Friday, August 23, 2019

பழைய சொக்கநாதர் - டாக்டர் எஸ்.ஜெயபாரதி

thank to: https://www.visvacomplex.com/palzaiya_chokkanathar.html



இடைக்காடர் பிணக்குத் தீர்த்த படலம்

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee
மலேசியா


                மதுரையை Temple City என்பார்கள்.

                ஆனால் பெரும்பாலோருக்கு - படித்த அறிஞர்களுக்குக்கூட மதுரையில் எத்தனை கோயில்கள் இருக்கின்றன என்பது தெரியாது.

                அதாவது நான் குறிப்பிடுவது பழமையான கோயில்களை.

                மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சுந்தரேஸ்வரைச் 'சொக்கநாதர்' என்றும் அழைப்பார்கள்.
                "சோத்துக்குப் பின் சொக்கநாதன்' என்ற பழமொழி ஒன்று மதுரையில் வழங்கிவந்தது.
                அதன் விளக்கத்தை பழைய இழையொன்றில் காணலாம்.

                உவேசாமிநாதய்யரவர்கள் உயிருக்குயிராய் நேசித்த 'தமிழ் விடு தூது' என்னும் நூலின் பெயர் 'மதுரை சொக்கேசர் தமிழ் விடு தூது' என்பதாகும்.

                மீனாட்சியம்மன் கோயிலில் இருக்கும் சொக்கநாதர் தவிர இன்னொரு இடத்திலும் சொக்கநாதர் இருக்கிறார்.

                அந்தக் கோயிலுக்கு இவரே Sole-Proprieter.       
                மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரராகவும் இருக்கிறார். சொக்கநாதர் என்று அங்கும் பெயருண்டு.
                திருஞானசம்பந்தர் தம்முடைய திருவாலவாய்த் திருப்பதிகங்களில் திருவாலவாய்க் கடவுளைச் 'சொக்கன்' என்று அழைக்கிறார்.

"தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
சொக்கனே, 'அஞ்சல்' என்றருள் செய்எனை
எக்கராம் அமணர் கொளுவும்சுடர்
பக்கமே சென்று பாண்டியர்க்காகவே"

எக்கராம் அமண் கையருக்கு எளியேன் அலேன் திருஆலவாய்ச்
சொக்கன் என்னுள் இருக்கவே, துளங்கும்முடித்தென்னன் முன்னிவை
தக்க சீர்ப்புகலிக்குமன் தமிழ்நாதன் ஞானசம்பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே.

                ஒரு காலத்தில் அதைத் 'திருவாலவாயுடையார் திருக்கோயில்' என்று சொல்லியிருக்கிறார்கள்.
                கோயிலின் பெயரேகூட 'ஆலவாய்' என்றிருந்திருக்கும்போல.
  
வீடலால வாயிலாய் விழுமியார்கள் நின்கழல்
பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே
காடலால வாயிலாய் கபாலிநீள் கடிம்மதில்
கூடல்ஆல வாயிலாய் குலாயதென்ன கொள்கையே

கபாலிநீள் கடிம்மதில் கூடலாலவாயிலாய் - கோயிலைச் சுற்றியிருந்த மதிலைக் 'கபாலி மதில்' என்று அழைத்திருக்கிறார்கள்.
அந்த மதிலைக்கொண்ட கூடல் நகரத்தின் ஆலவாய்; அங்கு உள்ளவனே!

முதிருநீர்ச் சடைமுடி முதல்வ நீ முழங்கழல்
அதிரவீசி ஆடுவாய் அழகன்நீ புயங்கன்நீ
மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் கபாலம் ஏந்தும் சம்புவே

'மதுரை நகரத்தின் ஆலவாயில் உள்ளவனே' என்று பொருளாகிறது.
மதுரையில் நடராஜப்பெருமான் கால்மாறி - வலதுகாலைத் தூக்கி ஆடியிருப்பார். கல்வெட்டுக்களில் 'அதிரவீசியாடியார்' என்று பெயர் காணப்படும். அந்தப் பெயர் திருஞானசம்பந்தர் கொடுத்ததா அல்லது அதற்கும் முன்னாலேயே வழங்கியதா என்பது ஆராய்ச்சிக்குரியது.






                பழைய சொக்கநாதனிடம் வருகிறேன்.

