Friday, June 1, 2018

இந்திரன் கோயில் பற்றிய வரலாறு




வாழ்வினில் வசந்தம் வீச ராஜசம்பத்துடன் வாழ செல்வோம் தேவேந்திரனிடம்.மயிலாடி

தேவேந்திரனின் குகைக் கோயில் - தேவேந்திரன் பொத்தை

இந்திரன் கோயில் பற்றிய வரலாறு

இந்திரன் கோயில் இருக்கும் இடம், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாகத் திகழ்ந்ததாம். அதில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன.

அக்காலத்தில், மலையடிவாரத் தில், சிற்பி ஒருவர் அம்மி - குழவி கொத்தும் பணி செய்து வாழ்ந்தார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் மலைக்கு மேலிருந்து பேரிரைச்சல் எழுமாம். அதே போல், மாலை வேளையில் மேள - தாள முழக்கங்களுடன் குரவை சத்தமும் கேட்குமாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் சிற்பி.

இந்நிலையில், ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில், பேரொலியும் அதைத் தொடர்ந்து மணிச் சத்தமும் கேட்டுள்ளது. அதற்குப் பிறகும் சிற்பியால் தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
செங்குத்தான மலைப்பாதையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, சுமார் 360 அடி உயரத்துக்கு வந்ததும், அங்கே குகைக்கோயில் ஒன்று இருப்ப தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனார். அதேநேரம் இடி - மின்னலுடன் பெருமழை பிடித்துக்கொள்ள, அவர் கண்களுக்குப் புறக்காட்சிகள் மறைந்தன. குகையும், துதிக்கையை அசைத்தபடி நிற்கும் யானையும் மட்டுமே அவரது விழிகளுக்குப் புலப்பட்டன. சிற்பி மனமுருக வேண்டவும் மழை நின்றது. மெதுவாக, பாறையைப் பிடித்து கீழே இறங்கி வீடு திரும்பிய சிற்பி, எவரிடமும் பேசாமல் மெளனம் கடைப்பிடித்தார்.

திடீரென ஒரு நாள், வெள்ளை யானை வாகனராக சிற்பியின் கனவில் தோன்றிய இந்திரன், “என்னை மக்கள் காண வருவதற்கு மலை அடிவாரத்தில் இருந்து படிகளை அமைக்க வேண்டும்.அது உனது பணிஎன்று அருள் செய்து மறைந்தார்.

விழித்தெழுந்த சிற்பி, தனது கனவு குறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ள வில்லை. சில நாட்கள் கழித்து, மக்கள் ஏறுவதற்கு வசதியாக, தன்னால் இயன்றளவுக்கு குறுகிய படிகளை (360 படிகள்) பாறையில் செதுக்கி அமைத்தார். ஓவ்வொரு படி வெட்டியதும் அவருக்கு ஓவ்வொரு காசு கூலியாக கிடைத்துள்ளது.

பிற்காலத்தில் படிக்கட்டுகள் சற்றே அகலப்படுத் தப்பட்டு, பிடித்து ஏறுவதற்கு வசதியாக கைப்பிடி கம்பிகளையும் அமைத்தார்களாம்.வெள்ளிக்கிழமைகளில் காலையில், பக்தர்கள் வந்து இந்திரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் செல்கின்றனர்.

வற்றாத சுனையும், குகையும்

இந்தக் கோயிலின் அருகில் வற்றாத சுனைகள் இரண்டு உள்ளன. அதேபோல், இந்திரன் குகை அருகில் மேலும் இரண்டு குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று அடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குகைக்குள் தவழ்ந்து நுழைந்து வெளியேறி னால், நினைத்தது நடக்குமாம்.

அற்புத யானை கட்டி குகை

இந்தக் கோயிலுக்கு வரும் பெண்கள்,ஆண்கள் , சுனையில் குளித்துவிட்டு தலை துவட்டாமல் ஈரத்துணியுடன் இந்தக் குகையின் வழியே தவழ்ந்து வந்தால், பாவம் நீங்கி நோய்நொடிகள் அகலும். அமாவாசை, பௌர்ணமி திதிகளில் சுனை நீரில் தீர்த்தமாடினால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும்; பழிபாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

குழந்தை வரம்

குழந்தை இல்லாத பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இந்திரனை வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களது வேண்டுதல் பலித்து, ஆண் குழந்தை பிறந்தால் இந்திரன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தெய்வயானை என்றும் பெயர் சூட்டுவது வழக்கம். பின்னர், ஓராண்டு கழித்து இந்திரன் கோயிலுக்கு குழந்தைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள்.அதேபோல், பூப்படையாமல் இருக்கும் பெண்கள் இந்திரன் கோயிலுக்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால், விரைவில் பூப்படைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.திருமண பாக்கியம் அருளும் தலமாகவும் விளங்குகின்றது.

