பங்கு
காவிக்கல் ----- 3 பங்கு
வெண்மெழுகு ----- 3 பங்கு
எருமை வெண்ணெய் ----- 3 பங்கு
செம்பஞ்சு ----- 3 பங்கு 
சுக்கான்தூள் -----முக்காற் பங்கு
சாதிலிங்கம் ----- காற்பங்கு

ஆகிய எட்டு விதமான பொருட்களை அளவுப்படி கலந்து, இடித்துச் சேர்த்து சூடாக்கி அணிவிப்பது அஷ்டபந்தனமாகும்.

கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன?


கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.

கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.

கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும்.


1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.

2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.

3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.

4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.

கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன?

இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.


இறைவன் கருணை உள்ளங் கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக?

இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது.

சில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே?

ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது. அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் "இலிங் கோற்பவர்". திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும். அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு.

தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா ?

அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறைவனைக் காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.


தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?

அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள்.

1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள்.

2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது.


இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா?

கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை?

சூரியன் ---சூடான சர்க்கரைப் பொங்கல் 
சந்திரன் --- குளிர்ந்த பால் பாயாசம் 
செவ்வாய் --- பொங்கல் 
புதன் --- புளியோதரை 
குரு ---- தயிர்சாதம் 
சுக்கிரன் ---- நெய்ப்பொங்கல் 
சனி ----- எள்ளுசாதம் 
ராகு ---- உளுந்து சாதம் 
கேது ---- அன்னம

போன்றவையாகும்.


தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை) செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா?

இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.

ஐந்து அடுக்குள்ள அலங்காரதீபம் ஐந்து கலைகளையும் குறிக்கின்றது.
மூன்று அடுக்கள்ள தீபம் மூன்று தத்துவங்களையும் குறிக்கின்றது.
நாகதீபம் புத்திர விருத்தியின் பொருட்டும்
இடபதீபம் பசுவிருத்தியின் பொருட்டும்
புருசதீபம் சகல சித்தியின் பொருட்டும்
நட்சத்திரதீபம் மல நிவாரணத்தின் பொருட்டும்

கும்பதீபமும் அதனுடனிருக்கும் ஐந்து தட்டைகளும் முறையே மலநிவாரணத்தின் பொருட்டும், ஈசானம் முதலிய ஐந்து குணங்கள் பதிதற் பொருட்டும்

கற்பூர ஆராத்தியானது ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பப் பெருவாழ்வை அடையும் குறிப்பை உணர்த்துவதாக செய்யப்படுகின்றது. அதாவது கற்பூரம் வெண்மை நிறம் கொண்டது. அக்கினி பற்றிக் கொண்டதும் அதன் வடிவாகி முற்றுங் கரைந்து ஒளியிலே சங்கமமாவது போல ஆன்மாவும் ( வெண்மை நிறமான )சாத்வீக குணம் பொருந்தி ஞானாக்கினியாகிய இறையருளில் முற்றாக தன்வடிவிழந்து இறைவ னுடன் இரண்டறக் கலக்கின்ற தத்துவத்தை உணரத்த்தும் பொருட்டும் செய்ய ப்படுகின்றது.

மற்றும் கண்ணாடி முதல் ஆலவட்டம் வரை காட்டி ஆராதனை செய்யப்படுவது

கண்ணாடியிலே சிவசக்தியும் அதன் ஒளியில் சிவனும் இருப்பதால் அதைக்கொண்டு ஆராதித்தால் சிவலோக பதவி கிட்டும்.

குடையிலே சூரிய மண்டலமும் அதனுடைய காம்பிலே சூரியனும் இருப்பதால் இதனால் ஆராதனை செய்வதனால் மிகுந்த பலத்தையும் அடையமுடியும்.

சாமரையிலே வாயுவும் அதன் காம்பிலே கார்க்கோடனும் இருப்பதால் மலநீக்கம் பெற்று திருவருள் கிட்டுமென்று கூறப்படுகிறது.

விசிறியிலே சூரியனும் அதன் காம்பிலே பதுமன் என்ற பாம்பும் இருப்பதால் இதுகொண்டு ஆராதனை செய்வதனால் சகல போகங்களும் கிடைக்கும்.

ஆலவட்டத்தினாலே ஆராதனை செய்வதனால் தர்க்காயுளும் சகல சுகபோகங்களும் கிடைக்குமென்றும் கூறப்படுகின்றது. 


நாம் விநாயகரை வணங்கும் பொழுது எமது தலையிலே குட்டி வணங்குவதன் காரணம் என்ன?

எந்த ஓரு வேலையைச் செய்யத் தொடங்கும் பொழுதும் முதலில் விநாயகர் வணக்கம் செய்யப்படுவது முக்கியமாகும். கரங்களை முட்டியாகப் பிடித்து மூன்று முறை தலையிலே குட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தலையில் குட்டிக்கொள்ளும் பொழுது மத்தகத்திலிருக்கும் அமிர்தமானது சுரந்து சுழுமுனாநாடி (தண்டுவடம்) வழியாக மூலாதாரத்தில் ஒளிரூபமாகவிருக்கும் விநாயகரைச் சென்றடைந்து அபிசேக மாகின்ற பொழுது அவரின் அருள் கிடைக்குமென்ற வெளிப்பாடாகவே செய்யப்படுகின்றது. அத்தோடு முனனொரு காலத்தில் காக்கை உருவெடுத்து விநாயகப் பெருமான் அகத்தியரின் கமண்டலத்தினைக் கவிழ்த்து அதிலிருந்த நீரைக் காவிரி நதியாக ஓடவைத்த பொழுது நிட்டையிலிருந்த அகத்திய முனிவரானவர் கோபங் கொண்டு காக்கையினை விரட்டினார். 

அப்பொழுது காக்கையானது ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு ஓடியபொழுது முனிவரும் அச்சிறுவனைத் துரத்திச் சென்று அவனது தலையில் குட்டினார். தலையில் குட்டு வாங்கியதும் சிறுவனாக நின்ற விநாயகப் பெருமான் தனது திருச் சொரூபத்தினை அகத்தியருக்குக் காண்பித்தார். உடனே விநாயகப் பெருமானை வணங்கிய அகத்திய முனிவரானவர் தான் செய்த தவறை உணர்ந்து தனது இரண்டு கைகளினாலும் தனது தலையிலே குட்டி தோப்புக்கரணம் செய்து தன்னை மன்னித்தருளுமாறு விநாயகரை வேண்டியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இதன் பாவனையாகவே நாமும் தலையிலே குட்டி தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்குகின்றோம். விநாயகரை வணங்கி ஆரம்பிக்கின்ற வேலைகள் யாவும் தடையின்றி நிறைவுபெறும் என்பதனால்தான் கோவிற்கிரிகைள் உட்பட எல்லாச்சந்தர்ப்பங்களிலும் விநாயகர் வழிபாடு முதலிடத்தை வகிக்கின்றது.

முதலிலே குட்டி வணங்கிய பின்னரும் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தீபாராதனைக்கும் குட்டி வணங்க வேண்டுமா?

வழிபாடு ஆரம்பிக்கும் பொழுது ஒரு தடவை (தலையிலே மூன்று முறை) குட்டி வணங்குதல் போதுமானதாகும். அதாவது எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் முதலிலே நாங்கள் வணங்க வேண்டியது விநாயகரையே. எனவே தான் முதலிலே ஒரு தடவை குட்டி வணங்குதல் போதுமானதென்று கூறப்படுகின்றது.

ஆலயங்களில் திரையிடப் பட்டிருக்கும்பொழுது வழிபாடு செய்யலாமா?

இறைவனுக்கு அபிசேகம் முடிவடைந்து அலங்காரம் செய்யும் பொழுதும், திருவமுது செயயும் பொழுதும் வணங்கலாகாது.

ஆலயங்களில் எங்கே எவ்வாறு விழுந்து வணங்கல் வேண்டும்?

ஆலயங்களிலே விழுந்து வணங்கும் பொழுது எப்பொழுதும் பலிபீடம் கொடிமரத்துக்கு அப்பால் வடதிசை நோக்கி தலையும் தென்திசை நோக்கி காலும் இருக்கும்படியாக ஆண்கள் அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்து வணங்கலாம்.

அப்படியாயின் பரிவார மூர்த்திகளை எவ்வாறு விழுந்து வணங்குவது?

பரிவார மூர்த்திகளை விழுந்து வணங்குவதென்றால் மற்றத் தெய்வங்களின் பக்கம் கால்கள் நீட்டப்படாதவாறு பாh;த்துக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்திற் கொண்டுதான் சில ஆலயங்களின் உட்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தல் தவிர்க்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் பலிபீடம், கொடிமரத்துக்கு அப்பால் மட்டும் விழுந்து வணங்குதல் போதுமானதா?

ஆம். ஆலயத்தின் பலிபீடத்தை வணங்கி, எம்மிடத்திலுள்ள அகங்காரம் மற்றும் தீய எண்ணங்களையெல்லாம் அங்கே பலியிட்டு தூய மனதோடு இறைவனை வணங்க வேண்டுமென்ற பாவனையாகத்தான் நாம் இந்த அட்டாங்கநமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் போன்றவற்றை செய்கின்றோம்.

உட்பிரகாரத்தைச் சுற்றிவரும் பொழுது மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?

சுற்றிவரும் பொழுது சந்நிதானத்தின் புறச்சுவர்களில் தலையை முட்டிவணங்குவது , சூடம் ஏற்றுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்று வேறு எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்?

நல்ல கேள்வி. நிறைய விடயங்கள் இருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் எல்லாவற்றையும் சரிவரச் செய்வதென்பது முடியாதகாரியம். இருப்பினும் எம்மால் செய்யக்கூடியவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களில் பரிவார மூர்த்திகளுக்குரிய சந்நிதானங்கள் மிகவும் சிறிய அளவிலேயே அமைக்கப்படுவதால் அங்கே எழுந்தருளியிருக்கின்ற விக்கிரகங்களும் வெளியே நிற்பவர்களின் கைக்கெட்டிய தூரங்களில் தான் அமைகின்றன. எவ்வளவுதான் கைக்கெட்டிய தூரத்திலிருந்தாலும் கைகளினாலே இறைவனைத் தொட்டு வணங்குவதோ அல்லது நாம் கொண்டு சென்ற மலர்களை இறைவனுக்கு நாமாகவே சாத்துவதோ செய்யத்தக்கதன்று. 

அத்தோடு இவ்வாறான சந்நிதானங்களினுள்ளே வைக்கப்பட்டிருக்கும் விபூதி மடலினுளிருந்து நாமாகவே விபூதி எடுப்பது, உத்தரணியிலிருந்து தீர்த்தம் எடுப்பது போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். (வெளியே வைக்கப்பட்டிருக்கும் விபூதிமடலையோ உத்தரணியையோ இங்கே குறிப்பிடவில்லை இதிலிருந்து விபூதியோ தீர்த்தமோ வேண்டியவற்றை பக்தர்கள் தாமாகவே எடுத்துக் கொள்ளலாம்). அடுத்து வாகனங்களின் பட்டடைகள் மீது உட்காருவது, வாகனக்கொம்புகள் (திருவாடு தண்டு) வாகனத்துடன் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் (சுவாமி எழுந்தருளுவதற்காக) வாகனக் கொம்புகளைக் கடந்து செல்வது, அவற்றின் மேல் உட்காருவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். 

ஆலயங்களில் வீண்வார்தை பேசக்கூடாது என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

உண்மைதான் ஆலயங்களிலே ”பரம் பொருளின் பெரும் புகழைப் பாடிப் பணிதலன்றிப் பிறவார்த்தை யாதொன்றும் பேசற்க” என்று தான் கூறுவார்கள். இங்கே பிறவார்த்தை அல்லது வீண்வார்த்தை என்பது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும்படியாக நாங்கள் பேசுவதையே வலியுறுத்தி நிற்கின்றது. எனவே நாங்கள் ஏதாவது பேசவேண்டுமென்றால் பக்கத்திலே நின்று வணங்குகின்றவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் சற்று அப்பால் சென்று மெதுவாகப் பேசிக் கொள்ளலாம். அதிலும் பூசை நடைபெறும் பொழுதும் வேதபாராயணங்கள் ஓதப்படும்பொழுதும் அமைதி காக்கப்படவேண்டும்.

அர்ச்சனைப் பொருட்களோ அல்லது படையல்செய்யும் பொருட்களோ எவ்வாறு கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்?

கோவில்களிலே மடைப்பள்ளியிலிருந்து (சிவாச்சாரியார்கள்) நைவேத்தியம் எடுத்துச் செல்லும் பொழுது பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அப்பொருள்களை அவர்கள் தங்கள் வயிற்றுக்கு மேலாகவோ அல்லது தோள்களுக்கு மேலாகவோ தான் தூக்கிச் செல்வார்கள். அதே போன்று இறைவனுக்கு நிவேதனப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படும் பொழுதும் அவ்வாறே எடுத்துச் செல்லப்பட வேண்டும்.



இறைவனுக்குரிய நிவேதனங்கள் எவையென்று கூறமுடியுமா?

சிவன் ------ வெண் பொங்கல், வடை, வெறும்சாதம்.
பார்வதி ------ சர்க்கரைப் பொங்கல், உழுந்து வடை.
விநாயகர் ------ மோதகம், அவல், சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம் முக்கனிகள் போன்றவையாகும்.
முருகன் ------ வடை, சர்க்கரைப் பொங்கல், வேகவைத்துத் தாளித்த கடலைப்பருப்பு, தினைமாவு.
பெருமாள் ------ லட்டு, வெண்பொங்கல், புளியோதரை.


பூசை நேரங்களில் தீபாராதனை காண்பதற்காக ஒருவரையொருவர் முட்டிமோதி ஓடிச்சென்று வழிபாடு செய்வது சரியாகுமா?

இது சரியா அல்லது பிழையா என்பது முக்கியமல்ல. நாம் தீபாராதனை காண்பதற்காக அவசரமாகச் செல்லும் பொழுது வயதானவர்கள் மீதோ அல்லது ஒரு சுகவீனமானவர் மீதோ மோதி அவர்களின் உடலிலோ உள்ளத்திலோ வலியினை ஏற்படுத்திவிட்டு தீபாராதனை காண்பதில் பயனேதுமில்லை. இது தான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். அதுமட்டுமல்ல பரிவார மூர்த்திகளுக்கு பூசை நடைபெறும் பொழுது சிலசமயங்களில் பக்தர்கள் முன்னே ஓடிச்சென்று சந்நிதானத்தின் வாயிலையே முற்றுகையிடுவதால் பூசை செய்யும் சிவாச்சாரியார்களே உள்ளே செல்ல சிரமமான நிலை ஏற்படுவதுமுண்டு.


