Friday, October 31, 2014

கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமி

ஒம் ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமியே நமஹ


வரலாறு
-----------------
பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய், முழுமுதற்பொருளின் மானிட வடிவமாய், சடாமுடியோ, கம்பீரமான தோற்றமோ இல்லாமல், ருத்திராட்சம் அணியாமல், காவி உடுத்தாமல், கமண்டலம் எடுக்காமல் ஏன் கௌபீனம் கூட இல்லாமல் - இயற்கை அன்னை தன்னைப் படைத்த வண்ணமே, ஒரு மாமுனிவர் இப்புண்ணிய பூமியாம் பரத கண்டத்தில் உலகை உய்விக்கும் பொருட்டு அண்மைக்காலத்தில் எழுந்தருளியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த இடம் ஒர் ஏகாந்தமான காடோ, மலையோ, குகையோ அன்று; கங்கை, நர்மதை, காவிரி போன்ற நதித்தீரமும் அன்று; தமிழ்நாட்டில் கசவனம்பட்டி என்னும் குக்கிராமமே அத்திருத்தலமாகும். அவர்கள் ஒர் அவதூதராகவும் (நிர்வாண முனிவர்), மிகவுயர்ந்த ஞானியாகவும், “தலைசிறந்த மனிதர்கள் அமைதியாகவும், மௌனமாகவும், பிறருக்குத் தெரியாமலும் இருக்கிறார்கள்” என்று அருளிச்செய்துள்ள சுவாமி விவேகானந்தரின் கூற்றுக்குக் கண்கண்ட இலக்கணமாகவும் திகழ்ந்தவர்கள்.

அவர்கள் பொதுவாக மௌனமாகவே இருந்தார்கள். இருப்பினும் பாரதநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் கூட ஏராளமானோர் வந்து சுவாமிகளைத் தரிசித்து அவர்களின் ஆசியும், அருளும் பெற்றுச் செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற மகான்களெல்லாம் தங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களிடம் இந்த அவதூதரரைப் பற்றிப் புகழ்ந்துரைத்து, அவர்களைப் போய் காணும்படி சொல்வார்கள். திருவண்ணாமலை யோகி இராம்சுரத்குமார் அவர்கள், தான் ஒரு அலை என்றால் கசவனம்பட்டி மகான் ஒரு கடல் என்றும், திருக்கோயிலூர் ஞானானந்தகிரி சுவாமிகளால் ஜோதி என்றும், துருவநட்சத்திரம் என்றும், ஜமீன் புரவிப்பாளையம் கோடி சுவாமிகளால் மகான்களுக்கெல்லாம் மகான் என்றும் போற்றப்பட்டவர்கள் நம் சுவாமிகள்.
சுவாமிகள் துறவு என்னும் சொல்லுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த உலகத்திற்கு எந்நிலையில் அவதாரமெடுத்து வந்தார்களோ அந்நிலையிலேயே உலக மக்களுக்குக் காட்சியளித்து அந்த நிலையிலேயே மகாசமாதி அடைந்தவர்கள் நம் சுவாமிகள். நிர்வாண நிலையில் அவர் இருந்தாலும் அவரை அன்புடன் பெற்ற குழந்தையாய் உற்றார் உறவினர் போன்று பேணிக்காத்த பெருமை இவ்வூர் மக்களையும், அவரிடம் உண்மை அன்பு செலுத்திய பக்தர்களையும் சாரும். அவரைத் தரிசித்த பக்தர்களும் அவரின் உயர்ந்த நிலை கண்டு, எந்தவித விகற்பமுமின்றி பிறந்தமேனியாய் விளையாடிக் திரியும் ஒரு சிறு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தவர்களும் உண்டு. இக்கலியுகத்தின் பார்த்தசாரதி இவர்தான் என்று உணர்ந்தவர்களும் உண்டு. அந்தப் பரிவும், பக்தியும், பாசமும் சுவாமிகள் மீது எந்த வித அசூசையையும், அருவருப்பையும் பக்தர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தவில்லை; மாறாக அருள் ஒளியாகவும், ஆனந்த ஊற்றாகவும், அச்சம் அகற்றி ஊக்கமும், பலமும் அளிக்கும் சக்தியாகவும் சுவாமிகள் அவர்களுக்கு விளங்கினார்கள்.
ஒவ்வொரு மனிதரும் பரம்பொருள் நிலையை அடைய முயற்சி தேவைப்படுகிறது. அம்முயற்சி பலனளிக்க நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆகலாம். இயேசு - கிறிஸ்து நிலையை அடை, சித்தார்த்தர் - புத்த நிலையை அடைய, இராமகிருஷ்ணர், பரமஹம்ச நிலையை அடைய, நரேந்திரர் உலகம் போற்றும் விவேகானந்தராக சிறிது காலம் ஆயிற்று. ஆனால் இந்தத் தெய்வ நிலையைத் தோன்றியவுடனேயே, பெற்று அவதூதராக விளங்கியவர்கள் நம் மௌமகுரு சுவாமிகள். பற்றற்ற நிலையை நிர்வாணம் என்று கூறுகிறது. பௌத்தம். அந்த நிர்வாணத்திலும் முழு நிர்வாணமாகக் காட்சி அளித்தவர்கள் நம் மௌனகுரு சுவாமிகள்.

