Friday, March 8, 2024

சிலம்பின் வடிவம்

 சிலம்பின் வடிவம்:

சிலம்பின் நூற்கட்டுரையைப் படித்தால்11, சிலப்பதிகாரம் ஒரு நாடகக் காப்பியம் ஆவதையும், கதைசொல்லும் பாணி ஒரு தேர்ந்த மேடைக்கூத்து வடிவத்தைச் சுட்டுவதையும், அறியலாம். 50, 60 ஆண்டுகளுக்கு முன், தமிழக நாட்டுப்புறங்களில் நடந்த கோவலன் - கண்ணகி,, கீசக வதம், நள தமயந்தி போன்ற 10, 15 நாள் இரவுநேரக் கூத்துக்களை இங்கு எண்ணிப் பார்க்கலாம். சிலம்பின் பல உத்திகளும் நம்முடைய நாட்டுப்புறக் கூத்துகளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. 

இக்கூத்துக்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நடிக்கும் கூத்துக்காரர், முன்னாற் பெற்ற பாராட்டையொட்டி, சில விலக்குகளும், சேர்ப்புகளும் செய்துகொண்டேயிருப்பர். இதனால், ஒருசில ஆண்டுகளுள், கூத்தின் உரையாடல், விவரிப்புக்களில் எது ஊற்றாசிரியருடையது (original author), எது இடைச்செருகல் என்பது தெரியாமலே போகும்.. இதே போல, சிலம்புக் கூத்தினுள்ளும் நடந்திருக்கலாம். எது இளங்கோவுடையதுஎது பிற்சேர்ப்பு என்று பிரித்தறிவது கடினமான செயலாகும். அடுத்துள்ள பத்திகளில் இதை ஆழ்ந்து செய்யப்போகிறோம். [அதே பொழுது சிலம்பில் எது கற்பனைஎது உள்ளமை (reality) என்பது முற்றிலும் வேறு விதயம்.]

பதிகம் ஊற்றாவணமா?:

”சிலம்பின் பதிகத்தை இளங்கோவோ, அன்றி அவருக்கு வேண்டிய சாத்தனாரோ எழுதினரா? அதுவோர் ஊற்றாவணமா (original document) ?” - என்பதைப் பதிகத்திற்கும், காப்பியச் செய்திகளுக்கும் இருக்கும் ஒத்திசைவைப் (consistency) பொறுத்தே காணமுடியும். ஒரே ஆசிரியர் அன்றிச் சம காலத்தில் வெவ்வேறு ஆசிரியர் எழுதியிருந்தால் இந்த ஒத்திசைவு இருந்திருக்கும். ஆனால் இங்கோ, பெரும் முரண்கள் தெரிகின்றன. ஒவ்வொரு முரணாகப் பார்ப்போம்.

  1. பதிகத்தின் தொடக்கத்திலேயே, ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று வருகிறது. முற்றுந் துறந்த ஒருவர், பீடும், பெருமையும் பெயரொடு சேர ‘குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்’ என்று தன்னைத் தானே அழைத்துக்கொள்வாரா? அது ஒரு துறவி செய்யும் செயலா? பொதுவாய் இயற்பெயர் தவிர்க்கும் துறவுப்பெயர் இருக்குமே? துறவுப்பெயரால் விளிக்காது, அரசப்பெயர் சொல்லுவரோ? (அடிகள் என்ற விளிப்பிலும் ஐயம் உண்டு. மதுரைக்காண்டத்துள் கண்ணகி, கோவலனை அடிகள் என்பாள். எனவே அடிகள் எல்லோரும் துறவியரென்று ஐயந்திரிபறச் சொல்லுதற்கில்லை. ”இளங்கோவடிகள்” என்பது அற்றைப்புரிதலில் துறவியைச் சுட்டுவதாய்க் கொள்ளமுடியாது.)
  2. பதிகத்தின்படி, கண்ணகி ‘விட்புலம் போன’ செய்தியைக் குன்றக்குரவர் இளங்கோவிடம் நேரடியாய்ச் சொல்ல, காட்சிக் காதையில் சேரனிடம் தெரிவிக்கப் படுகிறது. (இங்கு அரசன் முன்னிலை இல்லையோ?)
  3. இதே போலக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், பதிகத்தில் அவர் இளங்கோவிடம் உரைக்கிறார். அரசனின்றி வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோவா வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இல்லையே? இது ஒரு முரண் அல்லவா?
  4. முற்பிறப்புச் செய்தியை மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்குச் சொன்னபோது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் கேட்டதாய்ப் பதிகமும், கதை மாந்தர் வழியாய் நேராக விவரித்துக் கட்டுரைக் காதையிலும் வரும். விவரிப்பில் ஏன் இந்த முரண்?
  5. ழற்படு காதையில் மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முன் தோன்றியது அந்திவிழவு நேரமாகும். பதிகத்தில் இது நடு யாமம் என்று (15 நாழிகை வேறுபாடு) வரும்.  நிகழ்வுக் காலநிலையை ஒரே ஆசிரியர் வெவ்வேறு இடங்களில் முரணாய்ச் சொல்லுவாரோ?
  6. வஞ்சிக் காண்டம் நிகழாதுசாத்தனார் விளக்கிய அளவிலேயே, ”காப்பியக் குறிக்கோள்கள் இன்னின்ன” என்று பதிகம் சொல்வது  ஒரு நாடகத் தனமாய் இருக்கிறது. முன்னுக்குப் பின் முரணாய் ஒரு காப்பிய ஆசிரியர் கூறுவாரோ?
  7. செங்குட்டுவனே இல்லாது, நிகழ்வுகள் பதிகத்தில் சொல்லப் படுவதும்நூலெழுதக் காரணம் கற்பிப்பதும்சற்றும் பொருத்தமின்றி இருக்கின்றன.
  8. பதிக முடிவில், சாத்தனார் இளங்கோவை நூலெழுதச் சொல்வது படர்க்கையிலுள்ளது. ஓர் அரசன் வீற்றிருக்கும் நிலவுடமைக் கொலுவில் அவனிடமின்றிநேரடியாய் வேறொருவர் மற்றோரிடம் வேண்ட முடியுமோ
  9. பதிகத்தை இளங்கோவோ, சாத்தனாரோ எழுதியதாய்த் தோற்றவில்லை.   நீண்ட காலங் கழித்து, பெரும்முரண்களோடு, ”நாடகத்தனமாகயாரோ பதிகம் செய்திருக்கிறார்கள். பதிகம் ஊற்றாவணத்திற் (original document) சேர்ந்ததல்ல.

உரைபெறு கட்டுரை ஊற்றாவணமா?:

அடுத்திருக்கும் உரைபெறு கட்டுரைக்கு வருவோம். காப்பியத்தைப் படிக்க வருவோரை படிக்கத் தூண்டுவதாய், கூத்தைப் பார்க்கவைப்பதாய் இது அமைகிறது.

  1. கூர்ந்து கவனித்தால், நாட்டுப்புறக் கூத்தின் தொடக்கத்தில் வரும் கட்டியங்காரனின் கூற்றுப் போல் இது அமைந்துள்ளது.
  2. இந்தக் கட்டுரையுள், ”அது கேட்டுஅது கேட்டு” என்ற சொற்றொடர் அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கால வரிசையிற் தருவதால், ஒரு வரிசைப் போக்கு புலப்படுகிறது. அந்தக் காலத்தில் எங்கெல்லாம் பஞ்சம் ஏற்பட்டதோஅங்கெல்லாம் பத்தினி வழிபாடு தொடங்கியது போலும்இன்றைய ‘வாழும் வரலாற்றிலும்’ மழைவேண்டிமாரியம்மன் விழாக்கள் நடக்கின்றன தானே?
  3. உரைபெறு கட்டுரையில் வரும் “களவேள்வி” –ன்ற சொல் ஒரு போர்க்களச் சொல்மக்கள் பெருங்கோவமுற்று அரசனை எதிர்க்க, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட, புரட்சியாளரைக் கொன்று, வெற்றிவேற்செழியன் ”களவேள்வி” செய்தானோ?. உள்நாட்டுப் போர் அங்கு நடந்ததோ? மதுரை பஞ்ச காலத்தில் எரிந்ததோ, என்னவோ?
  4. உரைபெறு கட்டுரையின் வழி, கொங்கிளங் கோசர் (South Canara) விழவொடு சாந்தி செய்தது பாண்டியனின் கள வேள்விக்கு அப்புறம் என்று புரிகிறது.
  5. அடுத்துவரும் ”அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான்நங்கைக்கு நாட்பலி பீடிகை றாட்ட முந்துறுத்து ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக் கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று” - என்னும் இலங்கைச் செய்தி உன்னித்துக் கவனிக்கவேண்டியது [ஆனால் பலரும் செய்யாதது.]
  6. கண்ணகிக்கு சாந்தி செய்து கோசர் மழைபெற்றது கேட்டுத் தன் நாட்டு (அதாவது இலங்கையின்) அரந்தை (கொடுங்கோடைகெடக் கயவாகு பத்தினிக்கு விழா எடுக்கிறான்வரந்தரு காதையோசெங்குட்டுவன் கூடவே கயவாகு இருந்ததாய்க் கூறுகிறதுஒரே ஆவணத்துள் இப்படி ஒரு முரண் எப்படி வந்ததுஅல்லது இரண்டும் ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு ஆவணங்களா? இதையேன் பலரும் கவனிக்க மறந்தார்கள்?  
  7. உரைபெறு கட்டுரை, வரந்தரு காதை  இவற்றில் ஒன்றுதான் உண்மையாக முடியும்.. அடுத்தடுத்த அரசர் செயல்களில் ஒரு கால ஒழுங்கும் ஏரணமும் உரைபெறு கட்டுரையிற் காணுவதால், வரந்தரு காதையை ஏற்கத் தயங்கவேண்டியிருக்கிறது. அக்காதை பற்றி கீழே வருவது போல் நிறையக் கேள்விகள் நமக்கு இருக்கின்றன.
  8. உரைபெறு கட்டுரையின் வழி, பெருங்கிள்ளி கோழியகத்துப் பத்தினிக் கோட்டம் சமைத்தது இலங்கைக் கயவாகு பன்முறை (=பல்லாண்டுவிழா எடுத்ததற்கு அப்புறம் என்று அறிகிறோம். இங்கே குறிப்பிடப்பெறும் பெருங்கிள்ளி, செங்குட்டுவனின் சமகாலத்து மைத்துனனின் பிறங்கடையாவான். [எத்துணையாவது பிறங்கடை என்பது தெரியாது.]
  9. மொத்தத்தில் உரைபெறு கட்டுரையும் இளங்கோ எழுதிய ஊற்றாவணமாய்த் தெரியவில்லைஅதே பொழுது காப்பியத்திற்குப் பின் நடந்த நெடுங்கால நிகழ்வுகளை உரைப்பதால்,  இதை ஒதுக்காமல், காலக் கணிப்பிற்கு எடுத்துக் கொள்வது நல்லது.  