திருக்கோவில்களை எத்தனை முறை வலம்வந்து வணங்க வேண்டும்?

சிவன் கோவில்கள் :-- குறைந்தது 3 முறை : அதன் மேல் 5, 7, 9 ------------இவ்வாறாக

விநாயகர் :- ஒரு முறை

அம்பாள் :- 4 முறை

விஷ்ணு :- 4 முறை

முருகன் :- 3 முறை


மேலே குறிப்பிட்டவாறு கோவில் வழிபாட்டு முறைகளில் கூறப்பட்டிருந்தாலும் பொதுவாக 3 முறையோ அல்லது விரும்பினால் அதற்கு மேல் 5,7,9 ----- இவ்வாறாக வணங்கலாம். சில ஆலயங்களின் பிரகாரத்தினுடைய உட்சுவர்களிலே மேற்பாகம், நடுப்பாகம், கீழ்ப்பாகம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து மேற்பகுதியிலே தொடங்கி தொடர்ச்சியாக இறைவனின் திருச்செயல்களைச் சித்திரமாக விபரிப்பது, தேவாரங்களை எழுதிவைப்பது போன்ற முறையுமுண்டு. இப்படியான சித்திரங்களையோ அல்லது தேவாரப் பதிகங்களையோ நாங்கள் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டு சென்று தொடங்கிய இடத்துக்கே வந்து திரும்பவும் இரண்டாம் மூன்றாம் முறையென்று எம்மையறியாமலே பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றி வந்துவிடுவோம்.

” யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே

மாதொரு பாகனார் தாம்வருவார்”

என்று சிவஞான சித்தியார் கூறுகின்றது. எனவே சிவன்கோவில் வலம்வரும் முறையினைக் கடைப்பிடிப்பதில் தவறில்லையென்று கூறப்படுகின்றது.


ஆச்சாரியார்களிடத்தில் பிரசாதம் ( விபூதி, தீர்த்தம் போன்றவை ) பெறும் பொழுது எவ்வாறு பெறுதல் வேண்டும்?

இடது கையானது கீழேயும் வலது கையானது மேலேயும் இருக்கும்படியாக இரண்டு கைகளையும் சேர்த்து பெறவேண்டும். 


ஓற்றை விரலினாலே விபூதி தரிக்கலாமா? 

எப்பொழுதும் விபூதி தரிக்கும் பொழுது சிவசிவ என்று சொல்லி வலது கையின் நடுவிரல்கள் (சுட்டுவிரல்,நடுவிரல், மோதிரவிரல்) மூன்றினாலும் நெற்றியிலே தரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக தரித்துக்கொள்வதை உத்தூளனமாகத் தரித்தல் என்றும், நீரிலே குழைத்து மூன்று குறிகளாக தரித்துக்கொள்வதை திரிபுண்டரமாகத் தரித்தல் என்றும் சொல்லப்படும்.

திரிபுண்டரமாகத் தரிக்கத்தக்க அங்கங்கள் எவை?

சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுக்கள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.

சந்தனம், குங்குமம் போன்று ஒருவிதமான கரியநிறப் பொட்டும் சிலசமயங்களில் வழங்கப்படுகின்றதே?

ஆம், அதன் பெயர் ”யாகரட்சை” என்பதாகும். இது அக்கினிகாரியம் செய்யும்பொழுது ஓமகுண்டத்தைச் சுற்றி வைக்கப்படும் தர்ப்பையை ஓமாக்கினியிற் சுட்டு நெய் சேர்த்துக் குழைக்கப்பட்டு நெற்றியிலே பொட்டாக அணியப்படுகின்றது. திருநீற்றுக்கு இரட்சையென்ற பெயருமுண்டு. இறைவனை வேண்டி நிகழ்த்தப்பட்ட யாகத்தில் பெறப்பட்டதால் ”யாகரட்சை” என்று பொருள்கொள்ளலாம்.

விபூதி தரித்துக் கொள்வதன் காரணம் என்ன?

சிவபக்தர்களுக்குரிய இலட்சணங்கள் மூன்று. அதாவது விபூதி தரித்தல் , உருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் செபித்தல் போன்ற மூன்றாகும். இம்மூன்றிலும் விபூதிதரித்தலானது மிகச்சிறிய பராயத்திலேயே ஆரம்பிக்கக் கூடியதொன்றாகும். எனவே சைவர்களாகிய நாமெல்லாம் விபூதி தரித்துக்கொள்ள வேண்டுமென்பதையே சைவசமயம் கூறுகின்றது.

”கங்காளன் பூசுங் கவசத்திருநீற்றை
மங்காமற் பூசிமகிழ்வாரே யாமாகிற்
றங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்காரமான திருவடி சேர்வரே”

என்று திருமூலர் திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?

கடைகளில் விற்கப்படும் விபூதிகளெல்லாம் பசுவினது சாணத்திலிருந்து தான் தயாரிக்கப் பட்டவையா என்பது தெரியவில்லை. ஆனாலும் பசுவினது சாணத்திலிருந்து கற்பகவிதிமுறையில் (இது பற்றிய விளக்கத்தைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) தயாரிக்கப்படும் விபூதி மிகவும் புனிதமானதாகும். சில கோவில்களில் கோபூசை (பசு பூசை) சிறப்பிடம் பெறுகின்றது.

பசுவின் வலது கொம்பில் ----- கங்கையும்

பசுவின் இடது கொம்பில் ----- யமுனையும்

பசுவின் மத்திய பகுதியில் ----- சரஸ்வதியும்

பசுவின் முன்காலில் ---------------- பிரம்மனும்

பசுவின் பின்காலில் ----------------- உருத்திரனும் 

பசுவின் குளம்புகளில் ------------- தேவர்களும்

பசுவின் பால்சுரக்கம் மடியில் -----சமுத்திர தேவர்களும் 

வாசம் செய்வதாக சாத்திரங்கள் கூறுகின்றன. இப்படியான புனிதத்தன்மை வாய்ந்த பசுவினுடைய சாணத்திலிருந்து பெறப்படுகின்ற விபூதியானது சகல வல்லமையும் பொருந்தியதென்று புராண வரலாறுகள் கூறுகின்றன. திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகத்தில் இதன் பெருமையை விரிவாகக் காணலாம்.


பலிபீடத்துக்கும் மூலமூர்த்திக்குமிடையே குறுக்கே செல்லலாகுமா? 

பலிபீடமென்று நாம் பேசிக்கொள்ளும்பொழுது அங்கே முதலாவதாக கொடிமரமும் அடுத்து பலிபீடமும் அதனையடுத்து மூலமூர்த்தியை நேராக நோக்கியவாறு அவருக்குரிய ஊர்தியும் (அந்தந்த தெய்வத்துக்குரிய வாகனம் உதாரணமாக விநாயகருக்கு பெருச்சாளி போன்று) அமைந்திருக்கும். இங்கே கூறப்படுவது யாதெனில் பரமாத்மாவாகிய இறைவனுக்கும் அவரை அடையும்பொருட்டு சதாசர்வகாலமும் அவரையே நோக்கியவாறு அமைந்திருக்கும் சீவாத்மாவாகிய ஊர்திக்குமிடையே குறுக்கே சென்று இடையூறு செய்யக்கூடாதென்றே கூறப்படுகின்றது. 

அப்படியாயின் கொடிமரத்துக்கப்பால் சென்றுதான் நாம் மற்றப்பக்கம் செல்ல வேண்டுமா?

ஆம், அவ்வாறு செல்லும்பொழுதிலும் தம்பத்துப் பிள்ளையாரைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அடியவர்கள் கொடிமரத்தையண்டிக் குறுக்காகச் செல்லும் பொழுது (விரைவாக) அவர்களது ஆடை கொடிமரத்துக்கு கீழேயிருக்கும் பிள்ளையாரின்மீது படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆலயங்களிலே பக்தர்கள் ”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?

அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.

நன்றி - திரு. பேரி

ஆலயங்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன? நெய்தீபம் ஏற்றுவது எதனால்?

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை முழுமையாகத் தரிசிப்பதற்கு கற்பூர ஒளி நமக்கு உதவுகிறது என்பது பொதுவான விளக்கம். ஆனால் பூரணமான அருள்சக்தி ஒளிவடிவில் இருப்பதால், அந்த ஒளியைக் கற்பூரத்தின் பிரகாசத்தில் காண்கிறோம். அதே சமயத்தில் இறைவனது திருமேனியை அங்கம் அங்கமாகத் தரிசிக்கவும் முடிகிறது. மேலும் கற்பூரத்தின் சுடர் அணைந்தவுடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அதுபோல ஒளியாகிய ஞானாக் கினியில் நமது அறியாமை எரிக்கப்பட்டு மறைந்து விடு வதை கற்பூர தரிசனம் நமக்கு உணர்த்துகிறது. ஒளி வடிவான இறைவனை ஒளி மூலம் நாம் தரிசித்து பக்திப்பூர்வமாக மகிழ்கிறோம். ஞானமே வடி வான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம். இந்த மகத்தான தத்துவத்தைக் காட்டுவதே கற்பூர தரிசனத் தின் விளக்கமாகும். தற்போது கற்பூரங்களில் ரசாயனம் சேர்ந்து வருவதால் சுத்த நெய் தீபத்தில் கோவில்களில் ஆரத்தி காண்பிக் கப்படுகிறது.

புண்ணிய நதிகளில் குளிப்பதால் பாவங்கள் விலகுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. தீபாவளி யின்போது கங்கா ஸ்நானம் என்பது சிறப் பாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் காசிக்குச் சென்று கங்கையில் குளிப்பது அவ சியமா? காசிக்குப் போக முடியாதவர்கள் என்ன செய்வது?

புண்ணிய நதிகளில் மகான்கள் வந்து குளிப்பதால், அது நம் பாவங்களைப் போக்கக்கூடிய சக்தியைக் கூடுதலாக அடைகிறது.

காசியில் தீபாவளி சமயத்தில் நீராடுவது மிகச் சிறந்ததாகும். இதனால் பித்ருக்கள் நலமடைவார்கள். அதனால் நமது குடும்பம் நலமாக இருக்கும். வறுமை நீங்கும்; புத்திர பாக்கியம் ஏற்படும்; சந்ததிகள் நலமாக இருப்பார்கள்.

தீபாவளியன்று, காசியில் உள்ள விஸ்வநாதரின் தரிசனமும் தங்க அன்னபூரணியின் தரிசனமும் புண்ணிய பலனை அளிக்கக்கூடியது.

தீபாவளியன்று அதிகாலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் வெந்நீரில் கங்கை குடியிருப்பதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் அங்கு வர இயலாதவர் களுக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு நீராடினால், அதனால் ஏற்படும் புண்ணியம் அவர்களைச் சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கங்கையில் மடி, தீட்டு பார்ப்பது இல்லை. கங்கை நீரின் துளிகளைத் தலையில் தெளித்துக் கொண்டாலும் கங்கையில் நீராடிய பலன்களை அடைய முடியும்.

கங்கை நீரை சொம்பில் அடைத்து எடுத்து வந்து வைத்துக் கொண்டால் பல காலம் அது கெட்டுப் போகாமல் இருக்கும். அந்தப் புண்ணிய நீரை, மரணம் அடைந்தவர்களின் சரீரத்தில் தெளித்தாலும் அதனால் முழுக்காட்டினாலும் காசியில் மரணமடைந்த புண்ணியம் உண்டாகும்.

நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே- அது எவ்வாறு?

நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது. மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்; சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்; மணிபூரகம்- மகா மண்டபம்; அநாகதம்- ஸ்நாந மண்டபம்; விசுத்தி- அலங்கார மண்டபம்; ஆக்ஞை-சபா மண்டபம்.

உபவாசத்தின்போது பலகாரங்கள் சாப்பிடலாமா?

உபவாச காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும். “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள் வதே பலகாரம் என்பதாயிற்று. இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படு கிறது. இது தவறு. இது உண்மையான உபவாசம் ஆகாது. ஜீரண உறுப்பு களுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே உபவாசத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு உபவாசம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி உபவாசம் இருப் பதே சிறந்ததாகும்.

விபூதியை பஞ்சாட்சரம் என்று சிலர் குறிப்பிடுகிறார்கள். அதன் பொருள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

திருநீறு மிகவும் புனிதமானது. இதற்குப் பல பெயர்கள் இருக்கின் றன. நம்மை ரட்சிப்பதால் அதனை ரட்சை என்று குறிப்பிடுகிறார்கள். வினைகளை அழித்துப் பொடிபடச் செய்வதால் அதனைத் “திருநீறு’ என்று சொல்லுகிறோம். மகத்தான பெருமை பொருந்திய ஐஸ்வரியத்தை அளிப்பதால் அதனை “விபூதி’ என்றும் அழைக்கின்றோம். ஐந்தெழுத்தை ஓதித் தருவதால் விபூதியை பஞ்சாட் சரம் என்றும் குறிப்பிடுகிறோம்.

ஆன்மிகம், மருத்துவம், ஜோதி டம் என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கிய சித்தர்கள் எந்தெந்த ஊர்களில் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தயவு செய்து கூற முடியுமா?

காயகல்பம் மூலமாக என்றும் இளமையுடன் வாழ்ந்து, உரிய காலம் வந்தவுடன் தமது உடலை உயிருடன் ஜீவ சமாதியாக்கிக் கொண்டவர்கள் சித்தர்கள். அவர் கள் ஜீவசமாதியாகும்போது அங்கே என்ன ஆற்றல் விளைய வேண்டும் என்று எண்ணி முடிவு செய்தார் களோ, அந்த ஆற்றல் அவ்விடங் களில் இன்றும் அவர்களது சக்தியுடன் எழும்பிக் கொண்டிருக்கிறது என் பதுதான் விசேஷ தத்துவமாகும். அப்படி சித்தர் கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறோம்.

கமலமுனி- திருவாரூர்.
கும்பமுனி- கும்பகோணம்.
அகப்பேய் சித்தர்- எட்டுக்குடி.
இடைக்காடர்- திருவண்ணாமலை.
திருமூலர்- சிதம்பரம்.
சட்டைமுனி- சீர்காழி.
மச்சமுனி- திருப்பரங்குன்றம்.
போகர்- பழனி.
குதம்பைச் சித்தர்- மயிலாடுதுறை.
கொங்கணர்- திருப்பதி.
அகத்தியர்- திருவனந்தபுரம்.
கோரக்கர்- பேரூர்.

