Friday, June 20, 2014

ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர்

சகல தோஷங்களையும் போக்கும் சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம்!!!
சித்தம் என்றால் அறிவு. சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு. சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவம், யோகம், சோதிடம், மந்திரம், ரசவாதம் போன்ற அரிய அறிவியலையும், மக்கள் நல்வாழ்வுக்கான கருத்துக்களையும், இறைவனை உணரக்கூடிய வழிமுறைகளையும் தந்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சிறப்பு மிக்க சித்தர்களுள் ஒருவரான சர்ப சித்தர் ஜீவ சமாதியாகி இன்றுவரை மக்களுக்கு அருளி வரும் ஜீவ பீடம் மாங்காடு அருகே பட்டூர் கோவிந்தராஜ் நகரில் அமைந்துள்ளது.

முன்பொரு காலத்தில் இயற்கை சீற்றத்தினால் மழையும், புயலும் இந்தப் பகுதி முழுவதையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது. ஆனால் சர்ப சித்தர் சமாதியாகியிருந்த இந்த இடம் மட்டும் அமைதியாக இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆன்மிகப் பெரியவர்கள் ஆராய்ந்த போது அங்கே மிகவும் பெரியதாக ஒரு லிங்க வடிவில் ஒரு கல் தென்பட்டுள்ளது. இங்கே தான் ஸ்ரீ சர்ப சித்தர் ஜீவ சமாதி அடைந்து உள்ளார். அந்த கல் பஞ்ச பூதங்களைக் கட்டுப்படுத்தும் பூதக்கல் என்றும் தெரியவந்துள்ளது. அந்த லிங்கத்தின் மீது இடது புறத்தில் பிறை வடிவமும், வலது புறத்தில் சூரியன் வடிவமும், லிங்கத்தின் மத்தியில் யோகச் சக்கரமும், பிரணவ மந்திரம் பொறிக்கப்பட்டு உள்ளது பஞ்ச புதங்களை குறிக்கும் விதமாக ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு அந்த லிங்கத்தின் மீது உள்ளது. இங்கே சமாதியாகியுள்ள சர்ப சித்தர் காலஹஸ்தியில் இருந்து வந்தவர் என்றும், வடக்கு நோக்கி சமாதி அடைந்து உள்ளார்என்றும் கூறப்படுகிறது. இவரது காலம் அறுதியிட்டு கூறமுடியாத அளவுக்கு மிகவும் பழமையானதாகும். சர்ப சித்தர் ஜீவசமாதியாகி, பூதக்கல் உருவாகி 1200 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆதிகாலத்தில் இந்த பூதக்கல்லைப் பார்த்து மக்கள் அச்சமுற்று அப்பகுதி வழியே செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால் அப்பகுதி புதர் மண்டி காடு போல மாறி, பூதக்கல்லைச் சுற்றி புற்று உருவாகியிருந்துள்ளது. அதன் அருகே செல்பவர்களுக்கு சர்ப்பங்கள்(பாம்புகள்) சீறும் ஓசை கேட்கவே பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர். காலப்போக்கில் அப்பகுதியில் பூதக்கல் இருப்பதையே மக்கள் மறந்து விட்ட நிலையில் கடந்த 16 ஆண்டுகளுக்குமுன் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி.ரவிச்சந்திரன் அவர்களின் கனவில் வந்த சர்ப சித்தர், அசரரீயாக சில தகவல்களைக் கூறி, தான் ஜீவ சமாதி அடைந்துள்ள இடத்தையும், அடையாளத்தையும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சித்தர் அடிகளார் பல்வேறு கடுமையான சோதனைகளுக்கும், துன்பங்களுக்கும் இடையே சித்தரின் அருளால் ஜீவசமாதி அமைந்திருக்கும் பகுதியை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து வழிபட்டு வரலானார். பின்னர் படிப்படியாக சர்ப சித்தருக்கு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி தினத்தில் திருவிளக்கு பூஜையும், மகா சிவராத்திரி தினத்தன்று ஆறு கால பூஜையும், பவுர்ணமி, பிரதோஷம், அமாவாசை தினங்களில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பரிகார பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இதில் மகாசிவராத்திரி அன்று நிறைவு பூஜையின் போது, பக்தர்களே நேரடியாக தங்களின் திருக்கரங்களால் சர்ப சித்தர் உறைந்திருக்கும் ஜீவ பீடமான பூதக்கல்லிற்கு அபிஷேகம் செய்து சித்தரின் அருளாசியைப் பெற்றுச் செல்கின்றனர். இது வேறெங்கும் இல்லாத, யாருக்கும் கிட்டாத கொடுப்பினை என்றால் அது மிகையில்லை.
இயற்கை சீற்றங்களைக் கட்டுப்படுத்தவும், சகல கிரக பீடை விலகவும், கல்வி, குழந்தைப் பேறு, திருமணம் கைகூட, சர்ப (நாக) தோஷம் விலக, நோய் குணமடைதல், திருஷ்டி, பித்ருக்கள் சாபம், சித்தர்கள், முனிவர்கள் சாபம் நீங்கவும், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி பிணக்கு நீங்கி நல்வாழ்வு வாழவும் இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலனளிப்பதாக இங்கு வந்து பயனடைந்த பக்தர்கள் கூறுவதை நாம் கேட்கலாம். பல்வேறு அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய அதிகாரிகள், திரை நட்சத்திரங்கள் இங்கு வந்து வேண்டி, அவர்களின் பிரார்த்தனை பலித்துள்ளதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். நேரில் சென்று தரிசிப்பவர்களுக்கு அது உண்மைதான் என உணரமுடிகிறது. நல்ல ஆன்மிக அதிர்வுகளை உணரலாம்.
சர்ப சித்தர் குடிகொண்டுள்ள பூதக்கல் பல்வேறு சூட்சும ரகசியங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தொடர்ந்து இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அந்த ரகசிய சூட்சும அனுபவங்கள் கிடைத்துள்ளன. குரு கடாட்சம் பெற்றவர்களுக்கும், இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் சதா தவ நிலையில் இருக்கும் சர்ப சித்தரின் சகல அனுக்கிரகமும், தெய்வீக அனுபவங்களும் கிடைத்துள்ளன.
யாரிடமும் நன்கொடை, யாசகம் பெறாமல் சித்தரின் அருளாசியுடன் சர்ப சித்தர் ஜீவ பீடத்தை பராமரித்து, பூஜைகளும், நிகழ்ச்சிகளும், விழாக்களும், பவுர்ணமி அன்று அன்னதானமும் வழங்கி, இறைப்பணியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார் சித்தர் அடிகளார் திரு. ஜி.டி. ரவிச்சந்திரன்.
இயந்திரத்தனமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், மன அமைதி பெறவும், பிரச்சனைகள் தீரவும், நல்ல அதிர்வுகள் மூலம் நமக்கெல்லாம் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் சர்ப சித்தர். ஆன்ம பலத்தை அளிக்கவல்ல அதிர்வலைகள் நிரம்பிய சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடத்தை தரிசனம் செய்து சித்தர்களின் அருளாசியை பெறுங்கள்.
தொடர்புக்கு: சர்ப சித்தர் ஆதி ஜீவ பீடம், கோவிந்தராஜ் நகர், மாங்காடு. கைப்பேசி எண்.9789826263.




Thank:
Facebook: Kumar Esan

No comments:

Post a Comment