காப்பியத்தின் மற்ற பகுதிகள் ஊற்றாவணங்களா?:

  1. மங்கல வாழ்த்தில் இருந்து வாழ்த்துக் காதை வரை காப்பியத்தில் தொடர்ச்சி இருப்பதால்அவை இளங்கோ எழுதியதே என்று கொள்ளுகிறோம்.
  2. அதே பொழுது, இந்தப் பகுதிகளுக்குள் அங்கும் இங்குமாக இடைச்செருகல் இருக்கலாம். அவற்றைப் பாடபேதம் கொண்டே நிறுவமுடியும்.  (காட்டாகஅழற்படு காதையில் வருண பூதங்கள் மதுரையை விட்டு விலகும் பகுதியை இடைச்செருகல் என்று சுவடி வேறுபாட்டு விளக்கம் சொல்லி .மு.வேங்கடசாமி நாட்டார் ஒதுக்குவார்.)
  3. காதைகளின் முடிவில் இருக்கும் வெண்பாக்கள் இளங்கோ எழுதியது என்று கொள்ள வேண்டியதில்லைஅவை கதைக்குத் தேவையானைவையும் அல்ல.
  4. காண்டக் கட்டுரைகள்நூற்கட்டுரை –ன்பவை இளங்கோவோ, அன்றி வேறெவரோ எழுதியிருக்கலாம்இவையும் நூற்தொடர்ச்சிக்குத் தேவையில்லாதவை.

5.   வரந்தரு காதை மட்டும் மற்றவையோடு மாறுபடுகிறதுகூத்துவடிவத்தின் மரபும் அதிற் கிடையாது. கிட்டத்தட்ட மணிமேகலையின் பா வடிவிலும், அதன் முன்னெடுப்பாகவும் தெரிகிறது. மணிமேகலைக்கு வேண்டுமானால் அது தேவையாகலாம், சிலம்பிற்கு அல்ல.

--------------------------------------------------------------------
அன்புடன்,
இராம.கி.
 
எடுகோள்
 
      11.குமரி வேங்கடம் குணகுட கடலா

   மண்டிணி மருங்கிற் தண்டமிழ் வரைப்பிற்

   செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்

   ஐந்தினை மருங்கின் அறம்பொருள் இன்பம்

   மக்கள் தேவர் என இரு சார்க்கும்

   ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர

   எழுத்தொடு புணர்ந்த சொல்லகத்து எழுபொருளை

   இழுக்கா யாப்பின் அகனும் புறனும்

   அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்து ஓங்கிய

   பாடலும் எழாலும் பண்ணும் பாணியும்

   அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும்

   ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த

   வரியும் குரவையுஞ் சேதமும் என்றிவை

   தெரிவுறு வகையாற் செந்தமிழ் இயற்கையில்

   ஆடிநன் நிழலின் நீடிருங் குன்றம்

   காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து

   மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய

   சிலப்பதிகாரம் முற்றும்.

 

திராமிர சங்காத்தம் / தமிழ் மூவேந்தர் உடன்பாடு:

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. [தமிழரா? ஒற்றுமையா? எப்படி? - என்ற நகைப்புக் கேள்வி இங்கு எழுகிறதோ?]

இதைக் கலிங்கவேந்தன் காரவேலனின் புகழ்பெற்ற அத்திகும்பாக் கல்வெட்டும் உறுதி செய்கிறது. காரவேலனின் கல்வெட்டுக் காலம் கி.மு.172 என்று அண்மையில் வெளிவந்த “The haathigumphaa Inscription of Khaaravela and the Bhabru Edict of Asoka” என்ற நூலில் சசி காந்த் (Shashi Kant) என்பவர் நிறுவுவார். [அவருக்கு மாறாய் அத்திக்கும்பாக் கல்வெட்டின் காலம் கி.மு.117க்கு அண்மையில் என்று சொல்வாரும் உண்டு],

இந்தக் கல்வெட்டில்”திராமிர சங்காத்தம்” என்ற பாகதச் சொல்லால் தமிழ் மூவேந்தர் உடன்பாடு குறிக்கப்படும். ”திராமிர” என்ற அடையாளம் முதன்முதலில் ஒரு கல்வெட்டில் இதிற்றான் புழங்கியது. இங்கே குறிப்பிடப்படும் ”திராமிர சங்காத்தம்” என்பது கல்வெட்டிற் சொன்னபடி ”1300 ஆண்டுகள்” நிலைத்ததாகவும், ”அவ்வளவு நீண்டகாலம் இருந்திருக்க வழியில்லை” என்று தமக்குள் வியப்புக் கொண்டு, அதை வெறும் ”113 ஆண்டுகள்” என்ற சொந்தக் கருதுகோளை முன்வைத்து தாம் வாசித்ததாகவும் புகழ்பெற்ற கல்வெட்டாய்வாளர்கள் K.P Jaiswal-உம், R.D. Bannerji-யும் தங்கள் கட்டுரையில் வெளிப்படுத்துவார்கள்23. பின் வந்த பல வரலாற்றாசிரியரும் ”113 ஆண்டுகள்” என்ற செயிசுவால் - பானர்சி கருதுகோளை அப்படியே உண்மை என்று ஏற்று தமிழர் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுவர்.  [அடிக்கோள் மறந்து கருதுகோள் உண்மையாகிப் போன சோகம் இங்கு நிலவுகிறது.]

ஆனால் மேலே குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார்24.

இப்படியாக, கி.மு.172 ஆம் ஆண்டுக் காலத்துக் காரவேலன் கல்வெட்டு கி.மு.414 இல் இருந்த தமிழ் மூவேந்தர் உடன்படிக்கை பற்றிப் பேசுவது, முன்னாற் சொன்னது போல், சங்ககாலம் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகிறது. [இந்தக் கட்டுரையில் சசி காந்த்தின் ஆய்வுமுடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளேன். தமிழக வரலாற்றாசிரியர் யாரும் காரவேலன் கல்வெட்டை தமிழர் பார்வையில் ஊன்றிப் படித்ததாய்த் தெரியவில்லை. அப்படிப் படிப்பது தமிழர்க்குத் தேவையானது. (கல்வெட்டும் அதன் ஓரளவு தமிழ் மொழிபெயர்ப்பும் இந்தக் கட்டுரைத் தொடரின் இறுதியிற் கொடுக்கப்பட்டுள்ளன.) பாகத மொழி, இலக்கணம் நன்கு தெரிந்த தமிழகக் கல்வெட்டாய்வாளர் இதை மீளாய்ந்தால், தமிழர் வரலாறு இன்னுந் தெளிவு பெறூம். தமிழர் வரலாற்றைக் கணிப்பதற்கு இக்கல்வெட்டு ஒரு திறவுகோல் என்றே நான் எண்ணுகிறேன்.]

