Saturday, August 12, 2017

அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !


thank: Neeraja Neeraja [FB]

இந்தியாவில் அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !
தேவியின் புகழைப் பாருக்குப் பறைசாற்றும் பல முக்கிய க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே இடம் பெறுகின்றன.

பரசுராம க்ஷேத்திரத்தில் செங்கனூர் பகவதி கோயில் விசேஷமாக உள்ளது. நீலாசலத்து காமரூப நாயகி போலவே தேவிக்கு தாய்மைக்கு உரிய நீர்மைக்கசிவு ஏற்படும் வியக்கத் தகும் தலம் இது. அவ்வப்போது நிகழும் இத்தெய்விக நிகழ்ச்சியின் போது இங்கு மகோற்சவம்தான்.
அடுத்து கொடுங்கல்லூர் காளி தேவி மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி க்ஷேத்திரம். திருச்சூரிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து மைல் உள்ள இத்தலத்து தேவியின் உக்கிரம் குறைய ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. பெரிய உருவத்தோடு உட்கார்ந்த நிலையில் காட்சியருளுவாள் அன்னை.சோட்டானிக்கரை பகவதியைத் தெரியாதவர்கள் மலையாளத்தில் இருக்கமாட்டார்கள். இது ஒரு பிரார்த்தனை தலம். ஜேஜே என்று எப்போதும் சந்நிதியில் கூட்டம்.
Image may contain: one or more people
பழையனூர் பகவதியும் இப்படியே மிகவும் பிரபலமானவள்: தேவியின் மிக உக்கிர’ப்ரத்யுங்கரை’ அம்சங்களே இந்த க்ஷேத்ரங்களில் இருக்கின்றன என்பர். அடுத்து ஹேமாம்பிகை என்னும் தேவி உறையும் ஒலவக்கோடும் பகவதி க்ஷேத்திரத்தில் புராதனமானது. அன்னையின் இரு கைகளை மட்டுமே இங்கு தரிசிக்கிறோம்.

வெயிலுகந்தம்மன்
திருச்செந்தூரில் உள்ள அம்மன் கோவில். முருகனுக்கு சக்திவேல் அளித்து, பாண்டிய ராஜகுமாரிக்கு குதிரை முகமும் நீக்கிய சக்தி. அன்னையின் அருளொளி பரப்பும் தோற்றம் ஆனந்தமயமாக இருக்கும். வேல் உவந்தாள் என்பதே இப்படி மருவியுள்ளது.

சங்கரநாராயணர் - கோமதி
ஹரிஹர க்ஷேத்திரமாக புகழுடன் விளங்கும் தலம் சங்கரநாராயணர் கோவில். இங்கு கோவில் கொண்டிருப்பவள் கோமதி அன்னை. அம்பாள் தவக்கோலம் பூண்ட தலங்கள் சில. அவற்றில் இதுவும் ஒன்று. ‘ஆடித்தபஸ், உற்சவத்தில் லட்சோப லட்ச ஜனங்கள் கலந்து கொள்கிறார்கள்’

வேதாரண்யம்
‘சுந்தரி பீடம்’ என்று தேவி பீடங்களில் சிறப்பு கொண்டது, வேதாரண்யம். பரமசிவனின் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. நால்வராலும் தேவாரப் பாடல் பெற்றது இத்தலம். இங்கு அன்னை வேதநாயகி என்று புகழப்படுகிறாள்.

திருக்கடவூர் அபிராமி
காலனையே தன் பக்தன் மார்க்கண்டேயருக்காகக் கடிந்த காலசம்ஹாரரும் அபிராமியும் வதியும் அழகு கொழிக்கும் கோவிலிது. அன்புடன் ஆராதித்த அபிராமிபட்டர் அன்னையின் அருள் பெற்ற தலம். அமாவாசையிலும் பூர்ண நிலவு காட்டி அபிராமி பட்டரை ஆண்டு கொண்டாள் இங்கு. அன்னையின் பேரில் பட்டர் அந்தாதி பாடினார். பிரசித்தமாக விளங்குபவள் தேவி அபிராமி.