                இவருடைய கோயில் மதுரையின் வடகிழக்குப் பகுதியில் - ஈசான்யத்தில் - அது இருக்கவேண்டிய இடத்தில் இருக்கிறது.
                ஒரு நகரத்தின் ஈசான்யத்தில் சிவன் கோயில் இருக்கவேண்டும் என்பது ஆகம-சில்ப சாஸ்திர-வாஸ்து மரபு.

                மதுரையில் மீனாட்சியம்மன் கோயில் ஊருக்கு நடுவில் இருக்கிறதே. அது எப்படி?
                அதுவும் ஆகமப்படி சரிதான்.
                அதை 'சர்வதோபத்திர' அமைப்பு என்பார்கள்.
                ஆனாலும் நன்றாக கவனித்துப் பார்த்தால் அந்தக் கோயில் பழைய மதுரையின் நடுச்செண்டரில் இருக்கவில்லை என்பதைக் காணலாம். பழைய மதுரை ஒரு சதுரமான ஊர். வெளிவீதிகளுக்கு உள்ளடக்கமாக உள்ள ஊர். அதை நான்காக வெட்டினோமானால் நான்கு சிறு சதுரங்கள் வரும். அவற்றில் வடகிழக்குச் சதுரத்தில்தான் கோயிலின் பெரும்பகுதி இருப்பதைக் காணலாம்.




                அந்த இன்னொரு இடத்துச் சொக்கநாதர் இருக்கும் கோயிலைப் 'பழைய சொக்கநாதர் கோயில்' என்று குறிப்பிடுவார்கள்.

                அது சரி.......
                "அவர் ஏன் அங்கு இருக்கிறார்......?"

                அதற்கு ஒரு கதை இருக்கிறது.

                முன்பு திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை எழுதியிருந்தேன்.
                அதில் செண்பகமாறன் என்னும் வங்கியசேகர பாண்டியனின் சந்தேகத்தை ஆலவாய்ச் சொக்கன் புலவராக வந்து கண்டசுத்தியாகப் பாடலொன்றைச் சொல்லி ஐயம் தீர்த்ததாகச் சொன்னேன்.
                அந்த செண்பகமாறனுக்குப் பின்னர் பதினைந்து பாண்டியர்கள் ஆண்டபிறகு குலேச பாண்டியன் என்னும் பாண்டியர் ஆட்சிக்கு வந்தார்.

                இலக்கணம் இலக்கியத்தில் வரம்பு கண்டவர்; எத்தகைய பெருநூலையும் எல்லை கண்டவர். ஆகவே முத்தமிழ்ச் சங்கத்தில் இவருக்கும் இடம் கொடுத்திருந்தார்கள்.
                சாதாரணமாக சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற புலவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுடையவர்களாய்த்தான் இருப்பார்கள்.
                அவர்களுக்கெல்லாம் தலைமைப் புலவர் ஒருவர் இருப்பார்.
                தமிழ்ச் சங்கத்தின் புரவலராக அப்போது ஆட்சியிலிருக்கும் பாண்டிய மன்னர் இருப்பார்.
                குலேச பாண்டியனாரோ புரவலராகவும் புலவராகவும் இருந்திருக்கிறார்.
                கல்வியில் கேள்விகளில் தேர்ந்து முழுதுணர்ந்த கபிலர் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவராக இருந்தார்.
                அவருடைய நெருங்கிய நண்பர் இடைக்காடர் என்னும் புலவர்; கபிலர் தம் அரசனுடைய சிறப்பியல்வுகளைச் சொல்லக்கேட்டு, தாம் கபிலரின்பால் வைத்திருந்த அன்பினாலும் நெருக்கத்தினாலும் மிக இனிய பனுவல் ஒன்றைக் கொண்டு வந்து அரசரிடம் வாசித்தார்.

வழக்காத சொற்சுவையும் பொருட்சுவையும்
பகிர்ந்தருந்த வல்லோனுள்ளத்(து)
அழுக்காற்றாற் சிரந்துளக்கான் அகமகிழ்ச்சி
சிறிதும் முகதலர்ந்து காட்டான்
எழுக்காயும் திணிதோளான் ஒன்றும் உரை
யான்வாளா விருந்தான்; ஆய்ந்த
குழுக்காதல் நண்புடையான் தனைமானம்
புறம் தள்ளக் கோயில் புக்கான்

வழுக்களேயில்லாத, பொருட்சுவை, சொற்சுவை கொண்ட அந்தப் பனுவலைப் பாடியபோது, பாண்டியமன்னர் மனதில் பொறாமைகொண்டு தலையை அசைத்து ரசிக்காமலும், அக மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமலும் ஒன்றுமே சொல்லாமலும் பேசாதிருந்தார்.