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

  1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
  2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்; 
  3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]

கொங்குக் கருவூரும், சேரரும்:

காரவேலனின் அத்திகும்பா கல்வெட்டால் இன்னொரு செய்தியும் தெரிகிறது. அதாவது, Pithumda என்ற நகரில் உள்ள ஆவ (<ஆவியர்) அரசனை அழித்து, நகரைச் சூறையாடி, கவடிப்  (வெள்வரகு) பயிரை வித்தி, கழுதையால் காரவேலன் உழுதிருக்கிறான். பாகதத்தில் Pithumda என்பதற்கு round walled என்ற பொருளுண்டு. பித்திகை என்ற தமிழ்ச் சொல்லிற்கும் வட்டச் சுவர் என்று பொருள் உண்டு. வட்ட மதில் கொண்ட இவ்வூர் தமிழக ஊராகச் சொல்லப்படுவதால், அதைக் கருவூராகக் கொள்ளுதற்குப் பெரும்வாய்ப்புண்டு. ஏனெனில், அக்காலத் தமிழகத் தலைநகர்களில் மதிரையும் கருவூருமே வட்ட மதில் கொண்ட பெருநகரங்களாகும். (மதில்>மதிரை = walled city மதுரை என்னும் இலக்கியப் பெயர் மீத்திருத்தமாகவே தெரிகிறது. இதுவரை கிடைத்த பழந்தமிழிக் கல்வெட்டுக்களில் மதிரை என்ற பெயரே இருக்கிறது; மதுரையில்லை.)

கருவூர் நகரை அழிக்கும் அளவிற்கு அந்நகரில் என்ன சிறப்பு? அருகில் இருந்த கொடுமணமா? [கொடுமணம் என்பது கருவூருக்கு அருகில் பெரும் மணிகளைக் கடைந்து அணிகலன்கள், மாலைகள் செய்த இடமாகும்25. கொங்குக் கருவூர் என்றும் வணிகச் சிறப்புக் கொண்ட ஊர் தான்]. மறுமொழியில்லாத கேள்விகள் பலவும் நம்முள் எழுகின்றன. இந்த ஊரைப் பிடிப்பதற்கு முன்னோ, பின்னோ, மூவேந்தருக்கு இடையிருந்த உடன்பாட்டை (திராமிர சங்காத்தத்தை) முறித்ததாகவும் இக்கல்வெட்டு ஆவணப்படுத்துகிறது. இதுபோன்றதொரு வேளிர் நாட்டைப் பிடிக்க, திராமிர சங்காத்தத்தை ஏன் முறிக்க வேண்டும்? அந்தக் காலத்தில் ஆவியருக்கும் மூவேந்தருக்கும் என்ன தொடர்பு? - என்ற கேள்விகள் நம் மனத்தை உறுத்துகின்றன.

வேளாவிக் குடியினர் என்பார் பொதினியைத் (இற்றைப் பழனியைத்) தலைநகராய்க் கொண்டு ஒரு பெரும்பகுதியை ஆண்டவர். சேரரோடு கொள்வினை கொடுப்பினை உறவு கொண்டவர். நெடுஞ்சேரலாதனுக்கும் அவனுடைய ஒன்றுவிட்ட தம்பி செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கும் ஆவியர்குடியைச் சேர்ந்த அக்கா (பதுமன்தேவி) தங்கையர் மாலையிட்டிருக்கிறார்கள். நெடுஞ்சேரலாதன் தந்தை உதியச் சேரலுக்கு வெளியன் வேள்மான் மகள் நல்லினி  வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். அந்துவஞ் சேரலுக்கும் இந்தப் பக்கத்தில் இருந்த வேளிர் மகளே வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். [அவள் தந்தை பெயர் சங்க இலக்கியத்தின் வழி தெரியவில்லை.] அவளும் ஓர் ஆவிக்குடிப் பெண்ணோ, என்னவோ? ஆவியர் குடிக்கு ஒன்றென்றால், தாய்வழியுறவு கருதிச் சேரர் முன்வந்து மாற்றாரைப் பழிவாங்குவது பதிற்றுப் பத்துப் பதிகங்களைப் படித்தால் நடக்கக் கூடியதே. ஆனாலும் திராமிர சங்காத்தம் இதனுள் எப்படி வந்தது? - மறுமொழி கிடைக்கவில்லை.

காரவேலனுக்குப் பின் கொங்குக்கருவூரைச் சேரரே மீட்டிருக்கிறார்கள். அந்துவஞ்சேரல் கொங்குக் கருவூரைப் பிடித்தபின்னால், ஆவிக்குடியினர் மீண்டும் அங்கு ஆளவில்லை. ஒருவேளை பொதினிக்கருகில் தம் பாதிநிலத்தோடு அவர் ஒடுங்கினரோ என்னவோ? [18 ஆம் நூற்றாண்டிற் சசிவர்ணத்தேவருக்கு பெண்கொடுத்த கிழவன் சேதுபதி தன்நாட்டை இருகூறாக்கிச் சிவகங்கைச்சீமை என்ற புது அரசை உருவாக்கித் தன்மகளுக்குப் பாதிநிலஞ் சீராய்க் கொடுத்து, அது தனியுரிமை பெற்றது போல் இது நடந்ததா என்பது ஆய்விற்குரியது. ஏனெனில் செல்வக்கடுங்கோ வாழியாதன் தொடக்கத்திற் தன்னுடைய ஒன்றுவிட்ட சோதரனான பல்யானைச் செல்கெழுகுட்டுவனோடு சேர்ந்து பூழிநாட்டிலேயே வாழ்நாளைக் கழித்திருக்கிறான். (இற்றைப் பொன்னாணிக்கு அருகில் உள்ள. பூழி என்பது சேரநாட்டிலும் உண்டு; பாண்டிநாட்டிலும் உண்டு. பாண்டிநாட்டுப் பூழி என்பது சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ளது. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூழித் தேவன் பூலித்தேவன் என்று ழகரம் திரிந்த நிலையில் அழைக்கப் பட்டிருக்கிறார். பூழி = புழுதி) வாழியாதன் தந்தை அந்துவன்தான் கொங்குக் கருவூரை ஆண்டவன். அந்துவனுக்குப் பின் சிறிது காலமே செல்வக்கடுங்கோ கொங்குக் கருவூரை ஆண்டிருக்கிறான்.]

தங்கம் போன்ற கனிமங்கள் விளையும் கொங்குநாட்டின் நடுவுநிலை குலைந்து அதன் ஒருபகுதி சேரருக்குள் அமிழ்ந்தது மற்றவிரு வேந்தருக்கும் ஏற்பில்லாது, அதனால் திராமிர சங்காத்தம் முறிந்ததா? இதில் காரவேலன் பங்கென்ன? - தெரியாது. சூழ்ச்சியும், இருபுலப் பரிமாற்றமும் (diplomatic exchanges) நடந்திருக்கின்றன. என்னெவென்று, நமக்கு விளங்கவில்லை. ஆனால் திராமிர சங்காத்தம் முறிந்ததால், மூவேந்தருக்கிடையே மூண்ட பெரும் புகைச்சலும்ஒருவருக்கொருவர் நம்பாமையும், வன்மமும் காரவேலனுக்குப் பெருவாய்ப்பைத் தந்திருக்க வேண்டும். ஒருவேளை அதனாலேயே கொங்குக் கருவூர்மேல் அவன் படையெடுத்தான் போலும்.

சிலம்புபில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது. வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே. நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும்26. நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]  

நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை27A ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன்27B இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது28.)

பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]

மொத்தத்தில் சோழரும், பாண்டியரும் வலிவின்றி அதே பொழுது சேரரோடு முரணிய காலமே சிலம்பின் காலமாகும். தமிழ் மூவேந்தர் உட்பகை கூடிய காலமாததால், அதைக் குறைக்கும் முகமாய் தமிழ்-தமிழர் என்பதை முன்னிறுத்தி, சிலப்பதிகாரம் எழுந்திருக்கலாம். மூன்று குறிக்கோள்களுக்கும் மேல்,”ஒற்றுமை” வேட்கை உட்கிடக்கையாய் நூலுள் இருந்திருக்கிறது. ‘சங்காத்தம்’ குலைத்த சேரரிடம் இருந்தே இத்தகைய ஒற்றுமை முயற்சி எழுந்திருக்கலாம். [சிலப்பதிகாரம் என்ற காவியப் பெயருக்கே இரு பொருட்பாடுகள் உண்டு. ஒன்று சிலம்பால் அதிகரித்த கதை; இன்னொன்று சிலம்பின் (=மலை, மலைநாடு) அதிகாரம் கூடிய கதை.]

பொதுவாக வம்ப மோரியர் தங்கள் காலத்தில் தமிழகத்தைத் தாக்கியதும், மோரிய அசோகனுக்குப் பின்னால் வந்த சுங்கரின் கடைசி வலிக்குறைவும், சேரரின் வடசெலவுக்குக் காரணமாகலாம்.  சிலம்பை மீளாய்வது, தமிழர் வரலாற்றைப் புரிய வைக்கும்.  உள்ளூர்ச் சண்டையைக் குறைத்து, ”தமிழகம் ஒன்றே” என்பதை நிலைநிறுத்தும் முயற்சியில் வெளியாரை வெற்றிகொண்ட செய்திகள் முன்கூறப்படுவதை வேனிற்காதை (1-5), ஆய்ச்சியர் குரவை (1-5) வரிகளிற் காணலாம்29.