சுவாமிகளின் அவதாரம்
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்குக் கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டிக்காட்டில் பிறவிக்கோலத்துடன் வேலிகளிலுள்ள பச்சை இலைகளை உண்ணும் நிலையுடன், பத்துப் பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க வயதில் பித்தனைப்போல், பால் முகத்துடன், மாநிறத்துடன், மெலிந்த மேனியாய். நீண்ட கைகள், அழகிய பாதங்கள், சிவந்த கண்களுடன், தெளிந்த ஞானத்தோடு, படிப்பறிவில்லாத சாதாரண மனிதன் போல் சுற்றித் திரிந்து கொண்டு இருந்திருக்கிறார். அது சமயம் இவ்வூர் வேளாண்மைப் பெருமக்கள் ஆடு, மாடு மேய்ப்பதற்கு அப்பகுதிக்குச் செல்வது வழக்கம். இதில் ஒரு சிலர் பயபக்தியுடன் சிறுபிள்ளைகளிடம் பழகுவது போல் தொடர்பு கொண்டு, தாங்கள் எடுத்துச் சென்ற ஆகாரத்தைக் கொடுத்து, ஊட்டிவிட்டுப் பழக்கி அரைகுறையாக உபதேசித்து, ஏதோ இவ்வூருக்கு அவர்கள் கூப்பிட்டால் வரக்கூடிய அளவிற்கு ஒரு தொடர்பை உண்டு பண்ணிவிட்டார்கள். அவ்வாறே அழைத்தும் வந்தனர்.

இவ்வாறிருக்கும் சமயத்தில் சுவாமிகள் சிலகாலம் கோனூரிலும், சில தினங்கள் வெல்லம்பட்டியிலும் திரிந்துள்ளார்கள் இதைக் கண்ணுற்ற கசவைப் பெரியோர்கள், சுவாமியை ஊருக்கே அழைத்து வந்துவிட்டார்கள். ஊருக்கு அழைத்து வந்து, நீராடச் செய்து அவருக்கு ஆடை அணிவித்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அதை சுவாமியவர்கள் கந்தல் கந்தலாக கிழித்து எறிந்துள்ளார்கள். இவ்வாறு பலமுறை செய்தும் பலனளிக்காமல் போகவே, அவரைப் பிறவிக்கோலத்துடனேயே விட்டுவிட்டனர். சுவாமியவர்கள் பிறவிக்கோலத்துடன் இருப்பது கண்டு மக்கள் கூச்சமோ, அருவருப்போ அடைந்தது கிடையாது, மாறாகத் தெய்வப் பிறவியாக அவதார புருஷராக ஏற்கத் தொடங்கினார்.
அடிக்கடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுவார்கள். பிறகு ஊர்க்காரர்கள் சென்று அழைத்து வருவார்கள். அவ்வாறு சென்றவிடங்களில் ஈனர்களால் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். ஆனால் யார் அடித்தாலும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இத் தெய்வக் குழந்தையை, ஆம் அப்படித்தான் கசவை மக்கள் அவரைக் கருதி நிலையாக கசவனம்பட்டியிலே இருக்குமாறு செய்தனர். யாரேனும் ஒருவர் அவர் கூடவே இருந்து காவல் காத்தனர்.
பகலில் சுவாமிகள் ஊரின் நாலாபுறங்களிலும் திரிவார். குறிபாக அருள்மிகு சிவசக்தி கோயில், மாலா கோயில், பூங்காணியம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் இருப்பார். சிறு குச்சிகளால் தரையில் கிறுக்கிக்கொண்டே இருப்பார். பகலிலும் இரவிலும் பெரும்பாலும் முத்தாலம்மன் கோயிலில் அமர்ந்திருப்பார். இரவில் முத்தாலம்மன் கோயிலின் மூலஸ்தானத்தில் பள்ளிகொள்வது வழக்கம். அதற்காக ஒரு கட்டிலும் விரிப்பும் போட்டுவைத்துவிடுவர். அவ்வாறு சுவாமிகள் பயன்படுத்திய கட்டில் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