அம்பர் மாகாளம்
சோமாசி என்ற நாயனாரின் சோம யாகத்துக்கு இறைவன் சண்டாள உருவத்தோடு எழுந்தருளி நேரிலே அவியைப் பெற்ற புனிதத்தலம். காளிதேவி அம்பன், அம்பராசுரன் என்ற அரக்கர்களைக் கொன்ற தோஷம் நீங்க இறைவனைப் பூசித்தாள். இங்குள்ள மோஹினி அம்மை மிக விசேமுடையவள். பூஜிப்பவர்கூட கையினால் தொடாது தூரத்திலிருந்து கோலால் ஆடை, மாலை முதலியன அணிவிப்பார். ‘பயக்ஷயாம்பிகை’ பயம் போக்கு பவளாக நின்ற கோலமாகத் யாசனத்தில் கருணையோடு அருள் பாலிப்பாள். இத்தலம் பூந்தோட்டம் (மாயவரம் - அறந்தாங்கி மார்க்கம்) ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது.
No automatic alt text available.Image may contain: 1 person
சமயபுரத்தாள்
இது திருச்சி அருகில் உள்ள தமிழகத்து முக்கிய மாரியம்மன் ஆலயம். பிரசித்தி பெற்றவள். தசரத சக்ரவர்த்தி பூஜித்த விக்கிரகம் என்று கூறப்படுகிறது. கண் கண்ட தெய்வம் இவ்வன்னை. உபாசனாசக்தியின் பலனை உடனுக்குடன் உணர்த்தும் கருணை முகில்.
சிறந்த பக்தரான ஒருவர் தர்மகர்த்தாவாக இருந்த காலம். உற்சவம் சிறப்பாக நடக்கும். யானை மட்டும் கோவிலுக்கு அப்போது இல்லை. ஆகவே பக்கத்து ஊர்களிலிருந்து வரவழைப்பது வழக்கம். என்ன காரணமோ அந்த வருடம் யானை வராது என்று கூறிவிட்டனர். பக்தர் தவித்தார். திருச்சி தெப்பக்குளத்து வீதியில் மேலும் கீழும் நடந்து கொண்டே கவலை தோய்ந்து காணப்பட்டார். ஒரு வியாபாரியான நண்பர், இதைக் கண்டவர் தாமே வாங்கித் தருவதாகக் கூறினாராம். அதற்கேற்றாற்போல் ஆச்சர்யமாக குறைந்த விலையில் கிடைத்ததாம் ஒரு யானைக்குட்டி.
கோவிலுக்கு மேளதாளத்தோடு யானையை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. புதிதாகையால் திடீரென்று மிரண்டால் என்ன செய்வது என்று இரண்டு தேங்காய்களை எடுத்துவரச் சொன்னான் பாகன். ஆனால் எடுத்துவர மறந்து விட்டனர். ஊர்வலம் தொடங்கி காவிரிப்பாலம் தாண்டியதும், யானை மிரளுவதைக் கண்ட பாகன் தேங்காய் கேட்டான். தேங்காய் இல்லை. அன்னையின் அருளால் உடனே சாலை ஓரத்திலிருந்த மரத்திலிருந்து இரண்டு தேங்காகள் விழுந்தன. யானைக்கு அதைக் கொடுத்தான். ஆயினும் அது அடங்காமல் குறுக்கே இறங்கி ஓடிவிட்டது. கடைசியில் யாவரும் வியக்கும் வண்ணம் அன்னையின் சந்நிதியில் கொடி மரத்திற்கு அருகில் போய் நின்றதாம். முன்பின் தெரியாத புது யானை தானே கோவில் முன் வந்து நின்றதைக் கண்டவர் மெய்சிலிர்த்தனராம்.
இதைப் போலவே மற்றொரு பக்தர் (திருச்சி மளிகைக்காரர்) வருடம் தோறும் வைகாசி 1ஆம் தேதி சிறப்பாக அபிஷேகம் செய்து அன்னதானம் முதலியனவும் செய்வது வழக்கம். கோவிலுக்கு எதிரேயுள்ள வாய்க்காலில் தண்ணீர் விட எவ்வளவோ கேட்டும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பக்தர்கள் சிரமப்படுவார்களே என்று வருந்தினார் அப்பக்தர். அன்னையின் அருளால் அன்று மழை விடாது பெய்து வாய்க்கால் நிரம்பி ஓடியதாம். குறையின்றி அன்னதானம் செய்தாராம். இன்றும் தொடர்ந்து இத்தருமத்தை நடத்தி வருகிறார். இப்படி ஏராளமான அனுபவ அதிசயங்கள். பிரார்த்தனைக்குரிய சிறந்த தலம். சமயபுரத்தாளுக்கு கும்பாபிஷேகம் என்றால், பணம் வேண்டுமே என்று கவலைப்படாமல் நடக்கும் கோயில் இது. அப்படி குவியும் நிதி. அன்பினால் கருணையினால் அடியார்களை ஆட்கொள்ளுபவள் ஆதிமகமாயி அம்மை சமயபுர நாயகி.