இப்படிப்பட்ட தலங்களில் உள்ள தீர்த்தங் களில் நீராடி, சித்தர்களின் ஜீவசமாதிகளைத் தரிசிப்பது சிறப்பான நன்மைகளைத் தரும்.

தானங்களால் பலவிதமான புண்ணிய பலன்கள் ஏற்படுகின்றன என்று சாஸ்திரங் கள் கூறுகின்றன. எதையெதை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் விளையும் என்பதைக் கூறுங்களேன்.

அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.
பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.
கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.
வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.
தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.
தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.
அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.
தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.
நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.
நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.
பால் தானம்- துக்கம் நீக்கும்.
தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.
தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.
வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.
பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.
இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் பலன்கள் உண்டு.

சாதாரண மந்திரங்களுக்கும் பீஜா மந்திரங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? குறிப்பிட்ட பயன்களை அடைவதற்காக மந்திரங்களைப் பிரயோகம் செய்வது சரிதானா?

பீஜம் என்பது விதை என்று சொல்லப்படும். பீஜாட்சரங்கள் என்றால், மந்திரங்களின் வித்துகள் என்று பொருள் கொள்ளுகிறோம். பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொன்னால்தான் மனதில் அலை எழுப்ப முடியும். அவை மனதைத் தூண்டும் சக்தி உடைவை.

பீஜா மந்திரங்களில் “ஐம்’ என்பது சரீரத்தை யும், “ஹ்ரீம்’ என்பது மனத்தையும், “ஓம்’ என்பது மூலாதாரத்தையும் ஊக்குவிக்கும். மேலும், இந்த பீஜாட்சரங்கள் உச்சரிப்பவரின் உட லுக்குள் சென்று பக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் பக்குவத்தையும் ஏற்படுத்தும். அதனால் பீஜாட்சரங்களை மந்திரங்களுடன் இணைத்துச் சொல்வதே சிறந்த பலனைத் தரும்.

மந்திரங்களை உச்சாடனம் செய்யும் பொழுது, அவை எதனைக் குறித்துச் செய்யப் படுகின்றனவோ, அந்தப் பலன்களை உறுதியாக அளிக்கும். மந்திர உபாசனை செய்யும்போது நல்லதற்கும் தீயதற்கும் அவை உதவும். சரியான உச்சரிப்புடன் சொற்சோர்வு இல்லாமல், நல்ல நோக்கங்களுக்காக உச்சாடனம் செய்தால் நாம் எதிர்பார்க்கும் நன்மை உண்டாகும். உதாரண மாக, சந்தான கோபால கிருஷ்ணனுக்குரிய மந்திரத்தை பக்தியுடன் ஜெபம் செய்து ஹோமத்தில் பிரயோகம் செய்தால் நிச்சயமாகப் புத்திர பாக்கியம் உண்டாகும். வெண்ணெய்யில் மந்திர உச்சாடனம் செய்து கொடுத்தால் சந்தான பாக்கியம் ஏற்படும் என்பதில் உறுதியாக இருக்கலாம்.

thank :https://aanmikam.blogspot.com/2011/02/blog-post_3024.html




Thanks & Regards
ஹரிமணிகண்டன்
Harimanikandan .V

                 

ஓம் சிவசிவ ஓம்

Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  

Be Good & Do Good

Saturday, December 29, 2012

சமாதி என்பது



சமாதி

பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகக் கூற்றுப்படி சமாதி என்பது ஆதிக்கு சமமாதல் என் று பொருள்படுகிறது.அதாவது பார்ப்பவன்,பார்க்கப்படும் பொருள்,பார்த்தல் என்ற செயல் மூன்றும் ஒன்றாகிய நிலை சமாதி ஆகும்.

மேலும் சமாதி எனும் சொல் ஒரு யோகியினுடைய உணர்வுடன் கூடிய ஒடுக்க நிலையையும் குறிக்கிறது.இதன்படி சமாதிக்குச் செல்லும் யோகி தன்னுடைய ஒடுக்க நாளை முன்கூட்டியே தெரிவிக்கிறார்.அதாவது தன்னுடைய யோக பலத்தால் தன் சமாதி நாளைத் தானே அறிவித்து,தன்னை சமாதியில் இருத்திக்கொள்ளுதல் ஆகும்.

சாதாரண மரணத்தில் உடம்பில் இருந்து கழிவுகளாக மலம்,மூத்திரம்,விந்துநாதம் வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும்.ஆனால்,சமாதியடையும்போது இவ்வகைக் கழிவுகள் வெளிவராமல் உயிர்ச் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் ஒடுங்கிவிடும்.யோகியினுடைய உடல் இயக்கமும்,மன இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்.இந்த உடம்பு மற்ற உடம்பைப் போல மண்ணில் அழியாது;காலா காலத்திற்கும் காக்கப்படும்.

1.நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற மறுபிறப்பற்ற நிலை : உதாரணம்:போகர்

2.விகற்ப சமாதி:மனதில் இருமை நிலையோடு கூடிய சமாதி .மறுபிறப்புக்கு வழியுண்டு.

3.சஞ்சீவினி சமாதி:உடலுக்கு சஞ்சீவித் தன்மையை மண்ணிலும்,மனதின் சஞ்சீவித் தன்மையை விண்ணிலும் கொடுக்கும் நிலை.மறுபிறப்பில்லாத நிலை.உதாரணம்:சந்த ஞானேஷ்வர் சமாதி,ஆலந்தி,பூனா.

4.காய கல்ப சமாதி:சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் சமாதி நிலை.மறுபிறப்புக்கு வழியுண்டு.சமாதி அடைந்த யோகி நினைத்தால் மீண்டும் அவ்வுடலுக்கு வர முடியும்.உதாரணம்:சச்சிதானந்தர் சமாதி,சச்சிதானந்தர் ஆசிரமம்,கொடுவிலார்பட்டி,தேனி மாவட்டம்.

5.ஒளி சமாதி அல்லது ஒளி ஐக்கியம்: யோகியானவன் தொடர்ச்சியான யோகப்பயிற்சியின் மூலம் பருவுடலை ஒளி தேகமாக ஆக்கி,உடல் சூட்டினை அதிகரித்து இந்தப்பருவுடலை பூமிக்குக் கொடுக்காமல் ஒளியாக்கி மறைந்துவிடுதலே ஒளி சமாதி ஆகும்.

உதாரணம்:காக புஜண்டரின் ஒளி ஐக்கியம்.இந்த சித்தர் பருவுடல் தாங்கி பூமியில் இருப்பார்;பூமியில் நீர்,நெருப்பு,காற்று,நிலநடுக்கம் என்று பிரளயம் வந்தால் காக உருவம் தாங்கி மரங்களிலும் வாழ்வார்.நீர்ப்பற்றாக்குறை,கடும் வறட்சியால் மரங்களும் அழிய நேர்ந்தால் ஒளியாகி,அவிட்ட நட்சத்திரமாகி வாழ்வார் என சித்தர் பாடல்கள் 


Thank: https://aanmikam.blogspot.com/2012/03/blog-post_1497.html



Thanks & Regards
ஹரிமணிகண்டன்
Harimanikandan .V
                 

ஓம் சிவசிவ ஓம்

Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  

Be Good & Do Good

கடவுள் எங்கே இருக்கிறார்?


Thank :Mr.Sasisarma [ aanmikam.blogspot.com]



காலங்காலமாக இருந்து வரும் சமயக் கோட்பாடுகளைப் பொய் என்று நிரூபிக்கத் தோன்றியதே சித்தர் மரபு. இறைவனை அடையும் வழியாக புற வழிபாட்டையே அனைத்து சமயங்களும் முன்வைக்கின்றன. ஆனால் இறைவன் நமக்கு உள்ளே இருக்கிறான்; அக வழிபாட்டின் மூலமே அவனைக் காண முடியும் என்று திடமாக உரைத்தவர்கள் சித்தர்கள். இதை வலியுறுத்தும் சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.

"ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா

மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்

பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.'


-திருமந்திரம் பாடல் எண்: 1515.

திருமூலர் வாழ்ந்த காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு சமயக் கோட்பாடுகள் நிலைபெற்றிருந்தன. அவற்றுள் முதன்மையான மதங்கள் (சமயங்கள்) என ஆறு சமயங்களையே கூறுவர். அவை:

1. பைரவம், 2. காளாமுகம், 3. பாசுபதம், 4. சௌரம், 5. கௌமாரம், 6. காணா பத்யம்.

இந்த ஆறு சமயங் களுமே புற வழிபாட்டை வற்புறுத்தும் சமயங்களா கும். இந்த சமயங்கள் கூறும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றுவதால் நமது அகத்தில் இருக்கும் இறைவனைக் கண்டுணர இயலாது என்பதையே பாடலின் முதல் இரு வரிகளில் கூறுகிறார் திருமூலர்.

"ஆயத்துள் நின்ற அறு சமயங்களும்

காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா.'

ஆயம் என்ற சொல்லுக்கு கூட்டம் அல்லது உலகம் என்று பொருள் கொள்ளலாம். காயம் என்பது பருவுடலைக் குறிக்கும் சொல். இந்த உலகில் உள்ள ஆறு சமயங்கள் கூறும் வகைமுறைகளால் உடலின் உள்ளே உறைந்திருக்கும் இறைவனைக் காண இயலாது என்பது பொருள்.

இந்த ஆறு சமயங்களைப் பின்பற்றுபவர் களும், மனைவி, மக்கள் என்ற பாசப் பிணைப்பு களால் கட்டுண்டுக் கிடக்கிறார்கள். இந்தப் பாசம் எனும் மாயக் குழியில் விழுந்து உழன்று கொண்டிருப்பவர்களால் உள்ளத்தின் உள்ளே உறைந்திருக்கும் இறைவனைக் காண இயலாது.

இந்தப் பாடலில் திருமூலர் சூட்சுமமான இரண்டு கருத்துகளைக் கூறியுள்ளார். 

● புற வழிபாடுகளை முன்னிறுத்தும் சமயங்களால் உள்ளே இருக்கும் கடவுளைக் காணவோ அடையவோ முடியாது. அக வழி பாடு மட்டுமே கடவுளைக் காணும் வழியாகும். இறைவனை அடைய பூஜைகள் செய்வதும் யாகங்கள் வளர்ப்பதும் வீண் வேலை. -இது முதல் கருத்து. 

● இரண்டாவது கருத்து- பந்த பாசங்கள் எனும் மாய வலைகளில் சிக்கிக் கிடக்கும் வரையில் இறைவனைக் காண இயலாது. இந்த மாயைகளிலிருந்து விடுபடும்போதுதான் இறையனுபவம் உள்ளே மலரும். இந்த சமயங்கள் கூறும் வழிமுறைகளால் (புற வழிபாடு) மாயை யின் பிடிகளிலிருந்து விடுபட இயலாது.

ஏறக்குறைய இதே கருத்தை வலியுறுத்தும் மற்றொரு திருமந்திரப் பாடலையும் காணலாம்.

"ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர் 

ஆறு சமயப் பொருளும் அவன் அலன் 

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனை புகலாமே.'

-திருமந்திரம் பாடல் எண்: 1518.

நாம் இறைவனோடு ஒன்றிணைய, வீடுபேறு பெறத் தடையாக இருப்பவை புற வழிபாட்டை முன்னிறுத்தும் சமயங்களே என்று வலியுறுத்து கிறது இந்தப் பாடல்!

ஆறு சமயங்களின் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தவர்கள்கூட கடவுளைக் கண்டிலர் என்கிறது முதலாவது வரி. இரண் டாவது வரியில் இன்னமும் கடுமை காட்டுகி றார் திருமூலர்.

"ஆறு சமயப் பொருளும் அவன் அலன்.'

இந்த ஆறு சமயங்களும் யாரை அல்லது எதைக் கடவுள் என சுட்டிக்காட்டுகின்ற னவோ, அது கடவுள் இல்லை என்பதே இரண் டாம் வரியின் பொருளாகும்.

இறைவனைக் குறித்த ஒரு மிகப் பெரிய சூட்சுமம் இந்த இரண்டாம் வரியில் ஒளிந்து நிற்கிறது. இறைவன் என்பது சக்தி. ஆதியும் அந்தமும் இல்லாத இந்த சக்திக்கு உருவமும் கிடையாது.

சக்தி வடிவான இந்த இறைவனை உருவ வழிபாடுகளாலும் பூஜை, புனஸ்காரங்களாலும் அடையவோ உணரவோ முடியாது. சக்தியைக் காண முடியாது. ஆனால் அதன் செயல்பாடு களை- அதன் இயக்கத்தை உணர முடியும் அல்லவா?

பந்த பாசங்கள் எனும் மாயக் கட்டுகளிலிருந்து விடுபட்டு, மனம் பண்படும் போதுதான் நம் உள்ளே இருக்கும் அந்த மாபெரும் சக்தி யின் இயக்கங்களை நம்மால் உணர முடியும். இதுவே சித்தர் வழி! தந்திர யோகமும் இதையே வலியுறுத்துகிறது.

இறைவன் யார்? எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு விதமான விளக்கங்களைத் தருகிறது. ஆனால் இந்த சமயங்கள் கூறும் அந்தப் "பொருள்' அவன் அல்லன் என்கிறார் திருமூலர்.

சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இதிலுள்ள உண்மை புரியும். இறைவன் எனும் அந்த மாபெரும் சக்தி, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எவராலும் வர்ணிக்கவோ விவரிக்கவோ முடியாதது. சமயங்கள் வர்ணிக் கும்- விவரிக்கும் "கடவுள்' - நிச்சயமாக "கடவுள்' இல்லை.

இதை ஒரு சிறு உதாரணம் மூலமாக விளக்க லாம். பலாப்பழம் எப்படியிருக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கலாம்- படம் வரைந்தும் காட்டலாம். ஆனால் பலாப்பழத்தின் சுவை எப்படியிருக்கும் என்பதை வர்ணிக்க முடியுமா? ஒருமுறை உண்டு பார்த்தால்தான் அந்தச் சுவையை முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும். சுவை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனும் அப்படித்தான். அந்த இறை அனுபவத்தை ஒவ்வொருவரும் தங்கள் உள்ளத்தில் உணர வேண்டும். வார்த்தைகளாலோ படங்களாலோ சிலைகளாலோ இறைவனை விளக்க முடியாது. அது ஒரு தனிப்பட்ட அனுபவம் என்பதையே இந்தப் பாடலின் முதல் இரு வரிகள் சூட்சுமமாக விளக்குகின்றன. இனி அடுத்த இரு வரிகளுக்கு வருவோம்.

"தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்த பின்

மாறுதல் இன்றி மனை புகலாமே.'