பதவி உயர்வு தரும் இந்திர வழிபாடு…

இந்திரனைக் குறித்துச் செய்யப்படும் இந்த வழிபாட்டுக்கு இந்திராஸ்திர வழிபாடு, ஐந்திராஸ்திர வழிபாடு, இந்திர பூஜா என்றும் பெயர்கள் உண்டு. இந்திரனைக் குறித்த உபாசனா விதிகளின்படியும், புராண- இதிகாசங்களில் குறிப்பிட்டுள்ளபடியும் போகப்பிரியன், யோகாதிபன், சுகம் விரும்பி, மழை தரும் மேகவன், மாயையைக் கொணர்பவன் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறான் இந்திரன்.

இந்திரனைக் குறித்த அஸ்திர மந்திரங்களைப் பயன்படுத்தி வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். தகுதி அடிப்படையில் பதவி உயர்வுக்காகக் காத்திருக்கும் அரசுப் பணியாளர்கள் இந்த வழிபாட்டால் இனிய தகவலை விரைவில் பெறலாம்.

உங்களது பதவி உயர்வைத் தடை செய்து வைத்திருக்கும் உயர் அதிகாரிகளும் உங்களின் திறமையை உணர்ந்து, உங்களுக்கு நன்மை தரும் விதமாக பதவி உயர்வு ஆணையைக் கொடுத்துவிடுவார்கள்.
பிரமோஷன் ஃபைல் கிடப்பில் கிடப்பதால் பரிதவித்துக் கொண்டிருக்கும் பணியாளர்களுக்கும் இந்த வழிபாடு பலன் தரும். ஆனால், கொஞ்சம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டுப் பலனை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

குடும்பத்தில் மதிப்பு இல்லையே என வருத்தத்தில் இருப்பவர்கள் இந்த பூஜையைச் செய்வதால், இல்லத்தில் உங்கள் மதிப்பு உயரும். அரசு, தனியார் பணிகளில் உள்ளவர்களுக்கு, அலுவலகத்தில் எதிர்ப்புகள் அதிகம் இருந்தால், இந்த வழிபாட்டின் மூலம் சாதகமான சூழலைப் பெறலாம்.

பணி இடமாற்றத்தால் ஏற்படும் மனச்சங்கடங்களைத் தவிர்க்கவும் இந்த வழிபாடு ஏற்றது. இந்திராணியுடன் சேர்த்து இந்திரனை வழிபட, கணவனின் புகழ், அந்தஸ்து உயர்வதுடன் குடும்பமும் மேன்மை அடையும்.

சொத்து சுகங்களை இழந்து தவிப்பவர்கள், குறைந்தபட்ச சௌகரியத்துடனாவது வாழ வேண்டும் என விரும்பினால், இந்த பூஜையைக் கடைப்பிடிக்கலாம்.

வாஸ்து முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் இந்திரனுக்கு உரிய கிழக்கு திசையில்தான் குடும்ப உயர்வுக்கான சிந்தனாசக்தி பீடம் அமைந்துள்ளது. பல நன்மைகளை விரும்புவோர் இந்த இடத்தை அதிகம் பயன்படுத்தி பலன் பெறலாம். மேலும் வீட்டில் இந்திரனின் திருவுருவப் படம் வைத்து வழிபட, வி.ஐ.பி-களும் உங்கள் வீட்டுக்கு வந்து உறவாடும் வாய்ப்பு கிடைக்கும்.

எனினும், தகுந்த குருவின் மூலம் பிரயோக முறையை அறிந்து கொண்டு வழிபடுதல் அவசியம்.

இந்திர வழிபாடு செய்வது எப்படி?