எடுகோள்கள்:

24.  Shashi Kant, “The Hāthīkumphā inscripṭion of Khāravela and the Bhabru Edict of Asoka”, pp.35-36, D.K.Printworld (P) Ltd.,2000

25.   முனைவர். கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக.117-130, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.

26.  http://www.tamilnet.com/art.html?catid=98&artid=31711

27.   A.முதிராக் கிழவியின் முள்ளெயிறு இலங்க

 மதுரை மூதூர் யாதென வினவ

 ஆறைங் காதம் மகனாட்டு உம்ப

     நாறைங் கூந்தல் நணித்து என

            - நாடுகாண் காதை (40-43)

B. அளவைகள் - 6. இராம.கி. யின் வலைப்பதிவு இடுகை: http://valavu.blogspot.com/2009/07/6.html

28.   டியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி

                        - காடுகாண் காதை (17-22)

29.   நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நன்னாட்டு

மாட மதுரையும் பீடார் உறந்தையும்

கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்

அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்

                         - வேனிற் காதை (1-5)

கயல் எழுதிய இமய நெற்றியின்

அயலெழுதிய புலியும் வில்லும்

நாவலந்தண் பொழில் மன்னர்

ஏவல் கேட்பப் பாரர சாண்ட

மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில்

              - ஆய்ச்சியர் குரவை (1-5)


 வடசெலவின் போது சுங்கர், கனகரின் நிலை:

”செங்குட்டுவனின் வடசெலவு, மோரியருக்கு அடுத்த சுங்கர், கன்னர் ஆகியோரின் வலுவற்ற காலத்தில் நடந்திருக்கவே வாய்ப்புண்டு” என்னும் கூற்றை இக்கட்டுரையின் அடிக்கோளாய்க் கொண்டு, இனிவரும் பகுதிகளில் அதைப் பல்வேறு கோணங்களில் அலசுவோம்.

மகதத்தை ஆண்ட சுங்கர்களின் கடைசியரசன் தேவபூதியாவான் (கி.மு.83-73)56. இவனுக்கு உடன்பிறந்தார் இருந்தாலும் அவர் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. நடு இந்தியாவிலுள்ள சாஞ்சி(=விதிசா)க் கல்வெட்டை வெட்டுவித்த காசிபுத்ர பாக பத்ர என்பவன் இவன் தந்தையாவான்56 .கி.மு.180 இல் இருந்த சுங்க அரசின் விரிவு56 மேலேயுள்ள படத்தில் தரப்படுகிறது. இந்தக் கட்டுரையில் முன்பக்கங்களிற் குறிப்பிட்ட காரவேலன் கல்வெட்டை ஆழ்ந்து படித்தால், சுங்கர் அரசின் எல்லைகள் அவரின் கடைசிக் காலத்தில் (கி.மு.73) மேலே படத்திற் காட்டப்படும் விரிவில் இருந்தும் சுருங்கியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. [குறிப்பாக அவந்திப்பகுதி (உஞ்சை) அவர்களிடம் இருந்து வழுவிப் போயிருக்கிறது.] ஆனால் எவ்வளவு சுருங்கியது என்று உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. அதற்குரிய ஆய்வுகள் இதுவரையில்லை.

                                                                         

படம் 3: மோரியருக்கு அப்புறம் இருந்த சுங்கரின் அரச விரிவு

சுங்கன் தேவபூதியின் முதலமைச்சன் வசுதேவ கண்வன் என்னும் குறுநில மன்னன் ஆவான்57. கி.மு.75 - இல் வசுதேவ கண்வனே அரண்மனைக் கலகத்தில் தேவபூதியை பாடலிப் பட்டணத்தில் இருந்து துரத்தி மகத அரசைக் கைப்பற்றியிருக்கிறான். கண்வரில் வரும் ”ண்வ” எனும் ஒலிக்கூட்டு பழந்தமிழில் இல்லை. (இற்றைத் தமிழிற் பயில்கிறார்கள்.) அதை உயிர்மெய்க் கூட்டாக்கி, கனுவர்>கனவர் என்றே பழந்தமிழர் பலுக்கியிருக்க வாய்ப்புண்டு. அதோடு வகரமும், ககரமும் தமிழிற் போலிகளாதலால் (காண்க: பாவற்காய்/ பாகற்காய், நாவற்பழம்/நாகற்பழம், குடவம்/குடகம், குணவம்/குணகம்). கனவர் என்னுஞ் சொல் தமிழொலிப்பில் கனகராகும். .

இன்னொரு செய்தியையும் வரலாற்றாசிரியர் ஏமச்சந்திர ராய்சௌதுரியால் அறிகிறோம். ”கண்வ” என்பது “கனுவ்வாயன” என்றும் சொல்லப் பட்டிருக்கிறது58.  வடமொழி - தமிழ்த் திரிவில் கனுவ வாசன்>கனுவ வாஸ்யன்>கனக வாஸ்யன்>கனக விசயன் என்றாகலாம். அப்படியெனில் ”சேரன், சோழன், பாண்டியன்” போலக் ”கனகவிசயன்” என்பது வெறும் குடிப்பெயராகலாம். இன்னொரு வகையில், ”கனகன்” குடிப் பெயராகி ”விசயன்” இயற்பெயராகலாம். எந்த இயலுமை உண்மை என்பதைப் பாகதச் செய்திகள் மூலமே அறியமுடியும். தமிழர் கண்ணோட்டத்திற் பார்த்தால், மோரியருக்குப் பின்னிருந்த சுங்கர், கண்வர் வரலாறு ஆயப்பட வேண்டிய தொன்றாகும்.

சுங்கருக்கு அடுத்து மகதத்தை ஆண்ட கனக அரசர் (கி.மு.75-26) நால்வராவர்59. அவரில் முதல் அரசனான கனக வசுதேவனும் கனக விசயனும் ஒருவரா? அன்றி முன் சொன்னது போல் கனகவாஸ்யன் என்ற குடிப்பெயர் கனகவிசயன் என்று தமிழராற் புரிந்து கொள்ளப் பட்டதா? முன்றாவது முறையில், விசயன்  வசுதேவன் என்ற பெயர்கள் மாபாரதக் கதையின் தாக்கத்தால் வழிமுறை உறவுப் பெயர்களாய் அமைந்தனவா? [காட்டாகச் சிங்கள அரசின் முதல் அரசன் விசயனாய் இருக்க, அவன் மகன் பாண்டு வசுதேவன்   எனப்படுவான்.60] என்ற கேள்விகளுக்குச் சரியான விடையில்லை. ”கனக விசயன் என்பது கனக வாசுதேவனின் தந்தையாய் இருக்கலாமோ?” என்ற ஐயமும் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு.

 

வடசெலவின் போது கன்னர் நிலை:

 

சுங்கரைப் பேசும் போது நூற்றுவர் கன்னர் பற்றியறிவதும் தேவையாகும். மகத வணிகத்திற்கான தென்னகப்பாதையின் (Dakshinapaatha) முடிவில் (இற்றை அவுரங்காபாத் அருகில்) கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானத்தைத் (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்>paithan என்பது இற்றைப் பெயர். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான்.) தலைநகராய்க் கொண்ட அரசராயும், மோரியரின் மாதண்டநாயகராகவும் நூற்றுவர் கன்னர் இருந்திருக்கின்றனர். மோரியருக்கு அப்புறம் நடுவணரசுப் பிடியிலிருந்து விடுபட்டு நூற்றுவர் கன்னர் தம் தனியாட்சியை நிறுவியிருக்கிறார்கள்61. ஆனால் சுங்கரின் பிடியிலிருந்து அவர் முற்றிலும் விலகியதாய்ச் சொல்ல முடியவில்லை.

 

படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.) கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்).

 

சோபாரா துறைமுகம் (கூடவே சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சாவும் (இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach) துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

 

நூற்றுவர் கன்னர் தமிழக வழக்கப்படி முறைப்பெண்களை மணமெடுத்துப் பழகியவர்62. தமிழ், பாகதம் என ஈர் ஆட்சிமொழி நாணயம் வெளியிட்டவர்63. (அவரரசில் இருமொழியும் அருகருகே புழங்கியிருக்கலாம். மாமூலனார் கூறிய மொழிபெயர்தேயத்தை இங்கு நினைவு கொள்ளுங்கள்.) தமிழ் அகநானூறு போலவே மரபு கொண்ட ”காதா சத்தசதி”  என்னும் பாகத நூலுக்குக் காரணமானவர்64. கன்னரின் மரபுகளைப் பார்த்தால், அவர் தமிழ்மரபுக்கு முரண்பட்டவராய்ச் சொல்ல முடியாது.