"இறைவன் உருவமில்லாதவன்- உணரப்பட வேண்டியவன்' என்ற தெளிவு வந்தபின், வீடுபேறு பெறத் (மனை புக) தடையெதுவும் இராது. ஆனால் இந்தத் தெளிவு எப்போது வரும்?

இந்த சமயங்கள் கூறும் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை முதலில் தெளிவாகக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றவற்றை மனதில் அசைபோட வேண்டும். எழும் ஐயங்களுக்கு விடை தேட வேண்டும். ஞான மார்க்கத்தின் துணை கொண்டு அவற்றை ஆராய்ந்து பார்க்கும்போதுதான் இந்த சமயங்கள் கூறும் "கடவுள்' நிச்சயமாகக் கடவுளாக இருக்க முடியாது என்ற தெளிவு மனதில் பிறக்கும்.

"தேறித் தெளிதல்' என்பது இதுதான். சமயங்கள் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழி செல்வதையே "குருட்டு பக்தி' என்கிறோம். குருடர்களால் இறை எனும் ஜோதியைக் காணவோ உணரவோ இயலாது.

இந்தத் தெளிவு ஒருவருக்கு வந்துவிட்டால் அவரது அகக் கண்கள் திறந்து கொள்ளும்; மனம் விரிவடையும். உள்ளுக்குள் இருக்கும் இறைவனை- அந்த சக்தியின் அக- புறச் செயல் பாடுகளை- விந்தைகளை- பிரம்மாண்டத்தை உணர்ந்து கொள்ளும் திறன் தானே உருவாகும்.

இதுவே சித்தர் வழி! இதுவே தந்திர யோக வழி! இந்த வழியில் தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கே சித்தம் தெளிவாகும்; சித்திகளும் கைகூடும். இறுதியாக வீடுபேறு எனும் முக்தி நிலையும் சாத்தியப்படும்.

இதுவரையில் நாம் கண்ட சில திருமந்திரப் பாடல்களைக்கவனிக்கும் போது இயல்பாகவே நமது உள்ளத்தில் ஒரு கேள்வி எழும்- "இறைவன் அகத்தில் மட்டுமே இருக்கிறான் என்றால், புறத்தில் இல்லையா?' என்று.

"அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்', "தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்' என்றெல்லாம் இறைவனை வர்ணிக்கிறோம். இறை எனும் சக்தி இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்து நிற்கிறது என்பதுதானே உண்மை?

இறைவனை அகத்தில் மட்டுமே காண முடியும் என்கிறாரே திருமூலர். புறத்தில் காண முடியாதா? இதற்கு விடையாகத் திருமந்திரத்தின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது.

"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.'

-திருமந்திரம் பாடல் எண்: 1517.

இறைவன் உள்ளே இருக்கிறானா, புறத்தே இருக்கிறானா என்ற கேள்விக்கும், நாத்திக வாதம் குறித்த சந்தேகங்களுக்கும் ஒருசேர விடை கூறும் ஓர் அற்புதமான பாடல் இது.

நமது இந்திய கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு எதிர் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பதுதான்! மிகத் தொன்மையான காலம் தொட்டே, "நாத்திக வாதம்' இந்திய நாட்டில் -குறிப்பாகத் தமிழ் மண்ணில் இருந்து வந்திருக்கிறது.

"கடவுள் இல்லை' என்று மறுப்பவர்களுக்கும் இந்திய கலாச்சாரத்தில் தொன்மையான காலம் தொட்டே அங்கீகாரம் இருந்திருக்கிறது. அவர்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்து, அத்தகைய கொள்கை உடையவர்கள் ஒரு தனி சமயப் பிரிவினராக சமூகத்தால் அங்கீகரிக்கப் பட்டனர்.

அவர்கள் மேல் வெறுப்போ துவேஷமோ இருந்ததில்லை. சமயங்களில் பல பிரிவுகள் இருந்ததுபோல, கடவுள் இல்லை என்று மறுப்பவர்களும் ஒரு தனிப் பிரிவாகக் கருதப்பட்டனர். இந்த உண்மையை மனதில் இருத்திக் கொண்டு இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள்.

"உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு 

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம் இறை.'

கடவுள் உள்ளத்தின் உள்ளேயும் இருக்கி றான்; புறத்தேயும் இருக்கிறான் என்று நம்புகிறவர்களுக்கு அவன் உள்ளத்தின் உள்ளும் இருக் கிறான்; புறத்திலும் நிறைந்து நிற்கிறான்.

"உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு 

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.'

இறைவன் என்ற ஒன்று உள்ளத்திலும் கிடையாது, புறத்திலும் கிடையாது என இறை மறுப்புக் கொள்கை கொண்டவர்களுக்கு இறைவன் உள்ளத்திலும் இல்லை; புறத்திலும் இல்லை என்பதே வெளிப்படையான அடிப்படைக் கருத்தாகும்.

இந்த எளிய பாடலிலும் சில சூட்சுமமான கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய கருத்துகள் இரண்டு.

● இறைவன் இல்லை என்று கூறுபவர்கள் குறித்து திருமூலர் எந்த கண்டனத்தையும் முன் வைக்கவில்லை.

● உண்டு என்பதாலும் இல்லை என்பதாலும் பெரிய வித்தியாசம் எதுவும் வந்துவிடப் போவதில்லை.

"அன்பே சிவம்' என்ற கருத்தை முதன்முதலாக முன்வைத்தவர் திருமூலர். சுயநலம் இல்லாத அன்பு, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் அன்பு- இத்தகைய அன்பே "சிவம்' என்பதே திருமந்திரம் உரைக்கும் கடவுள் தன்மை.

கடவுள் உண்டு என்பவர்கள், அந்த நம்பிக்கையால் மட்டும் கடவுளைக் கண்டுணர முடியாது. மனம் பண்பட்டு அகக் கண்கள் திறந்து, ஞானம் பிறக்கும்போதுதான் அவர் களால் கடவுளை உள்ளும் புறமும் கண்டு கொள்ள முடியும்.

கடவுள் உள்ளேயும் இல்லை; புறத்திலும் இல்லை என்று மறுப்பவர்களுக்கு அவன் உள்ளேயும் இல்லை; புறத்தும் இல்லை. ஆனால் அன்பு எனும் பண்பு அவர்களிடம் நிறைந்திருந்தால்- உள்ளம் பண்பட்ட நிலையில் இருந்தால்- அவர்களை அறியாமலேயே ஒருநாள் இறைவன் அவர்களது உள்ளத்தையும் கொள்ளை கொண்டு விடுவான்.

"கள்ளத் தலைவன்' என இறைவனை திருமூலர் வர்ணித்ததை கடந்த அத்தியாயத்தில் கண்டோம் அல்லவா? அந்தக் கருத்தை இங்கே பொருத்திப் பார்த்துச் சிந்தித்தால் மேலும் பல சூட்சுமங்கள் புலனாகும்.

இந்த திருமந்திரப் பாடலையே மேலும் எளிமையாக்கி, கவியரசர் கண்ணதாசன்,

"உண்டென்றால் அவன் உண்டு.

இல்லையென்றால் அவன் இல்லை'

என பாடி வைத்துள்ளதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..





Thanks & Regards
ஹரிமணிகண்டன்
Harimanikandan .V
                 

ஓம் சிவசிவ ஓம்

Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  

Be Good & Do Good



Friday, December 28, 2012

சித்தர் தத்துவம்

சித்தர் தத்துவம் 


ஒப்பியல் இலக்கியம்
கலாநிதி. க. கைலாசபதி M. A., Ph.D.



தமிழ் மொழி தொன்மையானது; வரலாற்றுப் புகழ் படைத்தது. இலக்கியச் செல்வம் நிரம்பியது; தத்துவ வளம் உடையது என்றெல்லாம் அடிக்கடி பலர் கூறக் கேட்கின்றோம். இக்குரல்களின் மத்தியில் பழந்தமிழர் கண்ட விஞ்ஞான நோக்கும் அறிவும், போதியளவு முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூறுதல் வேண்டும். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியான நாகரிக வளர்ச்சி கண்ட தமிழ் மக்கள் விஞ்ஞானத்தைப் போற்றியே வந்துள்ளனர். எனினும் ஆன்மீகத் துறைக்குக் கொடுக்கப்பட்ட முதன்மையின் விளைவாகப் பொருளைப் பற்றிய ஆய்வு மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்படலாயிற்று. இந்நிலையில் அதனை ஓளவாவது பேணி வந்த அறிஞர் காலத்துக் காலம் வாழ்ந்துள்ளனர். அத்தகையோரைப் பற்றிய சில குறிப்புகளைக் கூறுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

விஞ்ஞான நோக்கும் அறிவும் மனிதனுடைய கற்பனையின் விளைவல்ல; வாழ்க்கைத் தேவைகள், அவசியப் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றுவன அவை. மனிதன் படைக்கும் கருவிகளைத் துணையாகக் கொண்டு மனிதன் கண்டுபிடிப்பனவே விஞ்ஞான உண்மைகள். கிறித்து அப்தத்திற்கு ஏழு நூறு வருடங்களுக்கு முன்னரளவில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்கள், இரும்பின் பண்பையும் பயனையும் அறியத் தொடங்கினர். அதன் பின்னரே அவர்கள் முழு நாகரிக வளர்ச்சியுறத் தொடங்கினர் என்று வரலாற்றாசிரியர் கூறுவர். இக்காலப் பகுதியை 'இரும்புக் காலம்' எனவும் பெயரிட்டழைப்பர். அக்காலத்திலே வாழ்ந்த மக்கள் பிரேதங்களை அடக்கம் செய்வதற்குப் பல முறைகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்றுதான் பெருங்கல் சவ அடக்கமுறை எனப்படுவது. நிலத்தை அகழ்ந்த சவத்தை வைத்துச் சுற்றிவரச் சவப்பொட்டிபோலப் பெருங்கற்களை அடுக்கி வைப்பதே இவ்வடக்கமுறையின் பிரதான அம்சமாகும். ஈமக்கிரியைகளின் ஒரு பகுதியாகச் சவக்குழிக்குள் பலவிதமான மட்பாண்டங்களை வைப்பர். புதைபொருள் ஆராய்ச்சியின் விளைவாகத் தொல்பொருள் ஆய்வாளர் இத்தகைய மட்பாண்டங்கள் பலவற்றை ஆராய்ந்துள்ளனர். கருமை நிறமும் செம்மை நிறமும் அமைந்த மட்பாண்டங்களைச் செய்த அம்மக்களுக்கு ஓரளவு இரசாயன அறிவு இருந்திருத்தல் அவசியம். மண்ணைப் பல்வேறு வெப்ப நிலைகளிற் சுடும்போது, அது கறுப்பாகவும் சிவப்பாகவும் நிற வேறுபாடடைகிறது என்பர்; மண்ணுடன் அப்பிரக்ம் முதலிய வேறு பொருட்களையும் கலத்தல் வேண்டும். பாண்டத்தை வனைவதற்குச் சக்கரம் வேண்டும். மட்பாண்டக் கலை வளர்ச்சியுடன் பண்டைய இரசாயனமும் பௌதிகமும் தோற்ற நிலையில் அரும்பத் தொங்கி விட்டன. இத்தகைய சூழலிலேயே இரும்பும் வழக்கிற்கு வந்தது. நாகரிக வளர்ச்சியின் முதற்படியினைத் தமிழ் மக்களும் உலகத்தின் பிற பகுதிகளில் வாழ்ந்த மக்களைப் போல விஞ்ஞான அறிவின் துணைகொண்டே கடந்தனர்.

அந்த வரலாற்று நிலைக்குப் பின்னர் தமிழ்ச் சமுதாயத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்தன; தத்துவம் வளர்ந்தது; சமயங்கள் நிறுவனங்களாக உருப்பெற்றன. தொழில் செய்வோர் தொழில் செய்யாதோர் என்னும் பாகுபாடு நிலைத்தது. அறிவர் அறிவில்லாதார் என்னும் பிளவு தோன்றியது. இவற்றிற்கேற்ப விஞ்ஞானத்திலும் மாற்றம் ஏற்பட்டது. புராதன விஞ்ஞான அறிவின் பயனாக அன்றைய மனிதன் பெரிதும் முயன்று மண்ணால் பாண்டங்களைச் செய்தான். அவற்றின் பயனைப் பெற்றான். பின்னாளில் சிலர் மட்பாண்டத்தைப் பயனற்ற அழிந்து போகும் மனித வாழ்விற்கு ஒப்பிட்டு மாயாவாதம் பேசினர். விஞ்ஞானம் வளராது பின்தங்கியது.

விஞ்ஞானம் என்பது சடப்பொருள்களைப் பரிசோதித்து ஆராய்வதின் மூலம் அவற்றிற்கிடையே சில உறவு முறைகளைக் கண்டறிவதாகும். உறவுகளைக் காண்பதற்குச் சில கோட்பாடுகள் அவசியமாகின்றன. நிரூபிக்கப்பட்ட கோட்பாடுகள் உண்மைகளாகின்றன. அவ்வுண்மைகளைக் கோட்பாடுகளாகக் கொண்டு மேலும் புதிய பரிசீலனைகளைச் செய்யவும் அவற்றினை நிரூபிக்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஒரு தொடர் நிலையாகவே விஞ்ஞான அறிவு முன்னேறுகிறது. எனவே சடப்பொருள்களை ஏற்றுக்கொள்வதும், அவற்றினை ஆய்வதும் விஞ்ஞான நோக்கின் முதற்படியாகும். ஆனால், இந்தியாவிலே தோன்றி வளர்ந்த பெரும்பாலான தத்துவ தரிசனங்கள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. பொருட்களும் பிரபஞ்சமும் அநித்தியமானவை என்றும், இறைவன் அல்லது பிரமமே முழுமுதற் பொருள் என்றும், அது சடப்பொருள்களுக்கு அப்பாற்பட்டது என்றும் அத்தத்துவங்கள் கூறும். இவ்வாதமானது கருத்துக்களின் பிரதிபலிப்பே பொருள்கள் என்னும் கருத்து முதல் வாதமாகும். இவ்வாதம் விஞ்ஞான நோக்கிற்கும் அதன் அபிவிருத்திக்கும் உகந்தது அன்று என்பது வௌிப்படை. சுருங்கக் கூறின், உலகிலே கருத்து முதல் வாதத்திற்கும் பொருள் முதல் வாதத்திற்குமிடையே நிலவிவரும் முரண்பாட்டினை இங்குத் தௌிவாகக் காணலாம். காண்பனவற்றைக் கணக்கெடுத்துப் பஞ்சபூதங்களின் நுட்பத்தை நுணுகி அறியவைப்பது விஞ்ஞானம் எனில், 'காண்பனவெல்லாம் பொய்: காணாதது ஒன்று உண்டு; அதனை மனத்தின் துணைகொண்டு தேடு' எனக் கூறுவது இலட்சியவாதத் தத்துவம். வேத, உபநிடத காலத்திலேயே இப்போராட்டந் தொடங்கிவிட்டது. இன்றுவரை பல சந்தர்ப்பங்களில் பொருள் முதல் வாதமும் விஞ்ஞான நோக்கும் ஆங்காங்குத் தலை தூக்கின. சான்றோர் இலக்கியங்களிலே இதனைக் காணலாம். நல்வினை, பிறவாநிலை முதுலியவற்றிலே நம்பிக்கை இல்லாதவரை மனத்திற் கொண்டு கோப்பெருஞ்சோழன் ஒரு பாடலைப் பாடியுள்ளான். இது புறநானூற்றிற் காணப்படும். சாங்கியம், சமணம், பௌத்தம், யோகம் முதலிய தத்துவ சமயக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவிய காலத்தில் விஞ்ஞானச் சாயல் பொருந்திய பல சிந்தனைகள் இலக்கிய நூல்களிலும் தத்துவங்களிலும் எதிரொலிக்கலாயின. எனினும், வைதிக சமயக் கருத்துக்களும் சநாதன தருமமுமே பெருவழக்காக நிலவின. இவற்றின் மத்தியிலே தம்மாலியன்றளவு உணர்ச்சி பூர்வமாகவேனும் விஞ்ஞானப் பண்பினை வளர்க்க முனைந்தவர் சிலரிருந்தனர். அவரைச் சித்தர் என்றழைக்கலாயினர். சித்தர்கள் என்றால் 'அறிவர்' என்பது பொருள்; விளங்கிய அறிவுரையடைவர் எனலாம்.

