Monday, October 19, 2015

சிவலிங்கம் காட்டுவது என்ன...?





கடவுள் உண்டா? இல்லையா? என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா? என்பது. மூலப்  பரம்பொருள் என்று அழைக்கப்படும் ஆதி மூல வஸ்துக்கு உருவம் தேவையில்லை.  அது இயக்கங்கள் அனைத்திற்கும் ஆதார இயக்கு சக்தியாக இருப்பதனால் உருவம் என்பது இல்லாமலேயே அதுவால் இயங்க முடியுமென்று இயக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்

இல்லாத ஒன்று இயங்க இயலாது.  இயங்கும் அனைத்துக்கும் உருவம் வேண்டும்.   உருவம் இல்லை என்றால் இயக்கத்தை அறிந்து கொள்ள முடியாது. அனுபவிக்கவும் முடியாது. எனவே, அனைத்தையும் இயங்க வைக்கும் ஆதி சக்தியான கடவுள் உருவத்துடனே இருக்கிறார். அவரை உருவாகவே தரிசிக்க முடியுமென்று சிலர் சொல்கிறார்கள்.
இறைவன் எல்லாம் வல்லவன் அவரால் ஆகாதது என்று உலகில் எதுவும் இல்லை. அப்படி சர்வ சக்தி வாய்ந்த கடவுள், உருவம் இல்லாமலும் இருக்கலாம். உருவத்தோடும் இருக்கலாம். அருவுருவாக இருக்கும் பரம்பொருளைத்  தியானிக்க வேண்டியதே ஜீவர்களின் லட்சியம் என்று சிலர் சொல்கிறார்கள்.  இந்த மூன்று கருத்துக்களும் முடிவே இல்லாமல் உலக முழுவதும் இன்றுவரை விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடவுள் விஷயத்திலும் சரி, மற்ற எந்த விஷயத்திலும் சரி, அநுபூதி ஒன்றே இறுதி முடிவு என்பது இந்துமதத்தின் மையக்  கருத்து. அதாவது அனுபவத்தால் பெறுகின்ற விடையே இறுதியானது உண்மையானது என்பது இதன் பொருளாகும்.  அதனாலேயே இறைவனைப்  பற்றி பேசும்போது இந்து மதம் சகுன நிர்குண பிரம்மம் என்று வலியுறுத்தி பேசுகிறது அதாவது அருவுருவான பரம்பொருள் என்பது இதன் ஆதார சுருதியாகும்

அருவுருவான அதாவது உருவம் உடைய உருவம் இல்லாத கடவுளை மனித சிந்தனைய்க்கு எப்படி அடையாள படுத்தி காட்ட முடியுமென்று சிந்தித்த நமது ஞான புருஷர்கள் இறைவனின் அருவுருத்  தன்மையை சிவலிங்கம் மூலம் கண்டறிந்து மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.  லிங்கம் என்பது அநாதி காலம் தொட்டு பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதற்கு இந்த அருவுருவ தத்துவமே மூலம் எனலாம்.

அண்ட சராசரங்கள் அனைத்தையும் கடந்த சிவபெருமான் என்ற மூலப்  பரம்பொருளின் பரத்துவ நிலையை உணர்த்துவது தான் சிவலிங்கமாகும்.  நிர்க் குணமான இறைவனின் நிலையை வெளிப்படுத்தும் சிவலிங்கம் மூன்று பகுதிகளை தனக்குள் கொண்டது. லிங்கத்தின் பாணபகுதி என்று அழைக்கப்படும் உச்சிபகுதி சிவபாகம் ஆகும்.  இது பிரபஞ்சத்தின் சம்ஹாரத்தை காட்டுவதாகும்.  நடுப்பகுதியான ஆவுடையார் மூலப் பரம்பொருள் காக்கும் சக்தியாக திகழும் விஷ்ணுவை தனக்குள் கொண்டதாகும்.  கடைசியாக உள்ள அடிப்புறப்  பகுதி சிருஷ்டி என்பது,  உலகங்களின் அஸ்திவாரம் என்பதை காட்டும் பிரம்ம பகுதியாகும். படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்.

