Tuesday, December 8, 2015

சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்

சுவாமி சின்மயானந்தரின் கேள்வி பதில் உரையாடல்
சின்மயானந்தர்! ஆன்மிக உலகில் அனைவராலும் அறியப்பட்ட பெயர்! இவரது பகவத்கீதை ஆங்கில சொற்பொழிவு மிகவும் எளிமையும் கவர்ச்சியும் கொண்டதாக இருக்கும். இந்து மதத்திற்குப் பெருந் தொண்டாற்றி மறைந்த அருளாளர்களுள் சின்மயானந்தருக்கு சிறப்பிடம் உண்டு.
ஒரே ஒருவரைத்தான் குருவாக ஏற்க வேண்டுமா?
குரு ஒருவரே. ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம். எவரிடம் எதைக் கற்றாலும் அவரும் ஓர் உபகுருதான். இத்தகைய உபகுருக்கள் இருபத்து நால்வரை சிறந்த அவதூதர் ஒருவர் அடைந்திருந்தார்.ஒருநாள் அந்த அவதூதர் ஒரு மைதானத்தின் வழியே நடந்துபோகும்பொழுது, உரத்த மேளதாளங்களுடன் வெகு விமரிசையாக வரும் திருமண ஊர்வலம் ஒன்றைக் கண்டார். அருகே ஒரு வேடன் தன் இலக்கின் மேலே கவனம் வைத்து, ஊர்வலத்தை ஒரு முறையேனும் திரும்பிப் பாராமலும் மேளதாளங்களின் ஓசைக்கு செவிகொடாமலும் நின்றான். இதைக் கண்ட அவதூதர், அவனை வணங்கி, ``ஐயா! நீரே என் குரு; நான் நிஷ்டையில் அமரும்போது, உமது மனம் இலக்கின் மீதே நிற்பது போல, பகவான் மீது என் மனமும் நிற்கட்டும்!'' என்றார்.
ஆசைகளைத் துறந்த பின் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது?
மீன் ஒன்றைத் தூக்கிச் சென்ற ஒரு பருந்தை, வேறு சில பருந்துகளும், பல காக்கைகளும் சூழ்ந்து கொண்டு பருந்தைக் கொத்தி, மீனைப் பிடுங்க முயன்றன. அப்பருந்து எப்பக்கம் சென்ற போதிலும்,விடாது அவை கத்திக்கொண்டு பின் தொடர்ந்தன; தொந்தரவு பொறுக்காது மீனைப் போட்டுவிடும்படி அதனைச் செய்தன. உடனே மற்றொரு பருந்து அம்மீனைக் கவ்விக் கொள்ள, அவையெல்லாம் இப்பொழுது அதைப் பின்தொடர்ந்தன. முந்தைய பருந்து, தொந்தரவு ஒழிந்து, ஒரு மரத்தின் கிளையில் அமைதியாக உட்கார்ந்தது. ஒருவன் தனக்குள்ள உபாதிகளை விட்ட பிறகே அவனுக்கு இவ்வுலகில் மன அமைதி உண்டாகும். புரிகிறதா?
`பாஸிடிவ் திங்கிங்' என்பது என்ன? நல்லதையே நினைப்பதா?
அல்ல; கெட்டவற்றை நினைக்காமல் இருப்பது! கழிந்து போனவற்றிற்காக அழுது கொண்டு, நிகழ் காலத்தின் வாய்ப்புகளைக் கைநழுவ விட்டு விடுகின்றனர் பலர். நிகழ் காலத்தில் கண்ணீர் விதைகளை விதைத்தால், வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகளும், அழுகையும், துயரமும் தான். வெற்றியாளர்கள், கடந்த காலத்தை ஒதுக்கி, அதன் கசப்பான நினைவுகளுக்குக் கட்டுப்பட மறுத்து, நிகழ்காலத்தை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலின் மூலம் அறிவைப் பெற்று, உண்மை மதிப்புக் கொண்ட வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதுதான் நேர்மறை (பாஸிடிவ்) சிந்தனை என்பது.
நிர்வாகத்திறன் பெறுவது எப்படி?
படிதாண்டும்போது குழந்தை ஓரிருமுறை விழுந்துவிட்டதென்றால், மறுமுறை நடக்கும்போது, கவனித்து அதிக விழிப்புடன் நடக்கிறது. பழைய அனுபவத்தில் கிடைத்த அறிவைக் கொண்டு இனியும் இப்படி நடந்தால் என்ன கிடைக்கும் என்று அதனால் எண்ணிப் பார்க்க முடிகிறது. எப்படி நடந்து கொண்டால் நல்லது நேரும் என்று அது நிகழ்கால நடையில் விழிப்பாயிருந்து சரியானதை அமைத்துக் கொள்கிறது. நம்மில் சிலருக்கு இதை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் சூனியமாயிருக்கிறது. சிலரிடத்தில் இருக்கிறது - ஆனால் கூர்மை மழுங்கி இருக்கிறது. சிலரிடத்தில் இது மிகவும் தெளிவாகவும் கூர்மையாகவும் இருக்கிறது.அப்படியுள்ளவர்கள்தான் அநேகமாக மற்றவரை ஆட்சி புரிகின்றவர்களாகிறார்கள்.
வேதங்களைப் படித்தவன்தான் ஞானியாக இயலுமா?