முதலில், பஞ்சாங்க சுத்தம் உடைய திங்கள், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில், வளர்பிறை துவாதசியும் சேர்ந்து வரும் நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பூஜை தினத்தன்று அதிகாலையில் நீராடி முடித்து, பூஜையறையைக் கழுவிச் சுத்தம் செய்து, கோலம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அடுத்ததாக, வெள்ளை நூல் சுற்றிய கலசத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நைவேத்தியத்துக்கு சர்க்கரை அன்னம் தயார்செய்து வைக்கலாம்.

முதலில், தும்பை மற்றும் அருகம்புல்லால் அர்ச்சித்து, பிள்ளையாரை வழிபட வேண்டும். அடுத்து, நவகிரகங்களுக்கும் அவரவருக்கு உரிய தானியங்களை வைத்து, 16 உபசாரங் களுடன் பூஜிக்க வேண்டும். பின்னர், நடுநாயகமாக கலசத்தையும், எதிரில் செங்கற்களால் அக்னி மேடையையும் அமைக்கவும்.

பிறகு…

ஓம் ஐராவதி கஜாரூடம் சகஸ்ராட்சம் சசிபதிம்
வஜ்ராயுத தரம் தேவம் சர்வலோக மஹீபதிம்
ஓம் ஐம் இந்திராணி ஸஹித இந்த்ர பிம்பம் ஆவாகயாமி

எனும் மந்திரத்தைச் சொல்லி வணங்க வேண்டும். அடுத்ததாக வில்வம், வன்னி, மாசி பத்ரம், மாவிலங்கம், துளசி ஆகியவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, புருஷ சூக்த மந்திரங்களால் இந்திரனின் 21 நாமாவளிகளை கூறி, அர்ச்சிக்க வேண்டும்.

ஓம் இந்திராய நம:
ஓம் மகேந்திராய நம:
ஓம் தேவேந்திராய நம:
ஓம் விருத்ராதயே நம:
ஓம் பங்கசாசநாய நம:
ஓம் ஐராவத வாகனாய நம:
ஓம் கஜாசன ரூபாய நம:
ஓம் பிடௌஜஸே நம:
ஓம் வஜ்ரபாணயே நம:
ஓம் சகஸ்ராக்ஷ£ய நம:
ஓம் சுபதாய நம:
ஓம் சதமகாய நம:
ஓம் டிரந்தராய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் சசிபதயே நம:
ஓம் த்ரிலோகேசாய நம:
ஓம் தேவேசாய நம:
ஓம் போகப்ரியாய நம:
ஓம் ஜகத்ப்ரபவே நம:
ஓம் இந்திரலோக வாசினே நம:
ஓம் இந்திராணி சகித இந்திர மூர்த்தியே நம:
நானாவித பரிமள மந்த்ர புஷ்பாணி சமர்ப்பயாமி!

இதன் பின்னர், தூப-தீப நிவேதனம், கற்பூர ஆரத்தி செய்தபிறகு, அந்தத் தீபத்தை அக்னி குண்டத்தில் இட்டு, ‘ஓம் இம் இந்திராய நம: அக்னேர் மத்யபாகே ப்ரவேசயோம் ஹீம் பட்’ என்று கூறி (ஹோமத்தில்) நெற்பொரி இட்டு பூஜிக்க வேண்டும்.

தொடர்ந்து, ‘ஓம் ஐம் இந்திராருண்யாச சமாயுக்தம் வஜ்ரபாணிம் ஜகத் பிரபும் இந்திரம் த்யாயேத் துதேவேசம் உத்யோக பதவீம் சித்தயேத்’ என்று தியானித்து, மீண்டும் அக்னியில் நெற்பொரியைப் போட்டு, முக்கிய மூல மந்திரங்களைச் சொல்லி… நெய், நாயுருவி, வெண்கடுகு, புரசு சமித்து, வெற்றிலை, உப்பு, நீரில் நனைத்த கொள்ளு ஆகியவற்றால் அக்னி ஹோமம் செய்து, பூரண ஆகுதியாக தாம்பூலம் இட்டு, யந்திரத்துக்கும் தூப-தீப நிவேதனம் செய்து யாகரட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புஷ்பாஞ்சலி செய்து, ஆரத்தி காட்ட வேண்டும். பின்னர், ஆத்ம பிரதட்சிணத்துடன் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்க வேண்டும்.