நாம் சிவலிங்கத்தை லிங்கம் என்ற ஒரே பெயரால் அழைத்தாலும், அதற்குப்  பல பெயர்கள் இருக்கிறது. அதாவது இறைவன் உயிர்களுக்கு சாநித்தியராய் நின்று அருள்செய்யும் லிங்கத்தை பரார்த்த லிங்கம் என்றும், தானாக தோன்றியதை சுயம்பு லிங்கம் என்றும், தேவர்கள் உருவாக்கியதை               கண லிங்கம் என்றும், பிரம்மன் மற்றும் விஷ்ணுவால் உருவாக்கப்பட்டதை தைவீக லிங்கம் என்றும், முனிவர்கள் அசுரர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டதை ஆரிட லிங்கம் என்றும், மனிதர்கள் செய்ததை மானுட லிங்கம் என்றும் மண், அரிசி, வெண்ணை, சந்தனம், புஷ்பம், சக்கரை,  மாவு ஆகியவற்றால் உருவானதை சணிக லிங்கம் என்றும் அழைக்கிறார்கள்.

சகலாதிகரம்,காசியப சிற்ப சாஸ்திரம் ,கந்தபுராணம், தென் குடி திட்டை புராணம்,சிவ பரக்ரமம் ஆகிய பழம்பெரும் நூல்கள் சிவலிங்கத்தின் நான்கு வகைகளை பற்றிப் பேசுகிறது தாளக்குடை போன்ற வடிவுடைய சத்ரகாரம், கோழிமுட்டை வடிவுடைய குக்குண்டாகாரம், வெள்ளரி பழம் வடிவுடைய திருபுடாகாரம், பாதிநிலா வடிவுடைய அர்த்த சந்திராகாரம் என்று லிங்கத்தின் நான்கு வித வடிவங்களுக்கு பெயர் சூட்டி நமக்கு தெரியபடுத்துகின்றது

இது தவிர ஆயிரம் முகம் கொண்ட பாணலிங்கம் முதல் ஐந்து முகம் கொண்ட பாணலிங்கம் வரை இருக்கிறது முத்து பவளம் வைடூர்யம் படிகம் மரகதம் நீலம் மாணிக்கம் வைரம் கோமேதகம் ஆகிய ரத்தினங்களிலும் சிவலிங்கத்தை உருவாக்கலாம் என்று பல சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன சிவலிங்கம் செய்ய பயன்படும் ரத்தினங்கள் குற்றமற்றவைகளாக இருக்க வேண்டும். அதன் அளவு இரண்டு அங்கலம் முதற் கொண்டு ஆறு அங்குலம் வரை இருக்கலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆலயங்களில் உள்ள லிங்கங்களை தவிர மேற்சொன்ன பொருட்களில் லிங்க வடிவங்களை செய்து வீட்டில் வைத்து வழி பட்டால் அரச உறவு தீர்க்க ஆயுள் ஆரோக்கிய உடம்பு செல்வ வளர்ச்சி பகைவர் வீழ்ச்சி நன்மக்கள் பேறு சர்வ வசியம் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.

இந்துமத வழிபாடுகள் எனபது தத்துவங்களையும் விஞ்ஞான ரகசியங்களையும் மட்டும் கொண்டது அல்ல சாதாரண மனிதனின் அன்றாட பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வதற்கு கூட இந்து மத வழிபாட்டு முறைகள் தவறுவது இல்லை. அதனால் தான் ஆயிரம் வருடங்கள் அந்நிய காட்டுமிராண்டி மதத்தவர்கள் கண்மூடித் தனமான தாக்குதல் நடத்தினாலும் இன்றும் புத்திளமையோடு திகழ்கிறது நாளையும் திகழும் எந்த வித ஐயப் பாடும் இல்லை..


Thank to FB...

No comments:

Post a Comment