சுவாமியவர்கள் ஊரில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் விளையாடித்திரியும் குழந்தையைப் போல போவார்கள். வருவார்கள். இது நல்ல வீடு, கெட்ட வீடு என்ற பாகுபாடு கிடையாது. அவரவருக்குத் தகுந்தவாறு கூழைக்கலக்கி, சிறிது வெங்காயம், இரண்டு மிளகாய் போன்றவை கொடுத்தால் சுவாமியவர்கள் அதை வாங்கி அன்புடன் குடிப்பதை நாங்கள் கண்குளிரக் கண்டதுண்டு. அதே நேரத்தில் (பெரும் பணக்காரர்கள் அனைத்து வகை உயர்பதார்த்தங்களை வைத்துக் கொண்டு சுவாமிகளைப் பின் தொடர்ந்து சென்று படைத்தாலும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்). பக்தர்கள் கொண்டு வரும் உயர்வகைப் பதார்த்தங்களை சுவாமிகள் விரும்பிச் சாப்பிட்டதில்லை. மாறாக அரிசி, கீரை, உணவுகளை சிறிது எடுத்துக் கொள்வார்கள். பக்தர்களால் அன்புடன் கொடுக்கப்படும், டீ, காபி, பால் போன்ற பானங்களை மருந்து குடிப்பது போல் குடிப்பார்கள். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்காமல், மடக்மடக்கென்று வேகமாகக் குடித்து விடுவார்கள். சிறிது மிச்சம் வைத்து வைத்து விடுவார்கள். அதை பக்தர்கள் பிரசாதமாக புகைப்பார்கள். சிகரெட்டை மட்டும் வேண்டாமென்று கூறியது கிடையாது. சுவையான பதார்த்தங்கள் எதையும் விரும்பிச் சாப்பிடாத சுவாமிகள், சிகரெட்டில் மட்டும் அவ்வளவு பியும் காட்டியது ஏன்? இதில் ஒர் ஆழ்ந்த உட்கருத்து உள்ளது. உடல்நலத்திற்குத் தீங்கிழைக்கக் கூடிய இதை அனைத்தும் அறிந்த நமது சுவாமிகள் நன்கு அறிந்தவர்கள்தான். இருப்பினும் பிறர் கொடுத்த சிகரெட்டுகளைப் புகைத்ததன் மூலம், அவர்களுடைய பாவங்களையும், துன்பங்களையும் பாவங்களை தான் ஏற்றுக் கொண்டு அருள்புவதற்காகவே அவ்வாறு செய்தார்கள் என்பது தெளிவு. எப்படி தெளிவு. எப்படி உலக மக்களுக்காக, உலக மக்களின் பாவங்களை ஏற்றுத் தேவகுமாரன் இயேசு சிலுவையில் அறையப்பட்டாரரோ, எப்படி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் தன் சீடர்களுக்குத் தீட்சை வழங்கி அவர்கள் செய்த பாவங்களை ஏற்று அவர்களைக் காத்தாரோ, அதைப்பபோலவே இந்த ஞானியும் எந்த ஒரு பக்தன் சிகரெட் கொடுத்தாலும் வேண்டாம் என்றும் கூறாமல், அதை ஏற்றுப் புகைத்து அப்பக்தனுடைய பாவங்களைத் தான் ஏற்று அப்பக்தனுக்கு அருள்புந்தார்கள்.
சில சமயங்களில் அவர்கள் பாஷையில் முணுமுணுத்துக் கொண்டிருப்பார். பக்தர்கள் கொண்டுவரும் அன்ன ஆகாரத்தைச் சிறது எடுத்துக் கொண்டு பின்பு அவர்கள் கொடுக்கும் சிகரெட்டைப் பற்ற வைத்துவிட்டால், குடித்துக் கொண்டே, உட்கார்ந்திருக்குமிடத்தில் குச்சிளைப் பொறுக்கிக் கிறுக்கிக் கொண்டே இருப்பார்கள். சாதாரணமானவனுக்கு என்னடா தரையில் கிறுக்கிக் கொண்டே இருக்கின்றார். என நினைக்கத் தோன்றும். ஆனால் அவ்வாறு எழுதுவது அன்று வந்துள்ள பக்தனின் தலையெழுத்தை மாற்றத்தான், சுவாமியவர்கள் அவ்வாறு கிறுக்கி அந்தக் குச்சிகளை அந்தந்த பக்தர்களுக்குச் சிற்சில சமயங்களில் வழங்குவதுண்டு.