இந்திர வழிபாட்டில் வெண்தாமரை மலரைப் பயன்படுத்துவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

மேலும்…

ஓம் ஐம் இம் இந்திராய சதமகாய கால சக்ராய இஷ்டிப்ரதாய
கானவிசாரதாய கோசரநிர்மூலாய ஐம் இம்இந்திராய நம:

யாக பூஜைக்கு முக்கியமான இந்த மந்திரத்தை, பூஜைகள் முடிந்த பின்னர் கிழக்கு முகமாக அமர்ந்து, 108 தடவை ஜபிக்க வேண் டும். இதுவே, ஐந்திராஸ்திர மூலமந்திரம் ஆகும். அத்துடன் இந்திர காயத்ரீயை 12 முறை கூறி, ஜபம்- பூஜைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்திர காயத்ரீ:

ஈம் வஜ்ரஹஸ்தாய வித்மஹே ஸஹஸ்ராக்ஷ£ய தீமஹி
தந்நோ இந்திர: ப்ரசோதயாத்

தமிழ்ப் பாடல் ஒன்று…

‘திங்களும் குரு தினமும் வருகின்ற ஓர்தினத்தில்
தங்கமும் பவளமும் தரித்த பகுடதாரியை எண்ணி
அக்கினியில் அவன் தாள் நினைத்தாலும் பூசிப்பினும்
இக்கலியில் இந்திர பதவியதும் எட்டுதல் எளிதாமே!”

என்கிறது. இதன்படி உரிய நன்னாளில் தேவேந்திரனை வழிபட்டு, பதவி சுகங்களை அருளும்படி வேண்டி அருள் பெறுவோம்.

நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் இருக்கிறது மருந்துவாழ் மலை. இந்த மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, ‘தேவேந் திரன் பொத்தை என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் தேவர்களின் தலைவனான இந்திரனின் குகைக்கோயில் உள்ளது.
ஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோயில்.
குறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்ல முடியும். மேலே, இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன். அவர் அருகிலேயே சிவ- பார்வதியர், அகத்தியர் ஆகியோரையும் லிங்க மூர்த்தம் ஒன்றையும் தரிசிக்க முடிகிறது.