தமிழ் நாட்டிலே பதிணென் சித்தரைப் பற்றிய வழக்கும் செவிவழிச் செய்திகளும் உள்ளன. சில பொதுப் பண்புகளையே குறிக்கலாம். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், இரேகை சாத்திரம், வான சாத்திரம் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன. இவற்றிற் பல இன்னும் ஓலைச்சுவடிகளாகவே கிடக்கின்றன.

வேதாந்தச் சார்புள்ள இறைத் தத்துவங்கள் யாவும், "காயமே பொய்; உடலை விடுத்து உயிரின் ஈடேற்றத்திற்காக உழை' என்றே மாயாவாதம் பேசின. இப்போக்கை வன்மையாகக் கண்டித்து மறுத்தனர் சித்தர். தமிழிலே திருமூலர் முதன் முதலாக இவ்வெதிர்க் குரலுக்கு உருவங்கொடுத்தார் எனலாம். திருமந்திரத்திலே பலவிடங்களில் உடம்பின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றார் திருமூலர்.

    ".................உடம்பொடு
    செத்திட்டு இருப்பர் சிவயோகிகள்
    "உடம்பார் அழியில் உயிரார் அழிவர்."
    "உறுதுணையாவது உயிரும் உடம்பும்."
    "உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்."
திருமூலரின் இக்கருத்துக்கள் மாயாவாதத்திற்கு நேர் முரணான மெய்ம்மை வாதத்தை அடி நிலையாகக் கொண்டவை. திருமூலர் ஒரு சித்தர். திருமந்திரத்தை 'தந்திரம்' என்றும் கூறுவதுண்டு. தந்திரம் என்பது இந்தியாவிலே பண்டுதொட்டு வளர்ந்து வந்த ஒரு வழிபாட்டு முறை. இவ்வுடலின் துணைக்கொண்டே இவ்வுடலின் மூலமாகவே-பேரின்பத்தை அடையும் உண்மையைக் காட்டுவன யோகம், தந்திரம் முதலியன. கிரியைகள், சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், உடற்பயிற்சி, உடல்வலிமை முதலியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. யோகமும், தந்திரமும், மனித உடலுக்கு உண்மை- மெய் என்னும் பெயரை மெய்யாகக் கூறியவர்கள் தந்திரவாதிகள். அந்தளவிற்கு அவர்கள் மெய்மை வாதிகள்.

சித்தர்களின் இப்பண்புகளைப் பற்றி, சாமி சிதம்பரனார் கூறுவது வருமாறு:

"சித்தர் பாடல்களை ஆழ்ந்து படித்தால், அவர்கள் வைதிக மதத்திற்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். வைதிக மதக் கொள்கைகள் பலவற்றைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்கள் தங்களை நாத்திகர் என்றோ, உலகாயதர்கள் என்றோ வௌிப்படையாகச் சொல்லிக் கொள்ளவில்லை. வௌிப்படையாகப் பாடவில்லை. கடவுள் அன்பர்கள் போலவே காட்சியளிக்கின்றனர். ஆயினும் சித்தர்களின் பாடல்களிலே உலகாயதத்தை - நாத்திகத்தைப் பற்றிய கண்டனங்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விஞ்ஞானிகளும், ஆன்மா தனித்த ஒரு பொருள் என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஆன்மா என ஒன்று தனியாக மதவாதிகள் சொல்லுகின்ற படி அழியாத தனிப்பொருளாக இல்லையென்பதே பல விஞ்ஞானிகள் கருத்து. சித்தர்களின் கொள்கை இதற்கு ஒத்திருப்பதைக் காண்கிறோம்."

சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தவர்கள் யாவரும் ஏகோபித்த குரலிற் கூறுவது இதுதான். சித்தர்களைப் பற்றியும் அவர்களது இரசாவாதத்தைப் பற்றியும் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையிலே, கும்பகோணம் கே.சி. வீரராகவ ஐயர் இவ்வாறு கூறியுள்ளார்:

"பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்."

இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும், வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். மிகச் சமீபகாலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரு மேற்கோள்கள் அமையும்.

"இதுகாறும் சைவ சாத்திர வரிசையிலே நுழைவதற்கு இடம் பெறாத பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

"சைவ சமயத்தைத் தாபித்து உபகரித்த சைவ சமய குரவர்கள் கற்பித்த வழியைக் கைப்பிடித்து ஒழுகும் சைவ மக்களும் சித்தர் நூலை நோக்கவும் இசைவாரா? ஒருகாலும் இசையார்."

மேற்கூட்டிய இரு கூற்றுக்களும் முறையே வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி மா. சாம்பசிவ பிள்ளை ஆகியோரால் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலிற் கூறப்பட்டவை.

தமிழரிடையே நிலவிய சாதியமைப்பின்படி, பஞ்சமர் நால் வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்; சித்தர்களைப் பஞ்சம நிலையில் உள்ளோர் என்று கூறுவது உற்று நோக்கத்தக்கது. சுருங்கக் கூறின், வைதிக சமய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துக் கூறப்படுகிறது. வைதிக சமயிகளின் கோபாவேசத்திற்குக் காரணம் எமக்குத் தெரிந்ததே. இடைக்காலச் சமுதாயம் வேத வாழ்க்கையை மூலாதாரமாய்க் கொண்டு வருணாசிரம தருமத்தின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. வேத வழக்கொடு மாறுபடும் எதுவும் ஆக்குரோசத்துடன்கண்டிக்கப்பட்டது. சித்தர்களோ அடிப்படையையே கோடரி கொண்டு வெட்டினர்.

    "சதுர் வேதம் அறுவகைச் சாத்திரம் பல
    தந்திரம் புராணங்களைச் சாற்றும் ஆகமம்
    விதம் விதம் ஆனதான வேறு நூல்களும்
    வீணான நூல்கள் என்று ஆடாய் பாம்பே!"
இது பாம்பாட்டிச் சித்தர் பாடல்; இதைவிடக் கொடிய தேவ நிந்தனையும், பழிப்பரையும் வேறு என்ன இருந்திருக்க முடியும்? இந்து மரபு வழிச் சமுதாயம் புனிதத்திலும் புனிதமானவை என்று போற்றுவனவற்றை 'வீணானவை' என்று அடித்துக் கூறுகிறார் பாம்பாட்டிச் சித்தர். திரு.வீரராகவ ஐயர் குறிப்பிட்ட விக்கிரக வழிபாட்டெதிர்ப்புக்கும் இதே சித்தரின் பாடலொன்றை உதாரணமாகப் பார்க்கலாம்.

    'உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி
    உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி
    புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம்
    போகாது மூடர்க்கென்று ஆடாய் பாம்பே"
சிற்சில பரிபாஷைகளில் தவிர, சித்தர்களின் மொழி நடை பழகு தமிழில் அமைந்திருப்பதனால் பாடல்கள் விளக்கம் வேண்டா எளிமையுடையனவாய் இருப்பதும் கவனிக்கத்தக்கதே. பாமர மக்களை நோக்கியே இவை பாடப் பெற்றன என்பது இதனால் உறுதிப்படுகின்றது. சமயத்துறையில் புரட்சிக் குரலையெழுப்பியது போல, சமூகத் துறையிலும் தளராத சமத்துவ வாதிகளாக அவர்கள் திகழ்ந்தனர்.

    "சமய பேதம் பலவான சாதி பேதங்கள்
    சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ?"
என்றும்.

    "சாதிப் பிரிவினிலே தீமூட்டுவோம்
    சந்தை வௌியினில் கோல் நாட்டுவோம்"
என்றும்

    "சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெல்லாம்
    பூத வாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ?"
என்றும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடனும், தன்னம்பிக்கையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பாடினர் சித்தர். சிவவாக்கியர் போன்றோரது குரல் எமது காலத்தது போலச் சமுதாய உணர்வு தோய்ந்துள்ளது. இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது சித்தர்கள் கிளர்ச்சியாளர் (Rebels) என்றே கூறத் தோன்றுகிறது. கீழே நாம் காட்டியுள்ள ஒப்புமைப் பகுதிகளை அவதானிக்குமிடத்து அவ்வாறு கூறுவது பொருத்தமாகக் காணப்படும். சமயத்துறையில் அவர்கள் வௌிக்காட்டிய எதிர்ப்பு, உண்மையில் சமூகத் துறையில் இருந்த முரண்பாட்டின் விளைவேயாம். அன்றைய நிலையில் அவர்கள் தம்மைத் தாமே சமூகத்திலிருந்து விலக்கிக் கொண்டனர். தமக்குப் பிடிக்காதனவற்றை ஏற்று வாழ்வதிலும் ஒதுங்கி வாழ்வது மேல் எனக் கருதினர். அஞ்சாது தமது உள்ளக் கிடக்கையைப் பாடித் தள்ளிய போதும், அதனால் சமுதாய மாற்றத்தைக் காண முடியாதிருந்தது. அவர்கள் எதையும் குறிக்கோளாகக் கொண்டு இயக்கம் நடத்தவில்லை. மனம் ஒப்பாதவற்றைச் சாடினார்கள். அது எதிர்மறைச் செயலாகும். அதனால் நேரடியான ஆக்கப் பணிகளைச் செய்ய இயலாது போயிற்று. தேங்கித் தம்பித்து நின்ற சமுதாயத்தில் வலிமையுடன் விளங்கிய பௌதிக வதீத வாதத்தையும் கருத்து முதல் வாதத்தையும் போராடும் மார்க்கம் அவர்களுக்குத் தெரியவில்லை. சித்தர்களைப் போன்ற சிலரால் அம்மாற்றம் நடைபெற்றிருக்க மாட்டாது. அதற்குரிய வரலாற்று கட்டம் அன்றிருக்கவுமில்லை. ஆகவே சநாதனிகளின் முழு மூச்சான எதிர்ப்பை எதிர்த்து நிற்கவல்ல இதயக் குமுறல்களைப் பாடியதோடு திருப்தியடை வேண்டியவராயினர்.

இந்நிலையிற் சில சித்தர்கள் காயகல்பம், இரசவாதம், முதுலிய நடைமுறை மார்க்கங்களில் கவனஞ் செலுத்தலாயினர். அவை ஓரளவுக்கு மக்களின் அபிலாஷைகளையும் தழுவியனவா யமைந்தன.

மாதவர் இயற்றிய 'சர்வ தரிசன சங்கிரகம்' என்னும் நூலில் இராசேசுவர தரிசனத்தைப் பற்றிச் சில சுவையான கருத்துக்கள் காணப்படுகின்றன. இரசாவாதத்தினால் கீழான உலோகங்களைப் பொன்னாக மாற்றலாம் என்று பண்டைக் காலத்திற் பலர் நம்பியது போலவே இரசவாதத்தினால் மனித உடலையும் அழியாமல் நிலைக்கச் செய்யலாம் என அவர்கள் நம்பினர். மனித உடல் கண்ணிற்கும், புலன்களுக்கும் புலப்படுவது; எனவே அது உண்மை. அதன்றி, உடலை விட்டபின் உயிர் பேரின்பம் அடையுமென்ற கூற்றிற்கு ஆதாரம் கோரி ஆணித்திரமாகக் கேட்டவர்கள் இராசேசுவரவாதிகள்; சைவ சமயத்தின் ஒரு பிரிவினராகவே இவர்கள் விளங்கினரெனினும் பொருள்களைப் பற்றிய மெய்ம்மை வாதத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர்.

"மனிதனுடைய இலட்சியம் பேரின்பம் அடைவதே. அதை அடைவதற்கு முதலில் ஞானம் தேவை. வித்தையின் மூலமே ஞானத்தைப் பெறுதல் கூடும். வித்தை சித்திப்பதற்கு நோயற்ற வாழ்வு அவசியம். உடல் நல்ல திடகாத்திரமாக இருப்பதற்கு உதவுபவை அப்பிரகம் (Mica) பாதரசம் (Mercury) ஆகிய இரண்டும்.

இவ்வாறு கூறுவர் இராசேசுவராதிகள். இரசர்ணவம் என்னும் நூலில் கோவிந்த பகவன் என்னும் பண்டைத் சித்தர் இவ்வாறு கூறியுள்ளதாக மாதவர் கூறுவர். அப்பிரகம், பாதசரம் ஆகிய இரண்டும் முறையே பார்வதியையும் சிவனையும் குறிப்பதாகப் பரிபாஷை பேசுவர் சித்தர்கள். அவ்விரண்டையும் உடலிற் பூசியும், பிற மூலிகைகளையும் திராவகங்களையும் உட்கொண்டும் பல்வேறு சித்திகளைப் பெறலாம் என்று சித்தர்கள் எண்ணினர். இவ்வித நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக உள்ளது உடலைப் பற்றிய கருத்து. 'உடல் நித்தியமானது; இனிமையானது; நல்லது. உலகம் இனியது' என்பது சித்தர் வாக்கு. இதனால் உலகியல் அவர்கள் சிந்தனையில் முக்கியத்துவம் பெற்றது. பெறவே, துறவும் பொய்ம்மை வாதமும் கண்டிக்கப்பட்டன. மற்றோர் இரசவாத நூலாசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்:

"சிதைவற்ற நிலைபேறுடைய உடலினைவிடப் பேரின்ப மயமானது வேறென்ன இருத்தல் கூடும்? விஞ்ஞானம் சிறப்பு, செல்வம், இன்பம் விடுதலை, ஆகியவற்றின் களஞ்சியம் அதுவன்றோ!"