மாகாளிக்குடி
சமயபுரத்து மாரியம்மன் கோவிலுக்கு வெகு அருகில் ‘மாகாளிக்குடி’ என்ற தலம் உள்ளது. இது விக்ரமாதித்தனால் பூஜிக்கப்பட்ட விக்ரஹம் என்று கூறுகின்றனர். அமைதி யான கிராமிய சூழ்நிலையில் அருமையான கோவில் இன்று சிதிலமாக உள்ளது. இராஜராஜேச்வரியின் கோவில் இது என்று கூறுகின்றனர்.

சிறுவாச்சூர்
திருச்சி - பெரம்பலூர் பாதையில் உள்ள பிரசித்தமான பிரார்த்தனைத் தலமிது. இங்கு முடியிறக்க வரும் குடும்பங்கள் அநேகம். பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறாள் அன்னை. இக்கோவில் திங்கள், வெள்ளி இரண்டு தினங்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாள்களில் மூடியே இருக்கின்றது.இங்கு வந்து நீராடி இங்கேயே மாவு இடித்து மாவிளக்கு போடுவார்கள். மாவு இடிப்பதற்கு என்று ஆட்கள் இங்கு இருக்கின்றனர். தேவியின் சக்தி மிளிரும் சிறப்பான கோவில் இது.

கோனியம்மன் (கோவை)
ஒவ்வோர் ஊரிலும் கிராமதேவதை என்றும், எல்லைப்பிடாரி என்றும் சக்தியே வழிபடும் தெய்வமாயிருக்கிறாள். சில ஊர்களில் சிறப்புற்றும், பல இடங்களில் சாதாரணமாகவும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது. அக்காலத்தில் கோவை மாநகர் ‘கோவன் புதூர்’என்ற கிராமமாக இருந்தது. அக்கிராம தேவதையாக கோனியம்மன் அமர்ந்து ஊரைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றி வருகிறாள். ஊர் ஜனங்களும் நன்றிப் பெருக்கோடு இவ்வன்னைக்கு பொங்கல் இடுவதும் அபிஷேகம் செய்வதும் வழக்கமாகியது. ஆரவார மிகுந்ததான கோவையின் மத்தியில் அமைதியே உருவாக, காண்பவர் கருத்தை ஈர்க்கும் வண்ணம் ‘அஞ்சேல்’ என அபயம் கொடுத்து வீற்றிருக்கும் இத்திருக்கோலம் மனத்தை விட்டகலாது. கோவையின் பாக்கியமே கோனியம்மன்.
Image may contain: 1 person
கருவாழைக்கரை
மாயவரத்துக்கு அருகில் வனதுர்க்கை கோவில் உள்ளது. ஒரு சமயம் மிகவும் உக்கிரமாக இருந்தது இக்கோவில். உக்கிரத்தைக் குறைக்க சந்நிதிக்கு எதிரே குளம் ஒன்றை வெட்டச் சொல்லி காமகோடி பீட கருணைக்கு ஆக்ஞாபித்தார். உக்கிரச்சக்தி, இன்று அனுக்கிரஹ சக்தியுடன் செயல்படுகிறது. இதைத் தாண்டி சுமார் நான்கு மைலில் ‘கருவாழைக்கரை’ என்ற சிற்றூரில் உள்ள இம்மாரிக்கு ‘காமாட்சி’ என்று பெயர். எழிலும் துடிப்பும் கொண்ட அன்புருவான அன்னை. ‘இவளை’ ஆராதிக்கும் குடும்பங்கள் பல. தினம் உச்சியில் சரியான 12 மணிக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது. சிறிது தொலைவில் காவிரி அமைதியாக சிறு வாய்க்கால் போல கடலாடச் செல்கிறாள். இங்கு ‘காவிரியிலிருந்து நீர் சுமந்து வந்து அபிஷேகம் செய்கிறேன். தண்ணீர் (கிணற்றிலிருந்து) எடுத்து வைக்கிறேன்’ என்று பெரும்பாலும் பிரார்த்தித்துக் கொண்டு பக்தி சிரத்தையுடன் அதை நிறைவேற்றுகின்றனர்.