இயற்கை அன்னை தன்னைப்படைத்த வண்ணமே காட்சி அளித்த சுவாமிகள் பார்வைக்கு ஒர் ஏழை விவசாயி போல் காணப்பட்டார்கள். ஊர் மக்களும், வரும் பக்தர்களும் அவருக்கு நெற்றி மற்றும் உடல் முழுவதும் திருநீறு பூசி, சந்தனமிட்டு, குங்குமமிட்டு விபூதியை பக்தர்கள் விரலால் எடுத்து நெற்றியில் பூசிக் கொள்வார்கள். போவோர், வருவோர் எல்லோரும் அவர்களின் காலைத் தொட்டு வணங்கிச் செல்வது வழக்கம். சுவாமிகள் எதையும் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்கள் ஏதோ ஆகாயத்தைப் பார்ப்பது போன்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுவாக இந்த ஞானி எவடமும் பேசியது கிடையாது இருப்பினும் சுவாமியவர்களைக் காண வரும் பக்தர்கள் எந்த மொழியில் பேசினாலும், உம் போயிட்டு வா, போ, நடக்கும் என்று ஒரிரு வார்த்தைகள் அந்தந்த மொழியில் பதில் கூறி அனுப்புவார்கள். அதைக் கண்டு வியப்புற்றோர் ஏராளம். எந்நேரமும் யாருக்கும் புலப்படாத பாஷையில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்.

சுவாமிகளுக்குச் சிற்சில நேரங்களில் கோபம் வருவதுண்டு. ஆனால் அது வெறும் தோற்றமே. அவரை நாடி வந்த பக்தர்களுக்குச் சில உண்மைகளை உணர்த்தும் பொருட்டும், அவர்களைத் திருத்தும் பொருட்டும் கோபத்தைக் காட்டுவார்கள் . அஃது அவர்களுக்குப் புரிவதற்குத் தகுந்த பக்குவமில்லாமல் காலம் கடந்து புரிந்தவர்களும் உண்டு. உடனே புரிந்து அவர் மகிமையை உணர்ந்தவர்களும் உண்டு.

தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அருள் வழங்குவதில் சுவாமிகள் ஒரு வினோதமான முறையைக் கையாண்டார்கள். கையை உயாத்தியோ அல்லது தலையைத் தொட்டோ அவர்கள் ஆசிவழங்கியதில்லை. அருள் புரிந்ததில்லை. கையால் அறைந்தும், காலால் உதைத்தும், அடிப்பது போல் அணைத்தும், வெறுப்பது போல் காட்டி அன்பு செலுத்தியும் திட்டுவது போல் திட்டி ஆசீர்வதித்தும் அருள்புந்தார்கள். சுவாமிகளிடம் அடியும், உதையும் பெற்றவாகள் அவற்றின் உட்பொருளை அப்போது உணர்ந்தார்களோ இல்லையோ தெரியாது, ஆனால் பிற்காலத்தில் அவற்றால் பெரும்பேறு பெற்றதாக உணர்ந்தார்கள்.