இராசேந்திர சிந்தாமணி என்னும் நூலின் தொடக்கத்திலேயே பின்வருமாறு கூறப்படும்:

"என்னுடைய சொந்தப் பரிசோதனைகளின் விளைவாகக் கண்டவற்றையே நான் விளம்புவேன்; நான் பரிசோதித்தறிந்த பாதரச ஆய்வுகளே எனது நூலிற் கூறப்பட்டுள்ளன. பரிசோதனைகள் நடத்த முடியாதவை பற்றிப் பேசுவர்கள் வீணே முயல்கின்றனர்."

சுருதிகளையும், சிமிருதிகளையும், ஆகமங்களையும் பிரமாணமாகக் கொண்ட மாயாவதிகளின் குரலுக்கும் மேற்கூறியவற்றிற்கும் எத்துணை வேறுபாடுண்டு என்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. உலகத்தையும் மானிட உடலையும் மெய்யெனக் கொண்டவர்கள் சித்தர்கள். உடல்-உலகம் - உண்மை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையிலிருந்தே அவரது விஞ்ஞான நோக்கும், அதாவது பரிசோதனை வேட்கையும் தேவையும் வளர்ந்தன. அப்பிரகம், கந்தகம், பாதரசம் முதலிய பதார்த்தங்களின் இரசவாத ஆய்வானது, பொதுவான வளர்ச்சிக்கு உதவியது. தமது ஆராய்ச்சிக்காகப் பல்வேறு கருவிகளை - யந்திரங்களை - அவர்கள் அமைத்தனர். தோலயந்திரம், சுவேதனியந்திரம், பதன யந்திரம், தூபயந்திரம் முதலியன அவற்றுள் சில.

உடலுக்கு உறுதியும் உறுதுணையும் அளிப்பதற்கு உலோகங்களையும் மூலிகைகளையும் நுணுகி ஆராய்ந்தனர் சித்தர்கள். இதன் விளைவாகச் சித்த வைத்தியம் வளர்ந்தது. உலோக வகைகள், இரசவகைகள் முதலியவற்றால் செய்யும் மருந்துகள், தமிழ் நாட்டுச் சித்தருடைய தனிமுறை என்று பலர் காட்டியுள்ளனர். பஸ்பம், செந்தூரம், திராவகம் முதலியன இம்முறையைச் சார்ந்தன. உலோக வகைகளை மருந்தாக மாற்றுவதற்கு இரசாயனமும், மாற்றியதன் விளைவு வைத்தியப் பொருளாகவும் கண்ட தமிழ்ச் சித்தர்கள், மக்கள் சாகாமல் வாழலாம் என்னும் உடல் உண்மையை யொட்டியே தமது பரிசீலனைகளைச் செய்தனர்.

உலோகங்களையும், தாதுப் பொருட்களையும் மூலிகைகளையும் தக்க சமயத்திலே பெற்று, உரிய தட்பவெப்ப நிலைகளில் வைத்து, உகந்த முறையிலே பயன்படுத்துவதற்குப் பருவங்களைப் பற்றிய அறிவு தேவையாக இருந்தது. இதனையொட்டி வானிலை அறிதல் அவசியமாயிருந்தது. இதன் பயனாக வான சாஸ்திரம் வளர்ந்தது. அதன் உபபிரிவாகச் சோதிடமும் விரிந்தது.

இவ்வளவு முயன்று உடலைப் பாதுகாத்து இன்பம் கண்ட அவர்கள் உடல் அழகைப் பற்றி சிந்திப்பது இயல்பல்லவா? உடலமைப்பைப் பற்றி நுணுகி ஆராய்வதும் இயல்புதானே. உடலுக்கு இத்துணை முதன்மை அளித்தவர்கள் உடற்கூறு சாத்திரத்தை வளர்த்தனர். இது சாமுத்திரிகா லட்சணம் என்னும் பெயரில் சித்தர்களால் ஆராயப்பட்டது.

இதுபற்றி தி.நா.சுப்பிரமணியன் பின்வருமாறு கூறியுள்ளார்:

"விஞ்ஞான முறைப்படி சாமுத்திரிகா லட்சணமும் ஒரு சாத்திரமேயாகும் என்பதை நிரூபித்து, லாவதர், சார்லஸ் டார்வின் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். சாமுத்திரிகா லட்சணம் உடற்கூறு சாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. நவீன விஞ்ஞான முறைப்படி அதை ஆராய்ந்தால் இரண்டு விஷயங்கள் தௌிவாகும். உள்ளத்து இயல்புகளில் காணும் வேறுபாடுகளுக்கு ஏற்பவே புறத்தோற்றத்தில் காணும் வேறுபாடுகள் அமையும் என்பது ஒன்று. உடலின் பொது அமைப்புக்கு ஏற்பவே ஒவ்வோர் உறுப்பும் அமைந்திருக்கும். அதுபோல ஒவ்வோர் உறுப்பும் உடலின் மொத்த அமைப்பின் ஒரு பாகமாகும் என்பது இரண்டாவது."

இவ்வாறு இரசாயனம், தாவர சாத்திரம், வைத்தியம், வானசாத்திரம், உடற்கூறு சாத்திரம், சோதிடம் முதலிய பல அறிவியற் துறைகளிலெல்லாம் சித்தர் வாக்குகளே நமது மரபு முறை விஞ்ஞானத்திற் சிறந்து விளங்குகின்றன. மக்கள் யாவருக்கும் பொதுவான அறிவியல் துறைகளில் ஈடுபட்ட சித்தர்கள் தமது காலத்துக்குப் போலிச் சாத்திரங்கள், சாதிப் பாகுபாடுகள், குருட்டு நம்பிக்கை, வைதிகப் பற்று, மதவெறி, தூய்மை வாதம், வேத வழக்கு ஆகியவற்றைப் பல வழிகளில் எதிர்த்ததில் வியப்பெதுவுமில்லை. ஆனால் அதன் காரணமாகவே மெய்ம்மை வாதிகளான அவர்கள் கேவலம் காய சித்திகள், சுயநலமிகள், மாந்திரீகர்கள், சித்த சுவாதீனமற்றவர்கள் என்றெல்லாம் நிந்திக்கப்பட்டனர். தூஷிக்கப்பட்டனர். சமூகத்திலே புறக்கணிக்கப்பட்டனர். உன்னதமான அவர்களுடைய விஞ்ஞானப் பரிசோதனைகள் கீழ்த்தரமான மந்திர ஜால வித்தைகளாகவும், கண்கட்டு வித்தைகளாகவும், அலட்சியம் செய்யப்பட்டன. இவை யாவற்றின் விளைவாகவும் சித்தர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கியும், ஒதுக்கப்பட்டும் வாழ்ந்தனர். அவர்தம் கருவிகள் இயந்திரங்கள் - வளர்ச்சியடைய வில்லை.

சுருங்கக்கூறின், சமூகத்திலே உடலுழைப்பாளருக்கும் புத்திசீவிகளுக்கும் இடையே பிளவு தோன்றும் பொழுது விஞ்ஞானம் தேங்குகிறது. வாழ்க்கையும் விஞ்ஞானமும் இணைந்தாலன்றி உண்மையான விஞ்ஞான விருத்தி ஏற்படுதல் சாத்தியமன்று. தமிழ் நாட்டின் மத்தியகால வரலாறு இதற்குத் தக்க சான்றாகும். மேனாட்டாரின் தொடர்பினாலும், புதிய சமூக ஏற்பாடுகளினாலும் விஞ்ஞானக் கல்வி, நமது சமூகத்திலும் இப்பொழுது பரவி வருகிறது. அதே சமயத்தில் அது புதிய சமூக ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி வருகிறது. விஞ்ஞானத் துறையில் உழைப்போர் உயர் நிலையை எய்தும் வாய்ப்பும், பிறர் தாழ்வு நிலை பெறும் சூழ்நிலையும் உருவாகின்றது. இதுவும் அர்த்தமற்றதே. இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னணியாகப் பண்டைய விஞ்ஞானத்தின் வரலாறு பல பாடல்களை எமக்குப் புகட்டும்.

சித்தர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது சீன தேசத்துப் பண்டைக்கால ஞானியரான தாவோயிகள் (Taoists) நினைவுக்கு வராமற் போகார். இரு சாராருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன. சீனாவிலே பௌத்தமும், கொன்பூஸியஸ் மதமும் பண்டைய காலம் தொட்டுப் பெருவழக்கமாக இருந்து வந்துள்ளன. ஆயினும் தாவோ மார்க்கமும் சீனவரலாற்றிற் சிறப்பு இடம் பெற்றுள்ளது. உலகமளாவிய கண்ணோட்டத்தைப் பெற்றிருந்த மகாகவி பாரதியார் தமது சுயசரிதையில் "நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துச் சித்தருக்கும் தாவோயிகளுக்கும் ஒப்புமைகள் மாத்திரமன்றி, நேரடியான தொடர்புகளு மிகுந்திருக்கின்றன. இதில் ஆச்சிரியப்படுவதற்கு எதுவுமில்லை. இவையிரண்டும் - சித்தர்கள் தத்துவம் தாவோயியமும்- ஏறத்தாழ ஒரே தன்மையான சூழலிலே தோன்றி வளர்ந்தன. சித்தர்கள், சித்தவைத்தியம், இரசவாதம் முதலியவற்றை வளர்த்தது போலவே சீனத்தாவோயிகளும் தேகவாதம், வைத்தியம், இரசவாதம் முதலியவற்றை உருவாக்கினர்... "சீனாவிலே இரசவாதம் தாவோயியத்தின் அடிப்படையிலேயே சுயமாகத் தோன்றியது." என்கிறார் ஓ.எஸ்.ஜோன்சன். அதே சமயத்தில் பண்டைக்காலம் தொட்டே தென் இந்தியாவிற்கும் சீனத்திற்கும் பலவிதமான தொடர்புகள் இருந்துள்ளன. சென்னைப் பல்கலைக் கழக வௌியீடான (லெக்சிகன்) அகராதியை ஒருவர் புரட்டிப் பார்த்தால், சுமார் முப்பத்தைந்து சொற்கள் - பொருட்பெயர்கள் 'சீனம்' என்ற அடைபெற் றனவாகக் காணலாம். இவற்றில் பல வைத்தியத் தொடர்புடையனவாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சித்தர்களுக்கும் சீன நாட்டுச் சித்தருக்கும் நெடுங்காலமாகவே உறவு இருந்து வருவதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இதுபற்றிச் சாமி சிதம்பரனார் கூறுகிறார்:

"நமது நாட்டுச் சித்தர்களும், சீன நாட்டுச் மருத்துவர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்டு முன்பே தொடர்பு உண்டு என்று தெரிகிறது... சீன நாட்டு வைத்தியம் நமது நாட்டுச் சித்த வைத்தியம் போலவே சிறந்து விளங்ககின்றது... போகர் என்பவர் தமிழ் நாட்டுச் சித்தர்களிலே ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் சீனர், சீனத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர். பழனி மலையிலே தங்கியிருந்தார். புலிப்பாணி என்பவரும் சீனர். இவரையே 'வியாக்ரபாதர்' என்று குறிப்பிடுகின்றனர். இவர் போகரின் மாணவர் என்றும் சொல்கின்றனர்.

வீரராகவ ஐயரவர்கள் தமது கட்டுரையிலே போகர் தமிழ் நாட்டுக்கு வந்த காலத்தைத் துணிய முற்படுகிறார்.

"போகர் தமிழிற் பல வைத்திய நூல்களும் இரசவாத நூல்களும் எழுதினார். சீனத்தவரான அவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தாரென்பர். முதலில் பாட்னா, கயா, முதலிய இடங்களுக்குச் சென்றபின், தென்னிந்தியாவுக்கு வந்து, தமிழ்ச் சித்தரிடம் இரசவாதமும் வைத்தியமும் கற்றார். அவரும் இத்துறைகளைத் தமிழருக்குப் போதித்தார். தென்னிந்தியாவிலிருந்து அராபியாவுக்குச் சென்று, அங்கிருந்து தாயகம் திரும்பினார் என்பது ஐதீகம். அவருடன் சீனத்துக்குச் சென்ற தமிழ்ச் சீடர்கள் சிலர் பொறியியற் கலைகள் பயின்று வந்து தமிழ் நாட்டிற் புகழெய்தினர். புலிப்பாணி என்பவர் போகருடன் வந்து தமிழ் நாட்டில் தங்கியிருந்தவர். அவரும் தந்திரம், இரசவாதம், வைத்தியம் முதலியனவற்றைப் பற்றிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

திரு. வீரராகவ ஐயரும், சாமி சிதம்பரனாரும் தமிழ்நாட்டிலே பரம்பரை பரம்பரையாக நிலவி வரும் செய்திகளையே தொகுத்துக் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளாக நிலைத்து வந்த இவ்வாய்மொழிச் செய்திகள் பெரும்பாலும் உண்மையானவையே. அவற்றை மறுப்பதற்கு வேண்டிய ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு தமிழ் நாட்டுச் சித்தருக்கும் சீனத் தாவோயிகளுக்கும் வரலாற்றுத் தொடர்புகள் இருந்து வந்தாலும், இரு சாராரில் ஒரு பகுதியினடமிருந்து மறுசாரார் இத் தத்துவங்களைப் பெற்றுக் கொண்டனர் என்று கொள்ள வேண்டியதில்லை. அவ்வாறு கொள்வது அநாவசியமான பிரச்சினைகளில் எம்மை இழுத்து வீழ்த்துவது மட்டுமின்றிச் சமூகவியற் கருத்துக்களுக்கு முரணாகவும் இருக்கும். வேறொரு சந்தர்ப்பத்திலே பேராசிரியர் நீதாம் கூறுவது இங்கும் பொருத்தமாகக் காணப்படுகிறது.

"கருத்துக்கள் ஓரிடத்திலிருந்து மற்றைய இடத்துக்குச் சென்று பரவின என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரே தன்மையான பிரச்சினைகளை ஆயும் ஒரே தன்மைத்தான உள்ளங்கள் ஒரே முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்."