தஞ்சாவூர் மாரி
தஞ்சையின் பெரிய கோவிலும் ப்ரும்மாண்டமான லிங்கத்திருவுருவும் பெரிய நாயகியும், ஷண்முகசுந்தரன் முதலியவர்களும் நந்தியம் பெருமானும் உலகிலுள்ள கலைரசனை, பக்தி ரசனை, மிக்கோரை இழுக்கின்றனர் எனில் மாரியம்மன் பயம் காட்டி அடியாரைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்கிறாள். பெரியம்மை போடப் பெற்றவர்கள் வரிசையாக பிராகாரம் முழுவதும் இருப்பார்கள். அவ்வளவும் அன்னையின் அருட்சக்தியால் சமனமாகிறது. அஷ்டகம் படித்து வைசூரி குணமாவதைப் போல், அன்னை தஞ்சை மாரியைப் பிரார்த்தித்துக் குணம் கண்டவர் பலர். கண் பார்வை இழந்தவர்களுக்குக்கூட, பார்வை கிடைக்கச் செய்த கண்கண்ட தெய்வம், அன்னையின் அருளாலும் பிரபலத்தாலும், ஊரே மாரியம்மன் கோயில் என்று வழங்கலாயிற்று. (முன்பு புன்னைநல்லூர் என்று கூறப் பட்டது) ஆவணிமாதத் திருவிழாவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும்.

அலங்காரவல்லி
மூர்த்தி,தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பாக விளங்கும் தலம் ஹரித்துவாரமங்கலம். ‘அரதைப் பெரும் பாழி’ என்று அன்று விளங்கிய இப்பதி, இன்று ‘ஹரித்துவார மங்கலமாக’ மருவி வந்துள்ளது.
பக்தர் ஒருவர் சிவத்தை அனவரதம் சிந்திப்பார். சந்தனக் கட்டையை பொதி ஏற்றி வியாபாரம் செய்வார். வன்னிக்காடுகளின் வழியே செல்வார். ஆதவன் அரைவழி வந்து, உச்சி வேளையில் பெரிய குட்டை ஒன்றில் நீராடினார். விபூதியைக் காணோமே என்று சந்தனக் கட்டையை எடுத்து அருகிலிருந்த பாறையில் தேய்க்கிறார். கல்லிலிருந்து ரத்தம் பீரிடவே துணுக்குற்றார். ஆட்களை அழைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்: அருமையான சிவலிங்கம் வெளிப் பட்டது . பாதாளேச்வரர் என்று திருநாமம் சூட்டி அன்புடன் அழைத்தார். அழகிய கோவில் ஒன்றை உருவாக்கினார். நால்வரில் ஞானசம்பந்தப் பெருமான் காலினால் நடக்கவும் அஞ்சி, பரண் ஒன்று கட்டி அதிலிருந்து ‘பைத்த பாம்போடரைக் கோவணம் பாய் புலி’ என்று பதிகம் பாடிய தலம் இது. நீடாமங்கலத்துக்கு ஏழாவது மைலில் உள்ள தலம் இது. இங்கு அம்மை அலங்காரவல்லி அருள்பாலிக்கிறாள்.