                இதனால் தம்முடைய மானம் தம்மைப் பின்னாலிருந்து உந்தித் தள்ள, இடைக்காடர் கோயிலுக்குச் சென்றார்.

                தமிழ்ச்சங்கத்தை அகத்தியரைக் கொண்டு நிறுவி, அந்தச் சங்கத்தில் தாமே ஒரு புலவராகவும் இருந்து, அதன் தலைவராகவும் விளங்கியவர் 'திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்' என்றும் 'இறையனார்' என்றும் பெயர் பெற்ற ஈசன்.
                ஆகவே அவரிடமே சென்று முறையிட்டார் இடைக்காடர்.

சந்நிதியில் வீழ்ந்தெழுந்து "தமிழறியும்
பெருமானே! தன்னைச் சார்ந்தோர்
நன்னிதியே! திருவால வாயுடைய
நாயகனே! 'நகுதார் வேம்பன்
பொன்னிதிப்போல் அளவிறந்த கல்விமிக்(கு)
உளன்' என்று புகலக் கேட்டுச்
சொல்நிறையும் கவி தொடுத்தேன்; அவமதித்தான்,
சிறிதும் முடி துளக்கான் ஆகி"

"பொன் நிதி போன்ற அளவிறந்த கல்வியுடையவன் என்றெண்ணி
அல்லவா நான் அவனிடம் சென்று அரியதொரு பனுவலை வாசித்தேன்!
அவன் சிறிதும் தலை அசைக்காமல் அவமதித்தான்".

பரிவாயின் மொழி தொடுத்து வருணித்தோர்க்(கு)
அகமகிழ்ந்தோர் பயனு நல்கா
விரிவாய தடங்கடலே, நெடுங்கழியே,
அடுங்கான விலங்கே, புள்ளே,
புரிவாய பராரைமர நிரையே, வான்
தொடுகுடுமிப் பொருப்பே, வெம்பும்
எரிவாய கொடுஞ்சுரமே, என இவற்றோர்
அ·றிணை ஒத்து இருந்தான், எந்தாய்!

"மிருகம், பறவை, நெடுமலை, மரம், தடி, கடல், எரிக்கும் சுரம் போன்ற அ·றிணைப் பொருள்கள் போலவே இருந்தான்".

"என்னை இகழ்ந்தனனோ? சொல்வடிவாய் நின்
னிடம்பிரியா இமையப்பாவை
தன்னையும்சொற் பொருளான உன்னையுமே
இகழ்ந்தனன்! என்றனுக்கியாதென்னாம்?"
முன்னைமொழிந்துஇடைக்காடன் தணியாத
முனிவீர்ப்ப முந்திச்சென்றான்
"அன்னவுரை திருச்செவியினூறுபா(டு)!"
என உறைப்ப அருளின் மூர்த்தி

"என்னையா அவன் இகழ்ந்தான்? சொல்வடிவாய் உன்னுடைய
இடப்பாகத்தைப் பிரியாமல் இருக்கும் இமையப் பாவையையும்,
சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவன் இகழ்ந்தான்.
எனக்கு என்ன?" என்று சொன்னவாறு இடைக்காடர் முன்னால்
சென்றார்.
    "உன்னுடைய சொற்கள் என் காதுகளுக்கு ஊறுபாடாய்
விளங்குகின்றன", என்றார் ஆலவாய் அண்ணல்.

'போன இடைக்காடனுக்கும் கபிலனுக்கும்
மகத்துவகை பொலியுமாற்றான்
ஞானமயமாகிய தன் இலிங்க உரு
மறைத்து உமையா(ள்) நங்கையோடும்
வானவர் தம்பிரான் எழுந்து புறம்போய்த்தன்
கோயிலின் நேர் வடபால் வையை
ஆனநதித் தென்பால் ஓர் ஆலயம் கண்டு
அங்கண் இனிது அமர்ந்தான் மன்னோ!