ஒப்பியல் ஆய்வு பயனுள்ளதாக அமையவேண்டின் இத்தகைய 'ஒருபாற்கோடா' மன நிலை அத்தியாவசியமாகும். சமய சம்பந்தமான சிந்தனைகள் புடைபெயர்வது பற்றி உன்னிக்க வேண்டிய கருத்தொன்றைப் பேராசிரியர் தொம்சன் ஈஸ்கிலசும் அதென்சும் என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். புராதன எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் உள்ள தொடர்பைத் தௌிவுறுத்தும் போது பின்வருமாறு எழுதுகிறார்:

"சமயக் கருத்துக்கள் வணிகக் காற்றில் வெகு தூரங்களுக்கும் மிதந்து செல்கின்றன என்பதுண்மையே. ஆயினும், தம்மைத் தாங்கத் தயாராயுள்ள மண்ணிலேயே அவை வேரூன்றி நிலைக்கின்றன. அவற்றின் பிற்பட்ட வளர்ச்சியை ஆங்குள்ள சுற்றுச் சூழ்நிலைகளே பிரதானமாக நிர்ணயிக்கின்றன. இரு அமைப்புகளுக்கும் பொதுவாக உள்ள அம்சங்களின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கு, இரு நாட்டுக் கமத்தொழிலின் பொதுவான வரலாற்றுப் பின்னணியில் இரண்டையும் வைத்து நோக்கி, இரு அமைப்புகளிலும் காணும் வேறுபாடுகளை அவ்வப் பிரதேசத்தின் சிறப்பான வரலாற்றுப் பண்புகளினடிப்படையில் விளக்க வேண்டும். இதனைத் திருப்திகரமாகச் செய்து முடித்தாலன்றிப் பரவலைத் தனித்தவொரு காரணியாக நாம் ஆராய்தல் இயலாது."

அருமந்த இவ்வெச்சரிக்கையை மனத்திருத்தி, சித்தருக்கும், தாவோயிகளுக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளைச் சுருக்கமாக ஆராய்வோம். இரு சாராருக்கும் தொடர்பு இருந்தது வரலாற்றுண்மை. அதன் இயல்பும் பயனுமே சிறப்பாக நோக்கத்தக்கன.

முதலிலே தாவோயிகளைப்பற்றிச் சிறிது கூறுவோம். பண்டைக் காலத்திற் சீனாவிற் பெருவழக்காயிருந்த சமயங்கள் இரண்டு: கொன்பூசியஸ் மதமும் பௌத்தமுமே அவ்விரண்டும். இவற்றைவிட நாட்டிற் பிரபலமாயிருந்த நெறிகளுள் தாவோ மார்க்கம் ஒன்றாகும். தாவோ நெறியினை மதம் எனல் பொருந்தாது. பௌத்தத்தைப் போலவோ, அல்லது கொன்பூசியஸ் மதத்தைபோலவோ அது நாட்டின் அரச மதமாக விளங்கியது இல்லை. தாவோ மார்க்கத்தைப் பொறுத்தவரையில் அதன் கூறுகள் பல, சீனாவின் புராதன வரலாற்றுக் காலத்திலிருந்து வழிவழி வருகிறதெனச் சில அறிஞர் சுட்டிக்காட்டுவர். இந்தியாவிலே தோன்றிய தரிசனங்களுள் சாங்கியம் தொன்றுதொட்டே நிலவி வருவதுபோல, தாவோ கருத்துக்களும் மிகப் பழங்காலந் தொட்டே சீனாவில் இருந்து வந்தவை. ஆயினும் தாவோயிகள் பெரும்பான்மையினராக இருக்கவில்லை. பௌத்தம் கொன்பூசியஸ்மதம் முதலியன நிறுவன வடிவமும் அரசாங்க ஆதரவும் பெற்றுத் திகழ்ந்தமையால், அவற்றைப் பின்பற்றுவது எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மதங்கள் மக்கட் சமுதாயத்திலே கூட்டு மனப்பான்மையின் அடிப்படையிற் செழித்து வளர்வன. சிற்சில நியமங்களை யாவரும் ஏற்றுக்கொள்வதே மதத்தின் மூலவேராகும். கொன்பூசியஸ் மதம் அவ்வாறே தழைத்து வளர்ந்தது.

உதாரணமாக, கொன்பூசியஸ் மோட்சம் என ஒன்றிருப்பதாக ஏற்றுக்கொண்டு, மனிதன் நல்லமுறையில் வாழ்ந்து, இறுதியில் அதனை அடைதல், வேண்டும் என்று போதித்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழும் முறையையே கொன்பூசியஸ் மதம் அழுத்திக் கூறியது; ஒரு வகையில், கொன்பூசியஸ் வள்ளுவரைப் போன்றவர். இன்னொருவகையில் முற்று முழுதான சமயவாதி. தமது காலத்துத் தந்தைவழிச் சமுதாயத்தை முழு நிறைவானதாகக் கொண்ட கொன்பூசியஸ், மனிதன் குரவரைப்போற்றி வாழவேண்டுமெனப் போதித்தார்; கடமைகளையும் சடங்குகளையும் மனிதர் வழுவாது செய்யவேண்டுமென வற்புறுத்தினார். கொள்கையளவில் இவ்வுபதேசங்கள் உயர்ந்தவையாயிருப்பினும், குடும்பம், அரசாங்கம் முதலிய நிறுவனங்கள் மனிதரைக் கட்டுப்படுத்துவனவாயமைந்தன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் மலிவதைத் தடுக்குங் சக்தியற்றிருந்தன. கொன்பூசியஸ் அன்பையும் நடுவுநிலைமையையும் எடுத்துரைத்தபோதும், நடைமுறையில் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எழாமற் பார்த்துக் கொள்ளும் தத்தவமாகவே அவரது போதனை செயற்பட்டது.

இதற்கு மறுப்பாகத் தோன்றிய மார்க்கங்களில் தலையானது தாவோ நெறி எனலாம். தாவோயிகள் தெய்வத்தின் உண்மையை மறுத்தார்கள் அல்லர். ஆனால் சடங்கு - சம்பிரதாயங்களை வெறுத்தொதுக்கினர். சீன மெய்யியலின் உள்ளியல்பு என்னும் நூலில் பேராசிரியர் ஃபுங் யூ-லான் பின்வருமாறு கூறுகிறார்.

"தாவோயியம் தனித்து வாழ்ந்தோராலும் ஆண்டிகளாலும் வளர்க்கப்பட்டது. 'உலகத்தை வெறுத்தொதுக்கியவர்கள்' எனத் தம்மைத்தாமே கூறிக்கொண்டவர்களே அதனைப் பேணிப் போற்றினர்."

கொன்பூசியஸ் தாவோயிகள் சிலரைச் சந்தித்ததைப் பற்றிய செய்திகள் லுன்யூ என்ற நூலிற் கூறுப்பட்டுள்ளன. உலகைக் காக்கும் நோக்கங் கொண்டிருந்த கொன்பூசியஸ், தம்மால் அது ஆகாது எனத் தெரிந்தும், அதனைச் செய்ய முனைகிறார் என்று அத்தாவோயிகள் கூறினராம்.

"நிறுத்து! நிறுத்து! ஆட்சியிற் பங்கெடுப்பவரை ஆபத்து எதிர் நோக்குகிறது. உலகமெங்கும் கலக்கமும் குழப்பமும் நிரம்பி உள்ளன. அவற்றை எல்லாம் மாற்ற முடியுமோ? நாம் எம்மையே காப்பாற்றிக்கொள்வோம். பொருள்களைப் புறக்கணிப்போம்; வாழ்க்கையைப் பேணுவோம்."

தாவோயிகள் சிலரது கூற்றாகக் கூறப்படும் முற்கூறிய வாக்கியங்கள் அவர்களின் பொதுவான வாழ்க்கைத் தத்துவத்தைத் திரட்டிக் கூறுகின்றன எனலாம்.

குழப்பமும் கலக்கமும் நிறைந்த உலக வாழ்கையை வெறுத்தொதுக்கிய தாவோயிகள் உலகிலே மாற்றமற்ற நிலையான பொருள் ஒன்று உண்டென்பதை ஏற்க வேண்டியவராயினர். அதுவே தாவோ. அதுவே ஒன்றாகியும் பலவாகியும் தோன்றுகிறது. இவ்வாறு சிந்தித்த தாவோயிகள் தவிர்க்க முடியாதபடி பிரபஞ்சத்தைப்பற்றியும் இயற்கையைப்பற்றியும் ஆழமாக உன்னித்தனர். இயற்கை மாற்றங்களைப் பற்றிச் சில நியதிகளைக் கண்டறிந்தனர். அவற்றை ஒருவன் உணர்ந்துகொண்டால் துன்பமின்றித் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என எண்ணினர். சுருங்கக்கூறின், மனித உடலையும் கண்ணுங் கருத்துமாகப் பேணினர் தாவோயிகள். இயற்கையை ஊடுருவி உன்னித்த அவர்கள் "உயிரே பிரதானம்" என்றனர். இவ்வாறு கொள்ளவும், உடம்பைப் பேணுவதற்கு உகந்த மூலிகைகள், ஔடதங்கள், மந்திரதந்திரங்கள் முதலியவற்றைத் தேடுவது இயல்பாயிற்று. பிற்காலத்தில் சில தாவோயிகள் கருத்து முதல் வாதத்தின் அதீத செல்வாக்குக் காரணமாகக் காயத்தை பொய்யென்றும், அதிலிருந்து விடுதலை பெறுவதே வாழ்க்கையின் இலட்சியம் என்றும் போதித்தனர். ஆயினும் தாவோயியத்தின் அடிப்படை தேகவாதம், சடவாதம் என்பனவே. சக்தி (ஆற்றல்), இயற்கை விதி முதலியவற்றை ஓரளவு நுணுக்கமாக ஆராய்ந்த தாவோயிகள் பரம்பொருள் ஒன்றனை ஏற்றுக்கொண்டபோதும், பிரபஞ்சத்தைச் சடவாத அடிப்படையிலேயே விளக்கினர். ஏனெனில் உடலுழைப்பை ஆதாரமாகக் கொண்ட பரிசீலனைகளைச் செய்தவர்கள் தாவோயிகள். அப்பரிசீலனைகள் வௌித் தோற்றத்திற்கு மாயவித்தைகள்போலக் காணப்பட்டபொழுதிலும், உண்மையில் விஞ்ஞான விருத்திக்கும் பொருள்வாதத்திற்கும் நெருங்கிய தொடர்புடையன. இது குறித்துப் பேராசிரியர் நீதாம் சீனாவில் விஞ்ஞானமும் நாகரிகமும் என்ற நூலில் (இரண்டாம் தொகுதி. பக்.34) கூறுவன அறிவு கொளுத்து வனவாயுள்ளன:

"விஞ்ஞானமும் மாயவித்தையும் அவற்றின் தொடக்க நிலைகளில் வேறுபடுத்திப் பார்க்க முடியாதன. இயற்கையை அழுத்திக் கூறிய தாவோயிகள் காலக்கிரமத்திலே தவிர்க்கமுடியாதபடி தனியே அவதானிக்கும் படியிலிருந்து பரிசீலனை முறைக்குச் சென்றனர். இரசவாதம் தாவோயிகள் கண்டறிந்த மூலப்படிவ விஞ்ஞானமே யாகும். மருந்தாக்க இயலும் மருத்துவத் துறையும் தாவோயிகளுடன் நெருங்கிய தொடர்புடையனவே. தாவோயிகள் வெறும் அவதானிப்பிலிருந்து பரிசீலனைக்கு முக்கியமளித்ததன் பயனாக அன்றைய கல்வி முறையில் மகத்தானவொரு மாற்றத்தை உண்டாக்கினர். பரிசீலனை என்பது சூழ்நிலையை மாற்றியமைத்து ஒரு நிகழ்வை அவதானிப்பதுடன் நின்றுவிடவில்லை. நிலமானிய முறையில் வாழ்ந்த உயர்குடிப் பிறப்பாளர் மத்தியிலே உலாவிய சிறு கூட்டத்தினராகிய தத்துவவாதிகள் கையிலிருந்தும், அரசவை சார்ந்த கலை இலக்கிய காரரிடமிருந்தும், விலகி, உடலுழைப்பாலும் கைவினைகளாலும் உண்மைகளைக் கண்டறியும் மார்க்கத்தைப் புகுத்தியது. இதனால் தாவோயிகளது கருத்துக்களைச் சிறப்பாகக் கூறும் வாய்ப்பில்லாது போயிற்று. மரணமற்ற வாழ்க்கையை அளிக்கவல்ல குளிகையைச் செய்யும் பொருட்டு உலைக்களத்தில் தீப்பேணிக் கொண்டிருக்கும் இரசவாதியும், ஐம்பெரும் பூதங்களையும் ஆண் பெண் தத்துவத்தையும் எண்ணி அவைபற்றிய விளக்கத்தால் மன அமைதிபெறும் ஞானியும், பேய்பிசாசுகளை ஒட்டுவதற்காக யந்திரத்தகடுகள் வார்த்து மந்திர உச்சாடனஞ் செய்து மறைவினைகள் புரியும் தாவோயிய மாயவித்தைக்காரனும் அடிப்படையில் ஒரு நிகரானவரே. கைவினைகளால் இயற்கை வென்றடக்கியாளலாம் என்னும் நம்பிக்கை ஆதிகால மாயவித்தைக் காரனுக்கும் விஞ்ஞானிக்கும் பொதுவானது. இரகசிய மைறைவினைச் செயல்களில் நம்பிக்கை கொண்டோரும், இவற்றை நம்பாத பகுத்தறிவாளரும் என இரு திறத்தார் உலகில் இருந்தனர்.