திருவாமாத்தூர் வட்டப்பாறையம்மன்:
விழுப்புரத்துக்கு அருகில் செஞ்சி ரோட்டில் 4 மைல் தூரத்தில உள்ளது. இரட்டைப் புலவரால் பாடப்பெற்ற தலம் இது. மாடுகளுக்குக் கொம்பு முளைக்க அருளியதாக புராண வரலாறு கூறும். இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி கோவில் எதிரெதிரே உள்ளது. அம்பிகை ‘முத்தை வென்ற முறுவலாள்’ கோவிலுக்குத் தென்பக்கம் வட்டப்பாறையம்மன் சந்நிதி உள்ளது. சிக்கலான வழக்குகளில் மக்கள் அன்னையின் சந்நிதியில் சத்தியம் செய்யச் சொல்லி தீர்ப்பு காண்பார்களாம். பொய்ச் சத்தியம் செய்தால் பாறையிலிருந்து பாம்பு வந்து கடித்துவிடும் என்பது மக்கள் நம்பிக்கை.

கோலியனூர் பிட்லாயம்மன்
விழுப்புரம் - பாண்டி ரோட்டில் உள்ள கோயில் இது. இந்த வட்டாரத்து மக்களின் பிரார்த்தனைத் தலம் கோலியனூர். சக்தி வாய்ந்த மாரியம்மன் இவள். ஆள் உயரத்துக்கு பாம்புப் புற்று கோவிலினுள் உள்ளது. அதில் பெரிய நாகங்கள் இருந்து பக்தர்கள் வைக்கும் பால், முதலியவற்றை அருந்துமாம். ஆடிவெள்ளி, தைவெள்ளி என்றால் அக்கம்பக்கத்து ஜனங்கள் திரண்டு வந்து தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

செங்கழுநீர் அம்மன் (புதுவை)
பாண்டிச்சேரியில் வீராம்பட்டணத்து கடற்கரையோரம் கொலு வீற்றிருக்கும் இச் சக்தியும் சமயபுரத்தாள் போல பக்தர்களைக் கவருபவள். மாசி மகம் உற்சவம் என்றால் மக்கள் வீராம்பட்டினம் செல்லாமல் இரார். அழகிய புராதனமான ஆலயம் ஆழியின் கரையிலே உள்ளது.

பட்டீச்வரம்
பிறப்பில் வேதியனாகவும், பதவியில் அமைச்சராகவும், குணத்தில் உயர்ந்தவராகவும், தவத்தில் சிறந்தவராகவும், தர்மத்திற்கு இருப்பிடமாகவும் விளங்கிய உத்தமர் ஐயன் என்று மக்கள் உணர்ந்த ஸ்ரீகோவிந்த தீக்ஷிதர். பக்தியில் ஆழ்ந்து திளைத்த தலம் பட்டீச்வரம். கும்பகோணத்துக்குத் தென்மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ள அழகு கொழிக்கும் அம்பிகைப் படிவம் இது. கும்பகோணத்து (மங்களாம்பிகை) மந்திர பீடேச்வரியிடம் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், பட்டீச்வரத்தில் பற்று மிகுந்து அன்னையின் அருளிலே மூழ்கினார். அன்னை ஞானாம்பிகையாக தவமிருந்து கருணைக்கடலான பரமசிவத்தை மணாளனாக அடைந்த பதி இது.

திருமயிலை கற்பகம் (சென்னை)
இறைவி மயிலுருக் கொண்டு இறைவனை வழிபட்ட தலம் திருமயிலை என்னும் மயிலாப்பூர். கற்பகாம்பாள் கடைக்கண் நோக்கிற்கு ஆளாகும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இறந்த பூங்கோதையையே உயிர் பெற்றுவரத் துணை செய்த கடைக்கண்ணையுடையவள் இவ்வன்னை. பாடல் பெற்ற பழம் பெரும்பதி.