            அங்கிருந்து சென்றுவிட்ட இடைக்காடருக்கும் கபிலருக்கும் உவகை உண்டாகுமாறு, கோயிலில் தம்முடைய லிங்க உருவை மறைத்துவிட்டு, தாம் உமையம்மையுடன் எழுந்து அப்பாற்போய் தம்முடைய கோயிலுக்கும் வடக்கே வைகை என்னும் நதியின் தெற்கே ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி, அதில் இனிதாக அமர்ந்தார், ஈசன்.

சங்கவான் தமிழ்த்தெய்வப் புலவோரும்
உடனெழுந்து சைல வேந்தன்
மங்கைநாயகன்போன வழிபோய் அங்(கு)
இருந்தார் அவ்வழிநாள் வைகற்
கங்குல்வாய்ப் புலரவரும் வைகறையில்
பள்ளியுணர் காலத்தெய்தி
அங்கணாய் அகன் அடியார் சேவிப்பார்
இலிங்க உரு அங்குக் காணார்

                மலையாண்டியாகிய மங்கைநாயகன் சென்ற வழியில் சங்கப் புலவர்கள் அனைவரும் உடனே எழுந்து போய் அவருடன் அங்கேயிருந்தனர்.
                காலையில் வழிபாடு செய்ய வந்தவர்கள் கோயிலில் லிங்க உருவைக் காணாது திகைத்தார்கள்.
                உடனே அரசனுக்கு விபரத்தைத் தெரிவித்தார்கள். 

                அரசனிடைப் புகுந்து உள்ள நடுநடுங்கி நாவுணங்கி,
"அரசே! யாம் ஒன்று உரைசெய அஞ்சுதும்! உங்கள் நாயகனைத்
திருப்பள்ளி யுணர்ச்சி நோக்கி மரை மலர்ச்சேவடி பணியப் புகுந்தனம்;
இன்று ஆங்கு அவன்றன் வடிவம் காணோம்!"
புரமுநணி புலம்படைந்த தென்றழல்வேல்
எனச் செவியிற் புகுத்தலோடும்

"ராசா ராசா! நாங்க ஒண்ணு சொல்ல ரொம்ப பயப்படறொம்னா!
காத்தால கோயிலுக்கு திருப்பள்ளியெழுச்சிக்காகப் போயி நாங்க
பாக்கறச்செ சுவாமியக் காணொம்னா!"

                சுவாமியைக் கர்ப்பக்கிரகத்தில் காணவில்லை என்பதைக் கேட்டதும் அரசன்.......

வழுதிஅரி யணையிலிருந்து அடியிற வீழ்
பழுமரம்போல் மண்மேல் யாக்கை
பழுதுற வீழ்ந்து, உயிர் ஒடுங்க, அறிவு ஒடுங்கி,
மண்பாவை படிந்தாங்கு ஒல்லைப்
பொழுதுகிடந்து, அறிவுசிறிது இயங்க, எழுந்து
அஞ்சலிக்கைப் போது கூப்பி,
அழுது இரு கண்ணீர்வெள்ளத்து ஆழ்ந்து "அடியேன்
என் பிழைத்தேன்? அண்ணால்! அண்ணால்!"

"எங்குற்றாய், எங்குற்றாய்" என்று புலம்பினார், மன்னர்.

சிலர்வந்து, "மன்னா! ஓர் அதிசயம் கண்டனம். வையைத் தென்சாராக
அலர்வந்தோன் படைத்த நாள் முதல் ஒருகாலமும் கண்டதன்று! கேள்வித்
தலைவந்த புலவரொடும் ஆலவாய் உடையபிரான், தானே செம்பொன்
மலைவந்த வல்லியொடும் வந்து இறை கொண்டு உறைகின்றான், மாதோ!" என்றார்.

சிலர் அரசனிடம் வந்து சொன்னார்கள்: "மன்னா! நாங்கள் ஓர் அதிசயம் கண்டோம். பிரம்மா படைத்த நாள்முதல் ஒரு காலத்திலும் கண்டறியாதது, அது. வைகையின் தென்சார்பில் சங்கப்புலவர்களோடு ஆலவாய் இறைவன், மலைமகளோடு தலைமைகொண்டு உறைகின்றான்!"

அரசர் வேகமாக அங்கு சென்று பார்த்தார்.