இந்த வருஷத்தில் இவ்வளவு கனமழை பெய்யுமெனப் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பஞ்சாங்கத்தைப் பிழிந்து பார்! ஒரு துளிநீர் கூட அதனின்றும் வராது; அதுபோல வேத, புராண நூல்களில் பல உபதேசங்களை காணலாம். அவற்றை வாசிப்பதனால் மாத்திரம் ஒருவன் ஆத்மஞானி ஆக மாட்டான். அதன்படி அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பவனே ஆத்ம ஞானி ஆகமுடியும்.
தோல்வியால் அல்லது ஏமாற்றத்தால் மனம் துவண்டு விடுகிறதே?
துவளாமல் நீங்கள் செவி கொடுத்துக் கேட்டால் இறைவன் உங்கள் விடாமுயற்சியை, தன்னம்பிக்கையை, அச்சத்தை வென்ற துணிவைப் பாராட்டிச் சிரிப்பது உங்கள் காதில் ஒலிக்கும்.
நம்மைச் சூழ்ந்துள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது
நமக்கு மட்டும் துன்பங்கள்,
தொல்லைகள் ஏற்படுவது ஏன்?
ஒரு வாத்தியக் குழுவில் ஒரு டஜன் வாத்தியங்கள் வாசிக்கிறார்கள். எல்லாம் இணைந்து லயப்பட்டு ஒரே சங்கீதமாக எழுந்தால் தான், நாம்அதை இன்பம் என்று நுகர்கிறோம். அதே போல நம்முள் எழும் பிரச்னைகளையெல்லாம் ஒருமிக்க சேர்த்து நோக்கும் பண்பு ஏற்பட்டால்தான், கூட்டுச் சமுதாயத்தில் வாழ்க்கையை நடத்த கெட்டிக்கார வழியைப் பெறமுடியும்.
மனித குலத்தில் நாம் ஓர் உறுப்பேதான் என்று புரிந்து கொண்டால், அந்தக் கணமே நம்முடைய தனித்தொல்லைகள் எல்லாம் நமக்கு பழிப்பு காட்டுவதை விட்டு விட்டு, பழகியவர் போல புன்சிரிக்கும். அப்பொழுது நாம்பெறும் ஓர் அமைதி நம்முடைய திறமையைக் கூர்மையாக்கும். தொல்லைகளும் தொலைந்தே போகும்.
சித்தர், அவதாரபுருஷர் - இருவருக்கும் என்ன வித்தியாசம்?
பல மரக்கட்டைகளைப் பிணைத்து செய்யப்பட்ட பெரிய தெப்பம் ஒன்று, தன் மீது நூற்றுக்கணக்கான மக்களைச் சுமந்து கொண்டு நீரின் மேல் சென்றாலும் அமிழ்வதில்லை. ஆனால் சிறு மரத்துண்டோ, ஒரு காகம் தன் மேல் உட்கார்ந்தாலும் அமிழ்ந்துவிடும். அவதார புருஷர், முதலில் கூறிய தெப்பம் போன்றவர்.அவருடைய கருணையால் ஆயிரக்கணக்கான மக்கள் முக்தியடைகின்றனர். ஒரு சித்தனோ மிகவும் சிரமத்துடன், தான் மாத்திரமே முக்தியடைய முடியும்.
பாவச் செயல் என்பது என்ன?
பாவம் என்பது ஒருவன் செய்யும் செயலில் இல்லை.அதன் விளைவில்-தான் இருக்கிறது.
பிறர் நம் மீது காட்டும் அன்பிற்கும் ஒரு காரணம் இருக்கிறதல்லவா?
ஆமாம். எல்லாவகை அன்பிலும் ஒரு சில அடிப்படைக் காரணிகள் உள்ளன. இந்த அடிப்படைக் காரணிகள், நேசிப்பவன் மனதில் கண்டிப்பாகக் காணப்படல் வேண்டும். இல்லையென்றால் அங்கு தோன்றும் அன்பு பொய்மையானது.அன்பை கவனமாகப் பிரயோகித்து சோதித்துப்பார்.அது மிக சக்தி வாய்ந்த ஆயுதம். அதற்கெதிராக எதுவுமே நிற்க முடியாது. அது வெல்வதற்கரியது. இத்தகு கருணையின் வலிமை, உன்னால் அளிக்க இயலும் அன்பின் அளவையே பொருத்தது.
சரணாகதி தத்துவம் என்பது என்ன?
இறைவனை ஒரு தந்தையாகவோ, தாயாகவோ, நண்பனாகவோ நினைக்க முயல வேண்டாம். உங்களை ஒரு குழந்தையாகவே கருதுங்கள். குழந்தை ஏதும் செய்யாமல், தன்னைத் தூக்கிக் கொள்பவரின் பாதுகாப்பில் தன்னைவிட்டுவிடுவதைப் போல, நீங்களும் கடவுளின் வசம் முழுச் சரணாகதியடைந்து விடுங்கள்.
மனம் என்பது என்ன?
நமக்கு இன்பத்தையும் துன்பத்தையும் தருவன இந்தப் புலன்கள் அல்ல என்பதுதான் உண்மை. இவையெல்லாம் வெறும் கருவிகளே. இவற்றை இயக்கும் எஜமான் நம் உள்ளம். அது சொன்னபடி தான் இவை பணிந்து வேலை செய்கின்றன.மனம் ஒரே சமயத்தில் விருப்பங்களின் விளைவுப் பண்ணையாகவும், அலை மோதும் எண்ணங்களின் சரளைக் குவியலாகவும் விளங்குகிறது. மனம் ஓய்வு பெறும்போது எண்ணமற்ற மனத்தை உடையவனின் உள்ளம் அமைதியை அனுபவிக்கிறது. அதனால் தான் அமைதியான, கனவற்ற உறக்கத்திலே ஒவ்வோர் உயிரும் உவகையைத் தவிர வேறு ஒன்றையும் உணர்வதில்லை.

No comments:

Post a Comment