மாங்காடு
சென்னை பூந்தமல்லிக்கு அருகேயுள்ள அற்புதமான சக்தித்தலம் இது. ஆதிசங்கரரே ‘அர்த்த மேருவை’இங்கு பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர். தவத்தின் பயனாக எந்தப் பராசக்தி அடையப்படுகிறதாக வேத உபநிஷதங்கள் கூறுகின்றனவோ, அந்தத் தவப்பயனான அன்னையே இங்கு ஐந்து பக்கமும் அக்னி சூழ ஒற்றைக் காலில் நின்று தவமியற்றுகிறாள். ‘ஒற்றைக் காலில் நின்று சாதிக்கிறாள்’ என்பது வழக்கு. அன்னை இவ்வாறு உலகம் உய்ய தவக் கோலம் பூண்டிருக்கிறாள். பக்தர்களுக்கு விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறாள்.

திருவேற்காடு
கருமாரியம்மன் கோயில் சமீப காலத்தில் பிரபலமாகி ஞாயிறுதோறும் மக்கள் திரள் திரளாகக் கூடுகின்ற அருள் விளங்கும் அற்புதத் தலம் இது. பலன் கண்டவர் மீண்டும் மீண்டும் செல்வது இயல்புதானே? சென்னையைத் தலமோங்கு க்ஷேத்ரமாக்கும் பதிகளில் இதுவும் ஒன்று.

பெரியபாளையத்தாள்
‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என்று அபிராமி பட்டர் கூறியதுபோல், அகில உலகத்தாய் ஊருக்கு ஆத்தாளாக இருப்பதில் என்ன வியப்பு உள்ளது? பெரிய பாளையம் என்னும் ஊரைத் தெரியாத சென்னையும் அதன் சுற்றுப்புரத்து வாசிகளும் இல்லை எனலாம். “மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! ‘பாடைக்கட்டி’ எடுத்து வந்து போடுகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது. எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது.

கனகதுர்க்கை
விஜயவாடாவில் கிருஷ்ணா நதி ஸ்நானமும், கனக துர்க்கையின் தரிசனமும் பரம பாவனம். சண்டிகாதேவியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். அன்னைக்கு பிரார்த்தனை செய்து கொண்டு வஸ்திரங்கள் ஏராளமாகப் அளிக்கின்றனர். அவற்றை ஏலத்தில் எடுத்து அன்னையின் நினைவாக உடுத்துவோரும் உண்டு. சிறு குன்றில் ரமணீயமான சூழ்நிலையோடு விளங்குகிறது துர்க்கை க்ஷேத்திரம்.

ஸ்ரீ சாரதாதேவி
சிருங்கேரியின் ப்ரதான தேவி அன்னை சாரதாம்பாள். ஷண்மத ஸ்தாபனம் செய்த ஸ்ரீசங்கரர் மண்டனமிச்ரரை வாதில் வென்று அன்னை ஸரஸ்வதியின் அவதாரமான சரஸவாணி பின் தொடர வந்து கொண்டிருந்தாள். திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை ஸ்ரீசங்கரருக்கு விதித்தாள் வாணி. கேட்டுக் கொண்டே வந்தவர் நூபுரத்து ஓசை நிற்கவே திரும்பினார். அன்னை வாணி அங்கேயே நின்று விட்டாள். கர்ப்பமுற்றுத் திணறும் தவளையொன்று வெயிலின் தாபம் தாங்காமல் தவித்தது. அதை, இயல்பாக பகைக் குணம் கொண்ட பாம்பொன்று படமெடுத்து நிழலளித்துக் காத்ததைக் கண்டார். ஆனந்தமான துல்லிய படிக நீரோடும் துங்காவின் கரையில் வெள்ளைத் தாமரையில் வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளை உள்ளம் கொண்டோர் உள்ளத்தே விளங்கும் வாணிக்கு பீடம் அமைத்தார். புகழ் ஓங்கு பெரும் பீடமாக சிருங்கேரி ஆல்போல் தழைத்து இன்று விழுது விட்டு வளர்ந்து ஞானதாகம், வேதாந்தப் பசி, தவவேட்கை கொண்டோரைத் தன் நிழலில் அருளுடன் அணைக்கிறது.
சுற்றிலும் இயற்கை, வனாந்தரமும் மலையும், ஆறும் அன்னையின் ஆலயமும், வித்யாரண்யர் என்ற வித்தகப் பேரருளாளரின் கோயிலும் கண்ணையும் கருத்தையும் கவரும்.

