Saturday, March 26, 2016

தீட்சை (  தீஷை )

 `தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல். மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை. மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன. மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும். நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர். முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர். இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள். தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன : பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை 

#பரிச #தீட்சை : ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும். 
#நயன #தீட்சை : ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும். 
#பாவானா #தீட்சை : ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை. #யோக #தீட்சை : ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
 #வாக்கு #தீட்சை : ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
 #நூல் #தீட்சை : சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும். உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க. எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது. தீட்சையின் வகைகள்: 

தீட்சை ஆதார தீட்சை, நிராதார தீட்சை என இருவகைப்படும். இறைவன் ஞானாசிரியர் ஒருவர் மூலம் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் உடைய நம்போன்ற சகலருக்கும் அளிக்கும் தீட்சை ஆதார தீட்சை எனப்படும்.இறைவன் வேறோர் ஆதாரத்தையும் வேண்டாது தானே குருவாய் நின்று ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மட்டும் உடைய பிரளயாகலருக்கு முத்தியளிக்கும் தீட்சை நிராதார தீட்சை ஆகும். தீட்சை அளிக்கப்படும் முறைக்கேற்ப ஆதார தீட்சையானது நயனம், பரிசம், வாசகம், மானசம், சாத்திரம், யோகம், ஒளத்திரி என ஏழுவகைப்படும். #நயன #தீட்சை குரு தன்னை சிவமாகப் பாவித்து அப்பாவனையுடன் மாணாக்கனைக் கண்ணால் நோக்கி அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பது நயன தீட்சை ஆகும். சிவபெருமானிடம் திருத்தோணிபுரத்திலே திருஞானசம்பந்தர் பெற்றது நயன தீட்சையாகும்.
 #பரிச #தீட்சை குரு தன் வலது கையை சிவனுடைய கையாகப் பாவித்து மாணக்கனது தலையில் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல் பரிச தீட்சையாகும். சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரில் வழங்கிய தீட்சை பரிச தீட்சை அகும். #வாசக #தீட்சை குரு மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும், பொருந்துமாறும், மாணவனுக்கு உபதேசிப்பது வாசக தீட்சை ஆகும். மாணிக்கவாசகருக்கு சிவபொருமான் திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் உபதேசித்தமை வாசக தீட்சையாகும். 
#மானச #தீட்சை குரு தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொண்டு வந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து மீள அவ்வான்மாவை அவனது உடலிற் சேர்த்தல் மானச தீட்சை ஆகும்.
 #சாத்திர #தீட்சை குரு மாணவனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஓதுவித்தல் சாத்திர தீட்சையாகும். மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருப்பெருந்துறையில் வைத்து பதி, பசு, பாச விளக்கம் வழங்கியமை இதற்கு உதாரணமாகும். #யோக #தீட்சை குரு மாணக்களை சிவயோகம் பயிலச் செய்தல் யோக தீட்சையாகும். தட்சணாமூர்த்தியாகிய சிவபெருமான் சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாராகிய நான்கு பேருக்கும் மெய்மை புரிய வைத்தமை யோக தீட்சையாகும்.
 #ஒளத்திரி #தீட்சை பொதுவாகச் சைவ மக்களுக்குச் செய்யப்படுவது ஒளத்திரி தீட்சையாகும். ஆன்மாக்களாகிய உயிர்களை வீடுபேற்றை அமையும் பொருட்டு ஆசாரியரால் அக்கினி காரியத்துடன் செய்யும் அங்கி தீட்சையே ஒளத்திரி தீட்சை ஆகும். இது ஞானவதி, கிரியாவதி எனும் இருவகைகளில் ஒருவகையாற் செய்யப்படல் வேண்டும் எனச் சிவாகமங்கள் கூறுகின்றன. 
#சமய #தீட்ஷை:  யாகத்தின் மேற்கு வாசலை நோக்கி சீடனை அழைத்து வந்து குருவானவர் சிவபெருமானை பிரார்த்தனை செய்து, பிரணவாசனத்தில் சீடனை நிற்கச் செய்து, சுத்தி செய்து, நிரீட்சணம், புரோட்சணம் முதலிய சம்ஸ்காரங்களால் அவனை தூய்மையாக்கி, அவனை சிவமாக்குவார். அதன் பின் அவனது கண்களை வெண்பட்டால் கட்டி, யாகத்துக்குள் அழைத்து வந்து கையில் பூவை கொடுத்து தீக்ஷா மண்டலத்தில் இடச் செய்வார். அவன் கண்களை மூடிக் கொண்டு பூ இட்ட லிங்கத்தின் பெயரே அவனது தீக்ஷா நாமமாகும். (ஈசான சிவ, தத்புருஷ சிவ, அகோர சிவ, வாமதேவ சிவ, சத்யோஜாத சிவ) இதன் பின் சில ரஹஸ்ய மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெறும். இதன் பின், குருவானவர் சீடனுக்கு மந்த்ரோபதேசம் செய்வார். அதன் பின், பூர்ணாகுதி வழங்கப்பெறும். சீடன் குருவையும், மண்டலேஸ்வரரான சிவனையும், அக்னியையும் வழிபாடாற்றுவான். ஆசீர்வாதத்துடன் இத் தீக்ஷை நிறைவு பெறும். இது சமய தீக்ஷையாகும். 
#விசேச #தீட்க்ஷை:  சமயதீக்ஷை பெற்று, சமய ஒழுக்கங்களுடன் வாழும் சீடனுக்கு வழங்கப்பெறுவதே விசேடதீக்ஷை. முன்போலவே, செய்யப்படும் யாகபூஜை, ஸ்தாலீபாகம் என்பவற்றுடன், மந்திரபூர்வமான கிரியைகள் இடம்பெற்று, தீக்ஷா விதிகளில் சொல்லப்பட்டவாறான ஹோமங்கள் இடம்பெறும். குரு தன்னை சீடனுடன் ஐக்கியப்படுத்தி, ஹோமவழிபாடுகள் செய்வார். சீடனால் வழிபாடு செய்யப்பட்டதும் ஆசீர்வாதம் செய்யப்படும். இதன் போது குல மரபுக்கு ஏற்ப யக்ஞோபவீதம்(பூணூல்) வழங்குவதும் சம்பிரதாயம். இதன் பின், சீடன் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தகுதியானவன் ஆகிறான்.
 #சாம்பவி #தீட்சை:  சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர். "சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திரு க்கிறது என்று அர்த்தமாகிறது. நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம் ( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்து வார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம 
#சிவ #தீட்சை ----------- அகத்தியர் அருளிய முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளைப் பற்றி காண்போம். தீட்சைகளில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான். இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான் ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக் காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும் கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும் மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே." "ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர். "ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார் அகத்தியர். "சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம் பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும் பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும் துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே." "குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார். "ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார் அகத்தியர். "பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு பண்பாக யங் வங் றீங் றுந்தான் துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும் அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம் குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும் குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே." "யங் வங் றீங்" என்று லட்சம் முறைசெபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார். "சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். "தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும் சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம் மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார் வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள் நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம் ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே." "இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார் அகத்தியர். "மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும்.அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார் அகத்தியர்.

Thank: whattapp message ...

No comments:

Post a Comment