நின்ற கோலத்தில் அருளும் இந்திரனின் நான்கு கரங்களில் இரண்டு, அஞ்சலி ஹஸ்தமாகத் திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய ஸ்வாமியை தவமிருந்து சாபவிமோசனம் பெற்றாா்.
இந்திரன் சாபவிமோசனம் பெற்ற கதை
தமது யாகத்தைக் காக்க ராம-லட்சுமணரை அழைத்துச் சென்றார் விசுவாமித்திர மஹரிஷி. அப்போது, வழியில் கிடந்த கல்லொன்று ராமனின் திருப்பாத ஸ்பரிசத்தால், விமோசனம் பெற்று அழகிய பெண்ணான திருக்கதை நாமறிந்ததே!
கௌதம மகரிஷியின் பத்தினியான அகலிகை பேரழகு கொண்டவள். அவளை அடைய விரும்பிய இந்திரன், ஒருநாள் நடுநிசியில் சேவலின் வடிவம் எடுத்துக்கொண்டு கௌதமரின் ஆசிரமத்துக்குச் சென்று கூவினான். பொழுது விடியும் நேரம் வந்துவிட்டதாக நினைத்த கௌதமர் எழுந்து ஆற்றுக்கு நீராடச் சென்றார். அப்போது, கௌதமரின் வடிவத்தில் ஆசிரமத் துக்குச் சென்ற இந்திரன், அகலிகையை களங்கப் படுத்திவிட்டான். ஆற்றுக்குச் சென்ற கௌதமர் இன்னும் நடுநிசியே தாண்டவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்து விட்டது என்பதைப் புரிந்துகொண்டவர், ஆசிரமத்துக்கு விரைந்தார். இந்திரனின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட கௌதமர், இந்திரனின் உடல் எங்கும் எதற்கு ஆசைபட்டு வந்தாயோ அதுவே உடலேங்கும் தோன்றட்டும் என்றும் அகலிகையைக் கல்லாகும்படியும் சபித்துவிட்டார்
இந்திரன் வெட்கித் தலைகுனிந்தான். அவன் உடம்பெல்லாம் குறிகள் . அவன் தேஜஸ் மறைந்தது. தேவலோக மங்கைகள் அவனைக் கண்டு ஒதுங்கினர். அவன் சாப விமோசனம் தேடி அலைந்தான். தொடர்ந்து தேவகுருவிடம் சென்றும் விமோசனத்துக்கு வழிகேட்டான்.
குரு பகவான், “தேவர் தலைவனே! பூவுலகில் வனங்களில் சிறந்ததான `ஞான கான' எனும் ஞானாரண்யம் வனத்துக்குச் செல். அங்கே மும்மூர்த்திகளின் அம்சமாக தாணுமாலயர் கோயில் கொண்டிருக் கிறார். அவரைப் பூஜித்து வழிபட்டால், உனது பாவம் கரையும்'' என்று அருள்பாலித்தார்.
அதன்படியே தன்னந்தனியனாக பூலோகத்தின் ஞானாரண்ய வனத்தை அடைந்தான் இந்திரன். அவனுடைய தேர் நின்ற இடம் 'தேரூர்' எனச் சிறப்பு பெற்றது.
இந்திரனின் வாகனமான `ஐராவதம்' எனும் யானை, சித்தர்கிரி எனப்பட்ட மருந்துவாழ் மலைக்கு வந்தது. இந்திரன் நின்ற திசையை நோக்கி வணங்கியது; அங்கே தனது தந்தத்தால் கீறி ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கியது. இந்திரன் அதற்கு ‘ஔஷத தீர்த்தம்’எனப் பெயர் வைத்தான். தொடர்ந்து வனத்தில் தவம் இருந்த இந்திரன், `பூஜைக்கு நதியின் நீரும் இருந்தால் நன்றாக இருக்குமே' என எண்ணினான். அவனது எண்ணவோட்டத்தை அறிந்த ஐராவதம் மீண்டும் தனது தந்தத்தை தரையில் ஊன்றிக் கிளற, அந்த இடத்தில் இருந்து ஊற்றாகப் பொங்கிய நீர் ஆறாகப் பிரவாகம் செய்தது. அந்த ஆறு ஓடிய இடம் `கோட்டாறு' எனப்பட்டது. இங்ஙனம் தீர்த்தங்களை உண்டாக்கி சிரத்தையுடன் இந்திரன் மேற்கொண்ட தவத்துக்கும் பூஜைக்கும் பலன் கிடைத்தது; தாணுமாலயன் தோன்றி அவனுடைய சாபம் நீங்க அருள்பாலித்தார்.
இன்றைக்கும் இந்திரன் சுசீந்திரம் தாணு மாலயன் ஸ்வாமி கோயிலுக்கு நடுநிசியில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். நள்ளிரவில் இந்திரன் நடத் தும் பூஜையால் பொருட்கள் இடம் மாறி இருக்கும். இதைவைத்து இந்திரன் பூஜை செய்ததை அறியக்கூடும் என்பதால், முதல் நாள் இரவு பூஜை செய்தவர் அல்லாமல், மறுநாள் காலை பூஜையை வேறொரு நம்பூதிரி செய்வது, சுசீந்திரம் கோயிலில் இன்றளவும் உள்ள வழக்கம். இதை, சுசீந்திரம் தல புராணக் கதையும் சொல்கிறது.

மலை ஏறுவதற்கு முன் வடஇந்திய கஞ்சா சுவாமிகளால்(முன்னாள் பிரதமா் இந்திரகாந்தியின் நெருங்கிய உறவினா்) வடிக்கப்பட்ட காயத்திாி அம்மன் திரு உருவ சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.மந்திரங்களின் உயா்ந்த காயத்திாி இம்மலையில் விக்ர ரூபமாக உள்ளது,

சித்த புருஷா் கஞ்சா சுவாமி
இடைமலை,மருந்துவாழ்மலையிலும் வாழ்ந்து பல அற்புத சித்துக்கள் காட்டி மாயமாய் மறைந்து விட்ட மாகா யோகி.

படங்கள் திரு கண்ணன் & திரு சுபாஷ்.

நன்றி

Murugu Subramonian [FB]

No comments:

Post a Comment