குருக்ஷேத்திரம்
குருக்ஷேத்திரம் மலைவாச ஸ்தலமாகிய சிம்லாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் மார்க்கத்தில் ‘அம்பாலா’ சந்திப்பின் வழியாக 112 கி.மீ. தொலைவில் உள்ளது. புராதனச் சிறப்பும் பெருமையும் கொண்டது இத்தலம். பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மகா பாரத யுத்தம் இங்குதான் நடந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வூரில் அநேக நீர்நிலைகள் உள்ளன. அந்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான அழகிய செந்தாமரைப் பூக்களும் வெண் தாமரைப் பூக்களும் பூத்து நிரம்பிக் கிடக்கின்றன. இது காண வேண்டிய காட்சிகளில் அருமையான ஒன்றாகும். யுத்தத்தில் ஈடுபட்டு மாண்ட போர் வீரர்களே இப்படி மலர்களாக மலர்ந்திருப்பதாக அழகான கலா ரசனையோடு கூறப்படுகிறது.
இங்கு நீராட வேண்டிய முக்கிய தடாகமாகிய புஷ்கரம் தாமரை மலர்கள் நிறைந்து தாமரைக்குளமாகக் காட்சியளிக்கிறது. தரிசிக்க வேண்டிய இறைவர் “தானேச்வர மகாதேவ்” இறைவி ஸ்தாணுப் பிரியை. இது ஒரு சக்தி பீடமாக விளங்குகிறது.

சோமநாதம்:
பன்னிரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாதம் பிரபாச க்ஷேத்திரம் என தேவிக்குரிய படிவத்தில் புகழ் பெற்றது. சந்திரபாகா என்றும் இத்தேவியைக் கூறுவர். தக்ஷனால் ஏற்பட்ட சாபம் நீங்க சந்திரன் உபாசித்த தலமாகக் கருதப்படுகிறது.

ஜ்வாலாமுகி: 
பஞ்சாப் அம்பிகையின் நாக்கு விழுந்த இடமாகக் கூறப்படும் இத் தலத்து தேவி அருவுருவாக அக்னி ரூபமாக விளங்குகிறாள். எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும், அது அப்பொருளைத் தன்மயமாக்கிவிடுகிறது. இது இன்றும் காணும் உண்மை. எப்பொருளையும் தன்மயமாக்கும் அக்னி வடிவம். அன்னையும் எவ்வுயிரையும் தன் மயமாக்குகிறாள் என்று கூறாமல் விளக்குகிறது இப்பதி. அக்னியின் ஜ்வாலைக்கு (தீநாக்குகள்) பூஜை நடக்கிறது. கர்ப்பக் கிருஹத்தின் பல இடத்தில் சுடர்விட்டு எரியும் தீயை இன்றும் காணலாம். தங்கக் கூரை வேய்ந்த இத்தலம் காங்கரா ஜில்லாவில் மலைகளின் இடையே விளங்கி பாரதத்தின் ஆன்மிகச் சுடர் இன்றும் கொழுந்து விட்டு இன்றும் எரிகிறது என்பதை நினைவூட்டுகிறது.
இங்கேயேதான் வஜ்ரேச்வரியின் ஆலயமும் இருக்கிறது. பதான் கோட்டிலிருந்து பஸ்கள் இக்கோயில் வரை செல்லும்.
காச்மீரம் விவேகானந்தரை மிகவும் கவர்ந்தவள் அன்னை க்ஷீர பவானி. காச்மீரத்து ஸ்ரீநகரிலிருந்து பத்து, பதினைந்து மைல்கள் சென்று ‘துலாமுலா’ என்ற இடத்தை அடையலாம். நான்கு புறமும் ஜலத்தால் சூழப்பட்ட தீவின் மத்தியில் மரத்தடியில் உள்ளது ஒரு குளம். இங்குள்ள மண்டபத்திலே ஸ்ரீ சங்கரரும், பவானியும் அமைந்துள்ளனர். இத்தீர்த்தத்தையே தேவியாகக் கருதி பூஜை செய்கின்றனர்.