 

சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும்  பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன்  என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர்65. ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா?

 

அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள்66. அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது.  சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.

 

   

                                                                                                                                        

படம் 4. நூற்றுவர் கன்னரின் அரச விரிவு

கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான்67. பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். முன்னால் சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் சொன்னது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.

 

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 ஆகும். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது68. பிடித்த நிலங்களிற் பெருவாரியை இழந்திருக்கிறார்கள். மாளுவம் இவர் கைவிட்டுப் போயிற்று. அந்த வீழ்ச்சியால் கி.மு.87-69 இல் இலம்போதரன் என்னும் அரசன் காலத்தில், கன்னரின் அரச எல்லை பெரிதும் சுருங்கியது. இக்காலத்திற் கன்னர் சுங்கருக்கு இறைகூடச் செலுத்தியிருக்கலாம்.69 இலம்போதரனுக்குப் பின்வந்த அபிலகனும் மற்ற அறுவரும் கனகருக்குக் கீழ் சிற்றரசராகவே ஆயினர்70. ஆனாலும் கன்னர் கருவிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மீண்டும்  வீறுகொண்டு எழுந்து கி.மு. 26-இல் சுங்கர் அரசை கன்னர் முற்றிலும் வீழ்த்தியிருக்கின்றனர். விதப்பாகப் கன்னன் புலிமாவியின் ஆட்சியில் மீண்டும் வலியுற்று, மகதத்தையே பிடித்தனர். பின்னர் கன்னர் அரசு பெரிதாக விரிவடைந்திருக்கிறது71

 

சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசராலும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்டுவது சாதவா கன்னர் என்னும் பற்றிய செய்தியே.

 

எடுகோள்கள்:

 

 

56. http://en.wikipedia.org/wiki/Sunga_Empire

57. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty

58.  Hemachandra Raychaudhuri, “Political History of Ancient India” p 353, Oxford University Press, 1996 Seventh Inpression 2008..

59. வசுதேவ (கி.மு.75-66); பூமிபுத்ர (கி.மு.66-52); நாராயண (கி.மு.52-40); சுசர்மன் (கி.மு.40- 26) http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty

60. விஜயன் (தீப வம்ச வரி 9.42; மகா வம்ச வரி 7.74) - கி.மு.483-445; அரசனற்ற காலம் (தீப. வரி 11.9; மகா.வரி 8.5) - கி.மு.445-444; விஜயன் மகன் பாண்டு வாசுதேவன் (தீப. வரி 10.5; மகா.வரி 9.25) - கி.மு.444-414; விஜயன், வசுதேவன் என்ற பெயர் இணைகள் மா.பாரதத் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்துகின்றன. வசுதேவனுக்கு முந்திவரும் ”பாண்டு” என்னும் அடைமொழி, அவன் பாண்டிய அரசகுமாரிக்குப் பிறந்த மகன் என்னுஞ் செய்தியை உணர்த்துகின்றது. ”சிங்களவர் தமிழ்த் தாய்மாருக்கும், அங்கிருந்த பழங்குடித் தாய்மாருக்கும் பிறந்தவரே”. என்று அவர் நூல்களே தெளிவாகக் கூறுகின்றன. 

வில்ஹெம் கெய்கர், தமிழில் மறவன்புலவு க. சச்சிதானந்தம், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை” பக்கம் 53. காந்தளகம், 2002.

61. நூற்றுவர் கன்னர் ஆட்சி ஏற்படுத்தியது கி.மு..230. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.92, Oxford University Press, 1975.

62. நூற்றுவர் கன்னர் முறைப்பெண்ணை மணத்தல்,  ”Another Characteristic feature of the Satavahanas and many of their successors was the use of Metronyms, which took the form of brahminical gotra + puta (son); e.g., Gotamiputa, Vasithiputa, and so on. These are two of the most widely used metronyms among Satavahanas, which raises the possibility that several of the Satavahana queens were closely related to one another and that in consequence some of the Satavahana marriages were consanguineous. Once this is granted it follows almost immediately that Satavahanas had a rule of Cross Cousin Marriage. - By Thomas R Trautman “The Dravidian Kinship” p 375, Cambridge University Press, 1981.  

63. நூற்றுவர் கன்னர் இருமொழி நாணயம் Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy”, pp 199- 204, Crea-A, Chennai and The Departmemt of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003

64. நூற்றுவர் கன்னர் “காதா சத்தசதி”; K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.94, Oxford University Press, 1975

65. நூற்றுவர் கன்னரின் பெயர்விளக்கம். D.D.Kosambi, "Satavahana Origins". Introduction to the study of India history  pp. 243 -244. Popular prakashan. Mumbai, 1975.

66. நூற்றுவர் கன்னர் பெயரை “சாத வாகனர்” என்று படித்தல். முனைவர் ஐராவதம் மகாதேவன், “சிந்துவெளிப் பண்பாடும், சங்க இலக்கியமும்” பக்.32, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600005., 2010.

67. நூற்றுவர் கன்னரின் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் பற்றிய செய்தி. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.93, Oxford University Press, 1975

68. நூற்றுவர் கன்னரின் ஆட்சி விரிவும், சுருக்கமும்

 http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

Satakarni (c.180-124 BCE)

His successor Sātakarnī I was the sixth ruler of the Satavahana. He is said in the Puranas to have ruled for 56 years.

Satakarni defeated the Sunga dynasty of North India by wresting Western Malwa from them, and performed several Vedic sacrifices at huge cost, including the Horse Sacrifice - Ashwamedha yajna. He also was in conflict with the Kalinga ruler Kharavela, who mentions him in the Hathigumpha inscription. According to the Yuga Purana he conquered Kalinga following the death of Kharavela. He extended Satavahana rule over Madhya Pradesh and pushed back the Sakas from Pataliputra (he is thought to be the Yuga Purana's "Shata", an abbreviation of the full name “Shri Sata” that occurs on coins from Ujjain), where he subsequently ruled for 10 years.

By this time the dynasty was well established, with its capital at Pratishthānapura (Paithan) in Maharashtra, and its power spreading into all of South India.

Kanva suzerainty (75-35 BCE)

Many small rulers succeeded Satakarni, such as Lambodara, Apilaka, Meghasvati and Kuntala Satakarni, who are thought to have been under the suzerainty of the Kanva dynasty. The Puranas (the Matsya Purana, the Vayu Purana, the Brahmanda Purana, the Vishnu Purana) all state that the first of the Andhra kings rose to power in the 1st century BCE, by slaying Susarman, the last ruler of the Kanvas.[11] This feat is usually thought to have been accomplished by Pulomavi (c. 30-6 BCE), who then ruled over Pataliputra

69. இலம்போதரன்; http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

70. அபிலகனும் அறுவரும் http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

71. நூற்றுவர் கன்னர் மீள்விரிவு  K.A.Nilakanta Sastri “A History of South India”, pp 94-96, Oxford University Press, 1975


செங்குட்டுவன் வடசெலவு பொருந்துங் காலம்:

 

முன்னர் சொன்ன செய்திகளில், சுங்கரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், அதே போல நூற்றுவர் கன்னரின் நிலப்பரப்புச் சுருக்கத்தையும், கூடவே மகதத்தை வெற்றிகொள்ள கன்னர் வேட்கை கொண்டதையும், அவர் செல்வாக்கையும் பார்க்கும் போது, செங்குட்டுவனின் வடசெலவுகள் இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69), சுங்கன் தேவபூதி காலத்தில், (கி.மு.86-75 இக்கு நடுவில்), கனகர் ஆட்சி (கி.மு.75-26) தொடங்குமுன், கி.மு.80 அளவில் நடந்திருக்கலாம் என்றே எண்ணவேண்டியிருக்கிறது. அப்படியோர் இடைவேளையே செங்குட்டுவனின் வடசெலவுச் செய்திகளுக்குச் சரியான இடங் கொடுக்கிறது.

 

இலம்போதரக் கன்னன் காலத்தில் (கி.மு.87-69) நூற்றுவர் கன்னர் வலிமை குன்றியிருந்ததால் தான், தெற்கேயிருந்து சேரன் படையெடுத்து வந்தபோது, அவனுக்கு உதவி செய்து தம்நிலையைச் சீர்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர். “கல்லெடுப்பதற்கு நீங்கள் போகவேண்டுமா? உங்கள் சார்பாக நாங்கள் போரிட்டுக் கல்லெடுத்துத் தரமாட்டோமா?” என்று செங்குட்டுவனிடம் கன்னர் சொல்லச் சொன்னதாகச் சஞ்சயன் பேசுவது இருபுலப் பேச்சாகும் (diplomatic speech). அந்த நேரத்தில் சேரருக்கும் சிறியவராய் குறைவலிமை கொண்டிருந்த நிலையில், கன்னர் இப்படிப் பேசாமல் எப்படிப் பேசுவர்? அதனாற்றான், பல்வேறு பொருள்களும் படையும் சேரனுக்குக் கொடுத்து உதவிக்குப் போயினர் போலும். செங்குட்டுவனுக்கு நூற்றுவர் கன்னர் கொடுத்தவை கால்கோட்காதை 128-140 வரிகளிற் பேசப்படுகிறது72.அதோடு தம் உள்ளூர ”சேரன் வடபுலத்திற்கு வரவேண்டும்; போரிட வேண்டும்; சுங்கரும், அவருக்கு அமைச்சராய் இருந்த கனகரும் வலிகுன்ற வேண்டும்” என்ற விழைவு கன்னருக்கு இருந்திருக்கலாம். இல்லையெனில் காட்சிக் காதையில் வரும் இந்த நிகழ்வைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.