சுவாமிகளுடைய திருமேனி எக்காலத்திலும் பெரும்பிணி எதுவாலும் பீடிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் ஒரு போதும் மருந்துகள் உட்கொண்டது இல்லை. ஒரு சமயம் ஒரு வெறிநாயால் கடிக்கப்பட்ட போது கூட வைத்தியம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்கள். இருப்பினும் அந்தக்காயம் ஒருநாட்களில் தானாகவே குணமடைந்துவிட்டது. பல பெரிய மகான்களுடைய உடல்களெல்லாம் தங்கள் அடியார்களுக்கும், சீடர்களுக்கும் அருள்புந்த காலத்தில் அவர்களுடைய பாவங்களை ஏற்றதனால் அம்மகான்களுடைய உடல்கள் துன்புற்றதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் அனைத்தையும் பஸ்பமாக்கும் பிரம்மாக்கினியாய் விளங்கிய நமது சுவாமிகளின் திருமேனியை எந்தவொரு பாவமோ, தோஷமே தீண்டமுடியவில்லை.

எல்லையற்ற பரம்பொருளின ஈடு இணையற்ற வெளிப்பாடாகவும், நம்பிக்கைக்கும், பலத்திற்கும் கலங்கரை விளக்காகவும், அருளுக்கும், கருணைக்கும் ஊற்றாகவும், அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் வடிவாகவும் எழுந்தருளியிருந்த இந்த மகாபுருஷர் தன்னுடைய மானிட லீலையை முடித்துக் கொண்டு துந்துபி வருடம், ஐப்பசி மாதம் 5 ஆம் நாள் (22.10.1982) வெள்ளிக்கிழமை மூல நட்சத்திரத்தில், அதிகாலையில் தனது பரிபூரண பிரம்ம நிலைக்கு மீண்டார்கள்.

சுவாமியவர்கள் மகாசமாதி அடைந்து மறுநாள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தனது ஆன்ம ஒளியை உடலிலிருந்து பிரிக்காமலேயே பிரகாசித்திருந்தார்கள். மறுநாள் ஐப்பசி மாதம் ஆறாம் நாள் (23-10-1982) சனிக்கிழமை சமாதி வைக்கும் நேரத்தில் அதுவரை வெளிர்ந்திருந்த வெண்மேகக் கூட்டங்கள், சுருண்டு திரண்டு, அந்தக் குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்தது போல், கனமழை பெய்தது.

அந்த நெடுமாலின் வாகனம் (கருடன்) மும்முறை வட்டமிட்டு வலம் வர, ஆன்ம ஜோதி அருள் ஜோதியாகப் பக்தர்களுக்குப் பிரகாசிக்க, சுவாமியவர்களின் திருமேனி, சுவாமிகளுக்காக அமைக்கப்பட்ட குகைக்கோயிலில் முறைப்படி வைக்கப்பட்டு, வேத முறைப்படி சகல அபிஷேங்களும் செய்யப்பட்டு, கற்பூரம், விபூதி, சந்தனம், பன்னீர் ஜவ்வாது மற்றுமுள்ள வாசனைத் திரவியங்களால் நிறைவு செய்யப்பட்டது.
கசவனம்பட்டி போகும் வழி
-----------------------------------------------
சென்னை அல்லது எந்த ஊரிலிருந்தும்:
முதலில் திண்டுக்கல் செல்லுங்கள். கன்னிவாடி அருகில் இருக்கும் கசவனம்பட்டிக்கு திண்டுக்கல்லிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. ஆட்டோவிலும் செல்லலாம்.
https://www.kasavanam-siddhar.org/
I.Anandan (Trustee). H/P 9787618855 / 9486502714
Sri Jyothi Mouna Nirvana Swamigal Trust
Kasavanampatti-Post
Via-Kannivadi
Dindigul-District
Tamil Nadu - 624705
Phone: 0451-25 55445
or
J.Rajasegharan H/P: +91-9443107357


thank:Karthi Keyan [ FB]

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  3. ஓம்பிம் குருவே நமஹ உங்கள்
    ஆசீர்வாதம் கிடைக்க அருள் தருவாயக
    குருவே சரணம்.

    ReplyDelete
  4. நம்பிக்கை வையுங்கள்....நம் கூட வந்து வழி காட்டுவார் இந்த தெய்வ திருமகன்....

    ReplyDelete
  5. என் குருதெய்வம்....
    நம்பிக்கை வையுங்கள் வெற்றி நிம்மதி நிச்சயம்....
    அருள் திருஜோதி

    ReplyDelete
  6. அற்புதங்களை அருள்பவர்
    நல்வழி காட்டுபவர்
    எங்கும் அருள்பாலிக்கும்
    தெய்வ மகான்....
    நம்மை காக்கும் தந்தை

    ReplyDelete