சிவப்பு, பச்சை, வெண்மை என்று இக்குளத்து நீர் தன் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் என்கின்றனர்.
கருமையாகக் காணப்பட்டால் சம்பவிக்க இருக்கும் கெடுதலைக் குறிக்கும் என்று நம்புகின்றனர்.

வைஷ்ணவி ஜம்முவிலிருந்து ‘காட்ரா’ வரை பஸ் செல்லும். பிறகு நடந்து சுமார் 15கி.மீ. மலை ஏற்றம், பாணகங்கை என்ற சிற்றாறு ஓடுகிறது. குகைவாசியாக வைஷ்ணவி தேவி இங்கு உயர்ந்த இடத்திலிருந்து பாரதத்தைக் கண்காணிக்கிறாள்.

சிறுவாயிலாக இருக்கின்ற நுழைவாயிலானதால் முதலில் தவழ்ந்துதான் உள்ளே செல்லமுடியும். நல்ல ஐதீகம். அன்னையிடம் மண்டியிட்டுத் தவழ்ந்து குழந்தை உள்ளத்தோடுதான் வரவேண்டும் என்பதற்குத் தகுந்த அத்தாட்சியுடன் கொலுவிருக்கிறாள். தனக்கு அளிக்கப்படும் காணிக்கையில் ஒரு பகுதியைப் பிரசாதமாக அளித்து அருளுடன் பொருளும் பெருக பக்தனை ஆசீர்வதிக்கிறாள் அன்னை.

ஹரித்வாரம் மோக்ஷபுரிகளில் ஒன்றான மாயாபுரி என்னும் ஹரித்வார் யாத்திரிகர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குகிறது. அன்னை கங்காதேவியின் அரவணைப்பினால் அது பேராதவு பெற்றிருக்கிறது. மாலை நேரத்தில் அன்னை கங்கைக்கு இலையிலே கப்பல் போல் செய்து ‘ஹாரதி’ பாடி தண்ணீரில் மிதக்க விடுவது இங்கு கண்கொள்ளாக் காட்சி. எளிய பிச்சைக்காரன் முதல் பெரும் தனவந்தர் வரை இதை சக்திக்குத் தகுந்தவாறு செய்யாமல் இருப்பதில்லை. கரையிலே ஆங்காங்கே புராணங்கள், கதை முதலியனவற்றைப் பிரசாரம் செய்வதைக் கேட்கக் கூடியிருக்கும் ஜனங்களைப் பார்த்தால் இது பூலோகமா கயிலாயமா என ஐயம் தோன்றும்.
கேதாரம்கேதாரத்தின் அன்னை உலகுக்கு வழிகாட்டும் அன்னையாக ‘மார்க்க தாயினி’ என்ற பெயருடன் விளங்குகிறாள். ஆறுமாதம் பனியினால் மூடியிருக்கும் கோயில். எளிதில் அடையமுடியாத ஒரு படிவம். சிலரே இதைக் காணும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
பத்ரிநாத்நர - நாராயணர் தவமிருந்த புனிதமான பத்ரிகாச்ரமம் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் பிரதானமாக விளங்குகிறது.
நர - நாரணர்களின் தவத்தைக் கெடுக்க இந்திரனால் தேவமாதர் பலர் அனுப்பப்பட்டனர். ஆனால் தெய்விகத் தவச்ரேஷ்டர் துடையைத் தட்டினாராம். அதிலிருந்து அதிஸௌந்தர்யமான பெண் தோன்றினாளாம். வந்த அரம்பையர் வெட்கிச் சென்றனராம். அப்பெண் ‘ஊரு’ (தொடை)விலிருந்து தோன்றியதால் ஊர்வசி என்று போற்றப்படுகிறாள்.
இப்படியே நேபாளத்திலும் இன்னும் பல பிரதேசங்களிலும் பராசக்தியானவள் பிரசித்தமாக விளங்கி அருள் பாலிக்கிறாள்.



No comments:

Post a Comment