 

செங்குட்டுவன் வடசெலவு படம் 5 இல் இருப்பது போல், பெரும்பாலும் குடவஞ்சியில் தொடங்கி, கடலொட்டி நகர்ந்து, வயநாட்டுச் சாரலில் ஏறி (80 கி.மீ),  நீலமலை தாண்டி, (இது வரை சிலம்பு பேசுகிறது73). முன்னால் முதலாங் கரிகாலன் படையெடுத்த போது சென்ற பாதையிலேயே, குடகு, அதியர், கங்கர் நாடு வழி (ஐம்பொழில் ஊடாக, வடுகவழி மேற்கு) கருநாடு கடந்து, படித்தானம் (கன்னரின் தலைநகர்) பிடித்து தக்கணப் பாதை வழியாகப் மகேசர், உஞ்சை, பில்சா, சாஞ்சி, கோசாம்பி கடந்து, முடிவில் மகதத்தில் முடிந்திருக்கும்.

 

அந்தக் காலத்தில் குடகு, அதியர் நாடுவழி ஐம்பொழில், படித்தானம் போக்காமல் வடக்கே செல்லமுடியாது. ஏனென்றால், இன்னொரு மாற்றான கலிங்க வழி, அடர்காடுகளின் காரணமாய், பல நூற்றாண்டுகள் கழித்தே ஏற்பட்டது. அது பிற்காலப் பேரரசுச் சோழர் காலத்தது. கலிங்கம் என்ற நாடு கடற்கரையை ஒட்டிப் பாலூரைத் (இந்தக் கால ஒரியா மாநிலத்துப் பாரதீப்பைத்) தலைநகராய்க் கொண்டு இருந்தது. அதன் மேற்கு எல்லைகள் காடுகளால் நிறைந்தது. அதன் தெற்கு (இன்றைய ஆந்திர மாநிலத்தின் நெய்தல் நிலம் தவிர மற்றவை எல்லாமே) அடர்ந்த முல்லையும் குறிஞ்சியும், பாலையுமாய் இருந்ததால், தமிழர்களின் வடநாட்டுத் தொடர்பே பெரும்பாலும் கருநாடகம் வழியாகத்தான் இருந்தது.

 

 

 

படம் 5:செங்குட்டுவனின் வடசெலவுப் பாதை.

கருநாடகமும் சாதவா கன்னரின் அரசிற்குள் அடங்கியதே. கருநாடக மக்கள் கொடுங் கருநாடராய்ச் சிலம்பிலும் அதற்குப் பின்வந்த நூல்களிலும் சொல்லப் படுகின்றனர். கொடுமை என்பதற்கு இந்தக் காலப் பொருள் கொள்ளக் கூடாது. அவர் மொழி கொடுந்தமிழாய் இருந்ததையே அந்தச் சொற்றொடர் குறிக்கிறது. பழங் கன்னடம் என்பது பழந்தமிழுக்கு நெருங்கிக் கொடுந்தமிழாய் இருந்தது. கன்னடத்தின் இப் பழநிலையை மறுப்பது தமிழருக்கும் வடபுலத்தாருக்கும் இருந்த தொடர்பையே மறுப்பதாகும்.

இடைப்பட்ட அவந்தியும், கன்னரின் வீச்சும்:

படித்தானத்திற்கு அடுத்த பெரிய ஊர் உஞ்சை. அவந்தியின் தலைநகர். சிலம்பின் படி இதை ஆண்டவர் “பாலகுமாரன் மக்கள்” எனப்படுவர்74. இவர் யார் என்றறிவது அவ்வளவு கடினமானதல்ல. கி.மு.550 களில் நடந்த உதயணன் கதை இந்தியாவெங்கும் பெரிதும் பேர் பெற்றது. இது நெடுங்காலம் பொதுமக்களிடையே பெருவழக்கில் இருந்தது. [குணாட்டியரின் ’ப்ருஹத் கதா பிசாச மொழியில் எழுதப்பட்டது. கங்கன் துர்விநீதன் கி.பி.570-580 இல் இதைச் சங்கதத்தில் எழுதினான். கொங்குவேளிர் இதைப் பெருங்கதை என்று தமிழில்  ஆக்கினார்.]

இந்தக் கதையில், வச்சிர நாட்டு உதயணன் பல்வேறு சூழ்ச்சிகள், போர்கள், நிகழ்ச்சிகளின் பின் அவந்தி நாட்டு வாசவதத்தையை மணப்பான். [ஞாவகம் வருகிறதா? முதற் கரிகாலன் காலத்தில் அவந்தி சோழனுக்குத் துணையாய் இருந்தது. மகதம் சண்டையிட்டது. வச்சிரம் சண்டைபோடாமலே அடிபணிந்தது.] அவந்தியின் அரசன் பெருத்தோதன் (பிரத்யோதனன்). அவனுடைய மக்கள் ”பாலகன், பாலகுமாரன், கோபாலகன்.என்று அழைக்கப்படுவர்75 பின்னால் பாலகுமாரன் குடியே அவந்தியை ஆளும். குறிப்பாகச் செங்குட்டுவனின் வடசெலவுக் காலத்தில் அரசாண்ட அரசன் பெயர் தெரியவில்லை. ஒருவேளை கி.மு.80 களில் அது கன்னரின் மிரட்டலுக்கு ஆட்பட்டதாகவும் இருந்திருக்கலாம். ஆனால் கி.மு.74-61 இல் அவந்தியின் (மாளுவத்தின்) அரசன் ”கருதவில்ல மகேந்திராதித்யன்என்று செயின ஆவணங்கள் பதிவு செய்யும்.76 .

உஞ்சை தாண்டி, கோசாம்பி வழியே மகதம் நுழைந்த செங்குட்டுவன் கங்கையின் தென்கரையில் காசிக்கு அருகிலேயே ஆற்றைக் கடந்திருக்க வேண்டும். அவன் பாடலிப் பட்டணம் போனதாய் சிலம்பின் எங்கணும் அறியமுடியவில்லை. முன்னால் அவன் தாய் புனித நீர் ஆடியது கூடக் காசியாய் இருக்கலாம் இரண்டாம் முறையும் அதற்கருகிலேயே கங்கையைக் கடந்திருக்கலாம் என்பது ஒரு கருதுகோளே. ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் ஒரு வங்கப் பரப்பையே (படகுப்பரப்பையே) ஏற்பாடு செய்கிறார்கள். கங்கையாற்றின் அகலம் பாடலி அளவிற்கு காசியிற் பெரிதில்லை. ஆற்றின் வடமருங்கில் கன்னர் சேரரை எதிர்கொள்ளுகிறார்கள் [கன்னரின் வீச்சு கங்கையின் வடகரை வரை இருந்திருக்கிறது என்றால் சுங்கர்/கனகரின் வலிமை பெரிதும் குன்றியிருக்க வேண்டும்.] அந்த நாடும் கழிந்து, இன்னும் வடக்கே போகிறார்கள்; பகைப்புலம் வந்துவிடுகிறது. எனவே கங்கையைக் கடக்குமிடம் சுங்கர்/கனகர் கையில் இல்லை. இத்தனை செய்திகளும் கால்கோட் காதை 175-181 ஆம் வரிகளில் தெரிய வருகிறது.77

கனகனும் விசயனுமா? கனக விசயனா?:

 

முன்னே சொன்னது போல், செங்குட்டுவன் படையெடுப்பின்போது சுங்கன் தேவ பூதிதான் பெரும்பாலும் மகத அரசனாக இருந்திருக்கலாம்78.இருந்தாலும் சுங்கனின் தலைமை யமைச்சனாகக் கனக விசயன் என்ற குறுநில மன்னன் இருந்திருந்தான் என்பதையும் பார்த்திருந்தோம். இனிக் கனக விசயன் என்பவன் ஒருவனா, இருவரா என்ற ஐயப்பாட்டிற்கு வருவோம்.

 

தமிழகப் புரிதலில் சிலம்பையொட்டிய வரலாற்று ஆய்வுகள் புதிதாக ஏற்படாததால், 60, 70 ஆண்டுகளுக்கு முன் இருந்த புரிதலில் கனகர், விசயர் என்று இரண்டு பேராகவே பலரும் சொல்லிவருகிறார்கள். அரச குலத்தவரைக் குப்பன் சுப்பன் என்று ஒற்றைப்பெயரால் அழைப்பது வரலாற்றில் யாருக்கும் பழக்கமில்லை சேரன் செங்குட்டுவனை சேரன், செங்குட்டுவன் என்று இரண்டாகப் பிரிப்போமோ? பாண்டியன் நெடுஞ்செழியனை பாண்டியன், நெடுஞ்செழியன் என்று இரண்டாய்ப் பிரிப்போமோ? மகதத்தை ஆண்ட சுங்கனுக்கும், அவன் அமைச்சன் கனகனுக்கும் குடிப்பெயர் ஒன்றும், இயற்பெயர் ஒன்றும் தனித்தனியாய் இருக்காதோ?

 

சிலம்பில் இரண்டு இடங்களில் கனகனும் விசயனும் என்று உம்மை சேர்த்தும்79 4 இடங்களில் கனக விசயன் என்று உம்மை சேர்க்காமலும்80 இந்தப் பெயர் குறிப்பிடப்படும். உம்மை சேர்த்த இரு இடங்களிற் கூட உம்மையை எடுப்பதனால் வாக்கிய அமைப்போ, சீரமைப்போ, தளையோ ஒன்றும் மாறுபடாது. இந்த இரு இடங்களும் ஏன் படியெடுப்பின் பிழைகளாக இருக்கக் கூடாது?

 

தவிர கனகவிசயரின் கதிர்முடி ஏற்றியது அவ்வளவு பெரிய கல்லா, இரண்டு பேர் தூக்க? பொதுவாய்க் கேரளப் படிமங்களின் உரு சிறிதாக ஒரே கல்லிலான புடைப்புச் சிற்பமாகவே இருக்கும். [இன்றைக்கும் கேரளக் கோயில்களைப் பார்த்தால் இது விளங்கும். அவர்களின் ஊருலவர் (உர்ச்சவர்) திருமேனியும் நம்மூரைப்போல நாலுபேர் தூக்கும்படிப் பெரிதாக இருக்காது. ஒருவர் தன்தலையிலோ, அன்றி இரு உள்ளங்கைகளிலோ வைத்துக் கொள்ளும்படி சிறிதாகவே இருக்கும். பெருந்திருமேனிகளைக் கையாளுவது அவர்கள் பழக்கம் அல்ல.) இற்றைத் தமிழ்நாடு போல பெரிய கருங்கற்களில் பெருத்த படிமங்களைச் செதுக்குவது அங்கு மரபல்ல.

பல்லவர், பேரரசுச் சோழர் காலத்துக் கோயில்களின் சிற்பங்களைப் பார்த்துப் பார்த்துச் சிலைகள் என்றாற் பெரிதாக இருக்கும் என்றெண்ணும் நிலைக்கு நாம்தான் வந்து விட்டோம். ”கடவுள் எழுதவோர் கல்”.என்னும் போது அது சிறிய புடைப்புச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று நாம் எண்ணினால் என்ன? தவறா? 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் சிற்பங்கள் சிறியதாக இருந்திருக்கக் கூடாதா? அதோடு, இமயமலையிலிருந்து கருங்கற்கள் எடுத்துவருவதற்கு வாய்ப்புக்கள் குறைவு.

[கருங்கற்கள் இந்தியத் தீவக்குறையிலே சிலை செய்யப் பயன்படுகின்றன. வடக்கே கருங்கற்கள் அல்லாதவையே பயன்படுத்தப் படும்.] கருங்கல் அல்லாத ஒன்றை கிட்டத்தட்ட 15, 20 அயிர எண்டை (கிலோ) அளவுள்ள கல்லை ஒருவரே தம் தலையிற் தூக்க முடியும். கல் தூக்கி வந்தது ஒருவர் தலையிலா? இருவர் தலையிலா? என்பது கள ஆய்வின் மூலம் செய்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய கேள்வி.

ஒருவரா, இருவரா என்ற கேள்விக்குச் சான்றளிப்பது பதிற்றுப் பத்து 5 ஆம் பத்தின் பதிகமே81. தெள்ளத் தெளிவாக ஆரிய அண்ணல் என்று ஓர் அரசனையே சொல்லும். எந்த அரசன் போரை முன்னின்று நடத்தினானோ, அவனைத்தானே ‘வீட்டி (வீழ்த்தி) ” என்று சொல்லமுடியும். எனக்குப் புரிந்த வரையில் கனகவிசயன் என்பவன் ஒருவன் தான்.

அன்றைக்கு நடைமுறையில் மகத அரசன் கனகனே; சுங்கன் தேவபூதி ஒரு பாவை போலத் தான் பாடலியிலோ, அன்று கோசம்பியிலோ கொலுவீற்றிருந்தான். அவன் போரில் கலந்து கொள்ளாது மற்ற பங்காளிகளையும், சுற்றியுள்ள வட அரசர்களையும் போரில் இறக்கியிருக்கலாம். கனகவிசயன் போரில் தோற்றபின், கல்லைச் சுமந்து சேரனோடு வர, உடன் போரிட்ட வடபுலத்தரசரை போர்க்களமுடிவில் சேரனே விடுவிக்கிறான். அதற்குப் பின்னால் சுங்கனின் ஆட்சியில் விசயனின் மகன்(?) வசுதேவன் அமைச்சனாகி கி.மு.75-இல் சுங்கரிடமிருந்து ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான் போலும்82. இதுபோன்றதொரு இயலுமையே வரலாற்றிற் தெரிந்த உண்மைக்கும், சிலம்பில் வரும் காட்சிகளுக்கும் பொருத்தம் காட்டுகிறது.

கனகரோடு சேர்ந்த வடதிசை மன்னவர்:

 

கண்ணகிக்குக் கல் எடுப்பதற்காகப் போர் நடப்பதற்கு முன்னால், சேரனின் முதற் படையெடுப்பிற்குப் பின்னால், நடந்த ஒரு விருந்தில் வடபுலத்து அரசர் (அவருள் அவந்தி அரசரும், மற்றவரும், கனக விசயனும் அடக்கம்) தமிழரை இகழ்ந்தது சிலம்பில் பேசப்படுகிறது.83

 

கனகரோடு சேர்ந்து பொருதிய வடதிசை மன்னவரைக் கால்கோட் காதையின் 182-192 ஆம் வரிகள் உரைக்கும்84. ஆனால் இந்தப் பட்டியலிலும் எது குடிப்பெயர், எது இயற்பெயர் என்ற தடுமாற்றம் உண்டு.. ”சுவடிப் பெயர்ப்புப் பிழைகள் இங்குமுண்டா?” என்ற கேள்வியும் எழுகிறது

”உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்” என்று அடுத்தடுத்துப் பெயர்கள் எழும்பொழுது ”உத்தர விசித்திரன், ருத்ர பைரவன்” எனச் சொல்லலாமா? அதே போல “சித்திரன்” என்பவன் யார்? சிங்கன் சுங்கனாய் இருக்கலாமோ? [இது போன்ற சுகர, சிகரக் குழப்பங்கள் சிங்கள அரசர் பெயர்ப்பட்டியலிலும் உண்டு. தமிழில் ஒருவிதமாயும் , பாலியில் இன்னொரு விதமாயும் வரும்] சிங்கனோடு சித்ரனா? தனுத்ரனா? ”சிவேதன்” யார்? அரசர்க்கான மரபில் குலப்பெயரும் தனிப்பெயரும் சேர்ந்தல்லவா வptரும்? - என்ற கேள்விகளும் எழுகின்றன. [த்ரஎன்ற ஒலிக்கூட்டு வடநாட்டு அரசர் பெயர்களின் பெரிதும் உள்ளதே. இந்தப் பெயர்கள் வடபாற் பெயர்கள் தான்] இவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் மீந்து நிற்கிறது. தேவபூதியை தனுத்ரபூதி என்றோர் ஆவணம் சொல்லுகிறதாம். இதையும் ஆய வேண்டும். தேவபூதியின் தந்தை பாகபத்ரன் பற்றியும்,. சுங்கர்/கனகர் காலத்து வடபுல அரசர் குறிப்புக்களையும் ஆயவேண்டும்.

 

”ஒருபகல் எல்லையில் ஆரியப் படையைச் செங்குட்டுவன் சாய்த்தான். கனக விசயர் 100 கடுந்தேராளரொடு களம் புகுந்தனர்.  தோற்றபின் துறவி வேடம் பூண்டுத் தப்ப முயன்று பிடிபட்டனர்” என்பவை அடுத்துவரும் செய்திகளாகும். துறவி வேடம் பூண்டு தப்பமுயன்றதில் ஒன்றும் வியப்பில்லை. காசிக்கருகில் சாம்பற் பூசிய துறவிகள் இன்றைக்கும் கணக்கற்றுத் திரிவர். காசிக்கு அருகில் தப்புதற்கு அந்த வேடம் மிகவும் எளிய வழியாகும். இவர்கள் இப்படித் தப்பியதே, போர் ஒருவேளை காசிக்கு அருகில் நடந்திருக்குமோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது. முன்னாற் சொன்னது போல், வடபுலத்தில் காசிதான் முதலில் எழுந்த பெரும்நகரம். அதற்கு அப்புறம் தான் மற்ற நகரங்கள் அங்கு தோன்றின.

 

இந்தப் போருக்குப்பின் செங்குட்டுவன் கங்கைத் தென்கரையில் பாடிகொள்கிறான். வில்லவன் கோதையோடு படைகளை மேலும் வடக்கே அனுப்பி இமையத்தில் இருந்து கல்லெடுத்துவரச் செய்கிறான்85. ஆனால் அப்படிப் போகும் போது போர் ஏதும் நடந்ததாய்த் தெரியவில்லை. கனக விசயனின் முடிமேல் கல்லேற்றிக் கொண்டு வந்து அதைக் கங்கையில் நீர்ப்படை செய்கிறார்கள்.86  

 

அதன்பின் தெள்ளுநீர்க் கங்கையின் தென்கரையில் ஆரிய மன்னர் அழகுற அமைத்த பாடியில் இருக்கும் போது மாடலன் வருகிறான். [இன்றைக்கும் தெள்ளுநீர்க் கங்கை காசிக்குத் தென்கரையில் தான் என்பது வியக்கத் தக்க செய்தி. வடகரையில் இருக்கும் சுடுகாட்டுக் கரைகளைத் தவிர்த்து, சாம்பல் பூச்சிதறல் இல்லாமல், உருப்படியாக நீராட வேண்டுமென்றால் படகில் ஏறித் தென்கரைக்குத்தான் வரவேண்டும். அங்கு தான் சோலைகளும் தோட்டங்களும் உண்டு. தென்கரை அழகு அன்றைக்கும் இருந்தது வியக்கத்தக்க ஒற்றுமைத் தொடர்ச்சியாகும். வாரணசி நகருக்கு வடக்கே இன்றும் பறந்தலைகள் தான். முற்காலத்திற் பறந்தலைகளே போர்க்களங்களாய் ஆயின. போர்க்களம் எது என்றறிவது அங்குள்ள நிலவரைவை (geography) ஆய்வு செய்வதிற்றான் தெளிவாகும். 

 

எடுகோள்கள்:

 

72. நாடக மகளிர் ஈரைம்பத்து இருவரும்

கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்

தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத் துறை

நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்

கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பத்திற்று இரட்டியும்

கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும்,

ஐயீராயிரங் கொய்யுளைப் புரவியும்

எய்யா வடவளத்து இருபதினாயிரம்

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்

சஞ்சயன் முதலாத் தலைக்கு ஈடு பெற்ற

கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றுவரும்

சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே

வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப

                 - கால்கோட் காதை 128-140

73. தண்டத் தலைவரும் தலைத்தார்ச் சேனையும்

வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத

மலைமுதுகு நெளிய நிலைநாடு அதர்பட

உலக மன்னவன் ஒருங்குடன் சென்றாங்கு

ஆலும் புரவி யணித்தேர்த் தானையொடு

நீலகிரியின் நெடும்புறத்து இறுத்து ஆங்கு

       - கால்கோட் காதை 80-85

74. பால குமாரன் மக்கள் மற்றவர்

காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்

கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது

நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்

கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன

வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்

          - கால்கோட் காதை 159-165

75. பாலகுமாரன் - பெருங்கதைக் குறிப்பு. ”கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை - பகுதி 1. எடுவிப்பு: டாக்டர் உ.வே.சா, உ.வே.சா. நூல்நிலையம், 2000, கீழே வருவன அப்பொத்தகத்தில் வரும் அருஞ்சொல்லகராதிக் குறிப்புகள் பக்கங்கள் நூலில் வரும் இடங்களைக் குறிக்கின்றன.

[பிரச்சோதனன் = ஒரு மகாச் சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை. இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தாற் பிடித்துச் சிறாஇயில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதிறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள். இவனுக்குப் பாலகன், பாலகுமாரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு.

பாலகன் = பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன், பக்.92;

பாலகுமாரன் = பிரச்சோதனன் புதல்வன், உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கிய பின்பு தந்தையின் கட்டளைப் படி அவனுக்கு வேண்டியவைகளைக் குறிப்பறிந்து செய்து வந்தவன், பக்.43. பாலகுமரார் = பிரச்சோதனனுடைய பிள்ளைகளின் பொதுப்பெயர், பக்.116]

76.  அவந்தி அரசன் பற்றிய செயினக் குறிப்பு. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 32-38, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005.

77. பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து

கங்கைப் பேரியாற்றுக் கன்னரிற் பெற்ற

வங்கப் பரப்பின் வடமருங்கு எய்தி

ஆங்கு அவர் எதிர்கொள அந்நாடு கழிந்தாங்கு

ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇப்

பகைப்புலம் புக்குப் சறை யிருந்த

தகைப்பருந் தானை மறவோன் தன் முன்

          - கால்கோட்காதை 175-181

78. தேவபூதியின் ஆட்சிக் காலம். http://en.wikipedia.org/wiki/Devabhuti

79. காவா நாவிற் கனகனும் விசயனும்  கால்கோட்காதை 176

காய்வேற் தடக்கைக் கனகனும் விசயனும்  கால்கோட் காதை 222

80. கலந்த மேன்மையிற் கனக விசயர்  கால்கோட் காதை 186

கனக விசயர் தம் கதிர்முடி ஏற்றி  நீர்ப்படைக் காதை 4

கானற் பாணி கனக விசயர் தம்  நீர்ப்படைக் காதை 50

தெரியாது மலைந்த கனக விசயரை  நீர்ப்படைக்காதை 190

81. ”வடவ ருட்கும் வான்தோய் வெல்கொடிக்

 குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்கு

 சோழன் மணக்கிள்ளி ஈன்றமகன்

 கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக்

 கானவில் கானங் கணையிற் போகி,

 ஆரிய அண்ணலை வீட்டி பேரிசை

 இன்பல் அருவிக் கங்கை மண்ணி”

82. கண்வ வசுதேவன் ஆட்சியைப் பிடித்தது. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty

83.           பால குமாரன் மக்கள் மற்றவர்

காவா நாவிற் கனகனும் விசயனும்

விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி

அருந்தமிழ் ஆற்றலர் அறிந்திலர் ஆங்கு எனக்

கூற்றங் கொண்டு இச்சேனை செல்வது

நூற்றுவர் கன்னர்க்குச் சாற்றி யாங்குக்

கங்கைப் பேர்யாறு கடத்தற் காவன

வங்கப் பெருநிரை செய்க தாம் எனச்

            கால்கோட் காதை 159-165

வடபுலத்தரசர் ஒரு விருந்தில் தமிழரை இழித்துப் பேசியது. குமரியொடு வடவிமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரைபோகிய செங்குட்டுவன் சினஞ் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை, வட ஆரிய மன்னர் ஆங்கோர் மடவரலை மாலைசூட்டி உடனுறைந்த இருக்கை தன்னில் ஒன்றுமொழி நகையினராய்த் தென்றமிழ் நாடாளும் வேந்தர் செருவேட்டுப் புகன்றெழுந்து மின் தவழும் இமயநெற்றியில் விளங்கு வில், புலி, கயல் பொறித்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லை போலும் என்ற வார்த்தை அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து, - வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையின் முதற்சில வரிகள்.

84.  உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன்

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்

வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்

தென் தமிழாற்றல் காண்குதும் யாம் எனக்

கலந்த கேண்மையிற் கனக விசயர்

நிலத்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர

இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்

கரிமாப் பெருநிரை கண்டு உளம் சிறந்து

பாய்ந்த பண்பிற் பல்வேல் மன்னர்

காஞ்சித் தானையோடு காவலன் மலைப்ப            

         - கால்கோட் காதை 182-192

85.         வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த

பல்வேற் தானைப் படைபல ஏவி

பொற்கோட்டு இமையத்துப் பொருவறு பத்தினிக்

கற்கால் கொண்டனன் காவலன் ஆங்கென்.

             - கால்கோட் காதை 251-254

86. வடபேர் இமயத்து வான் தரு சிறப்பிற்

கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்

சினவேல் முன்பிற் சருவெங் கோலத்துக்

கனக விசயர்தம் கதிர்முடி யேற்றிச்

செறிகழல் வேந்தன் தென்தமிழ் ஆற்றல்

அறியாது மலைத்த ஆரிய மன்னரைச்

செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக

உயிர்த்தொகை உண்ட ஒன்பதிற் றிரட்டியென்று

யாண்டும் மதியும் நாளும் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள

வருபெருந் தானை மறக்கள மருங்கின்

ஒருபகல் எல்லை உயிர்த்தொகை யுண்ட

செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு

கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து

பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை

நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து


            - நீர்ப்படை காதை 1- 14



No comments:

Post a Comment