படர்ந்து, பணிந்து, அன்புஉகுக்கும் கண்ணீர் சோர்ந்து,
ஆனந்தப் பௌவத்து ஆழ்ந்து
கிடந்தெழுந்து, நாக்குழறத் தடுமாறி,
"நின்றிதனைக் கிளக்கும் வேதம்
தொடர்ந்தறியா அடிசிவப்ப, நகர்புலம்ப,
உலகீன்ற தோகையோடு இங்கு
அடைந்து அருளும் காரணம் என்ன? அடியேனால்
பிழையுளதோ? ஐயா! ஐயா!"

"அல்லதையென் றமரால் என் பகைஞரால்
கள்ளரால், அரிய கானத்து
ஒல்லை விலங்காதிகளால் இடையூறு இன்
தமிழ்நாட்டில் எய்திற்றாலோ?
தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ?
தவம் தருமம் சுருங்கிற்றாலோ?
இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ?
யான் அறியேன், எந்தாய்! எந்தாய்!"

தொடர்ந்து பல்வகைத் துதிகளாலும் பாண்டியமன்னர்,
"போற்றி! போற்றி!" என்று வழுத்தினார்.

                பாண்டிய மன்னரின் துதிகளைக் கேட்ட பரமன் மனமகிழ்ந்து ஆகாயவாணி மூலம் அரசனிடம் சொன்னார்:
                தேவர் முதல் பலவித கணங்களால் வழிபடப்பெறும் சுயம்புவாகத் தோன்றிய தம்முடைய லிங்க எண்ணிக்கையற்றவை இருக்கின்றன.
                அவற்றில் அறுபத்துநான்கு மேம்பட்டவை. அவற்றிலும் எட்டு மிக முக்கியமானவை. அவற்றில் சிறப்புவாய்ந்ததாக இங்கு விளங்கும் லிங்கம் இருப்பதால் தாம் உத்தர ஆலவாய் என்னும் இத்தலத்தில் இங்கே வந்து உறைகின்றதாகக் கூறினார்.

"கடம்பவனத்தை விட்டு யாம் நீங்கி வந்துவிடமாட்டோம்.
நீயாக ஏதும் தீங்கு செய்யவில்லை. காடன் செய்யுளை இகழ்ந்ததாலே
அவனிடத்தில் யாம் வைத்த அருளினால் இடம் பெயர்ந்து வந்தோம்",
என்றார்.
                அரசன் அடிபணிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
                அதன் பேரில் உமையுடனும் சங்கப்புலவர்களுடனும் திருக்கோயிலுக்கு இறைவன் திரும்பினார்.
                இடைக்காடருக்கு மிகுந்த மரியாதைகள் செய்து அவரை உயரிய ஸ்தானத்தில் வைத்து அவருடைய பனுவலை அரசர் கேட்டார்.

காடருக்கும் புலவர்களுக்கும் 'முறைமையால் ஆரம் தூசு,
குளிர் மணியாரம் தாங்கி, மங்கல முழவம் ஆர்ப்ப, மறையவர்
ஆக்கங் கூற, நங்கையர் பல்லாண்டேத்த, நன்மொழிப் பனுவல்
கேட்டார். நிறைநிதி, வேழம், பாய்மான், விளைநிலம், நிரம்ப நல்கினார்.

அவர்கள் முன்செல்ல, அரசன் அவர்களின் பின்னே ஏழடி நடந்துவந்து  "இடைக்காடனாருக்கு நான் செய்த குற்றமெல்லாவற்றையும் பொறுக்கவேண்டும்", என்று அவர்களைப் பரவித் 'தாழ்ந்தார்'.

(ஏழடி நடந்து உடன் வருவது பழங்கால மரியாதை. 'சப்தபதி' என்பார்கள்.)

 "நுண்ணிய கேள்வியுடைய மன்னவனே, நீ சொன்ன சொற்கள்
என்னும் குளுமையான அமுதத்தால் எங்கள் கோபத்தீ தணிந்தது",
என்றார்கள்.
                இந்தக் கதை திருவிளையாடற் புராணத்தில் 'இடைக்காடர் பிணக்குத் தீர்த்த படலம்' என்னும் பகுதியில் இருக்கிறது.
                இதுபோலவே இறைவன் புலவர் பின்னே சென்ற இன்னொரு கதையும் உள்ளது.....

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment