Friday, June 2, 2017

கம்பரின் சரஸ்வதி அந்தாதி



KAMBAN'S SARASWATHI ANDHADHI
கம்பரின் சரஸ்வதி அந்தாதி
https://jaybeeskadaram.blogspot.com/2011/10/blog-post.html


காப்பு


ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள்என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள் இங்கு வாராது இடர்.


படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோல் கையும் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத மும்துதித்தால்
கல்லும் சொல் லாதோ கவி.


கலித்துறை


சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமல ஆசனத்தேவி செஞ்சொல்
தார்தந்த என்மனத் தாமரையாட்டி சரோருக மேல்
பார்தந்த நாதன் இசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி அம்போருகத் தாளை வணங்குதுமே. .. 1


வணங்கும் சிலைநுதலும் கழைத்தோளும் வனமுலை மேல்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியும் தோட்டுடனே
பிணங்கும் கருந்தடங் கண்களும் நோக்கிப் பிரமன் அன்பால்
உணங்கும் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே. .. 2


உரைப்பார் உரைக்கும் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பால் ஒருவர் தரவல்ல ரோ-தண் தரளமுலை
வரைப்பா ல்அமுதுதந் திங்குஎனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே. .. 3


இயலா னதுகொண்டு நின்-திரு நாமங்கள் ஏத்துதற்கு
முயலா மையால்-தடு மாறுகின்றேன் இந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின்திரு வருளுக்கு
அயலா விடாமல் அடியேனையும் உவந்து ஆண்டருளே. .. 4


அருக்கோதயத்தினும் சந்திரோதயம் ஒத்த அழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கு-ஓதுநாதனும் தானும்-எப் போதும் இனிது இருக்கும்
மருக்கோல நாண்மல ராள்-என்னை யாளும் மடமயிலே. .. 5


மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூர்- இருள்கோர்
வெயிலே, நிலவெழு மேனிமின் னே, இனி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன்-உனதுபொற் பாதங்களே. .. 6


பாதாம் புயத்தில் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியும் தந்தருள் பாரதி,வெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தில் இருப்பாள் இருப்ப-என் சிந்தையுள்ளே
ஏதாம் புவியில் பெறலரிது ஆவதெனக்கு இனியே. .. 7


இனிநான் உணர்வது எண்ணெண் கலையாளை, இலகுதொண்டைக்
கனிநாணும் செவ்விதழ்வெண்ணிறத் தாளை,க் கமலவயன்
தனிநாயகியை, அகிலாண்ட மும்பெற்ற தாயை,மணப்
பனிநாண் மலர்-உறை பூவையை ஆரணப் பாவையையே. .. 8


பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்-விதியின் முதிய
நாவும், பகர்ந்த தொல் வேதங்கள்-நான்கு, நறுங்கமலப்
பூவும், திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே. .. 9


"புந்தியில் கூரிருள் நீக்கும்புதிய மதியம்" என்கோ
"அந்தியில் தோன்றிய தீபம்" என்கோ, நல்லரு மறையோர்
சந்தியில் தோன்றும் தபனப்-என்கோ, மணித்தாமம் என்கோ
உந்தியில் தோன்றும் பிரான்புயம் தோயும் ஒருத்தியையே. .. 10


ஒருத்தியை யன்றும்-இலா என் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை, வெண்கமலத் திருப்பாளை எண்ணெண் கலைதோய்
கருத்தியை, ஐம்புலனுங் கலங்காமல் கருத்தை யெல்லாம்
திருத்தியை, யான்மற வேன்-திசை நான்முகன் தேவியையே. .. 11


தேவரும் தெய்வப் பெருமானும் நான்மறை செப்புகின்ற
மூவரும் தானவரா கியுள் ளோரும்-முனி வரரும்
யாவரும் ஏனைய எல் லாவுயிரும் இதழ் வெளுத்த
பூவரும் மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே. .. 12


புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்றது  ஆய்கின்ற எல்லா அறிவினரும் பொருளைத்
தெரிகின்ற இன்பம் கனிந்தூறி நெஞ்சம்தெ ளிந்துமுற்ற
விரிகின்றது எண்ணெண் கலைமா னுணர்த்திய வேதமுமே. .. 13


வேதமும் வேதத்தின் அந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமும் மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமும் நாதவண் டார்க்கும்வெண்தாமரை நாயகியே. .. 14


நாயக மான மலரக மாவதுஞான இன்பச்
சேயக மான மலரக மாவதும் தீவினையால்
லேயக மாறி விடும்-அக மாவதும் எவ்வுயிர்க்கும்
தாயக மாவதும் தாதுஆர்-சுவேதச ரோருகமே. .. 15


சரோருக மேதிருக் கோயிலும் கைகளும் தாளிணையும்
உரோரு கமும்-திரு வல்குலும் நாபியும் ஓங் கிருள்போல்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமும் நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருகம் ஈரரை மாத்திரை யானவுரை மகட்கே. .. 16


கருந்தா மரைமலர் கள்தாமரை மலர்,கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலர்-ஆ லயமாத்
தரும்தா மரைமலர் வெண்தாமரை மலர்தாவி லெழில்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே. .. 17


தனக்கே துணிபொருள் என்னும் தொல்வேதம் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த அபிடேகம் என்னும் இமையவர்தாம்
மனக்கேதம் மாற்றுமருந்து என்ப, சூடும்மலரென் பன்-யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே. .. 18


கமலந்தனில் இருப்பாள் விருப்போடு அங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகால் தங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்கும் கலைமங்கை யாரணி காரணியே. .. 19


காரணன் பாகமும் சென்னியும் சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும் ஒர் நான்மருப்பு
வாரணன் தேவியும் மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே. .. 20


அடிவேத நாறும் சிறப்பார்ந்த வேதம் அனைத்தினுக்கும்
முடிவே, தவளமுளரி மின்னே, முடியா இரத்தின
வடிவே, மகிழ்ந்து பணிவார் தமது மயல் இரவின்
விடிவே, அறிந்தென்னை ஆள்வார் தலந்தனில் வேறிலையே. .. 21


வேறிலை யென்றுன் அடியாரில் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானும் குறித்துநின்றேன் ஐம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காமல் நின்மலர்த்தாள் நெறியில்
சேறிலை ஈந்தருள் வெண்தா மரைமலர்ச் சேயிழையே. .. 22


சேதிக்க லாம்-தர்க்க மார்க்கங்கள் எவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாம்-உறப் போதிக்க லாம்-சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாம் மிகப் பேதிக்க லாம்-முத்திதா னெய்தலாம்
ஆதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே. .. 23


அடையாளம் நாண்மலர் அங்கையில் ஏடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யன்றும் இலாளை, உபநிடதப்
படையாளை, எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை, அல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே. .. 24


தொழுவார் வலம்வருவார் துதிப்பார் தம்தொழில் மறந்து
விழுவார் அருமறைமெய் தெரிவார் இன்பமெய் புளகித்
தழுவா ரினும் கண்ணீர் மல்குவார் என்கண் ஆவ தென்னை
வழுவாத செஞ்சொல் கலைமங்கை பால-அன்பு வைத்தவரே. .. 25


வைக்கும் பொருளும் இல்வாழ்க்கைப் பொருளும்அற்று எப்பொருளும்
பொய்க்கும் பொருளன்றி நீடும் பொருளல்ல; பூதலத்தின்
மெய்க்கும் பொருளும் அழியாப் பொருளும் விழுப்பொருளும்
உய்க்கும் பொருளும் கலைமான் உணர்த்தும் உரைப்பொருளே. .. 26


பொருளால் இரண்டும் பெறலாகும் என்றபொருள் பொருளோ,
மருளாத சொற்கலை வான்பொருளோ, பொருள் வந்து,வந்தித்து
அருளாய் விளங்கும் அவர்க்கு ஒளியாய் அறியாதவருக்கு
இருளாய் விளங்கு நலங்கிளர் மேனி-இலங் கிழையே. .. 27


இலங்கும் திருமுக மெய்யில் புளகம்எழுங் கண்கள்-நீர்
மலங்கும் பழுதற்ற வாக்கும் பலிக்கும் மனம்மிகவே
துலங்கு முறுவல் செயக் களிகூரும் சுழல்புனல்போல்
கலங்கும் பொழுது தெளியும் சொன்மானைக் கருதினர்க்கே. .. 28


கரியார் அளகமும் கண்ணும் கதிர்முலைக் கண்ணும்செய்ய
சரியார் கரமும் பதமும் இதழும்தவள நறும்
புரியார்ந்த தாமரையும் திருமேனி யும்பூண் பனவும்
பிரியா தென் நெஞ்சினும் நாவினும் நிற்கும் பெருந்திருவே. .. 29


பெருந்திருவும் சயமங் கையும்ஆகி என்பேதை நெஞ்சில்
இருந்தருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றின் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானம் தரும் இன்பவேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம்தரும் அழியாப் பெரும் சீர்தருமே. .. 30


சரஸ்வதி அந்தாதியை விரும்புவர்கள் https://www.ssivf.com/ssivf_cms.php?page=299

No comments:

Post a Comment