நீதாம் அவர்களின் இறுதிவசனம் நுனித்து நோக்கத் தக்கது. கொன்பூசியஸ் மதம் பகுத்தறிவின் பேரில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, முதலியவற்றை வற்புறுத்தியது. மன்னர்கள் ஞானியராக இருக்க வேண்டும் எனவும் இலட்சியவாதம் பேசிற்று. ஆனால் நடைமுறையில் பலாத்காரமும், இலாப நோக்கும், ஈவிரக்கமற்ற சுரண்டலுமே நிலவின. எனவே, கொள்கைக்கும் செயலுக்கும், சித்தாந்தத்துக்கும் செயன் முறைக்கும் பெரும்பிளவிலிருந்தது. ஆஷாட பூதித்தனமும் போலியுபசாரங்களும் மலிந்தன. இவற்றையே வெறுத்தொதுக்கினர் தாவோயிகள். இப்பண்பு எமது சித்தரிடத்தும் சிறப்பாகக் காணப்பட்டதன்றோ? உலகத்தையும் உலக நிறுவனங்களையும் புறக்கணித்த தாவோயிகள், தமது உள்ளுணர்வையே அளவுகோலாகக் கொண்டு வாழ்ந்தனர். உள்ளொளியிற் கண்டவற்றை உரைத்தனர். தருக்கரீதியாகவன்றி அநுபூதி நெறி நின்று தமது உள்ளத் துணர்வுகளைக் கூறினர். இது வௌித் தோற்றத்திற்கு, பகுத்தறிவிற்கு முரணானதாயும், பிற்போக்கானதாயும் இருத்தல் கூடும். ஆனால் அது கண்டு நாம் ஏமாறக் கூடாது. பேராசிரியர் நீதாம் கூறுகிறார் (பக்.97):

"அநுபூதி நெறியும் பகுத்தறியும் வாதமும் எத்தகைய சூழ்நிலையிலே முற்போக்குச் சக்திகளாக விளங்குகின்றன என்றொருவர் கேட்கக்கூடும். பகுத்தறிவு வாதம் மூட நம்பிக்கைகளையும் அறிவுக்குப் பொருந்தாதனவற்றையும் எதிர்த்துப் போராடும் முற்போக்குச் சக்தியென்றும், அறியாமை காரணமாகச் சமுதாயத்திலே சிலர் பெற்றுவரும் தனிச் சலுகைகளை எதிர்க்கும் ஆயுதம் என்றும் பொதுவாக நாம் கருதுவதுண்டு. ஆனால், பகுத்தறிவின் அடிப்படையிலே எழுந்த சில சிந்தனைகள் வழக்காறற்ற பழமைப்பட்டவன் கடுமைச் சமுதாய அமைப்புடன் இணைந்து மக்களைக் கட்டுப்படுத்தி அமுக்கும் நிலையை அடையும்போது அநுபூதி நெறி புரட்சிகரமானதாக அமைதல் கூடும். அதன் வாயிலாக எதிர்ப்புக் குரல் எழக்கூடும்."

பகுத்தறிவு வாதமான கொன்பூசியஸ் மதம் புரையோடிப்போன சீனச்சமுதாயத்தின் அடக்குமுறைகள் அத்தனையையும் ஆமோதிக்கும் அரச மதமாக மாறியபோது, மறைமுகமாகவும் அநுபூதி நெறியிலும் கூறப்பட்ட தாவோயிய போதனைகள் சமுதாயச் செய்திகளை வேறுவடிவத்திற் கூறின. தாவோயிகளின் தத்துவார்த்தப் பாடல்கள் ஒருபுறமிருக்க, அவர்கள் அக்காலச் சமுதாய அமைப்பை எதிர்த்தவர்கள் என்பது பொதுவாக வற்புறுத்தப்படாத செய்தியாகும். நீதாம் கூறுகிறார் (பக்.100):

"கொன்பூசியஸ் மதத்தை மட்டுமன்றி நிலமானிய அமைப்புமுறை முழுவதையும் தாவோயிகள் வெறுத்தமை போதியளவு தௌிவுறத்தப்படாதிருப்பது வியப்புக்குரியதொன்றே. 'கீழைத் தேய ஞானத்தை எடுத்துக் கூறும் அப்பாவித் துறவிகள்' என்ற தோரணையில் அவர்களை வருணிப்பவர்கள், தாவோயிகள் கையாண்ட வன்சொற்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் தகும்."

சித்தர்களின் ஞான வாக்குகளைப் படித்தோர் பேராசிரியர் நீதாமின் கூற்று முற்றிலும் உண்மையே என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கமாட்டார்.

"பொய்ம் மதங்கள் போதனைசெய் பொய்க்குருக்கள்"
என்றும்

"பூரணத்தை அறியா மூடர் நாய்போல குரைத்தலைவார்"
என்றும்

    "வாசிதனை அறியாத சண்டி மாக்கள்
    வார்த்தையினால் மருட்டி வைப்பார்."
என்றும் சித்தர்கள் பாடுவதைக் கேட்ட நாம் தாவோயிகள் குரலை விளங்கிக் கொள்வது கடினமன்று.

சித்தருக்கும் தாவோயிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படும் அம்சம் ஒன்றைக் குறிப்பிடலாம். தமது காலத்துச் சமுதாய அமைப்பையும் விதிமுறைகளையும் எதிர்த்தனராயினும், அவ்வெதிர்ப்பைச் செயல் வடிவாக்கினார் அல்லர். தமது ஆத்ம சாந்திக்கு வழி கண்டனரேயன்றிச் சமுதாயத்தை மாற்ற முனையவில்லை. இது அவர்ளது முற்போக்கினைக் குறைபாடுடைய தாக்கியது. திரு. ஃபுங் யூ-லான் எழுதுகிறார்:

"உலகிலிருந்து விலகிக் கொண்டமையால் (தாவோயிகள்) தம்மையே பேணுபவ ராயினர். இதன் விளைவாகச் சமுதாயத்தைப் பொறுத்தளவில் ஆக்கப்பூர்வமான நோக்குநிலை அவர்களிடத்துக் காணப்படவில்லை. தமது ஒழுக்கலாற்றுக்குச் சமாதானமும் விளக்கமும் கூறுவதிற் கைதேர்ந்தவராயிருந்தனர். இவ்வாறு பார்க்கும்பொழுது அவர்கள் சுயநலமிகளே."

    "தன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
    தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
    பின்னையொரு கடவுளைப் பேண நினையார்
    பேரொளியைப் பேணுவார் என்று ஆடு பாம்பே!"
இது பாம்பாட்டிச் சித்தர் பாடல். இதனை ஒரு தாவோயியும் பாடியிருக்கலாம். ஆன்றவிந்து அடங்குவதே சித்தர் கொள்கை: அதுவே தாவோயிகளின் குறிக்கோளுமாம். தம்மை மறைப்பவர் சமுதாயச் சீர்திருத்தவாதிகளாகவோ, சமூகப் புனருத்தாரணஞ் செய்பவர்களாகவோ இருக்கவியலாது. ஆனால் தாவோயிகளிடத்தும் சித்தர்களிடத்துங் காணப்பட்ட இப்பலவீனத்தையும் குறைபாட்டையும் நாம் அளவுக்கு மீறிப் பெரிது படுத்தலாகாது. அன்றைய நிலையில் அவர்கள் காட்டிய எதிர்ப்பே பாராட்டத்தக்கது. சமுதாய மாற்றத்தினால் ஏற்படக்கூடிய புதிய வாழ்க்கையை எண்ணிப் பார்க்கும் இயக்கவியலறிவு அவர்களிடம் இருக்கவில்லை. எனவே, மாசு மறுவற்ற புராதன கூட்டுச் சமுதாய வாழ்க்கையையே மீண்டும் காணவிழைந்தனர். திரு ஹுவை-லூ சீன மெய்யியற் சுருக்கம் என்னும் நூலில் குறிப்பிடுவது போல," அவர்கள் புராதன சமுதாய வாழ்கையை மீட்டும் அமைக்க விழைந்தனர். அவர்கள் காலத்தில் பரவலாகக் காணப்பட்ட சமூக முரண்பாட்டையும் பேராட்டங்களையும் குறைப்பதற்கு அதுவே சிறந்த மார்க்கமாகத் தோன்றியது. இதனடிப்படையிலேயே அவர்களது சாத்வீக எதிர்ப்பும் எழுந்தது."

நமக்குப் பிடிக்காத சபையிலிருந்து நாம் எழுந்து போய்விடுவது போல, தமக்குப் பிடிக்காத நிலமானியச் சமூகத்திலிருந்து ஒதுங்கித் தனிவாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவது போல,

"அவர்கள் அவ்வாறு விலகிக் கொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்."

சமுதாயத்திலே பாரதூரமான எழுச்சியையோ மாற்றத்தையோ உண்டுபண்ணாவிட்டாலும், தாவோயிகளின் போதனைகள் தமிழ் நாட்டிலே சித்தர் பாடல்களைப் போல பாமர மக்களிடையே குறிப்பிடத்தக்களவு வழங்கி வந்துள்ளன. சீன வரலாற்றைப் படிக்கும் பொழுது, தாவோ மார்க்கத்தைப் பேணிய மக்கள் தாழ்ந்த நிலையிலிருந்த உழைக்கும் மக்களாகவும் இருந்து வந்தமை புலப்படும். மருத்துவம், மருந்தாக்க இயல் முதலியன மந்திர தந்திரங்களுடன் பிணைந்து காணப்படினும், வாழ்க்கையோடு தொடர்பு உடையனவே. அவை அன்று தொட்டுச் சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் உள்ள மக்களிடையே பெருஞ் செல்வாக்குடன் விளங்கி வந்துள்ளன.

இரசவாதம், மாந்திரீகம், மருத்துவம், மருந்தாக்கம் முதலிய செயன்முறைகளை அடிப்படையாக கொண்டியங்கியமையால், ஓரளவிற்கேனும் இகலோக சிந்தையுடையது சித்தர் தத்துவம். தமிழ் நாடடிற் பல்வேறு காரணங்களினால் சித்தர்களது விஞ்ஞான நோக்கும் போக்கும் தொடர்ச்சியாக வளரவில்லை. வளராதது மாத்திரமன்றி வெகு விரைவிலேயே, சுற்று முற்றும் செல்வாக்குடன் விளங்கிய மாயாவாதத்திற்கும் கருத்து முதல் வாதத்துக்கும் எதிர் நிற்க மாட்டாது அவற்றுட் கலக்கலாயிற்று. ஆனால், சீனாவிலோ தாவோ மார்க்கம் மாத்திமன்றிப் பல்வேறு துறைகளிலே விஞ்ஞான அபிவிருத்திக்கும் ஏதுவாக விருந்தது. அதன் தருக்க ரீதியான விளைவுகளும் முக்கியமானவையே.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் சித்தர் தத்துவத்திற் பொதிந்துள்ள விஞ்ஞான நோக்கிலும், சமுதாய உணர்வே உயிராற்றலுடன் விளங்கிவந்திருக்கிறது எனலாம். சமயத்துறையிலே உயர் வைதிக நெறிகள் சித்தர் தத்துவத்தைப் "பஞ்சம" நிலையில் வைத்தபோதும், வீறும், தன்னம்பிக்கையும், கருத்துறுதியும் பொருந்திய சித்தர் வாக்குகள் உணர்ச்சி பூர்வமாகச் சமுதாயச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள விரும்புபவர்க்கு உறுதுணையாக இருந்துள்ளன. சென்ற நூற்றாண்டிலே இராமலிங்கரும் இந் நூற்றாண்டிலே பாரதியாரும் சித்தர்மரபைப் பேணியவரேயாவர். வள்ளலாரிடத்துக் காணப்பட்ட சமரச நோக்குச் சித்தர் வழி வருவதே. திரு.வி.கலியாண சுந்தரனாரிடத்தும் இம்மரபுணர்ச்சி ஒரோவழி தென்படுகிறது. இவை யாவும் சித்தர் தத்துவத்தின் உள்ளார்ந்த சமூக உணர்வுக்கும், முற்போக்குக்கும் கட்டியங் கூறுகின்றன. இவ்விடத்திலே இராமலிங்கர் சம்பந்தமாக ஒன்று கூறத் தோன்றுகிறது. அவருக்கும் அவர் காலத்தில் வாழ்ந்த சில சைவ சித்தாந்திகளுக்கும் மூண்ட பகைமைக்கு ஒரு காரணம் அவர் தம்மையொரு சித்தர் எனக் கூறிக்கொண்டமையுமாகும்.

    "தூணைச் சிறு துரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
    துரும்பைப் பெருந் தூணாகத் தோற்றச் செய்வோம்
    ஆணைப்பெண்ணும் பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்
    ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே!
என்று சித்தர் வல்லபம் பாடிய பாம்பாட்டிச் சித்தர் முதலியோர் பாஷையிலேயே இராமலிங்கரும் தமது சித்திகளைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்; தமது மரணமிலாப் பெருவாழ்வுபற்றிச் சொல்லியிருக்கிறார். இதனை அவரது எதிரிகள் எவ்வாறு நோக்கினர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நாவலர் அவர்களின் சீடராகிய கனகரத்தின உபாத்தியாயர் அவர் எழுதியுள்ளார்;

"கருங்குழி இராமலிங்கபிள்ளை யென்னுமொருவர் தாஞ்சிவானுபூதி பெற்றவரென்றும், ஓதாதுணர்ந்தவரெண்டும்... அம்மட்டில் நில்லாது, செத்தவர்களை உயிர்ப்பிப்போமென்றும், புத்திரரில்லாதவர் களுக்குப் புத்திர பாக்கியங் கொடுப்போமென்றும், குருடர் செவிடர் முதலானவர்களுடைய குறைபாடுகளை நீக்குவோமென்றும், பசித்தவர் களெல்லாருக்கும் அன்னங் கொடுப்போமென்றும், தண்ணீரால் விளக்கெரித்தோமென்றும், அம்மட்டில் நில்லாது, மாணிக்கவாசக சுவாமிகள் சிதம்பரத்திலே சபாநாயகருடன் கலந்ததுபோலத் தாமுங் கலப்போமென்றும், இன்னும் இவைபோலப் பல பிரயோசனமற்ற வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு திரிவாராயினர்."

பாரதி இராமலிங்கரைப் பாராட்டியபோதும், தம்மைச் சித்தராகப் பாவித்தாரேயன்றி உண்மையில் தம்மைச் சித்தராகக் கொள்ளவில்லை. பாரதி சித்தரிடமிருந்து பெற்றது கவி வளமாகும். எவ்வாறாயினும் இது சித்தர் பாக்களின் காலங்கடந்த சிறப்பியல்பைக் காட்டுகின்றது. சித்தர் பாடல்களை விரிவாக ஆராய்ந்தால், எத்தனையோ அரிய செய்திகள் கிடைக்கும். அவற்றைத் தனியாகவும் ஒப்புநோக்கியும் ஆராய்தல் இன்றியமையாதது.



Oppiyal Ilakkiyam
(A study of Comparative Literature)
by Dr. K. Kailasapathy, M.A., Ph.D.


Wednesday, December 26, 2012

Agathiyar Maharishi Guru puja 1-1-2013


Agathiyar Maharishi Guru puja

On 1-1-2013 7.35AM
Sirumalai foothill 
Dindigul

cont:
Madurai Meenakshi Sundareswarar &
Velliangiri Group & Sirumalai Village people..

H/P :8754312544
        9786834050